எல்லா பஞ்சாயத்தும் தாயிடம் மட்டுமே நிற்கும். தந்தையிடம் துளியளவு கூட கொண்டு செல்லமாட்டர்கள் பிள்ளைகள். சூர்யவர்த்தன் கூட.
கோபாலசுவாமி. பெயரை கேட்டாலே அனேகபேருக்கு பரிட்சயமான நபர் தான். ஜோதிட உலகில் ராஜா. அவர் சொல்லியது போல அட்சுபிசகாமல் நடக்கும் என்பதால் அவரை அசைக்க எவராலும் முடியாது.
திரையுலகினர் தொடங்கி, முக்கியஸ்தர்கள், வியாபாரிகள் என அவரின் நேரத்திற்காக காத்திருப்பவர்கள் தான் அதிகம். மற்ற பிரபல ஜோதிடர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருப்பவர்.
வீட்டில் இருக்கும் நேரம் குறைவென்றாலும் நடப்பவை எதுவும் அவரை மறைத்து நடக்காது. எல்லாம் அறிந்திருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே பிள்ளைகளிடம் நெருக்கம் இருந்ததில்லை.
தனது தொழில் தான் அதிக முக்கியத்துவம் அவருக்கு. அர்ச்சனா அவரை புரிந்த மனைவி என்பதால் குடும்பத்தை கொண்டுசெல்வதில் எந்தவித தடுமாற்றமும் இருந்ததில்லை.
தேவைக்கு ஏற்ப சொத்துக்களும், புகழும் கொட்டிக்கிடக்க அவருக்கு இன்னுமின்னும் தன்னை தேடி புகழ் வந்து சேரவேண்டும் என்பதில் அத்தனை பேராசை. அவரின் பேராசைக்கான தீனிகளும் குறைவானதில்லை.
அவர் ஒரு விஷயத்தில் தலையிடுகிறார் என்றால் ‘கோபாலசுவாமி குறித்துக்கொடுத்த முகூர்த்தமா, அப்போ சக்சஸ் தான்’ என கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவார்கள்.
வெற்றியோ தோல்வியோ அப்படியே கணித்து சொல்வதில் மிகவும் வல்லவர் கோபாலசுவாமி.
அன்றும் ஒரு தெலுங்கு திரைப்பட துவக்கவிழாவிற்கு நாள், நேரம் குறித்து கொடுப்பதற்காக தான் ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார்.
“சூர்யா நீ முதல்ல குளிச்சுட்டு வந்தா உனக்கும் பரிமாறிட்டு நான் பசங்களுக்கு பாடம் எடுக்க உட்காருவேன்…” என அர்ச்சனா சொல்ல,
“ப்ச், உட்கார்ந்து பேச கூட கூடாதா?…” என சலித்துக்கொண்டு தனதறைக்கு சென்றான் சூர்யா.
அரைமணி நேரத்தில் குளித்து டிஷர்ட்டும் அரைக்கால் ஷார்ட்ஸுமாய் அவன் வந்திறங்க அங்கே மருள மருள விழித்தபடி அமர்ந்திருந்தாள் திவ்யா.
“இந்த ஆர்வம் எப்போ வந்துச்சு?…” என கேட்டபடி வந்து அமர்ந்தவன்,
“ம்மா, சாப்பிடலாமா?…” என கேட்க,
“திவ்யா நீயும் வா சாப்பிடலாம்…” என அழைத்தார் அர்ச்சனா.
“இல்லை, அத்தை சாப்பிட்டு தான் வந்தேன்…” என அவள் மறுக்க,
“ப்ச், போதும். என்னை முதல்ல கவனிங்க. உங்க மருமகளை அப்பறமா சீராட்டுங்க…” என டைனிங் டேபிளுக்கு சென்றுகொண்டே சூர்யா கத்த,
“என்னாச்சுடி, இன்னைக்கு மெக் ஓவர் ஸீனா?…” என மெல்ல குனிந்து ஹரிணியின் காதில் முணுமுணுத்தாள் திவ்யா.
திவ்யாவும் ஹரிணியும், பத்தாம் வகுப்பு படிக்க அஸ்வினி ஏழாம் வகுப்பில் இருந்தாள்.
திவ்யா கோபாலசுவாமியின் தங்கை உமாவினுடைய பெண். அந்த பெரிய வளாகத்தில் இரண்டு வீடுகள் இருக்க ஒன்றில் கோபாலசுவாமி குடும்பமும் இன்னொன்றில் உமாவும், உத்தமனும் குடியிருந்தனர்.
சூர்யா காதை இங்கேயே வைத்திருந்தானோ என்னவோ சாப்பிடும் பொது அவர்களை பார்த்துக்கொண்டே சாப்பிட்டவன் திவ்யாவை பார்த்து,
“ஒய் ஆர்வம்…” என அழைக்க திரும்பி பார்த்தவள் அவனின் முறைப்பில் அவனுக்கு கேட்டுவிட்டதோ என பயந்து பார்த்தாள்.
“இங்க வா…” என அழைத்தவன்,
“என்ன சொன்ன அங்க?…” என கேட்க அவனின் அதட்டலில் சொல்லியதை அப்படியே ஒப்புவித்தவள்,
“அது சும்மா, ஒரு பேச்சுக்கு…”
“மெக்னா உனக்கு அவ்வளவு எகத்தாளமா? கொன்னுடுவேன் பார்த்துக்க. இப்ப எதுக்கு வந்த நீ?…” என கேட்க,
“வந்து அத்தை கூட படிக்கலாமேன்னு தான்…”
“உன் அத்தை படிப்பை முடிச்சு பலவருஷம் ஆச்சு…” என சொல்லியவன்,
“அந்த சட்னியை போடு. பார்த்துட்டே நிக்கற?…” என இன்னும் அதிகாரமாய் மிரட்டினான்.
சூர்யாவிற்கு பின்னால் எத்தனை பேசினாலும் அவனுக்கு முன்னால் பேச என்றுமே பயம்தான் திவ்யாவிற்கு. வாயே திறக்கமாட்டாள்.
“ஆமா, உனக்கு மேத்ஸ் என்னைக்கு?…” என கேட்டுகொண்டவன்,
“அடுத்து என்ன எடுக்கறதா இருக்கற?…” என கேட்க,
“மாமா பார்த்து சொல்றேன்னு சொல்லியிருக்காங்க. அதுதான் எடுக்கனும்…” என்றவள் அவனுக்கு அடுத்த இட்லியை வைக்க போக,
“நான் கேட்டேனா? சொன்னா அதை மட்டும் பண்ணு…” என்று பட்டென்று எழுந்துவிட்டான்.
அவனின் வேகத்தில் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்து நின்றவளை முறைத்துக்கொண்டே சென்று கையை கழுவிவிட்டு வந்தான்.
“அந்த பயம் இருக்கனும். நான் இருக்கும் பொது ஒரு பேச்சு.இல்லைன்னா ஒரு பேச்சு. தொலைச்சுடுவேன் பார்த்துக்க…” என மிரட்டிவிட்டு செல்ல அங்கேயே நின்றவளை சமாதானம் செய்தார் அர்ச்சனா.
“இனிமே இங்க வரவே மாட்டேன் போங்க…” என அர்ச்சனாவிடம் பொங்கி பொங்கி அழுதவள் சற்று நேரத்திற்கெல்லாம் ஹரிணி அஸ்வினியுடன் சேர்த்து படிக்க அமர்ந்தாள் அர்ச்சனாவின் சமாதானத்தால்.
கல்லூரி விடுமுறை என வெற்றி கிளம்ப இருக்க அந்த வாரம் அவனின் அக்காவிற்கும் மாமாவிற்கும் திருமண நாள் என்பதால் சூர்யவர்த்தனையும் அழைத்திருந்தார் வெற்றியின் அக்கா.
நிறையமுறை அழைத்தும் போகமுடியாமல் போனதால் இதோ கிளம்பிவிட்டான் சூர்யவர்த்தன்.
“என்ன சூர்யா வீட்டில விசேஷம் இருக்குதே. எங்க கிளம்பிட்ட?…” என அர்ச்சனா கேட்கவும்,
“ஏன்ம்மா? என்ன விஷயம்?…” என்றான் ஷூவின் லேஸை கட்டிக்கொண்டு.
“என்ன என்ன விஷயம்னு கேட்கற? இன்னைக்கு திவ்யாவுக்கு விசேஷம். உனக்கு மறந்து போச்சா சூர்யா?…” என்றார் சற்று கண்டன குரலில்.
“ம்மா, இது பொண்ணுங்க விஷயம். இதை என்கிட்டே சொன்னா மட்டும் என்ன? என்னால இருக்க முடியாது…” என பேச அர்ச்சனாவிற்கு மகனின் இந்த போக்கு மிகவும் கவலையை தந்தது.
“சூர்யா நம்ம சொந்தம் எல்லாம் வருவாங்க. உன்னை கேட்பாங்கடா. நீயும் இப்போ இங்க இருக்கனும். இப்படி கிளம்பறேன்னா என்ன அர்த்தம்?…”
“எனக்கு இந்த மாதிரி விஷயத்துல கலந்துக்கறதுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு அர்த்தம். எந்த காலத்துல இருக்கீங்க நீங்க…” என தாயிடம் வாதாட அந்நேரம் அங்கே வந்து சேர்ந்தார் கோபாலசுவாமி.
“என்ன அர்ச்சு?…” என மனைவியை பார்க்க சூர்யா சற்று நகர்ந்து அமைதியாய் நின்றான்.
“இவனை பாருங்க. நீங்களாவது சொல்லுங்க. சொல்ல சொல்ல கேட்காம வெளில கிளம்பறான். இன்னைக்கு எவ்வளவு முக்கியமான விசேஷம் இருக்குது. இப்படி சொல்றானே?…” என அர்ச்சனா சொல்ல மகனை ஒரு பார்வை பார்த்தவர்,
“சரி அவனை ஒன்னும் சொல்லவேண்டாம். போய்ட்டு வரட்டும்…” என்று சொல்லியவர்,
“பார்த்து கவனமா போய்ட்டு வா…” என்று மட்டும் சொல்லி சென்றுவிட தாயை பார்த்து சிரித்தவன்,
“சாமியே வரம் குடுத்தாச்சு. இனி பூசாரி விபூதி வச்சா போதும்…” என சொல்லவும் அவனை முறைப்புடன் பார்த்தவர்,
“பத்திரமா போய்ட்டு வா…” என அவனின் தலையை தடவிவிட்டு வழியனுப்ப விசில் அடித்தபடி தனது பைக்கை கிளப்பிக்கொண்டு அவன் வெளியேற அவனின் பின்னே வந்த அர்ச்சனாவை பார்த்த உமா,
“சூர்யா வெளில கிளம்பிட்டாரா அண்ணி?…” என்றார்.
சூர்யவர்த்தன் பிறந்ததில் இருந்தே அவனுக்கு மரியாதை வைத்தே அழைத்து வருபவர் உமாவும், உத்தமனும். வருங்கால மருமகன் என்பதால் அந்த மரியாதையும் அன்பும் என்றும் மிதமிஞ்சியே இருக்கும்.
என்ன ஒன்று சூர்யா இவற்றை எல்லாம் பொருட்படுத்த மாட்டான். ஒரு வயதிற்குமேல் அவனுக்கென ஒரு வட்டம் போட்டுக்கொண்டு பெரியமனித தோரணையில் தான் வலம் வருவான்.
மிகவும் பொறுப்பு. வெளியில் சொல்லவில்லை என்றாலும் இதில் கோபாலசுவாமிக்கும், அர்ச்சனாவிற்கும் ஏக பெருமிதம்.
ஆனாலும் அதை அவனிடம் சொன்னால் இன்னும் தலைக்கு மேல் ஏறுவானோ என்று காட்டிக்கொள்ளமாட்டார் அர்ச்சனா.
இன்றும் இப்படி அவன் கிளம்பிவிட அதனால் உண்டான மனத்தாங்கலை யாரிடமும் காட்டிக்கொள்ளமுடியாமல் அடக்கிக்கொண்டவர்,
“ஏதோ முக்கியமான வேலை இருக்குது போல உமா. முடிச்சுட்டு சீக்கிரம் வரேன்னு சொல்லிருக்கான்…” என சமாளிக்க,
“நம்ம வீட்டு விஷயத்தை விடவா? என்ன அண்ணி…” என சொல்லிவிட்டு முகத்தை சுண்டியபடி உமா செல்ல,
“இவனால என்னவெல்லாம் சமாளிக்கவேண்டி இருக்குது…” என புலம்பிக்கொண்டார் அர்ச்சனா.
“என்னம்மா புலம்பற?…” என பட்டுப்பாவாடை தாவணி சரசரக்க வந்து நின்றாள் மகள் ஹரிணி.
“ஒண்ணுமில்லைடா…” என மகளுடன் நாத்தனாரின் வீட்டுக்கு சென்றார் அர்ச்சனா.
இங்கே வெற்றியுடன் திருவண்ணாமலை நோக்கி பறந்துகொண்டு இருந்தான் சூரியவர்த்தன்.
அவன் விழாவில் இல்லை என்ற நிம்மதியுடன் திவ்யா முகமெல்லாம் புன்னகையுடன் நடுநாயகமாக அந்த அலங்கார இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
இங்கே திருவண்ணாமலை வந்து சேர்ந்தவன் வீட்டிற்குள் நுழையும் முன்னர் முகத்தில் பந்தை விட்டெறிய,
“யார்ரா இது…” என கடுப்புடன் மூக்கை தடவிக்கொண்டு பார்த்தான் சூர்யவர்த்தன்.
“பாலா என்ன பன்ற? குட்டிச்சாத்தான்…” என்ற வெற்றியின் அதட்டலில் தன் முன்னே இருந்த சிறுபெண்ணை முறைத்தான் சூர்யவர்த்தன்.
“பாலை குடுங்க அங்கிள்…” என்றவளை இன்னும் முறைத்துக்கொண்டே சூர்யா நிற்க,
“டேய் உள்ள வாடா…” என அவனை கை பிடித்து அழைத்துக்கொண்டு வந்தான் வெற்றி.
“அம்மா எங்க பாலா?…” என கேட்க,
“அம்மாவும், அப்பாவும் கோவிலுக்கு போய்ருக்காங்க. ஆனா உன்கிட்ட நான் ஏன் சொல்லனும்?…” என அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பிக்கொள்ள,
“அடடே செல்லக்குட்டிக்கு கோபமா?…” என அக்கா மகளை தூக்கி ஒரு சுழற்று சுழற்றி இறக்கியவன்,
“இது அக்கா பொண்ணுடா. சொல்லிருக்கேன்ல பாலதிரிபுரசுந்தரி. இவதான். சரியான வாலு. பதினோரு வயசுதான். ஆனா எங்க வீட்டு பெரியமனுஷி…” என இன்ட்ரோ செய்ய,
“ஹாய்…” என்றான் சூர்யா அவளிடம்,
“இவர் தான நீங்க சொன்ன புட்பால் ப்ளேயர். ஒரு பால் போட்டா திரும்ப போடனும்னு கூட தெரியலை…” என சொல்லியவள்,
“ஏன் மாமா நீ போன வாரம் வரலை…” என சொல்லி கறாராய் கேட்க சூர்யாவிற்கும் அவளின் அந்த அதட்டலில் சிரிப்பு வந்தது.
“அதுவா, லாஸ்ட் வீக் சூர்யா பர்த்டே. அதான் இந்த வீக் வந்துட்டேனே?…”
“ஆனா போன வாரம் வரலையே…” என சொல்லியவள்,
“இரு வரேன்…” என உள்ளே ஒடி சென்று இரண்டு கண்ணாடி தம்ளர்களை கொண்டு வந்து அந்த டீப்பாயில் வைத்தவள் மீண்டும் ஓடி சென்று ஒரு பாட்டிலை எடுத்து வந்தாள்.
“உனக்கு புடிக்கும்னு அம்மா மஸ்கிமேலோன் ஜுஸ் போட்டு வச்சுட்டு போனாங்க. ஊத்தி குடி…” என சொல்லியவள்,
“அங்கிள்…” என சூர்யாவை அழைக்க அவன் முறைத்தான் அந்த அழைப்பில்.
அதை கண்டு சிரித்த வெற்றி பாலாவை தன் மடியில் சலுகையாக அமர்த்திக்கொண்டவன்,
“இவனும் என்னை மாதிரி தான். மாமான்னு கூப்பிடு. இல்லைன்னா காய்ச்சிடுவான்…” என சொல்ல,
“உன்னை மாதிரின்னா?…” என கேட்டவள் சூர்யாவை மேலிருந்து கீழ் பார்க்க,
‘நல்லா அரையடி ட்ரம்மு மாதிரி இருந்துட்டு பேச்சை பாரு.’ என அவளை பார்த்தான்.
வெள்ளையில் அங்காங்கே மஞ்சள் நிற பூக்கள் பின்னப்பட்ட ப்ராக்கில் கொழுக்மொழுக்கென நின்றிருந்த பெண்ணை பார்த்தவன்,
“ஒன்னும் தேவை இல்லை. உனக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படி கூப்பிடு…” என சூர்யா சொல்ல,
“என் மாமா சொன்னா நான் கேட்பேன். உங்களை மாமான்னே கூப்பிடறேன்…” என போனால் போகிறதென்பதை போல சொல்லிவிட,
“நான் கிளம்பறேன்டா. அக்கா வந்தா சொல்லிடு…” என எழுந்துகொள்ள அதற்குள் மோகனா வந்துவிட்டார் கணவன் சந்திரனுடன்.
“வா சூர்யா…” என பார்த்ததும் அவர் வரவேற்க அங்கிருந்து கிளம்பமுடியவில்லை சூர்யவர்த்தனால்.