நிலா – 10
“என்ன சுத்தி சுத்தி பார்த்துட்டே நிக்கற?…” என்றவனின் குரலில் அவனை திரும்பி பார்த்தவள்,
“ஆன்ட்டி எங்கன்னு தேடிட்டு இருக்கேன். வீட்ல யாரும் இருக்கறது மாதிரி தெரியல…” என்றாள்.
“ஓஹ், கிட்சன்ல இருப்பாங்க…” என்றவன் அங்கே சென்று ‘அம்மா’ என அழைக்க,
“அவ எங்க இங்க இருக்கா? உமா வீட்டுல தான் எல்லாரும் இருக்கோம்…” என்று வெளியிலிருந்து வந்த உறவு பெண்மணி சொல்ல,
“அங்க என்ன பன்றாங்க எல்லாரும்?…” என சூர்யா கேட்கும் பொழுதே அர்ச்சனா வந்துவிட்டார் வேகமாய்.
“அக்கா, நீங்க உமா கூட இருங்க, நான் வந்திடறேன்…” என அந்த பெண்மணியை அனுப்ப அவரோ பாலாவை உக்கிரமாய் முறைத்தபடி எதையோ முணுமுணுத்து கொண்டே செல்ல அதை கவனித்துவிட்டான் சூர்யா.
“பெரியம்மா நில்லுங்க. ஏன் அவளை முறைச்சுட்டே போறீங்க?. என்னவோ சொன்னீங்களே, சத்தமா சொல்லுங்க…” என நிறுத்திவிட்டான் அவரை.
அர்ச்சனாவிற்கு பதறி போனது. ‘இருக்கும் பிரச்சனையில் இதென்ன புதிதாய் கிளப்புகிறான் இவன்?’ என்று நினைத்து,
“சூர்யா விடு. சும்மா பார்த்திருப்பாங்க…” என்ற அர்ச்சனா,
“நீங்க போங்க அக்கா…” என்றார் அவரிடம்.
“நோ, பெரியம்மா நில்லுங்க. என்னவோ சொன்னீங்களே? என்ன சொன்னீங்க? பாலாவை தானே பேசினீங்க?…” என்ற சூர்யா,
“ம்மா, அவங்க பாலாவை என்னவோ சொன்னாங்க. அதுவும் அத்தனை கோபமா…” என்று தாயிடம் அவன் எகிற பாலாவுக்குமே பயமாகி போனது ‘தன்னை கொண்டு பிரச்சனையா?’ என்று.
“சொல்லுங்க, என்ன சொன்னீங்க?…” என அவரின் முன்னால் சென்று நின்று கேட்க,
“நான் கூட திவ்யா போனதால இந்த புள்ளைய புடிச்சு கட்டி வச்சிருக்காங்கன்னு நினைச்சா இப்பத்தான தெரியுது? இவ வந்த நேரம்….” என அந்த பெரியம்மா நீட்டிமுழக்கி அலட்சியமாய் சூர்யாவை பார்க்க அவனுக்கு சுறுசுறுவென கோபம் பொங்கியது.
“இங்க பாருங்க, கல்யாணம் பண்ணி வச்சது எங்க அப்பா. அவளுக்கு தாலி கட்டினது நான். என்னை பேசுங்க. எதுக்கு அவளை சொல்லனும்? இந்த நேரம், காலம் எல்லாம் என்னோட அப்பாட்ட போய் நின்னு பேசுங்க பார்க்கலாம்…” என்று சூர்யா குதிக்க அவனை அவனின் இந்த கோபத்தை பார்த்தபடி அப்படியே நின்றிருந்தாள் பாலா.
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு உன் மகன் என்னை முறைச்சுட்டு வரான் அர்ச்சு? இதென்ன மரியாதை இல்லாத பேச்சு?…” என்று அர்ச்சனாவிடம் அவர் திரும்ப,
“நான் பேசினா என்னை கேளுங்க. எதுக்கு அம்மாவை இழுக்கறீங்க? எதுக்கு வந்தீங்களோ வந்ததை பாருங்க. இன்னொருவாட்டி அவளை முறைச்சு பார்க்கறது, சைடா பார்க்கறது, ஓரக்கண்ணால பார்க்கறதுன்னு வச்சுட்டு ஜாடை பேசினீங்க…” என்றவனை தன் பக்கம் வேகமாய் திருப்பிய அர்ச்சனா,
“சூர்யா…” என அதட்டினார்.
“நான் போறேன். இனி இங்க வந்தா என்னன்னு கேளு அர்ச்சு. இனி உறவுன்னு இந்த வீட்டுல நுழையமுடியுமா?…” என்று கோபமாய் சொல்லிவிட்டு அந்த பெரியம்மா சென்றுவிட,
“ஏன் சூர்யா இப்படி பன்ற?…” என்றார் ஆற்றமாட்டாமல்.
“என்ன பண்ணிட்டேன்? கட்டாயப்படுத்தி கட்டி வைக்க தெரிஞ்சதுல. அவளை பேசறப்போ அப்படி பேசாதீங்கன்னு சொல்ல வாய் வரலை உங்களுக்கு. வீட்டுக்குள்ள உங்களுக்கு முன்னாடியே பாலாவை அவ வந்த நேரம்னு சொல்லி வாய்க்கு வந்தபடி பேசறாங்க, என்ன செய்ய முடிஞ்சது உங்களால?…”
சூர்யா சுள்ளென கேட்க கேட்க அர்ச்சனாவிற்கு என்னவோ போலிருந்தது. அதுவும் பாலாவை வைத்துக்கொண்டே தன்னை அதட்டி அவன் பேசியவிதம் தாயாய் அவருக்கு ரசிக்கவில்லை.
அவன் எப்போதுமே அப்படித்தானே என்றாலும் ஏனோ மருமகள் என்று ஒருத்தி வந்த பின்னால் அவளுக்காக வந்த அன்றே தாயிடம் இவன் பாய அது அர்ச்சனாவிற்கு தலையிறக்கமாக போனது.
“சூர்யா, என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாத. பிரச்சனை என்னன்னா?…”
“என்ன பிரச்சனையாவும் இருந்துட்டு போகட்டும். அப்படி பேசாதீங்கன்னு நீங்க ஒரு வார்த்தை சொல்லிருக்கனும் தானே? வெற்றி என்ன நினைப்பான்? பொண்ணை குடுங்கன்னு கேட்டதும் யோசிக்காம சரின்னு சொன்னாங்க. இப்படி இவளை நாலு பேரு பேச வச்சு கேட்க தானா?…”
பாலாவிற்கு அவனின் கோபத்தில் ஆச்சர்யமும் வந்தது. அதே நேரத்தில் இத்தனை கோபப்படுபவனா என்று அச்சமும் வந்தது.
‘தன்னிடம் பேசுபவன் இவ்வளவு கோபமில்லையே’ என்று கல்யாணத்திற்கு முன் சூர்யா, கல்யாணத்திற்கு பின் சூர்யா என இரு குணங்களையும் அலச ஆரம்பித்திருந்தாள்.
“சூர்யா உமா நைட்ல தூக்கமாத்திரை போட்டுட்டாப்பா…” என்று அர்ச்சனா பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில் சொல்ல,
“வாட்?…” என்றான் வேகமாய்.
இது அவன் சுத்தமாய் எதிர்பார்க்காதது. ஏன் வீட்டில் ஒருவரும் இல்லாமல் அங்கே இருக்கிறார்கள் என்று அப்போது புரிந்தது அவனுக்கு.
“இப்போ எப்படி இருக்காங்க?…” என கேட்க,
“ஹ்ம்ம், நைட்டே டாக்டரை வரவழைச்சு பார்த்துட்டோம். அப்பா தன ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டாம்னு சொல்லி விடியும் போதே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லி வந்துட்டோம் எல்லாரும்…” என சொல்ல சூர்யா மௌனமாய் நின்றான்.
திவ்யாவை நினைத்து ஆத்திரமாய் வந்தது. திருமணம் பிடிக்கவில்லை என்று தன்னிடம் சொல்லியிருந்தாளாவது ஏதாவது பாதகமில்லா முயற்சி எடுத்திருக்கலாமே என்று நினைத்தான்.
பாலாவிற்கும் அதிர்ச்சி. இதற்கு எப்படி ரியாக்ட் செய்யவென்றே அவளுக்கு முதலில் புரியவில்லை. அதிர்ந்த முகம் வெளிறி இருக்க அர்ச்சனா மெல்ல பாலாவை பார்க்க சூர்யாவும் திரும்பி பார்த்தான்.
இவை எல்லாம் இந்த மாதிரி உறவுகளில் வரும் பிரச்சனை எல்லாம் அவளுக்கு புதிது. அதிலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு பிரச்சனை.
அதற்கு தானும் ஒரு காரணம் எனும் பொழுது முகம் குப்பென்று வியர்த்திருக்க லேசாய் கண்கள் சொருக அப்படியே சரிந்தவள் சோபாவில் விழ பாய்ந்து சென்று பிடித்துக்கொண்டான்.
“பாலா, பாலா…” என அவளின் கன்னம் தட்ட,
“சூர்யா போய் தண்ணி கொண்டு வா. நான் பார்த்துக்கறேன்…” என அவனை நகர்த்திய அர்ச்சனா தன் மடியில் அவளை மாற்றிக்கொண்டார்.
“என்னம்மா இது? இப்படி விழறா? நேத்தும் இப்படித்தான்…” என சொல்ல வந்தவன் கப்பென்று பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீரை எடுத்து ஓடிவர அவனிடம் வாங்கி அவளின் முகத்தில் அடித்து தெளித்தவர்,
“அந்த ரூம்ல டவல் இருக்கும். எடுத்துட்டு வா…” என்று மீண்டும் துரத்தினார்.
அதற்குள் பாலா லேசாய் கண்ணை விழிக்க அவளுக்கு குடிக்க தண்ணீரை தந்தவர் குடித்து முடிக்கும் வரை அமைதியாய் இருந்துவிட்டு,
“நீ ரூம்லயே இருந்திருக்கலாமே பாலா. இப்ப தான் அம்மா கால் பண்ணினாங்க…” என்று சொல்லவும் அமைதியாய் அவள் இருக்க,
“டவல்…” என்று அவளின் முன்னால் நீட்டினான் அவளை ஆராய்ந்துகொண்டே.
“ஆர் யூ ஓகே பாலா?…” என வேறு கேட்க,
“அவ நல்லா தான் இருக்கா. நீ ஏன் பதட்டப்படற?…” என்றார் அவனை லேசாய் கடிந்தபடி.
“ப்ச், இவளுக்கு ஒண்ணுன்னா வெற்றிக்கும், மோகனாக்காவுக்கும் யார் பதில் சொல்ல?…” என்றான் டென்ஷனுடன்.
“ஓஹ்…” என்றாள் பாலா ஒருமாதிரி குரலில்.
என்னவகையில் அவள் அவன் பேசியதை எடுத்துக்கொண்டாள் என்றே சூர்யாவிற்கு புரியவில்லை. எதற்காம் இந்த ‘ஒஹ்?’ என மண்டை காய்ந்தான் அவளின் முகபாவனையற்ற தன்மையில்.
“காலையில பாலா அம்மா பேசிட்டாங்க. அவங்கட்ட பேசிட்டு தான் நானும் இங்க வந்தேன். அவளுக்கு வழக்கமா இந்த நேரத்தில வர சிக்னெஸ் தான் இது. பயப்பட ஒண்ணுமில்லை. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்…” என்றவர் அவளின் தலையை லேசாய் நீவி விட,
“இருக்கட்டும் ஆன்ட்டி…” என்றாள் அயர்ந்த குரலில்.
“நீ ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு பாலா. உனக்கு டிபன் எல்லாம் அங்கயே அனுப்பறேன்…” என அர்ச்சனா சொல்லிவிட்டு சூர்யாவையும் ஒரு பார்வை பார்த்தவர்,
“கம்ப்ளீட் ஆகற வரைக்கும் மாடியிலையே இருந்துப்ப தானே?…” என்றார்.
மறைமுகமாய் நீ அங்கே தான் இருக்கவேண்டும் என்ற வலியுறுத்தல் அதில் தொனித்திருந்ததை பாலாவும், சூர்யாவும் உணரத்தான் செய்தனர்.
அர்ச்சனா அவளிடம் கேட்டுக்கொண்டு இருக்க கோபாலசுவாமி வந்துவிட்டார் தங்கை வீட்டில் இருந்து.
“அர்ச்சு…” என மனைவியை அழைத்ததும் அவர் எழுந்து பார்க்க அவரின் பார்வை சூர்யாவையும், பாலாவையும் ஆராய்ச்சியாய் பார்த்தது.
“சொல்லுங்க…” என்ற மனைவியை கண்டனப்பார்வை பார்த்தவர்,
“பாலா கீழே வந்ததும் சம்பிரதாயத்தை சொல்லி தர மாட்டியா? புடவை மாத்திட்டு வந்து பூஜை ரூம்ல விளக்கேத்த சொல்லு. நானும் வந்திடறேன்…” என்று சொல்லி நகர போக,
“இல்லைங்க, இப்ப வேண்டாம்…” என்ற அர்ச்சனாவின் குரலில் நின்று மீண்டும் பார்க்க,
“இப்போ பண்ண முடியாது. அதான்…” என்றார் அர்ச்சனா தயங்கி தயங்கி.
அப்பட்டமான அதிருப்தியை காண்பித்தது கோபாலசுவாமி முகம். பாலாவை சற்று கடுமையாக பார்த்தவர் மனைவியை முறைத்துவிட்டு அறைக்குள் நுழைந்துகொண்டார்.
இதை எல்லாம் கவனித்த சூர்யாவிற்கு ஓரளவு விஷயத்தை யூகிக்க முடிந்தது. இன்னும் அமர்ந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்த பாலாவை இரக்கத்துடன் பார்த்தான் அவன்.
பாலாவின் சங்கடமும், சூழ்நிலையும் அவனுக்கு விளங்கியது. சற்றுமுன் அறையில் கண்ணீருடன் தாயிடம் பேசிய அவளின் முகம் ஞாபகம் வர யோசனையுடன் அவளையே பார்த்தபடி நின்றான்.
“பாலா நீ மாடிக்கு போ…” என்று அர்ச்சனா சொல்ல,
“ஆன்ட்டி நீங்க தப்பா எடுத்துக்கலைனா நான் ஒரு ரெண்டு நாள் வெற்றி மாமா வீட்டுக்கு போய்ட்டு வரட்டுமா?…” என கேட்க அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
கோபாலசுவாமியிடம் கேட்காமல் எந்த முடிவையும் அவர் எடுத்ததில்லையே. திருமணத்தில் நடந்த குழறுபடிகள் போக உமா செய்துவைத்த வேலை, இப்போது பாலாவின் சூழ்நிலை என்று அவரை ஒருவழியாக்கியது என்றால் வீட்டிற்கு சென்றுவருகிறேன் என்று சொல்லும் பெண்ணிற்கு என்ன பதில் சொல்ல என திருதிருவென பார்த்தார்.
“நான் அவர்க்கிட்ட கேட்டுட்டு சொல்றேன் பாலா…” என சொல்ல,
“இந்த மந்த் மட்டும். ப்ளீஸ். எனக்கு என்னவோ மாதிரி இருக்குது. ப்ளீஸ் ஆன்ட்டி…” என்று அவளை அவரின் கையை பிடித்தபடி கேட்க,
“பாலா, நான் கூட்டிட்டு போறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு…” என்றான் சூர்யா சட்டென முடிவெடுத்தவனாக.
“சூர்யா அப்பாக்கிட்ட பேசாம எப்படி சொல்ற நீ? அதோட இப்ப நம்ம வீடு இருக்கற சூழ்நிலை…” என அர்ச்சனா சற்று கோபமாகவே பேசிவிட்டார் அவனிடத்தில்.
முதல்நாள் மகன் இருந்த கோபமென்ன, இன்றானால் வீட்டின் சட்டதிட்டங்களை பாலாவிற்காக மாற்றும் விதமாய் அவன் பேசுவதென்ன என்று அத்தனை அதிருப்தி மகனிடத்தில்.
அதிலும் அவன் தான் சொல்லிய பின்னும் இப்படி பேசுவது அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாலாவின் நிலை புரிகிறது. ஆனாலும் எதுவும் சரியாகப்படவில்லை. சொந்தங்கள் இன்னும் செல்லாமல் உமா வீட்டில் இருக்க, இன்னும் இதை கேள்விப்பட்டு பார்க்கவென்றே ஏனையோர் வந்து செல்வார்கள்.
பிடித்தமில்லை என்றாலும் வேண்டுமென்றே பாலாவை கேட்டு இங்கே பாலா இல்லாமல் கிளம்பினால் அதற்கும் ஏதாவது சச்சரவை கூட்டுவார்கள் என்றே அர்ச்சனா யோசனையுடன் இருந்தார்.
“ம்மா, அப்பாக்கிட்ட நான் பேசிக்கறேன். இப்போ வாங்க அத்தையை போய் பார்த்துட்டு வருவோம்…” என அவன் சொல்ல,
“நானும் வரனுமா?…” என்றாள் பாலா அர்ச்சனாவை பார்த்து.
“நீ வரவேண்டாம். இங்க இரு. நான் போறேன்ல. போதும்…” என்றான் அவளை தன் புறம் திருப்பி.
“ம்மா, வாங்க…” என்று அழைக்க,
“சூர்யா இப்போ நீ அங்க வர வேண்டாம். உமா ரொம்ப கோபமா இருக்கா…”
“என் மேல கோபப்பட என்ன இருக்குது? பார்க்க வரலைன்னா அதுக்கும் எதாச்சும் பேசுவாங்க. வாங்க நீங்க…” என்று விறுவிறுவென முன்னால் நடக்க சூர்யாவிற்கு அர்ச்சனாவின் நிலை புரியவில்லை.
கையை பிசைந்துகொண்டு அவர் அப்படியே நிற்க அதற்குள் கோபாலசுவாமி அவரின் அறையில் இருந்து எட்டிப்பார்த்து,
“அர்ச்சு ஸ்நானம் பண்ணிட்டு காபி கொண்டா…” என்றவர் இன்னும் பாலா அங்கேயே அமர்ந்திருப்பதை கண்டு,
“நீ உன் ரூம்க்கு போமா பாலா…” என சொல்ல இப்போது புரிந்தது சூர்யாவிற்கு அர்ச்சனா ஏன் நின்றார் என்று.
பாலாவை பார்த்தவன் அவளும் அனுமானித்ததை போல முகம் சஞ்சலத்துடன் அமர்ந்திருக்க அவனின் மொத்த கோபமும் அவளை தான் அடைந்தது.
“பாலா கெட்அப்…” என்றான் வேகமாய்.