வண்ணம் – (29)
அஸ்வின், “இந்துவை விட இவனுக்கு என்ன முக்கியமான வேலை இருக்கு. அறிவு கெட்டவன்” என புலம்ப
வித்யா, “பொறுமையா இரு அஸ்வின். அவங்க இவ்வளவு அவசரமா போனா கண்டிப்பா முக்கியமான விஷயமாக தான் இருக்கும்” என்றுக் கூற “என்னவோ போங்க” என்றவன் வண்டியை லாயர் வீட்டை நோக்கி செலுத்தினான்.
ஏற்கனவே ரோகித் அங்கு வந்து இருக்க மூவரும் உள்ளே சென்றனர்.
விஜயராகவன் அவர்களை பார்த்தவுடன் “ரோஹித் வாப்பா, எப்படி இருக்க? அப்பா எப்படி இருக்காங்க?” என்றார்.
ரோஹித், “நல்லா இருக்கேன் அங்கிள். அப்பாவும் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க?”
விஜயராகவன், “ம்ம்… நல்லா இருக்கேன்ப்பா. ஆமா என்ன விஷயமா வந்திருக்க ரோஹித்.”
“அங்கிள் நான் நேத்தே சொன்னேன்ல. மினிஸ்டர் பையன் கொலை கேஸ்.”
விஜயராகவன், “ஆமாம்ப்பா.”
“அந்த கேஸ்ல உள்ள இருக்குற பொண்ணு என்னோட க்ளோஸ் ஃப்ரண்டு. நீங்க தான் அவளை வெளியே கொண்டு வரணும். எனக்காக பண்ணுங்க” என்றிட
“சரிப்பா, கேஸை பத்தி விவரம் சொல்லுங்க” என்றார்.
அஸ்வின் நடந்தவற்றையும் வித்யாவை பற்றியும் கூறினான். அதை கேட்டு சிறிது நேரம் யோசித்தவர் “அப்ப நீங்க சொல்றதைப் பார்த்தா அந்த பொண்ணு தான் ஆர்யாவை கொலை பண்ணி இருக்காங்க. ஐ அம் ரைட்” என்றிட
வித்யா, “ஆமாம் சார் அவங்க தள்ளி விட்டதுல அவன் கல் மேல மோதிட்டான். அவன் பின் மண்டையில் அடிச்சிருச்சு. நாங்க தொட்டு பார்த்தப்ப அவனுக்கு மூச்சு இல்ல. நாங்க உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டோம்” என்றாள்.
அஸ்வின், “சார் இந்துவே கொலை பண்ணி இருந்தாலும் அது எதார்த்தமா தான் நடந்தது. அதுமில்லாம அவன் தான் இந்துகிட்டேயும் வித்யாகிட்டேயும் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்கான்.”
விஜயராகவன், “நீங்க சொல்றது கரெக்ட் தான். தற்காப்புக்காக பண்ணது தான். ஆனால் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு. பார்ப்போம் வேற எதாவது வழி இருக்கானு நான் யோசிக்கிறேன்…” என்றவர் வித்யாவிடம் சில பல கேள்விகளை கேட்டு குறித்துக் கொண்டார்.
“சரி, ரோஹித் கேஸ் இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்டுக்கு வருதுல்ல, அங்க பார்ப்போம். ஆமா மினிஸ்டர் பக்கத்தில இருந்து எந்த எதிர்ப்பும் சொல்லலையா?”
ரோஹித், “அதான் அங்கிள் எனக்கும் பயமா இருக்கு. அவர் ரொம்ப சைலைண்டா இருக்கார். என்ன பண்ண போறான்னு தெரியலை.”
விஜயராகவன், “நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் டேஞ்சர் பர்சன். எனிவே கோர்ட்ல பார்ப்போம்.”
ரோஹித், “சரி அங்கிள், நீங்க கண்டிப்பா அவளை வெளியே கொண்டு வருவீங்கன்னு நான் நம்புறேன்.”
விஜயராகவன், “என் கையில என்ன இருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் முயற்சி பண்றேன். நல்லதே நடக்கும்னு நம்புவோம்” என்றிட “சரி அங்கிள் நாங்க கிளம்புறோம்” எனக் கூறி மூவரும் விடைபெற்று வெளியே வந்தனர்.
ரோஹித், “அஸ்வின் ரித்விக் எங்க.”
“ஏதோ முக்கியமான வேலைக்கு போய் இருக்காண்ணா.”
“சரி பார்த்து போங்க. இவர் கண்டிப்பா இந்துவ வெளியில் கொண்டு வந்துடுவார்னு நான் நம்புறேன்.”
அஸ்வின், “எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் ஆறு மாசம் தண்டனை கிடைக்கும்னு சொன்னாங்க. அதான் கொஞ்சம் நெருடலாக இருக்கு.”
ரோஹித், “அதை எல்லாம் நீ நினைக்காதே. நல்லது நடக்கும்னு நினை கண்டிப்பா நடக்கும். வித்யாவை பத்திரமா கூட்டிட்டு போ” என்றிட “சரிண்ணா நாங்க கிளம்புறோம்” எனக் கூறி வீட்டிற்குப் புறப்பட்டான்.
அவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைய மீனாட்சி, “என்ன நீங்க மட்டும் வந்து இருக்கீங்க. ரித்விக்கை காணோம்.”
“அவனுக்கு வேலை இருக்குனு போயிட்டான் அம்மா” என்றிட
சுந்தர்ராஜன், “என்னடா லாயரை பார்த்தீங்களா? என்ன சொன்னாங்க?” என பேசிக் கொண்டிருக்கும் காலிங் பெல் ஒலித்தது.
மீனாட்சி சென்று கதவை திறக்க அங்கு ராஜேந்திரனும் அம்புஜமும் முன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்த மீனாட்சி, “வாங்கண்ணா, வாங்க அண்ணி” என்று உள்ளே அழைக்க அவர்களைப் பார்த்த வித்யா, “இங்க எதுக்கு வந்தீங்க. வெளியில போங்க” எனக் கத்தினாள்.
அஸ்வின், “வித்யா அமைதியா இரு” என அடக்கினான். ராஜேந்திரன் சுந்தரராஜனின் கையை பிடித்துக் கொண்டு “என்னை மன்னிச்சுடு சுந்தர். விஷயம் தெரிஞ்ச உடனே எங்க என் பொண்ணு வாழ்க்கை வீணாப் போய்டும்னு பயந்து தான் நாங்க அவளை அடைச்சு வைச்சுட்டோம். அந்த நேரத்துல ஒரு பயத்தில் பண்ணிட்டோம். அந்த விஷயத்தை சொல்லி சரண்டர் ஆக போறேன்னு அவ சொன்னப்பா என்ன பண்றதுன்னு தெரியலை. என் பொண்ணு பேரு வெளில வர கூடாது அப்படினு நினைச்சு பண்ணிட்டோம். இப்ப அவளே எங்களை வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டா. நாங்க வைச்சிருக்கிறது ஒரே பொண்ணு அவள விட எங்களுக்கு எதுவுமே முக்கியமல்ல” எனக் கூறினார்.
அம்புஜம், “வித்யா உன் மேல இருக்கிற பாசத்துல தான்டி அப்படி பண்ணிட்டோம்” எனக் கூறி அழுதார்.
சுந்தரராஜன், “சரி விடுடா, நீயும் ஒரு சராசரி தகப்பனார் யோசிச்சிருக்க. இதுல உன் தப்பு இல்லை” என்றிட ராஜேந்திரன் சாரதாவிடம் வந்து “நீங்க தான் எங்களை மன்னிக்கனும். உங்க பொண்ணு மட்டும் இல்லைன்னா இன்னைக்கு வித்யா இருந்திருக்கவே மாட்டா. அது இப்பதான் எங்களுக்குப் புரிஞ்சது. என்ன மன்னிப்பியாம்மா” எனக் கேட்க
சாரதா, “ஐயோ! என்ன நீங்க இப்படி பேசுறீங்க? நீங்க வித்யா மேல இருக்கிற பாசத்துல தான பண்ணீங்க. விடுங்க, மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.”
ராஜேந்திரன், “நீங்க எல்லாரும் பேசுறதை பார்த்தா எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. நான் ரொம்ப சுயநலமா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்.”
மீனாட்சி, “விடுங்கண்ணா, நடந்ததே பேசிப் என்ன ஆகப்போகுது. அதான் உங்க தப்ப புரிஞ்சுகிட்டீங்கல்ல. இனிமே அதைப் பத்தி பேசாதீங்க.”
அம்புஜம், “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. நீங்க எல்லோரும் எப்படி பெருந்தன்மையா நடந்துக்கிறீங்க. உங்க குடும்பத்துல என் பொண்ணு வாழப் போறதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கனும்.”
சுந்தரராஜன், “ஏம்மா இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசற….”
அம்புஜம், “இல்லண்ணா… நான் உண்மைய தான் பேசுறேன். சரிங்கண்ணா நாங்க வித்யாவை கூட்டிட்டு போகவா? கல்யாணத்து முன்னாடி இங்க இருக்கிறது முறையில்ல. கல்யாணத்துக்கு அப்புறம் இங்கு தானே வரப்போறா…”
வித்யா சுந்தரராஜனை பார்த்து “இல்ல மாமா, நான் இவங்க கூட போக மாட்டேன் திருப்பி என்ன அடைச்சு வெச்சிருவாங்க…”
மீனாட்சி, “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது வித்யா. அவங்க உன்னோட அப்பா அம்மா இல்லையா? இத்தனை வருஷமா பார்த்து பார்த்து வளர்த்தவங்கள இப்படியா பேசுவ… ஏதோ ஒரு தடவ தெரியாம பண்ணிட்டாங்க. இனி அப்படி நடக்காது. முதல்ல அவங்க கிட்ட மன்னிப்பு கேளு” எனக் கடிந்து கொள்ள வித்யா அம்புஜத்தைக் கட்டிக் கொண்டாள்.
அம்புஜம், “இனிமே அம்மா அப்படி பண்ண மாட்டேன்ம்மா. ஏதோ ஒரு தடவை பாசம் என் கண்ணை மறச்சுடுச்சு. அது கூட உனக்காக தான்.”
வித்யா,”சாரிம்மா, நான் அப்படி பேசி இருக்க கூடாது. அப்பா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க.”
ராஜேந்திரன், “சரி விடும்மா, வா வீட்டுக்கு போகலாம்.”
வித்யா, “அப்பா இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்ல கேஸ் வருது. அதுக்கு சாட்சி சொல்லீட்டு வரேன்ப்பா.”
அஸ்வின், “ஆமா மாமா, நானே அவளை வீட்டில் கொண்டு வந்து விடுறேன்.”
ராஜேந்திரன், “சரிங்க மாப்பிளை. சுந்தர் நாங்க போயிட்டு வரோம்டா.”
மீனாட்சி, “என்னண்ணா, அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? சாப்பிட்டு போங்க…”
ராஜேந்திரன், “இல்லம்மா இருக்கட்டும். நாங்க கிளம்புறோம்” எனக் கூறி கிளம்பினார்கள்.
மீனாட்சி, “அஸ்வின், இந்த ரித்விக் பையனுக்கு ஒரு போன் பண்ணுடா. இவ்வளவு நேரம் ஆச்சு. எங்க போறேனு சொல்லீட்டாவது போறானா. வரவர இந்த பையனுக்கு பொறுப்பே இல்லை.”
அஸ்வின், “அம்மா நான் இப்பதான் ரெண்டு தடவை போன் பண்ணினேன். சுவிட்ச் ஆப்னு வருது. இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்” என்றான்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்தவர் இரவு நேரமாகி விட சுந்தரராஜனிடம்
“ஏங்க, ரித்விக்கை இன்னும் காணோம்” என புலம்ப “கொஞ்சம் பொறுமையாக இரு மீனாட்சி. அவன் இந்து கேஸ் விஷயமா தான் போய் இருப்பான். நீ கவலைப்படாத, அவன் என்ன சின்ன பையனா. வந்திடுவான்” என்றார்.
மீனாட்சி மீண்டும் அமர்ந்து வாசலை பார்க்க ஆரம்பித்தார். எல்லோரும் உறங்கச் செல்ல சுந்தரராஜன், “மீனாட்சி வந்து படு. அவன் வந்துடுவான்” என்றிட “நீங்க போங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வாறேன்” எனக் கூறி அமர்ந்து கொண்டார்.
மணி பணிரென்டை நெருக்க தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த அஸ்வின் மீனாட்சி ஹாலில் சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டவன் “என்னமா இன்னும் தூங்கலையா?”
“எப்படிடா தூங்க சொல்ற? இன்னும் ரித்விக் வரலை. அவன் வேற வர வர சரியாக சாப்பிறது கூட இல்ல. இப்ப எங்க போயிருக்கான் கூட தெரியலை” எனக் கூறி அழுக அவள் அருகில் அமர்ந்தவன் “அழுகாதீங்கம்மா, நான் அவன் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் போன் பண்ணி கேட்கிறேன்” என்றவன் எல்லோருக்கும் போன் பண்ணினான்.
எல்லோரும் வரவில்லை என்ற ஒரே பதிலை தந்தனர். அதைக் கேட்ட மீனாட்சி, “ஐயோ! என் பிள்ளை எங்க போனான்னு தெரியலையே” எனக் கூறி அழுக அந்த சத்தத்தில் எல்லோரும் எழுந்து வெளியே வந்தனர்.
சுந்தரராஜன், “என்னாச்சு மீனாட்சி, எதுக்கு அழுகுற.”
“என்புள்ள இன்னும் வரலை. அதை பத்தி கவலைப்பாடமா நீங்க தூங்குறீங்க” என பொரிய சுந்தரராஜன், “அஸ்வின் வாடா நம்ம போய் தேடுவோம்” என்று கிளம்பினார்.
அஸ்வின், “அப்பா இந்த நேரத்துல எங்க போய் தேடுவீங்க. அவன் எங்க போனானே தெரியலையே! நானும் அவன் ஃப்ரெண்ட் கிட்ட எல்லாம் போன் பண்ணி கேட்டுடேன். எல்லாருமே வரலைன்னு சொல்லிட்டாங்க.”
சுந்தரராஜன், “சரிடா காலைல வரைக்கும் வெயிட் பண்ணி பாப்போம். அப்புறம் வரலைன்னா அபிஷேக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுவோம்” என்று கூற அஸ்வின், “சரிப்பா… நீங்க சொல்றது கரெக்ட் தான்” என்றான்.
சுந்தரராஜன், “மீனாட்சி போய் படு. கண்டிப்பா ரித்விக் காலையில வந்துடுவான்” என்றவர் “வித்யா அத்தைய உள்ள கூட்டிட்டு போம்மா” என்றார்.
வித்யா, “வாங்க அத்தை, ரித்விக் மாமா காலையில கண்டிப்பா வந்திடுவார்” எனக் கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.
காலையில் வேகமாக எழுந்த சுந்தரராஜன் ரித்விக் வராதைக் கண்டு அபிஷேக் மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பு ஏற்கப்பட்டவுடன் அபிஷேகிடம் விஷயத்தைக் கூற “அப்பா நீங்க அஸ்வினை வந்து ஒரு காம்ப்ளைன்ட் மட்டும் எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க. நான் பார்த்துக்குறேன்” என்றான்.
அவர் அஸ்வினிடம் செய்தியைக் கூற அவன் ரூமில் கிளம்பிக் கொண்டிருந்தான். ஹாலில் அமர்ந்திருந்த வித்யா “அஸ்வின் அஸ்வின்” என கத்த மொத்த குடும்பமும் ஹாலில் கூடிவிட்டது.
அஸ்வின், “என்னடி ஆச்சு. எதுக்கு இப்படி கத்துற” என்றிட அவள் டி.வி யை கை காட்டினாள். அதை கண்டவுடன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது.
வண்ணங்கள் மிளிரும்…