நிலா – 1
சென்னையில் அந்த புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் அனைவரும் கிளம்பி இருக்க அவுட்டோர் ஸ்டேடியத்தில் புட்ஃபால் விளையாடி முடித்தவன் தன் வியர்வையை ஒற்றியபடி வந்தமர்ந்தான்.
“என்னடா இன்னைக்கு வொர்க்கவுட் பலமா இருக்குது?…” என அவனுக்கருகே புக்கை வைத்து அமர்ந்திருந்தான் வெற்றி.
“ஹ்ம்ம் அப்படிலாம் இல்லை. என்னைக்கு ஊருக்கு கிளம்பற நீ?…” என்றான் அவன் சூரியவர்த்தன்.
“இன்னும் நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம். முடிஞ்சதும் ஈவ்னிங் கிளம்பவேண்டியது தான்…” என்ற வெற்றி,
“படிடா சூர்யா. இப்பவும் விளையாடிட்டு…” என சொல்ல,
“ப்ச், இது என்ன பைனலா? நாம படிக்கிறது செகென்ட் இயர் தான். அதுக்குள்ளே உள்ள புக் மொத்தத்தையும் கரைச்சு குடிச்சுடனும் உனக்கு. போடா…” என்றான் சூர்யவர்த்தன்.
“ப்ச், நீ திருந்தமாட்ட…” என சொல்லிவிட்டு,
“ஓகே நான் ஹாஸ்டல் கிளம்பறேன். டைம் ஆகிட்டா வார்டன் ரொம்ப பேசுவான்…” என்று வெற்றி எழுந்துகொள்ள,
“மெக் ஸ்டூடன்ட் மாதிரி பிஹேவ் பண்ணுடா. சும்மா ஸ்கூல் பையன் மாதிரி பயந்து நடுங்கிட்டு. வா நானும் வரேன். எவன் என்ன கேட்கறான்னு பார்க்கறேன்…” என வேகமாய் எழ,
“ஐயா சாமி. உன் வீரதீரங்களை எல்லாம் என்கிட்டே காமிக்காத. நான் இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போய்டறேன். அவ்வளோ தான்…” என கையெடுத்து கும்பிட்டான்.
சூரியவர்த்தன், வெற்றிமாறன் இருவரும் மெக்கானிக்கல் மாணவர்கள். கல்லூரி சேர்ந்ததில் இருந்தே நெருங்கிய தோழர்களும் கூட.
சூரியவர்த்தன் சென்னையை சேர்ந்தவன். வெற்றி திருவண்ணாமலையை சேர்ந்தவன். தன் அக்காவின் வீட்டில் தங்கி படித்து வருகிறான். தினமும் சென்றுவருதல் ஆகாதென்று அக்கா மோகனா அவனை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
“ஓகே கிளம்புவோமா? நானும் வரேன்…” என தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்த சூர்யா தனது பைக்கை இயக்கியபடி,
“வா நானே ட்ராப் பண்ணிட்டு போறேன்…” என அழைக்க,
“இந்த வம்பு தானே வேண்டாம்ன்றது. அங்க வந்து பிரச்சனை செய்யறதுக்கா? பேசாம நீ கிளம்பு. பக்கம் தானே வாக்கபிள் டிஸ்டன்ஸ். நானே போய்க்கறேன்…” என வெற்றி அவனை மறுக்க,
“அதே வாக்கபிள் டிஸ்டன்ஸ் நானும் கம்ப்ளீட் பன்றேன். வா…” என அவனின் BMW பைக்கை உருட்டிக்கொண்டு அவனுடன் நடந்தான் சூர்யா.
“பைக்காடா இது? மனுஷன் உட்காருவானா?…” என அவனை கேலி செய்துகொண்டே வந்தான் வெற்றி.
இருவரும் பேசிக்கொண்டே வந்த வழியில் உடன் பயிலும் மாணவனின் கேன்சல் குரல் கேட்க,
“இரு வரேன்…” என்ற சூர்யா,
“அரவிந்த்…” என சத்தமாய் அங்கிருந்தே அழைக்க அவனுடன் இன்னொரு பெண்ணும் எட்டி பார்த்தாள்.
“என்னடா பன்ற? டைம் என்ன?…” என்றான் அவனிடத்தில் அதட்டலாக.
“ப்ரென்ட் மச்சி. அதான் பேசிட்டு இருக்கேன்…” என அரவிந்த் சொல்ல,
“மூஞ்சியை பார்த்தா அழுத மாதிரி தெரியுது. என்னடா பிரச்சனை?…” என கேட்டுக்கொண்டே சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.
அவனை முறைத்தபடி இருந்தாள் அரவிந்தனுடன் இருந்த பெண். அவளுக்குமட்டுமல்ல அந்த கல்லூரியில் எந்த பெண்ணுக்குமே சூர்யாவை பிடிக்காது.
“நான் போறேன், இவன் ஒரு திமிர்ப்பிடிச்சவன். இவன் கூட நீ பேசு. நான் போறேன்…” என்றவளை கெஞ்சி இருக்க வைக்க முயல,
“வெக்கமா இல்லையாடா உனக்கு? அதான் போறேன்றாங்க தானே மேடம். விட்டுத்தொலையேன்…” என்றவனை எரிப்பதை போல அவள் பார்க்க,
“என்ன? என்ன லுக்கு? போவியா…” என சூர்யா எகிறியத்தில்,
“இவனோட சேர்ந்தா இந்த ஜென்மத்துல உனக்கு லவ்வும் செட்டாகாது ஒன்னும் செட்டாகது…” என சாபம் போல சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள் அப்பெண்.
“என்ன சூர்யா நீ?…” என்ற அரவிந்தனின் எரிச்சல் முகத்தில்,
“அடேய் என்னடா நீ? கொஞ்சமும் நம்மோட கெத்து தெரியாம பின்னால சுத்திட்டு இருக்க? பொண்ணுங்க நம்ம பின்னால தான் சுத்தனும். நாம இல்லை. புரியுதா? நாம எல்லாம் மெக்கானிக்கல் ஸ்டூடன்ஸ். மெக்னாலே கெத்துடா…” என அரவிந்தனின் மண்டையை கழுவ ஆரம்பிக்க அவனின் பேச்சின் திறமையில் அரவிந்தனும் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான்.
“போச்சுடா, இன்னைக்கு இவனே அந்த புள்ளையை வேண்டாம்னு சொல்ல வச்சிடுவான்…” என சூர்யாவின் பேச்சை அறிந்தவனாக புலம்பியபடி நின்றான்.
கடைசியில் அவன் நினைத்ததை போலவே தான் நடந்தது.
“இப்ப புரியுதா? நம்மளை வேண்டாம்னு சொல்ல யோசிக்கனும். இப்படிலாம் இருக்காத…” என சொல்லி அவனை அனுப்பி வைத்தவன் திரும்பி வெற்றியை பார்த்தான்.
“முடிஞ்சதா? வில்லன்டா நீ. எங்க எக்குத்தப்பா சிக்க போறியோ?….”
“நானா? சிக்கறதா? நோ வே. எனக்குத்தான் ஏற்கனவே வீட்டுல ஒருத்தியை வளர்த்துட்டு வராங்களே. இந்த பின்னால சுத்தறது எல்லாம் சூர்யாவோட ஹிஸ்டரில கூட கிடையாது…” என மிதப்பாய் சொல்லியவன் வண்டியை நகர்த்தினான்.