நிலா – 1
சென்னையில் அந்த புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் அனைவரும் கிளம்பி இருக்க அவுட்டோர் ஸ்டேடியத்தில் புட்ஃபால் விளையாடி முடித்தவன் தன் வியர்வையை ஒற்றியபடி வந்தமர்ந்தான்.
“என்னடா இன்னைக்கு வொர்க்கவுட் பலமா இருக்குது?…” என அவனுக்கருகே புக்கை வைத்து அமர்ந்திருந்தான் வெற்றி.
“ஹ்ம்ம் அப்படிலாம் இல்லை. என்னைக்கு ஊருக்கு கிளம்பற நீ?…” என்றான் அவன் சூரியவர்த்தன்.
“இன்னும் நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம். முடிஞ்சதும் ஈவ்னிங் கிளம்பவேண்டியது தான்…” என்ற வெற்றி,
“படிடா சூர்யா. இப்பவும் விளையாடிட்டு…” என சொல்ல,
“ப்ச், இது என்ன பைனலா? நாம படிக்கிறது செகென்ட் இயர் தான். அதுக்குள்ளே உள்ள புக் மொத்தத்தையும் கரைச்சு குடிச்சுடனும் உனக்கு. போடா…” என்றான் சூர்யவர்த்தன்.
“ப்ச், நீ திருந்தமாட்ட…” என சொல்லிவிட்டு,
“ஓகே நான் ஹாஸ்டல் கிளம்பறேன். டைம் ஆகிட்டா வார்டன் ரொம்ப பேசுவான்…” என்று வெற்றி எழுந்துகொள்ள,
“மெக் ஸ்டூடன்ட் மாதிரி பிஹேவ் பண்ணுடா. சும்மா ஸ்கூல் பையன் மாதிரி பயந்து நடுங்கிட்டு. வா நானும் வரேன். எவன் என்ன கேட்கறான்னு பார்க்கறேன்…” என வேகமாய் எழ,
“ஐயா சாமி. உன் வீரதீரங்களை எல்லாம் என்கிட்டே காமிக்காத. நான் இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போய்டறேன். அவ்வளோ தான்…” என கையெடுத்து கும்பிட்டான்.
சூரியவர்த்தன், வெற்றிமாறன் இருவரும் மெக்கானிக்கல் மாணவர்கள். கல்லூரி சேர்ந்ததில் இருந்தே நெருங்கிய தோழர்களும் கூட.
சூரியவர்த்தன் சென்னையை சேர்ந்தவன். வெற்றி திருவண்ணாமலையை சேர்ந்தவன். தன் அக்காவின் வீட்டில் தங்கி படித்து வருகிறான். தினமும் சென்றுவருதல் ஆகாதென்று அக்கா மோகனா அவனை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
“ஓகே கிளம்புவோமா? நானும் வரேன்…” என தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்த சூர்யா தனது பைக்கை இயக்கியபடி,
“வா நானே ட்ராப் பண்ணிட்டு போறேன்…” என அழைக்க,
“இந்த வம்பு தானே வேண்டாம்ன்றது. அங்க வந்து பிரச்சனை செய்யறதுக்கா? பேசாம நீ கிளம்பு. பக்கம் தானே வாக்கபிள் டிஸ்டன்ஸ். நானே போய்க்கறேன்…” என வெற்றி அவனை மறுக்க,
“அதே வாக்கபிள் டிஸ்டன்ஸ் நானும் கம்ப்ளீட் பன்றேன். வா…” என அவனின் BMW பைக்கை உருட்டிக்கொண்டு அவனுடன் நடந்தான் சூர்யா.
“பைக்காடா இது? மனுஷன் உட்காருவானா?…” என அவனை கேலி செய்துகொண்டே வந்தான் வெற்றி.
இருவரும் பேசிக்கொண்டே வந்த வழியில் உடன் பயிலும் மாணவனின் கேன்சல் குரல் கேட்க,
“இரு வரேன்…” என்ற சூர்யா,
“அரவிந்த்…” என சத்தமாய் அங்கிருந்தே அழைக்க அவனுடன் இன்னொரு பெண்ணும் எட்டி பார்த்தாள்.
“என்னடா பன்ற? டைம் என்ன?…” என்றான் அவனிடத்தில் அதட்டலாக.
“ப்ரென்ட் மச்சி. அதான் பேசிட்டு இருக்கேன்…” என அரவிந்த் சொல்ல,
“மூஞ்சியை பார்த்தா அழுத மாதிரி தெரியுது. என்னடா பிரச்சனை?…” என கேட்டுக்கொண்டே சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.
அவனை முறைத்தபடி இருந்தாள் அரவிந்தனுடன் இருந்த பெண். அவளுக்குமட்டுமல்ல அந்த கல்லூரியில் எந்த பெண்ணுக்குமே சூர்யாவை பிடிக்காது.
“நான் போறேன், இவன் ஒரு திமிர்ப்பிடிச்சவன். இவன் கூட நீ பேசு. நான் போறேன்…” என்றவளை கெஞ்சி இருக்க வைக்க முயல,
“வெக்கமா இல்லையாடா உனக்கு? அதான் போறேன்றாங்க தானே மேடம். விட்டுத்தொலையேன்…” என்றவனை எரிப்பதை போல அவள் பார்க்க,
“என்ன? என்ன லுக்கு? போவியா…” என சூர்யா எகிறியத்தில்,
“இவனோட சேர்ந்தா இந்த ஜென்மத்துல உனக்கு லவ்வும் செட்டாகாது ஒன்னும் செட்டாகது…” என சாபம் போல சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள் அப்பெண்.
“என்ன சூர்யா நீ?…” என்ற அரவிந்தனின் எரிச்சல் முகத்தில்,
“அடேய் என்னடா நீ? கொஞ்சமும் நம்மோட கெத்து தெரியாம பின்னால சுத்திட்டு இருக்க? பொண்ணுங்க நம்ம பின்னால தான் சுத்தனும். நாம இல்லை. புரியுதா? நாம எல்லாம் மெக்கானிக்கல் ஸ்டூடன்ஸ். மெக்னாலே கெத்துடா…” என அரவிந்தனின் மண்டையை கழுவ ஆரம்பிக்க அவனின் பேச்சின் திறமையில் அரவிந்தனும் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான்.
“போச்சுடா, இன்னைக்கு இவனே அந்த புள்ளையை வேண்டாம்னு சொல்ல வச்சிடுவான்…” என சூர்யாவின் பேச்சை அறிந்தவனாக புலம்பியபடி நின்றான்.
கடைசியில் அவன் நினைத்ததை போலவே தான் நடந்தது.
“இப்ப புரியுதா? நம்மளை வேண்டாம்னு சொல்ல யோசிக்கனும். இப்படிலாம் இருக்காத…” என சொல்லி அவனை அனுப்பி வைத்தவன் திரும்பி வெற்றியை பார்த்தான்.
“முடிஞ்சதா? வில்லன்டா நீ. எங்க எக்குத்தப்பா சிக்க போறியோ?….”
“நானா? சிக்கறதா? நோ வே. எனக்குத்தான் ஏற்கனவே வீட்டுல ஒருத்தியை வளர்த்துட்டு வராங்களே. இந்த பின்னால சுத்தறது எல்லாம் சூர்யாவோட ஹிஸ்டரில கூட கிடையாது…” என மிதப்பாய் சொல்லியவன் வண்டியை நகர்த்தினான்.
“நீ எண்டா சுத்தனும்? அவன் அவனுக்கு பிடிச்சதை செய்யறான். உனக்கென்ன வந்துச்சு?…” என வெற்றி சொல்ல,
“அப்படி இல்லைடா. தெரிஞ்சு தான லவ் பண்ணா. இப்ப என்னவாம் திடீர்ன்னு பிரேக்கப். போறான்னு விடறதை விட்டுட்டு உக்காந்து கண்ணை கசக்கிட்டு நிக்கறான். யூஸ்லெஸ்…”
“தப்பு சூர்யா, அவங்களுக்குள்ள என்ன பாண்டிங்கோ? நமக்கு தெரியாதில்லையா?…”
“ம்ஹூம், பாண்டிங், பெண்டிங் எல்லாம் இருக்கறதுக்கு முன்னாடி அவனவனுக்கு ஒரு செல்ப் ரெஸ்பெக்ட் இருக்கனும். நம்மோட சுயமரியாதையை இன்னொருத்தி கால்ல போட்டு மிதிப்பாளாம். இவன் பார்த்துட்டு நிப்பானாம். நமக்குன்னு ஒரு கெத்து இருக்குடா…”
“போதும்டா உன் மெக் கெத்து. நிப்பாட்டு…” வெற்றிக்கு சலித்து போனது சூர்யாவின் இந்த மெக் புராணம்.
அப்படி ஒரு கிரேஸ் சூர்யவர்த்தனுக்கு. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் தன படிக்கவேண்டும் என கட்டாஃப் மெடிக்கல் எடுக்கும் அளவிற்கு இருந்தாலும் விரும்பி இந்த பிரிவிற்கு வந்ததாய் வந்து நட்பாகிய நாட்களில் பலமுறை சூர்யா சொல்லி கேட்டிருக்கிறான்.
வெற்றியை பொறுத்தவரை இது ஒரு படிப்பு. இதனை கொண்டு வாழ்வில் முன்னேறி தன்னை ஆளாக்கிய அக்காவையும், மாமாவையும் பெருமைப்படுத்தி அவர்களை தாங்கவேண்டும் என்பது மட்டுமே அவனின் குறிக்கோள்.
ஆனால் சூர்யவர்த்தனின் கனவுகள் எல்லைகளற்றது. அவனின் லட்சியத்தின் வானமும் அதில் அவன் வகுத்து வைத்திருக்கும் திட்டங்கள் எனும் மேகங்களும் மிகவும் தனித்துவமானவை. அதிலிருந்து கொஞ்சமும் அவன் பின்வாங்கவோ போவதில்லை. அப்படி ஒரு தீவிரத்தில் இருப்பவன் சூரியவர்த்தன்.
மெக் இது ஒரு போதை அவனுக்கு. நான் ஒரு மெக் ஸ்டூடன்ட். இப்படித்தான் என திமிர் காட்டுவதில் ஒரு தனி ருசி. அதை சொட்டுவிடாமல் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் ருசித்தான்.
இன்றும் அப்படி சூரியவர்த்தன் பினாத்திக்கொண்டிருக்க வெற்றியை பொறுத்தவரை அது பினாத்தல் தான். அதுவே கடுப்பாக்கியது வெற்றியை.
“வெற்றி உனக்கு தெரியாதுடா. அவனை லவ் வேணாம்னு யார் சொன்னா? நமக்குன்னு ஒரு இது இருக்குது. அதை விட்டுட்டு கெஞ்சிட்டு நிக்கறான். பார்த்துட்டு சும்மாவா இருக்கறது? ஏன் நம்ம மெக் டிபார்ட்மென்ட்ல பொண்ணுங்களே இல்லயா என்ன?…” என சொல்ல,
“சத்தியமா செம டென்ஷன் ஆகிடுவேன் பார்த்துக்கோ. இருக்கறது ஒரு பொண்ணு. அதுவும் வந்தன்னைக்கே நம்ம எல்லாரையும் பார்த்து அண்ணானுடுச்சு. எவனும் லவ் சொல்லலை. மத்த டிபார்மென்ட் பசங்க ஒருத்தனையும் சொல்லவும் விடலை. அண்ணனுங்களாம். அராஜகம்டா நீங்க பன்றது…”
வெற்றி சூர்யாவின் தோளில் கோபமாக அடிக்க கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சிரித்தான் அவன்.
“அதெல்லாம் உனக்கு புரியாதுடா வெற்றி. பாரு உன் ஹாஸ்டலே வந்துருச்சு…” என சொல்லி வெற்றியை கொண்டுவந்து ஹாஸ்டல் வாசலில் விட்டவன் அங்கிருந்தே உள்ளே நோட்டம் விட,
“டேய் டேய் கிளம்புடா…” என வெற்றிதான் விரட்டவேண்டியதாய் போனது.
“ஓகே, நாளைக்கு காலேஜ்ல பார்ப்போம். பைடா…” என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“மெதுவா ஓட்டுடா…” என்ற வெற்றியின் குரல் கூட அவனின் காதை எட்டவில்லை. அப்படி ஒரு வேகம். மின்னல் வேகத்தில் அவன் பரந்தவிதம் வெற்றிக்கு தான் கண்ணில் பூச்சியை பறக்கவிட்டது.
வீட்டின் கேட்டில் ஹாரன் அடித்ததும் உடனே கேட் இருபுறமும் திறக்கப்பட அதை ஒரு மெத்தனத்துடன் பார்த்தபடி பைக்கை உள்ளே சென்று விட்டவன் பார்கிங்கில் கொண்டு நிறுத்திவிட்டு இறங்கினான்.
டிஷர்ட்டில் காட்டியிருந்த கூலரை எடுத்து சுழற்றியபடி உள்ளே நுழைய சோபாவில் அமர்ந்தபடி இரு பெண்களுக்கும் உணவை ஊட்டிக்கொண்டு இருந்தார் அர்ச்சனா.
“மாம், என்ன இந்நேரமே இந்த வானரங்களுக்கு டின்னர்?…” என்று கேட்டபடி சோபாவில் தொப்பென அமர,
“ஒழுங்கா எழுந்து போய் குளிச்சுட்டு வா. வந்து நீயும் சாப்பிடு…” என அர்ச்சனா சொல்ல,
“இப்ப மணி எட்டு தம்பி. வந்தது லேட்டு. எங்க ஊர்சுத்திட்டு வந்தன்னு கேட்க அம்மாவும் ரெடி இல்லை. அப்பாவும் ஊர்ல இல்லை…” என பெரிய தங்கை ஹரிணி சொல்ல,
“இருந்தா மட்டும்?…” என ஸ்டெயிலாக காலை மாற்றி மாற்றி போட்டு அவன் அமர்ந்தான்.
“ப்ச், சூர்யா. முதல்ல போய் குளிச்சுட்டு வா…”
“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலையே…” என்றான் அசையாமல்.
“ம்மா, சொல்லி அனுப்புங்கம்மா. இல்லைன்னா போகவே மாட்டான். சரியான திமிர்ப்புடிச்சவன். இவன் கேட்டா உடனே சொல்லிடனும்…” என்றாள் இளைய தங்கை அஸ்வினி. இருவரும் சொல்லியும் சூர்யா அப்படியே இருக்க,
“குட்டிங்களுக்கு நாளைல இருந்து எக்ஸாம்டா சூர்யா. நான் கூட இருக்கனும். சொல்லிக்குடுக்கனும். அதான் இப்பவே ஊட்டிவிட்டுட்டு அப்படியே படிக்க உட்காரனும்…” என அர்ச்சனா சொல்ல,
“ஏன் அதான் நெடுநெடுன்னு வளர்ந்து நிக்குதுங்கல்ல.. தானா படிக்க தெரியாதாமா? சொல்லி குடுக்கனுமாமே…” என்று வம்பிழுத்தான் வேண்டுமென்றே.
சூர்யாவை போன்ற கற்பூரபுத்தி இல்லை இரு பெண்களுக்கும். அதற்கென்று மட்டமும் கிடையாது. சூர்யா மாங்குமாங்கென்று அமர்ந்து படிக்கும் ரகமில்லை. ஆசிரியர்கள் நடத்துவதை வைத்தே புரிந்துகொள்பவன்.
ஆனால் ஹரிணியும், அஸ்வினியும் அப்படி அல்ல. சற்று மெனக்கெடவேண்டும். நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டுமென்றால் சிரமம் மேற்கொண்டு படிக்கவேண்டும். அதில் சூர்யாவிற்கு தலைகொள்ளாத பெருமை வேறு.
அண்ணனின் அட்டூழியத்தில் தங்கைகள் கடுப்பாகி அவனை பேசினால் வேண்டுமென்றே வம்பிழுத்து அவர்களை சீண்டுவான் அவன்.
அதிலும் முக்கியமாக கணக்குபாடத்தில் சந்தேகமென்று வந்தால் அவனை போல யாரேனும் அதனை தெளிவாக நடத்திக்காட்டவும் முடியாது. நொடியில் புரியவைக்கும் விதமாக எளிமையாக சொல்லித்தருவான்.
ஆனால் அதற்கு அவன் போடும் ஸீன்கள் தான் சொல்லிமாளாது. அதற்கே தங்கைகள் இருவரும் அண்ணனை எரிச்சலுடன் தான் பார்ப்பானர்.
“ம்மா, இவன் தொல்லை தாங்க முடியலை. நீங்க கேட்டீங்கன்னு தான் போய் இந்த சம் கிளியர் பண்ணி தான்னு கேட்டேன். ஓவரா பன்றான். முன்னாடி அவனை எதிர்த்து பேசினதையெல்லாம் சொல்லி சொல்லி காண்பிக்கறான்…” என தாயிடம் வந்துதான் கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பார்கள்.