பிள்ளைகளை அப்போது தான் பள்ளிக்கு அனுப்பி விட்டு அமர்ந்தாள். வெற்றி வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான். சோபாவில் தலை வைத்து சரண்யா படுக்க, வந்து விட்டார் தனம்.
மிகவும் சோர்ந்து போய் கிடந்த மருமகளை பார்த்து, “இந்தாடி உடம்பு என்ன பண்ணுது?…”
“சாதாரண காய்ச்சல் அத்தை. இட்லி இருக்கு எடுத்து வைக்கவா…”
“காய்ச்சல்னு தான் மூணு நாளா புருசனும், பொண்டாட்டியும் ஆஸ்பத்திரி போனீங்க…”
“ஆமா, அத்தை. விசேஷ வீட்டு தண்ணி சேரலை…”
“நானும் ஏதோ விசேஷம்னு தான் நெனச்சேன்…” என்று இழுத்தார் ,
சரண்யா புரியாமல் பார்க்க, “பிள்ளைகளுக்கு தான் நாலு வயசு ஆக போதே, அடுத்து ஒன்னுக்கு பார்க்க வேண்டி தான…” தனம் நேராகவே சொல்லி விட்டார்.
சரண்யா பதில் ஒன்றும் சொல்ல வில்லை. சில நாட்களாக எல்லோரும் கேட்பது தான். அம்மாவும் இப்போது எல்லாம் நச்சரிக்க தொடங்கினார். யாருக்கும் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
ஆரம்பத்தில் அவள் இதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை தான். இரு பிள்ளைகள் இருக்க வேற என்ன வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால், சுற்றமும் உறவும் விடாமல் கேட்க ஒரு ஆசை. தன் முதல் கர்ப்பத்தில் கிடைக்காத ஆதரவு , அன்பு எல்லாம் எப்படி இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கணவன் தான் வாய் திறக்கவே இல்லை.
தனம், மருமகள் முகம் பார்த்தே நிக்க, பதில் பேச முடியவில்லை. என்ன சொல்ல, வெற்றி முடிவு தான். மாமியார் மேல் சிறு எரிச்சலும் வந்தது. ஜாடையாக ஆரம்பித்து நேராகவே சொல்லி விட்டார். அதுவும் ஆண் பிள்ளை தான் வேண்டுமாம். நான் என்ன குந்தி தேவியா… மகனிடம் ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டார். மருமகள் என்றாள் இளப்பம் தான்.
“என்னம்மா சாப்பிட்டையா?…” என்று மகன் வர, பதில் சொன்னவர் வேற பேச ஆரம்பித்தார்.
வெற்றி வேலைக்கு கிளம்ப… “அடியே இவளே… வெளிய வா, மூணாவது வேண்டாம்னு முடிவு எதுவும் எடுத்தீங்களா?…”
“அது எல்லாம் எதுவுமில்லை அத்தை…”
“இன்னும் நீ குடும்பக்கட்டுப்பாடு பண்ணலை தான…”
“ஆமா…”
“ நாங்கல்லாம் அந்த காலத்திலேயே ரெண்டு வருசம் தான் வித்தியாசம். மொத பெரியவன், அடுத்த ரெண்டு வருசத்துல சின்னவன், அடுத்து ரெண்டாம் வருசம் உன் நாத்துனா… நீ மாசம் மாசம் குளிக்கிறயா?…”
“அதெல்லாம் சரியா தான் இருக்கும். ஒரு நாள் கூட முன்ன பின்ன இல்லை…” குறுக்கு விசாரணை எரிச்சலை கிளப்பியது.
“அப்ப… ராத்திரியில ரெண்டு பேரும் சந்தோசமா தான் இருக்கீங்களா…”
சங்கட பட்டு போனாள் சரண்யா. என்ன கேள்வி இது… “அதெல்லாம் நல்லா இருக்கு தான் இருக்கோம்…”
“இதெப்படி நான் நம்புறது..”
மாமியாருக்கு உரிய கோட்டை தாண்டியாச்சு. நிமிர்ந்து கொண்டாள், எல்லாம் அளவு தான்.
“அதுக்கு நான் என்ன செய்யனும். உங்க மகன் பாயும் புலி தான். உங்களுக்கு சந்தேகமா இருந்தா, ஒரு வார்த்தை உங்க மகன்ட்ட சொல்லி வைக்கிறேன்…”
அதிர்ந்து போன தனம். “ஏண்டி ஒரு மாமியார்கிட்ட வெட்கம் கெட்டு பேசுவியோ…”
“அப்ப நீங்களும் வெட்கம் விட்டு மருமகள்கிட்ட கேட்கலாமா… ரெண்டு பேரும் பொம்பளை தான். ஆனாலும், ஒரு வரைமுறை இருக்கு. உங்க எல்லையை தாண்டாதீங்க…” நிதர்சனமாக சொல்லி விட,
வாய் துறுதுறுத்தது தனதுக்கு… “நான் பார்த்து உன்னை கொண்டு வந்தேன். என்னை அதிகாரம் செய்றயோ?…”
“ஒரு விசயம் நமக்குள்ள முடியறதும் உங்க மகன் காது வரை போறதும் உங்க கையில…” சரண்யா சொல்ல, தனம் சென்று விட்டார்.
சரண்யா அறிவாள் மாமியார் குணம். வெற்றிவேல் மனைவி, அது மட்டும் தான் அவரை கட்டி போட்டது. அன்று போல இன்றும் கணவன் இருந்தால், சரண்யா கிள்ளு கீரை தான். மருமகள் பேசினாள் தானே தப்பு. உன் மகனிடமே பேசி கொள் என்று விசயம் வெற்றி காதுக்கு போய் விடும். அத்தோடு நிக்காது, வேல் காதுக்கும் செல்லும். மத்தளம் போல இரு பக்கமும் அடி தான்.
மதியம் மேல் ஒரு கூடையில் உணவை கொண்டு போய் பெரிய வீட்டில் வைத்து விட்டு வந்தாள். அங்கிருந்த கட்டிலில் தான் படுத்து இருந்தார். சரண்யாவை பார்த்தாலும் எதுவும் கேட்க வில்லை. அவளும் எதுவும் பேச வில்லை. மனம் கேட்காமல் தான் வந்தாள். வாய் அதிகம் தான். வயாசானவர் ஒதுக்கி வைக்க முடியாது அல்லவா…
அன்று பிள்ளைகள் ஆண்டு விழா. சரண்யா சீக்கிரம் சென்று விட்டாள். அங்கு சென்று மீண்டும் ஒரு முறை பிள்ளைகளை குளிக்க வைத்து தயார் செய்தாள். இருவரும் சேர்ந்து ஒரு ஸ்பீச் கொடுக்கிறார்கள். அடுத்து டான்ஸ் தனி தனியே ஆடுகிறார்கள். மாலை ஐந்து மணிக்கு மேல் தான் என்பதால் நேரத்திற்கு வருவதாக வெற்றி சொல்லி விட்டான்.
விழா துவங்கியது. வெற்றி இன்னும் வர வில்லை. திரும்பி, திரும்பி பார்த்து கொண்டு இருந்தாள் சரண்யா. அவனுக்கு ஒரு சவாரி… பிள்ளைகள் பேசும் நேரத்திற்கு தான் வந்தான். “மை டாடி மை ஹீரோ” என்ற தலைப்பில் தான் பிள்ளைகள் இருவரும் பேசினார்கள். ஒரே போல உடையணிந்து இருவரும் கை பிடித்து பேசியது, அங்கிருந்த பலருக்கு ரசனையை கொடுத்தது.
வெற்றிக்கு வாயெல்லாம் பல்லாக தான் இருந்தது. என்ன செய்தேன் இவர்களுக்கு, ஒரு தகப்பனாக என் பொறுப்பை, கடமையை தான் செய்தேன். என் பிள்ளைகளின் ஹீரோ நான்… ரொம்ப பெருமையாக இருந்தது. பின்னாடி திரும்பி சரண்யா கணவன் முகம் தான் பார்த்தாள்.
வெற்றி மனைவி அருகில் வந்து அமர, அவள் முகத்தில் சிறு சுணக்கம் கூட இல்லை. முகம் மலர்ந்து இருந்தது. வெற்றி தான் அவள் எதுவும் நினைத்து கொள்வாளோ என்ற சிறு தவிப்பு கொண்டான். சரண்யா அப்படி எல்லாம் இல்லை.
மனைவியின் கை பிடித்து அமர்ந்து கொண்டான். “உனக்கு எதுவும் சங்கடமா சரண்?…” பிள்ளைகள் தானே அவள் உலகம்.
“ பிள்ளைகளுக்கு மட்டும் இல்லா எனக்கும் நீங்க கதாநாயகன் தான்…” சிரித்த முகமாக மனைவி சொல்ல.
“வேற என்ன வேண்டும். என் குடும்பம், எனக்கானது, என்னை மட்டுமே நம்பி கொண்டிருப்பது. அவர்கள் நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும். இந்த வாழ்க்கை அவர்களுக்கானது மட்டுமே…”
“ ம்ம்… என்னுடைய கதாநாயகியும் நீ தான். என்னோட ரோல் மாடலும் கூட. நான் எப்படி வாழணும்ன்னு சொல்லி கொடுத்து, அழகான வாழ்க்கையை தூக்கி இந்தா வச்சுகோன்னு கையிலும் கொடுத்து இருக்க…” என்று பூரிப்பாக சொன்னவன்.
“உங்களோட அழகான கிளி கூண்டுல எனக்கு இடம் இருக்கா… பாவம் நான், என்னையும் சேர்த்துக்கோங்க, பிளீஸ்…” என்றான் கண்கள் நெகிழ்ந்து இருந்தது.
“அந்த கிளி கூண்டு நீங்க தான… உங்க கிட்ட தான மூணு கிளிகளும் சேர்ந்து இருக்கு. நீங்க தான் அவங்களை பத்திரமா பார்த்துக்கணும்…” அவள் கண்களும் நெகிழ்ந்து இருந்தது.
“என் உயிரா பார்த்துபேன்…” என்று வெற்றி சொல்ல, அவன் கையை அழுத்தமகா பற்றினாள் சரண்யா.
பிள்ளைகள் இறங்கி வர, பேபி பிங்க் பிராக் போட்டு இருந்தார்கள். ஜோடியாக வருவது அழகாக இருக்க, அவர்கள் கன்னத்தை பலர் கிள்ளி முத்தம் கொடுக்க, பெற்றவர்களுக்கு பெருமை தான்.
அஜிக்கு தந்தையை பார்த்ததும் சிணுங்க தொடங்கி விட்டாள். மதியம் உறங்கும் பிள்ளை, இன்று பிராக்டீஸ் என்று உறங்க விடவில்லை. அதன் தாக்கம் போல, வெற்றி தோலில் போட்டு தட்டி கொடுத்த படி வெளியின் சென்று விட்டான். கூட்டமும், சத்தமும் அதிகம் என்பதால்… விஜி டான்ஸ் தொடங்கியது. பாய் கெட்டப்பில் கோட் சூட் போட்டு ஆடியது சின்ன சிட்டு. வெற்றியின் கண்கள் மகளை விட்டு நகர வில்லை. சரண்யா மகளை இஞ்ச் விடாமல் படம் எடுத்தாள். அவளின் வருத்தமே, அஜி டான்சில் கலந்து கொள்ளாமல் தூங்கியது. ஒரு சுணக்கம்…
“லூசு பயலுக… சின்ன பிள்ளைக நைட் வர முழிச்சு இருக்குமா, சோர்ந்து போகாது. பகல்ல விழா வச்சா என்னவாம்…” வெற்றி காரில் கடிந்து கொண்டு வர,
“ஒரு நாள் தான. உங்க பிள்ளைக முழிச்சு இருந்தா என்னவாம். மத்த பிள்ளைக எல்லாம் முழிச்சு இருக்கு. இவளுக்கு மட்டும் என்ன?…” சரண்யா குறையாக சொல்லி கொண்டாள்.
ஒரு வாரம் முழுக்க பிராக்டீஸ் பண்ணி, புது டிரஸ், ஸ்லீப்பர் என்று அவ்வளவு எஃபாட் போட்டும், சரியான நேரத்தில் தூங்கி விட்டாள். வெற்றி பிள்ளைகளை தொட விட மாட்டான். இல்லையென்றால், கன்னத்தில் தட்டி எழுப்பி விட்டு இருப்பாள்.
ஐஸ் கிரீம் பார்லர் தான் வந்தார்கள். ஐஸ் கிரீம் என்றதும் லட்டு குட்டி முழித்து விட்டது. சரண்யா முகத்தை பார்க்கணுமே… வெற்றி வாய் விட்டு சிரித்தான்.
அடுத்து சென்றது ஒரு கடைக்கு. எதுக்கு என்று புரியாமல் மனைவி பார்க்க, பிள்ளைகளை விளையாட்டு பொருள் பக்கம் அனுப்பியவன். தேர்வு செய்தான், ஒரு குட்டி பெட். எங்கும் எடுத்து செல்லவும், மடித்து வைக்கவும் எளிதானது. எதற்கு என்று பார்த்தவள், நொடியில் புரிந்து கொண்டாள். முகம் சிவக்க அந்த பக்கம் திரும்பி கொண்டாள்.
“ நானும் சத்தம் போடமாட்டேன். நீயும் போட கூடாது. இந்த பெட்டும் சத்தம் எழுப்பாது…”
“பெட் ரொம்ப சின்னதா இருக்கே. ஒருத்தர் தான் தூங்க முடியும்…”
“ நாம என்ன தூங்கவ போறோம்…” என்று வெற்றி சொல்ல. சரண்யா முகம் கொண்டு கணவனை பார்க்க முடியவில்லை. அந்த பக்கம் விசுகென்று திரும்பி கொள்ள.
“என்னடி முகம் திருப்புற, பிடிக்கலையா…”
“அய்யோ! அது வெக்கமங்க…”
“வெக்கமா… இனி வெக்கபட்டாலும் மாமனை பார்த்து தான் வெக்கபடனும்…” என்று வெற்றி சொல்ல. அவனின் பரிமாணம் தான் தாங்க முடியவே இல்லை சரண்யாவால்.
வீடு வந்து அஜியை தூங்க வைக்க முயன்றாள் சரண்யா. வெற்றி குட்டி போட்ட பூனையாக மனைவியையே சுத்தி வந்தான். அவளின் பின் பக்கம் ஒரு மாதிரி வெற்றியை கவர்ந்தது. பெட்டில் தான் அமர்ந்து இருந்தாள். அவளின் பின்னே அமர்ந்து முதுகின் மேல், கழுத்தின் கீழ் முத்தம் வைக்க, அவனின் அந்த புறம் அமர்ந்து இருந்த விஜி, தந்தையை பார்த்ததும் தானும் அது போல எம்பி தாயின் கழுத்தில் முத்தம் வைக்க, அரண்டு போனான் வெற்றி.
அஜி தூங்கியதை நினைத்தவன், விஜி தூங்க வில்லை என்பதை மறந்து விட்டான்… அவன் தலையில் அவனே அடித்து கொள்ள, அதே போல விஜியும் செய்து சிரிக்க. அவன் உக்கிரமாக முறைக்கும் மனைவியை தான் பார்த்தான்.
“என் ஃபீலிங் உனக்கு ஏன் தப்பாவே கன்வெர்ட் ஆகுது…”
“ஒரு ஃபீலிங்கும் இல்லை. பிள்ளையை வச்சு கிட்டு என்ன செய்றீங்க. வெளிய தள்ளி கதவை சாத்த போறேன்…” திட்டி விட்டு சென்றாள்.
பிள்ளைகளை ஒருவழியாக உறங்க வைத்து முடிக்க, வேகமாக கதவடைக்க சென்றான் வெற்றி.
“இன்னும் சாப்பாடு கொடுக்கலையா?… ஏய் சரண்யா அறிவு கெட்டவளே! எங்கம்மாக்கு இன்னும் சாப்பாடு கொடுக்கலையாடி… சீக்கிரம் நீ சாப்பிடும்மா, லேட் ஆச்சு உன்ன நான் கொண்டு போய் வீட்டுல விடுறேன்…”
“நான் அப்பவே சாப்பிட்டேன் மகனே. உங்க பெரியப்பனுக்கு உடம்பு முடியலையாம். உங்க அப்பா போயாச்சு… நான் தனியா கெடக்காம இங்க வந்தேன்…” என்ன சொல்ல முடியும். வெற்றி முகம் ஏமாற்றத்தை அப்படியே காட்டியது.
“அடியே இவளே… உங்க பெரிய மாமனார் பார்த்து இருக்கியா நீ… கெட்ட மனுசன்” ஆரம்பித்தவர் தான் பன்னிரண்டு மணிக்கு தான் முடித்தார்.
தனம் அப்பிடியே உறங்க, சரண்யா பாதி தூக்கத்தில், வெற்றி ஒன்றும் சொல்லாம அங்கேயே படுத்து விட்டான்.
மறுநாள் காலையிலே சரண்யாவை கிளப்பி கொண்டு இருந்தார் தனம். வெற்றியையும் விட வில்லை. சொந்தத்தில் ஒரு விசேஷம் என்று கிளம்ப சொல்லி கூட்டி வந்தார்.
யாருக்கு? என்று மனைவி முகம் பார்க்க.
அவள் கணவன் புறம் திரும்ப கூட இல்லை. சரண்யாக்கு தெரியும் செல்வது ஜோசியம் பார்க்க. மூணாவது ஆண் வாரிசு வேண்டுமாம். அவள் அறிவாள், வெற்றிக்கு மூணாவது பிள்ளை மேல் ஈடுபாடு கிடையாது. அவனுக்கு அவன் கிளிகள் மட்டும் போதும்…
அங்கு வந்ததும் அறிந்தவன், மனைவியை தான் தீயாக முறைத்தான்.
“சாமி… எம் மகன், மருமகள். ரெட்டை பிள்ளை ரெண்டும் பொம்பளை பிள்ளைக தான் இருக்கு. நல்லா தொழில் பண்றான். இவன் பேர் சொல்ல, சொத்துக்கு ஒரு வாரிசு வேணும். அடுத்து ஆண் பிள்ளை யோகம் இருக்கான்னு பாருங்க…” என்று தனம் சொல்ல.
கை நீட்டுங்க என்றார் ஜோசியர்.
சரண்யா கை நீட்ட வில்லை. நமக்கு எதுக்கு வம்பு. இந்த ஆள் நம்ம கையை பிடித்து பார்த்து அடுத்து பெண் பிள்ளை என்று விட்டால், இந்த அம்மாவிடம் யார் வாங்கி கட்டுவது. அவர்கள் மகனே காட்டட்டும்.
வெற்றி தான் கை நீட்டினான். கை பிடித்து ஆழ்ந்து பார்த்தவர்.
“மொத்தம் பத்து பிள்ளை இருக்கு. அதுல மொத ஒன்பதும் பார்வதி தான்…” போட்டார் ஒரு குண்டை.
சரண்யா அதிர்ந்து போய் கணவனை பார்க்க,
“கிரகம்…” என்று தனம் முனங்க. வெற்றி பல்லை கடித்தான்.
“சாமி! ஒன்பது பார்வதியா இருந்தாலும் பத்தாவது சிவனா?…” என்று ஒரே போடாக தனம் போட.