அவனின் சத்தத்தில் உடல் தூக்கி போட நிமிர்ந்து பார்த்தவளின் கையை பிடித்து எழுப்பியவன்,
“அப்பா, நாங்க வெற்றி வீட்டுக்கு போறோம். ரெண்டு நாள் கழிச்சு வரோம். எப்படியும் மறுவீடுன்னு போகனும் தானே?…” என்றவன் அவளை கூட்டிக்கொண்டு செல்ல பார்க்க,
“சூர்யா என்ன இது? அப்பாக்கிட்ட…” என்ற அர்ச்சனாவை உறுத்து விழித்தவன்,
“எல்லாம் தெரிஞ்சு தானே கட்டி வச்சீங்க இவளை. இருபத்தி நாலு மணிநேரம் தாண்டலை பாலா இந்த வீட்டு மருமகளா வந்து. அதுக்குள்ளே இப்படி நிக்க வச்சுட்டீங்க. அவ முகத்தை பாருங்க…” என்று கத்தியவன் தன் தந்தையை பார்த்து,
“இதுவரைக்கும் நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் சரின்னு சொன்னது நம்பிக்கை மட்டும் இல்லை. நீங்க சொன்னா சரியா இருக்கும்ன்ற காரணமும் தான். ஆனா இது தொழில் தொடங்கறதோ, இடம் வாங்கற விஷயமோ இல்லை…” என்றவன் பாலாவின் மேல் பார்வையை பதித்தவன்,
“இங்க நிக்கறது பொருள் இல்லை. பொண்ணு. ரத்தமும், சதையுமா எல்லா பீலிங்ஸும் உள்ள ஒரு பொண்ணு. ஆளாளுக்கு ஆட்டி வைக்கறீங்க…” என்று தாயை பார்த்து இரைந்தவன்,
“இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு தான் வேண்டாம்னு தலைப்படா அடிச்சுக்கிட்டேன். கேட்டியாடி நீ…” என்று பாலாவிடமும் அவன் பாய ஏற்கனவே சோர்ந்து இருந்தவள் கண்கள் அவனின் பேச்சில் கண்ணீர் உகுக்க ஆரம்பிக்க,
“ப்ச், அழாத. அதான் நான் இருக்கேன்ல. வா…” என்று சொல்லவும் பாலா திரும்பி கோபாலசுவாமியை கேள்வியாய் பார்த்தாள்.
மகனின் பேச்சில் அவர் அதிர்ந்து நின்றிருந்தாலும் மருமகள் செல்லட்டுமா என்பதை போல தன்னை பார்த்ததில் லேசாய் தலைசாய்த்து செல்லுமாறு காண்பிக்க அர்ச்சனாவிற்கு தான் தலை சுற்றியது.
கோபாலசுவாமிக்கு எந்த வருத்தமும் இல்லை. மகன் இந்தளவிற்கு மருமகளுக்காக நிற்கிறானே, அதுவே விரைவில் இருவரும் வாழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை விதைத்தது.
அது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அத்தனை விரைவில் குடும்பத்தில் சூழ்ந்திருக்கும் இருள் விலகி அனைவரின் வாழ்விலும் இன்பம் சேரும் என்ற நம்பிக்கை அந்த ஜோதிட சிகாமணிக்கு.
அதே நேரம் பாலாவும் முழுதாய் தங்களின் பழக்கவழக்கங்களுக்குள் அடங்கிவிடவேண்டும் என்றும் சுயநலத்துடன் நினைத்தார்.
அர்ச்சனாவிற்கு தான் நடக்கும் எதுவும் உவப்பானதாய் தெரியவில்லை. மகன் ஆடுவதும் அதற்கேற்றார் போல கோபாலசுவாமி அமைதியாய் போவதும் என மூளைக்குள் எதுவோ குடைந்தது அவருக்கு.
“நில்லு உன் மொபைல் எடுத்துட்டு வரேன். திரும்பி உட்கார்ந்தா அதுக்கும் இந்த வீட்டுல எதாச்சும் சொல்லுவாங்க…” என்று கடித்து துப்பிவிட்டு சென்றான்.
பாலாவிற்கு தான் அங்கே எப்படி அந்த சூழ்நிலையை கையாள்வது என்றே தெரியவில்லை.
வெகுவாய் குறுகிய வட்டத்திற்குள்ளேயே வளர்ந்து வந்தவள் புது குடும்பம், புதிய சூழல், அதன் வழக்கங்கள் என கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்சியை உண்டு பண்ணியது.
இதில் அவள் எதிர்பாராதது சூர்யாவின் அரவணைப்பு மட்டுமே. அவன் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பான் என நினைத்தாள். அவனோ அதற்கு நேர்மாறாய் நடந்துகொள்ள இதுவுமே அவள் எதிர்பாராதது தான்.
முதலில் இந்த நிலமையை முழுதாய் கிரகிக்க முயன்று தான் இருந்தாள். ஆனால் முடியவில்லை.
“வா பாலா…” என அவளின் மொபைலுடன் வந்தவன்,
“ம்மா, பை…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அர்ச்சனா பதில் ஏதும் சொல்லவில்லை. பார்த்தபடியே இருக்க,
“ஆன்ட்டி…” என்ற பாலாவின் அழைப்பில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவர்,
“போய்ட்டு வா பாலா…” என்று மட்டும் சொல்லி அனுப்பினார். பின் கோபாலசுவாமியிடம் வந்தவர்,
“என்னங்க இது?…” என கேட்க,
“விட்டுதான் பிடிக்கனும் அர்ச்சு…” என சூட்சுமமாக சொல்லியவர்,
“போய் குளிச்சுட்டு காபி கொண்டா…” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் கோபால சுவாமி.
அவனுடன் இணைந்து சென்றவள் அவனின் காரில் ஏறும் முன் ஒருநொடி சூர்யாவை பார்க்க,
“என் மூஞ்சில என்ன எழுதியா ஒட்டிருக்குது? ஏறு முதல்ல…” என அதட்ட அவனை முறைத்தபடியே நின்றாள்.
“என்ன? உன்னை என் கார்ல ஏத்த மாட்டேன்னு சொன்னதாலையா? இப்ப நீ என் வொய்ப் தானே? ஏறலாம்…” என மிதப்பாய் சொல்ல,
“அப்படி ஒன்னும் அவசியமில்லை. என் மாமாட்ட சொன்னா என்னை வந்து கூட்டிட்டு போவாங்க. இப்பவும் இதுல நான் ஏறனும்னு இல்லை…” என்றவள் தனது மொபைலை பார்க்க ‘எங்கே வெற்றியை அழைத்துவிடுவாளோ?’ என்ற படபடப்பில் வேகமாய் வந்து அவளின் மொபைலை பறித்தவன் கார் கதவை திறந்து அவளை உள்ளே தள்ளினான்.
“ப்ச், இப்ப ஏன் இவ்வளவு ஹார்ஷா பிஹேவ் பன்றீங்க?…” என முகம் சுளித்து கேட்டவள் லேசாய் வயிற்றை பிடித்துக்கொள்ள சூர்யாவிற்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.
மறுபக்கம் வந்து வேகமாய் அமர்ந்து காரை கிளப்பியவன் அவளை திரும்பி பார்த்துவிட்டு,
“என்னை நீ தான் இப்படி பிஹேவ் பண்ண வைக்கிற பாலா. அதை முதல்ல ரியலைஸ் பண்ணு. நீ வெற்றிக்கு எதுக்கு கால் பண்ண போன? அதான் கோவம் வந்திருச்சு…” என்றவனை எரிச்சலுடன் பார்த்தவள்,
“சும்மா தான் மொபைலை பார்த்தேன். டைம் என்னன்னு தெரிய. அதுக்குள்ளே வந்து நீங்க கோபப்பட்டா?…” என முறைக்க,
“ஓஹ்…” என்றான் சூர்யா.
‘சொதப்பறியே சூர்யா’ என தன்னையே கடிந்துகொண்டவனாக சாலையில் பார்வையை பதிக்க,
“இதுக்குத்தான் வெட்டி வசனமும், ஓவர் சவாலும் விட கூடாதுன்றது…” என்றாள் லேசாய் நக்கல் தெறிக்கும் குரலில்.
“போட்டேனா பாரு. சும்மா என்னை சீண்டிட்டு இருக்காத. நான் டென்ஷன் ஆகிடுவேன்…”
“இப்ப ஸார் மிஸ்டர் கூல் தான். ஹ்ம்ம்…” என பாலா விடாமல் வாயாட அவளை திரும்பி முறைத்தவன்,
“நான் கூலா இருக்கறதும், ஹாட்டா மாறறதும் உன் கைல தான் இருக்குது பாலா…” என்றான் விஷமமான குரலில்.
அவனின் பேச்சுக்களை சட்டை செய்யாமல் அவள் பதில் சொல்லிக்கொண்டே இருக்க இருக்க அவளின் வாயடைக்க அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.
“சும்மா எதிர்த்து எதிர்த்து பேசிட்டே இருந்த தானே? இப்ப நீ ஷட் அப்…” என்றான் கேலி மிகுந்த குரலில்.
“இதெல்லாம் கள்ளாட்டை. என்னை மாதிரி நேரடியா பேசனும். வாயடைக்க வைக்கனும். இப்படியெல்லாம் பேசினா நான் சும்மா இருப்பேன்னு நினைக்கறீங்களா?…” என கேட்டவள் லேசாய் இரும காரில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தந்தவன்,
“அதிகமா பேசினா இருமல் வரைத்தான செய்யும். வாயை குறை…” என்று சொல்ல வாங்கி குடித்தவளுக்கும் சற்றும் தெம்பில்லை அவனிடம் வார்த்தையாட.
பேசி பேசி அவனை சீண்டவேண்டும் என்று நினைத்தாலும் அவளால் முடியவில்லை. லேசாய் தலை சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.
வெகு நேரம் ஆகியும் அவள் பேசாமல் மௌனமாய் வர சூர்யாவுக்குதான் தாளமுடியவில்லை.
‘பேசினாலும் இம்சை. சைலண்டா இருந்தாலும் இம்சை. ஒரே நாள்ல இவ என்னை என்ன பண்ணி வச்சிருக்கா?’ என தலையை பிய்த்துக்கொள்ளாத குறை தான்.
அவனுக்கு ஆயிரம் யோசனைகள். இவள் தான் வருங்கால மனைவி என்று காண்பித்தவளிடம் சிறு கனிவை கூட காண்பிக்காது அவளை அடக்கி வைத்து வேலை வாங்கியவனால் மனைவியான பாலாவிடம் அந்த அடக்குமுறையை காண்பிக்க முடியவில்லை.
சொல்ல போனால் அவனே அவளுக்கு யாவும் செய்ய சித்தமாய் இருந்தான். அவளை அனுசரிப்பதிலாகட்டும், அவளை அரவணைப்பதிலாகட்டும் அவனே முன் நின்றான். சின்ன சின்ன விஷயத்திற்கும் அவளின் முகம் பார்த்து படிக்க பழகினான்.
‘நீயாடா இது?’ என கேட்ட மனசாட்சியிடம் ‘வெற்றிக்காக, மோகனாக்காவிற்காக’ என சமாளித்தான். இப்போது முகம் சுருக்கி லேசாய் உடலை குன்றிய படி சுருண்டு சாய்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு எரிச்சலும் ஆற்றாமையும் பொங்கியது.
‘பேச வேண்டாம்னு சொன்னா வாயை மூடிருவாளா?’ என தனக்கு தானே கேட்டுக்கொண்டவன் இதழ்கள் தான் அவன் சொன்ன பேச்சை கேட்கவில்லை.
“பாலா, உனக்கு கம்பர்டபிள் தானே? இல்லைன்னா பின் சீட்ல படுத்துக்கறியா?…” என கேட்க அவனுக்கு என்ன பதில் சொல்லவென தெரியாமல் அவனின் கேள்வியில் லேசாய் முகம் கன்றியவள் பதில் பேச தடுமாற அவனின் முகம் கனிந்தது.
“ப்ச், ஈஸி பாலா, இது ஹ்யூமன் நேச்சர். இதுல என்ன இருக்கு?…” என சொல்ல,
“இல்லை எனக்கு பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் தானே?…”
“அப்போ இந்த சீட்டை பின்னால சாய்ச்சு வைக்கறேன்…” என்று காரை ஓரமாய் நிறுத்தி சொல்ல,
“ஐயோ ஏன்? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” என்றவளை முறைத்தவன்,
“முதல்ல என் பேச்சை கேளு பாலா. நான் எனக்காக ஒன்னும் சொல்லலை. நீ கஷ்டப்படற மாதிரி இருந்துச்சு…”
“ப்ச், எனக்காக சொல்லலை தான். வெற்றி மாமாவுக்காக, என்னோட அம்மாவுக்காக. அப்படி தானே? சும்மா சும்மா அவங்களுக்காக இவங்களுக்காகன்னு என்னை போட்டு படுத்த வேண்டாம். என்னால முடியலைன்னா நான் நேரடியா சொல்லுவேன்…”
“ப்ச், இப்போ நான் சொன்னேனா வெற்றிக்காகன்னு…” என சூர்யா கோபமாய் சொல்ல,
“பின்ன நீங்க பண்ணிட்டு இருக்கறதை பார்த்துட்டு தானே இருக்கேன். எனக்காகன்னு சொல்ல கொஞ்சமும் தைரியமில்லை. இதுல பேரு பெத்த பேரு. மெக். அட போயா…” என்றவள் சட்டென நாக்கை கடிக்க அவளின் பேச்சில் சூர்யா அதிர்ந்தான் என்றால் அதையும் விட அதிர்ந்தது பாலா.
‘இதென்ன இப்படி பேசிவிட்டேன்’ என பேசிய பின்பு தான் அதன் சாராம்சம் புரிய கண்ணை சுருக்கி அவனை பார்த்து அசடு வழிந்து ஒற்றை காதை பிடித்தபடி திருதிருவென விழிக்க சூர்யாவுக்குமே ஒரு நிமிடம் பிடித்தது அவள் பேசியதை முழுதாய் புரிந்துகொள்ள.
அதிலும் பேசிவிட்டு அவள் அவனை பார்த்த பாவனையில் லேசாய் இதற்கடையோரம் புன்னகை நெளிய வலிக்காமல் அவள் தலையில் கொட்டியவன்,
“இரு மோகனாக்காட்ட சொல்றேன்…” என்று மிரட்டினான் அவளை. அதை அதிசயமாய் பார்த்தவள்,
“சத்தியமா நீங்க தானா? கோபத்துல இந்நேரம் கார் தாறுமாறா பறக்கும்னு நினைச்சேன்…” என்று பாலா சொல்ல,
“பறக்கும் தான். ஆனா இன்னைக்கு இல்லை. திரும்பி நம்ம வீட்டுக்கு வரும் போது பறக்கும். அப்போ தெரிஞ்சிக்கோ நான் எவ்வளவு கோபமா இருக்கேன்னு….” என்று சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.
‘பேசினவரைக்கும் போதுமடி பாலா. வாயை மூடிட்டு வா’ என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு கண்ணை மூடியவள் சாய்ந்துகொண்டாள்.
அவளை பார்த்துவிட்டு காரை கிளப்பியவன் மனமோ வெற்றி வீட்டிற்கு சென்றதும் என்ன பேசுவதென்று யோசனையில் இருக்க பாலாவின் மொபைலில் அழைப்பு வந்தது மோகனாவிடம் இருந்து.
எடுத்து பார்த்தவன் சைலன்ட்டில் போட அதன் சத்தத்தில் பாலாவும் திரும்பி பார்த்தாள்.
“மோகனாக்கா தான் கூப்பிடறாங்க. வீட்டுக்கு போய் பேசிக்கலாம். நீ சாய்ஞ்சிக்கோ…” என்று சொல்லியவன் முகத்தில் இருந்த யோசனையில் பாலாவும் அமைதியாகிவிட்டாள்.
மனதிற்குள் ‘இரு குடும்பமும் சேர்ந்து சம்மதித்து நடந்த திருமணம். ஆனாலும் எதுவும் சரியில்லை’ என்ற உணர்வே பெரிதாய் வியாப்பித்திருந்தது பாலாவினுள்.