நிலா – 11
“வெற்றி நீ இன்னொருவாட்டி சூர்யாவுக்கு ட்ரை பண்ணேன். நான் அர்ச்சனாவுக்கும் போன் பண்ணினேன். அவங்க எடுக்கலை. இந்த பொண்ணும் எடுக்கமாட்டேன்றா. எனக்கு ஒரே பதட்டமா இருக்குது…” என மோகனா பயந்துட்டான் சொல்ல,
“அக்கா, நீ ஏன் பயப்படற?…” என்று கடிந்த வெற்றி சூர்யாவின் எண்ணிற்கு அழைக்க அவனுக்கு நாட் ரீச்சபிள் என்றே சொல்லிக்கொண்டு இருந்தது.
“பயப்படாம என்ன செய்ய? இருக்கற கலவரம் போதாதுன்னு இன்னைக்கு பாலாவுக்கு இப்படி. அவ வேற ரொம்ப ஒரு மாதிரி அழற மாதிரி பேசிட்டா. என்னை இப்படி கொண்டுவந்து நிறுத்திட்டியேன்னு கேட்காதது தான் குறை…”
மோகனா ஒரே புலம்பல் பாலாவிடமிருந்து போன் வந்ததில் இருந்தே என்னவோ போலவே இருக்கிறார். ஜெயஸ்ரீ எத்தனை சமாதானம் செய்தும் அவரால் அமைதியாக இருக்கமுடியவில்லை.
“உனக்கு தெரியும்ல ஜெய், இந்த நேரம் அவ எவ்வளோ டவுனா பீல் பண்ணுவான்னு…”
“அண்ணி முதல்ல இந்த மாதிரி பேசறதை நிறுத்துங்க. சும்மா இப்படி சொல்லி சொல்லியே அவளை அப்படி பீல் பண்ண வைக்காதீங்க…” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்க வாசலில் சூர்யாவின் காரை பார்த்த வெற்றி,
“அக்கா சூர்யா வந்திருக்கற மாதிரி தெரியுது…” என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு விரைய காரை ஓரமாய் பார்க் செய்தவன் பாலாவுடன் இறங்கி கேட்டின் முன்னால் வந்தான்.
“என்ன திடீர்ன்னு வந்திருக்காங்க?…” என அதற்குமே மோகனா பதட்டப்பட,
“இந்த கேள்வி எல்லாம் அப்பறமா கேளுங்க. இப்போ கல்யாணம் முடிஞ்சு பர்ஸ்ட் டைம் வந்திருக்காங்க. முதல்ல ஆரத்தி எடுப்போம்…” என்று சொல்லி ஜெய் உள்ளே சென்று எடுத்து வர மோகனா ஜெயஸ்ரீயையே எடுக்க சொன்னார்.
“என்னடா இது?…” என சூர்யா வெற்றியை முறைக்க,
“சம்பிரதாயம்டா. பேசாம நில்லு…” என்றவனிடம் ஒன்றையும் காண்பித்துக்கொள்ளாமல் மௌனமாய் நிற்க இருவருக்கும் ஆலம் சுற்றப்பட்டு அவர்களை தாண்டிக்கொண்டு வெளியே சென்றாள் ஜெயஸ்ரீ.
“வாங்க, ரெண்டு பேரும் வாங்க…” என மோகனா அழைக்கவும் அதன் பேதத்தை உணர்ந்த சூர்யா இன்னும் கடுப்பானான்.
“ஏன்க்கா இன்னைக்கு தான் நான் இங்க வரேனா? ஏன் இப்படி பன்றீங்க? இப்படியே கிளம்பி ஓடிட்டா என்னன்னு தோணுது…” என்று வாசலிலேயே பொரும ஆரம்பித்துவிட்டான்.
அவனின் கோபமும், முகத்தில் தெரிந்த கடுமையும் மோகனாவை துணுக்குற செய்ய பாவமாய் வெற்றியை பார்த்தார்.
“அவனை எப்பவும் போலவே ட்ரீட் பண்ணுன்னு சொல்றான். நீ மாப்பிள்ளைன்னு பதறாம இருந்தாலே அவன் டென்ஷன் போய்டும்…” என்ற வெற்றி,
“அதை கொஞ்சம் அமைதியா சொல்லேன்டா…” என சூர்யாவிடம் கடிய,
“எல்லாமே வாசல்லையே பேசனுமா?…” என்ற சூர்யா,
“உள்ள போ பாலா…” என்று சொல்லவும் தான் மோகனாவிற்கு மகளின் நிலை புரிய அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
“ம்மா, காபி, டீ எதாச்சும் தாயேன். பசிக்குது…” என பாலா கேட்க,
“உட்கார் வரேன்…” என்று அவர் உள்ளே செல்ல போக,
“இல்ல, எனக்கு முடியலை. நான் படுத்திருக்கேன்…” என்று சொல்லியவள் தான் எப்போதும் இருக்கும் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
“எதுவும் பிரச்சனையா சூர்யா?…” என வெற்றி அவனருகே அமர அதுவரை பாலாவை பார்த்துக்கொண்டிருந்த சூர்யா ஒரு பெருமூச்சுடன் தலைய இடம் வலமாக அசைக்க அவர்களை பார்த்தபடி நின்ற ஜெயஸ்ரீ,
“நீங்க பேசிட்டு இருங்க. நானும் அண்ணியும் டிபன் ரெடி பன்றோம்…” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
“சூர்யா…” என வெற்றி மீண்டும் கேட்க,
“ப்ச், நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும் வெற்றி. ரொம்ப தலை வலிக்குதுடா…” என்றான் தலையை பிடித்தபடி.
“காலைல ஏதாவது சாப்பிட்டியா?…”
“ம்ஹூம், இல்லை…”
“சரி வீட்டில சொல்லிட்டாவது வந்தியா?…”
“ஹ்ம்ம், எல்லாம் பார்த்துட்டு தான நின்னாங்க…” என்ற விட்டேற்றியான குரலில் வெற்றிக்கு தான் கலவரமானது இப்போது.
“என்னன்னு தெளிவா சொல்லுடா. ஏன் படுத்தற?…” என்று வெற்றி அதட்ட,
“ப்ச், என்ன சொல்ல? ஒரே நாள்ல என்னென்னவோ ஆகிடுச்சு…” என்றவன் உமா செய்துவைத்த காரியத்தை சொல்ல வெற்றிக்கு பயம் பிடித்தது.
திவ்யா கிளம்பியதற்கு தானும் ஒரு காரணமல்லவா? கோபாலசுவாமி சொல்லி என்னவோ அவளுக்கு உதவி செய்தான் தானே? இப்போது ஒரே குற்றவுணர்ச்சியாய் போக வெற்றிக்கு படபடவென்று ஆனது.
“நல்லா இருக்காங்க தானே? நீ போய் பார்த்தியா?…”
“ம்ஹூம், என்னை பார்க்க போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க அம்மா…” என்று சூர்யா சொல்லும் பொழுதே மோகனா வந்துவிட்டார் அவனுக்கு டீ போட்டு எடுத்துக்கொண்டு.
“அம்மாவுக்கு கால் பண்ணினேன். எடுக்கவே இல்லையே…” என மோகனா சொல்ல,
“சூர்யா எங்க தொலைஞ்சா போய்ட்டான். ஏன் மோகனாக்கா இப்படி யார்ட்டையோ மாதிரி பேசறீங்க?…” என்றான் மீண்டும் கோபத்துடன்.
“டேய் என்னடா நீ வேற…” என்ற வெற்றி,
“அவன் பேரை சொல்லியே பேசேன்க்கா…” என்றான் ஆற்றமாட்டாமல்.
மோகனாவின் முகம் கலங்கி போனது. அதிலும் என்றுமில்லாமல் தன்னிடம் சூர்யா முகத்தை கட்டியது இன்னும் சஞ்சலத்தை உண்டு பண்ண அப்படியே நின்றார். அவரின் மனநிலை புரிந்தவனாக சற்று கோபத்தை குறைத்துக்கொண்ட சூர்யா அவரின் கை பிடித்து தன்னருகே அமர்த்திக்கொண்டவன்,
“எப்பவும் போலவே பேசுங்கக்கா. இப்படி மாப்பிள்ளை அது இதுன்னு நினைச்சு தடுமாறாம இருங்க. எனக்கும் அதுதான் கம்பர்டபிளா பீல் ஆகும். இப்படி பேசறது தள்ளி வைக்கிற மாதிரி இருக்குது…” என தெளிவாய் சொல்ல,
“அதுக்கில்லை சூர்யா…” என அவனிடம் மறுப்பாய் அவர் பேச,
“ப்ச், நேத்து என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோன்னு உரிமையா நீங்க சொல்லும் போது கூட நான் இப்படி எதுவும் நினைக்கலை. இன்னைக்கு நீங்க பேசறது ரொம்ப தள்ளி வச்ச மாதிரி தோணுது. அதான் டென்ஷன் ஆகிட்டேன்…” என்றவன்,
“ஓகே, விடுங்க. எங்க மாமாவை காணும்? வந்ததுல இருந்தே இல்லை…” என சந்திரனை தேட,
“மார்க்கெட் போயிருக்கார். வீட்ல எதுவும் வெஜிடபிள்ஸ் இல்லை. அதான் கிளம்பி போய்ட்டு வரேன்னு போனார். சரின்னு விட்டுட்டேன்…” என்றவர்,
“அம்மாவுக்கு போன் பண்ணேன். காலையில கால் பண்ணினது. அதுக்கப்பறம் போன் பண்ணினா எடுக்கலை. அஸ்வி கூட அட்டன் பண்ணலை…” என்று சொல்ல சூர்யாவிற்கு கஷ்டமாக போனது மோகனாவின் நிலை.
“போன் கார்ல இருக்குது அக்க.அ போய் எடுத்துட்டு வரேன்…” என எழுந்தவன்,
“நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை. உமா அத்தைக்கு நைட் உடம்புக்கு முடியலை. எல்லாரும் அங்க இருக்காங்க, அதான்…” என்று சொல்லியவன் வெளியே சென்று காரில் இருந்த மொபைலை எடுத்தான்.
அர்ச்சனா சற்று முன்பு அழைத்திருந்தார் அவனுக்கு. காரில் விட்டு வந்ததால் அவனும் கவனிக்கவில்லை. இப்போது அதை பார்த்தவனுக்கு சற்று கோபமும் கூட.
‘இங்கே தான் வருகிறோம் என்று மோகனாவிடம் சொல்லியிருக்கலாமே தன் தாய் என்று தோன்றியது. உடனே அவருக்கு மீண்டும் அழைத்தான்.
“சூர்யா அவங்க வீட்டுக்கு போயாச்சா?…” என்று அர்ச்சனா எடுத்தும் கேட்க புருவம் சுருக்கி கவனித்தவன்,
“இவங்க வீட்டுக்கு?…” என்றான் பல்லை கடித்தபடி.
“அதான் வெற்றி வீட்டுக்கு…” அவனின் கோபத்தை சட்டென புரிந்துகொண்டார் அர்ச்சனா.
“அப்படி கேட்க வேண்டியது தானே? பாலாவுக்கும் இதுதானே வீடு? புதுசா என்ன அவங்க வீட்டுக்கு போயாச்சான்னு கேட்கறீங்க? இதுக்கு முன்னாடி கூட யாரோவா இருக்கட்டும். இப்போ இவங்க எல்லாம் நம்ம சொந்தம் தானே?. அப்பறம் தெரியாத மாதிரி அவங்கன்னு பேசறீங்க?…”
போட்டு வாங்கு வாங்கென்று வாங்கினான் அர்ச்சனாவை. மகனின் இத்தனை கேள்வியில் ஸ்தம்பித்து போனார் அர்ச்சனா.
“வாய் தவறி வந்திருச்சு சூர்யா. அதை விடு. நீ ரீச் ஆகிட்டியான்னு கேட்க தான் கூப்பிட்டேன்…” என சமாளிக்க,
“இத்தனை வருஷத்துல இப்படி நீங்க எங்க போற வரன்னு என்னை கேட்டதில்லை. இதுவுமே புதுசா இருக்கு…” என்று அடுத்த வெடியை கொளுத்த,
“இப்ப கேட்டது தப்பா? பாலாவுக்கு முடியலை. அதோட கிளம்பி போனீங்களே. இப்போ பரவாயில்லையான்னு கேட்க தான் கேட்டேன்…”
“கேட்டது தப்பில்லை. கேட்ட விதம் தப்பு. பாலாவை உங்களுக்கு முன்ன பின்ன தெரியாதா? இதுக்கு முன்னாடி என்னை வச்சு தான் அவக்கிட்ட பேசினீங்களா நீங்க? இன்னைக்கு என் கிட்ட கேட்டதை அவ போனுக்கே பேசியிருக்கலாமே?…” என கிடுக்கிபிடி போட,
“என்ன பேசினாலும் இப்படி குதர்க்கமா எடுத்துக்க எப்போ இருந்து பழகின சூர்யா?…” என்றார் அர்ச்சனா.
“வாட்? வாட் யூ மீன் ம்மா? நல்லா நீங்களே யோசிச்சு பாருங்க. யார் குதர்க்கமா நினைக்கிறாங்கன்னு…” என்றவன்,
“மோகனாக்கா கால் பண்ணியிருந்தாங்களா?…” என்றான் அடுத்ததாக. அர்ச்சனா பதிலே பேசவில்லை.
“ஓகே, நான் கட் பன்றேன்…” என்று வைக்க போக,
“சூர்யா இரு…” என பதறி தடுத்தவர்,
“ஆமா, கால் பண்ணிருந்தாங்க. நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதான் அட்டன் பண்ண முடியலை. உன்கிட்ட சொன்னாங்களோ நான் எடுக்கலை, பேசலைன்னு. இதெல்லாம் என்ன? போன் எடுக்கலைன்னா வேளையா இருப்பாங்கன்னு அவங்க தெரிஞ்சுக்க மாட்டாங்களா?…” என்றவர்,
“அதுவும் நீ அங்க போய் கொஞ்சம் நேரம் கூட ஆகியிருக்காது. அதுக்குள்ளே சொல்லியாச்சா?…” என்று அதிருப்தியான குரலில் சொல்ல கேட்டவனுக்கு இன்னுமே அதிர்ச்சி தான்.
“வாவ் ம்மா, நீங்க இப்படி எல்லாம் கூட பேசுவீங்களா?…” என்று எள்ளல் குரலில் வியப்பதை போல சூர்யா கேட்கவும் தான் அர்ச்சனாவிற்கு தான் பேசியதன் போக்கு புரிய அவருக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.
“சூர்யா நான்…”
“ம்மா, நீங்க ஒன்னும் பேசவேண்டாம். உமா அத்தை விஷயம் நான் இன்னும் இங்க யார்கிட்டயும் சொல்லலை. அவங்களுக்கு உடம்பு முடியலைன்னு மட்டும் தான் சொல்லிருக்கேன். நீங்க அவங்க கூட இருந்திருப்பீங்கன்னு சொல்லி சமாளிச்சேன்…”
“நான் பேசறேன் சூர்யா…”
“இதை நீங்க பேசனும்ன்றதுக்காக சொல்லலை. பாலாவுக்கு இப்படின்னு மோகனாக்கா சொல்லி தான் உங்களுக்கு தெரியும். பாலா போன் எடுக்கலைன்னதும் அவங்க யார்க்கிட்ட கேட்பாங்க நம்ம வீட்டுல? உங்ககிட்ட தானே கேட்க முடியும்? கார்ல வரும் போதும் நாங்க போன் எடுக்கலை. என்னவோன்னு பதறி தானே உங்களுக்கு போன் பண்ணிருக்காங்க…”
“இல்லை சூர்யா…”
“ப்ச், எந்த விளக்கமும் எனக்கு வேண்டாம். நீங்க பேசுங்க. பேசாம போங்க. நான் இங்க என்ன பேசினேன்னு சொல்ல தான் உங்களுக்கு கூப்பிட்டேன். என்னோட விதி இன்னும் எத்தனை நான் பார்க்கனும்னு வச்சிருக்கோ தெரியலை. நான் வைக்கறேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான் அவன்.
பாலாவின் மொபைலும் காரிலேயே இருக்க அதையும் எடுத்துக்கொண்டு காரை விட்டு இறங்கினான்.