மனதளவில் மிகவும் ஆயாசமாய் உணர்ந்தான் சூர்யா. பெண்ணையும் எடுத்துக்கொண்டு அவர்களையே பழித்து பேச எப்படித்தான் முடிகிறதோ என்ற எண்ணம் அவனுக்கு வலியை கொடுத்தது. அதிலும் தன் தாய் இப்படி பேசியது தான் அவனுக்கு இன்னும் வேதனை.
“சூர்யா…” என வெற்றி வர,
“நான் எடுத்துட்டு வரேன்னு சொன்னேன்ல. நீ என்னடா இங்க.?…” என்று வெற்றியை தாண்டி செல்ல போக அவனை பிடித்து நிறுத்திய வெற்றி,
“வேற என்ன பிரச்சனை? ஏன் திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கீங்க?…” என கேட்க,
“ப்ச், இப்ப அதுவா முக்கியம். எப்படியும் இன்னைக்கு வரது தானே? அதான் வந்துட்டோம்…” என பட்டுக்கொள்ளாமல் பேச,
“சூர்யா…” என்றான் அழுத்தமாய் வெற்றி.
“நீ வேற ஏன்டா? அதான் சொன்னேனே உமா அத்தை பண்ணி வச்சிருக்கற காரியத்தை. சொந்தக்காரங்க இங்கயும் அங்கயும் வந்து போய்ட்டிருக்காங்க…”
“பாலாவை யாரும் எதுவும் சொல்லிட்டாங்களா?…” என கலங்கி போய் கேட்டவன்,
“அர்ச்சும்மா இருக்காங்களே அப்பறம் எதுக்குடா கூட்டிட்டு வந்த? அட்லீஸ்ட் நாங்களே வந்து அழைச்சிருப்போம் தானே?…” என்றவனை கண்டி லேசாய் இதழ் வளைத்து புன்னகைத்தவன்,
“உன் அர்ச்சும்மா தான் கூட்டிட்டு போய்ட்டு வர சொன்னாங்க. அங்க இருந்தா பாலா எதாச்சும் பீல் பண்ணிருவாளோன்னு. போதுமா?…” என்றான் நடந்ததை மறைத்து தாயையும் விட்டு கொடுக்காமல்.
இன்று தான் பேசியதே அர்ச்சனாவுக்கு கண்டிப்பாக ஒரு பாடமாக இருக்கும் என்றே நினைத்தான் சூர்யா.
இது போன்ற எண்ணங்களை ஆரம்பத்திலேயே வளரவிட கூடாது என்பதில் தான அத்தனை வேகமாய் பேசியது அவன்.
அதிலும் மற்றவர்களை போல இதற்கும் மருமகள், மருமகள் குடும்பத்தினர் மீது பாய நினைக்கும் ரகமல்ல அர்ச்சனா. கண்டிப்பாக நேர்மறையாக தான் சிந்திப்பார் என்பதால் அவரிடம் அத்தனை பேசினான் சூர்யா.
அதே போல வெற்றியிடம் இதை பற்றி சொல்லவும் விரும்பவில்லை. இன்றைய சூழ்நிலை இப்படியே சென்றுவிடாதே.
சூழ்நிலைகள் சுமூகமாக மாறினாலும் இந்து போன்ற நிகழ்வுகளும் சில வார்த்தைகளும் காலத்திற்கும் மறையாமல் வடுவாய் தங்கிவிடுமே. அதனை எண்ணியே சூர்யா இவற்றை மறைத்தான்.
ஓரளவுக்கு அன்றைய சூழ்நிலையை கையிலேடுத்தவனாக கொஞ்சம் கவனமாகவே கொண்டுசென்றான்.
“சரி வா உள்ள போகலாம்…” என்று வெற்றியுடன் உள்ளே வர,
“சாப்பிடுங்கப்பா எல்லாரும். டிபன் ரெடி பண்ணிட்டேன்…” என மோகனா அனைத்தையும் எடுத்து வைத்தவர் கீழே பாயை விரித்து சாப்பிட தட்டுகளை வைக்க,
“அக்கா, இரு இலை வெட்டிட்டு வரேன்…” என வாசலுக்கு சென்றான்.
“இன்னுமா மாமா வரலை? போன் பண்ணி பேசினீங்களா? நேரமாகிடுச்சே…” என சூர்யா கையை கழுவியபடி கேட்க,
“போன் பண்ணிட்டேன் சூர்யா. நீயும், பாலாவும் வந்திருக்கீங்கன்னு சொல்லவும் திரும்பவும் மார்க்கெட் போய் உங்க ரெண்டு பேருக்கும் புடிச்ச காய்கறி வாங்கிட்டு வரேன்னு போய்ட்டாரு…” என்றபடி சிரிக்க,
“எனக்கு புடிச்சதுன்னு சொல்லுங்க. அவளுக்கு நடக்கறது, தாவறதுன்னு தானே புடிக்கும்? அதுக்கு என்ன பண்ணுவாராம்?…” என சிரித்துக்கொண்டே தண்ணீரை எடுத்து குடித்தவன் பாயில் அமர்ந்துகொள்ள மோகனாவிற்கு திக்கென்று இருந்தது.
“என்னாச்சுக்கா?…” என்றான் அவரின் முகமாற்றத்தில்.
“ஆங் ஒண்ணுமில்லை சூர்யா…” என்றவர் வெற்றி வந்ததும் அனைவருக்குமாக இலையை போட,
“பாலாவை கூப்பிடலை?…” என்றான் சாப்பிட ஆரம்பித்தபடி.
அவன் என்னவோ சாதாரணமாக தான் கேட்டான். அதை கேட்டவர்களுக்கு தான் அது எத்தனையை நிம்மதியை தந்தது என்று அவனுக்கு தெரியாதல்லவா? அந்த நிம்மதி விரைவில் சந்தோஷமாகும் என்ற எதிர்பார்ப்புடன்,
“அவ கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்து சாப்பிடுவா சூர்யா. நீ முதல்ல சாப்பிடு. தலை வலின்னு சொன்னியாமே?…” என அவனுக்கு பரிமாற,
“இவன் தான் சொன்னானா? அதை விடுங்க பார்த்துக்கலாம். கொஞ்சம் நேரம் நல்லா தூங்கினா சரியாகிடும்…” என்று சொல்லி ஜெயஸ்ரீ, வெற்றியோடு பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தான்.
“சூர்யா நீ போய் தூங்கு. டேப்லெட் எதுவும் வேணுமா?…” என வெற்றி கேட்க,
“இல்லைடா, வேண்டாம். நான் தான் சும்மா போடமாட்டேன்னு தெரியும் தானே உனக்கு…” என்றவன் தனது உடையை பார்த்துவிட்டு சோபாவில் சென்று அமர,
“என்னடா உட்கார்ந்திட்ட?…” என வெற்றி கேட்டதும் மோகனாவும் வந்து எட்டி பார்த்தார்.
சூர்யாவிற்கு சற்று சங்கடமாய் போனது. இதுவரை வந்திருக்கிறான். ஹால், கிட்சனோடு சரி. வேறெங்கும் அவன் நுழைந்ததில்லை. இன்றானால் பாலா இருக்கும் அறைக்குள் செல்ல வேண்டும் என்பதே ஒரு மாதிரியாக இருந்தது.
முதல்நாளில் இருந்து இன்று காலை வரை தன்னுடன் இருந்தவள் தான். ஆனாலும் அங்கே தெரியாத ஒரு சங்கோஜம் இங்கே தோன்றியது.
“வெற்றி நீ சூர்யாவை பாலா ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொல்லு…” என சொல்லிவிட்டு மோகனா மீண்டும் கிட்சனுக்குள் மறைந்துகொள்ள,
“சூர்யாண்ணா, இனிமே இங்க எல்லாமே அப்படித்தான்…” என ஜெயஸ்ரீ கிண்டல் பேச சற்று இறுக்கம் தளர்ந்தவனாக லேசான சிரிப்போடு எழுந்து உள்ளே சென்றான்.
கதவை திறந்து வைத்தபடியே அவன் மூலையில் சுவற்றை ஒட்டி போடப்பட்டிருந்த கட்டிலை பார்க்க,
“சூர்யா டோர் லாக் பண்ணிக்கோ. இல்லைன்னா பாலா டிஸ்டர்ப் ஆகிடுவா…” என வெற்றி அங்கிருந்தபடியே குரல் கொடுக்க,
“இவன் வேற இம்சை…” என முணுமுணுப்போடு கதவை தாழிட்டான்.
டபுள் காட் கட்டில் என்றாலும் சற்று ஒடுங்கியே இருக்க மொபைலை சைலன்ட்டில் போட்டு வைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அவளருகே படுத்துவிட்டான் மேலும் யோசிக்காமல்.
‘இப்படியே ஒன்னொண்ணுக்கும் யோசிச்சுட்டே இருந்தா உருப்பட்ட மாதிரிதான் என் பொழைப்பு’ என்றுவேறு சொல்லிக்கொண்டவன் தலைக்கு மேல் இரு கைகளையும் கட்டிக்கொண்டு கண்ணை மூட பாலாவிடம் லேசாய் அசைவு.
திரும்பி பார்க்க நினைத்து வேண்டாம் என கண்ணை மூட அவள் இன்னும் புரண்டு அசைய என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போம் என பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை.
திரும்பி படுத்ததில் போர்த்தியிருந்த போர்வை விலகி போக தூக்கத்திலேயே துழாவினாள் போர்வையை. அதை கண்டவன் எழுந்தமர்ந்து அவளுக்கு நன்றாக போர்த்திவிட்டவன்,
“மேடம் அவளோட காஸ்ட்யூம்க்கு மாறியாச்சு போல…” என்ற முணுமுணுப்போடு படுத்துக்கொண்டான் மீண்டும்.
மெரூன் வர்ணத்தில் ஒரு டிஷர்ட்டும், முழங்கால் வரை நீண்ட பேன்ட்டுமாய் நைட் சூட்டில் நன்றாய் உறக்கத்தில் இருந்தாள்.
‘வர வர இவளோட ட்ரெஸ் கூட நான் கவனிக்கறேன்’ என்ற எண்ணம் மூளையில் குடைய அதை பெரிதுபடுத்தாமல் தானும் உறங்க முயன்றான். முடியவில்லை.
பின் மொபைலை எடுத்து பார்க்க அங்காங்கே தங்கள் குடும்ப செய்தி வலைதளத்தில் உலாவுவதை பார்த்தான்.
கொட்டை எழுத்தில் தனது கம்பெனியையும், கோபாலசுவாமியின் பெயர்களையும் போட்டிருந்தவர்கள் அதனோடு கோபாலசுவாமியின் ஆஸ்தான வாடிக்கையாளர்கள் இவர்கள் என சில பிரபலங்களையும் போட்டோவுடன் பட்டியலிட்டிருந்தார்கள்.
போதாததிற்கு அவனின் உறவுகள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என நிறைய அழைப்புகள் வேறு இருக்க சோஷியல் மீடியா பக்கம் போனதும் இன்னும் தலைவலி அதிகமானது தான் மிச்சம்.
“ரிடிகுலஸ். இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை…” என்று எரிச்சலுடன் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தான்.
மீண்டும் திரும்பி பாலாவை பார்க்க அவளோ உலகம் மறந்து அத்தனை நிம்மதியுடன் உறங்கிக்கொண்டு இருந்தாள். தான் இருக்குமிடம் வந்து சேர்ந்த நிம்மதி என்பது அவனுக்கு புரியவில்லை.
‘இவ மொபைல்லையும் இதை எல்லாம் பார்த்திருப்பா தானே ப்ரெண்ட்ஸ் கேட்டிருப்பாங்க தானே?’ என யோசனையுடன் பார்த்தவன் பின் வீட்டு நினைவில் யோசனை தாவ அப்படியே கண்களை மூடியபடி இருந்தவன் உறங்கி போனான்.
சூர்யா படுக்க சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சந்திரன் வந்துவிட்டார் கடையையே காலி செய்ததை போல அத்தனை காய்கறிகளுடன்.
“என்ன மாமா இது? மொத்த மார்க்கெட்டையும் வழிச்சு எடுத்துட்டு வந்துட்டீங்களா?…” என வெற்றி கிண்டல் பேச,
“முன்னாடி வேற. இப்ப மருமகன்னு ஆகிட்டாரு. அதனால அவருக்கு புடிச்சதெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்…” என முகம் மலர சொல்லியவரை கண்ட மோகனா,
“அவரு இவருன்னு பேசாதீங்க. வந்ததுமே என்னை காய்ச்சிட்டு தான் போனான். எப்பவும் போல பேசுங்க…” என்று காலை நடந்ததை சொல்ல,
“சரி சரி, பார்த்துக்கறேன். எனக்கு பசிக்குதே. சாப்பிட எடுத்து வை…” என சொல்லி கையை கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தார் சந்திரன்.
அதன் பின்னர் மதிய உணவு தடபுடலாக ஆரம்பிக்க அங்கே சமையல் அதிரிபுதிரியாய் தயாரானது. சமைத்து முடித்து சூர்யாவும், பாலாவும் வர காத்திருந்தனர் மற்றவர்கள்.
நல்ல உறக்கத்தில் இருந்த பாலா மெல்ல மெல்ல நகர்ந்து சூர்யாவின் கைகளில் தலை வைத்துக்கொள்ள அதில் உறக்கம் கலைந்தவன்,
“பாலா…” என மெலிதாய் அழைக்க,
“ஹ்ம்ம், ப்பா…” என்றாள் லேசாய் முகத்தை சுண்டியபடி.
“புருஷனை தவிர எல்லாரையும் தூக்கத்துல தேடுவா போல. தூங்கும் போதுதான் இவளுக்கு எல்லா எக்ஸ்ப்ரஷன்ஸும் வருமோ? மத்த நேரமெல்லாம் முறைப்பும், வாயும் தான்…” என்று முணுமுணுத்து அவளை மெல்லமாய் விலக்கி படுக்க வைத்தவன் எழுந்துகொண்டான்.
முகத்தை கழுவி விட்டு அங்கேயே தலை வாரி உடையை நன்றாக நீவிக்கொண்டவன் வெளியே வர சந்திரன் வேகமாய் வந்து கை பிடித்துக்கொண்டார்.
“வாங்க மாப்பிள்ளை…” என அவரறியாமல் வந்துவிட சொல்லிவிட்டு அவர் முழித்த முழியில் சூர்யா சிரித்துவிட,
“அது பார்த்ததும் அப்படியே வந்து…” என உளற,
“உங்களுக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படியே கூப்பிடுங்க மாமா…” என்றான் சிரிப்போடு.
பின் அவனோடு பேசிக்கொண்டு அமர்ந்திருக்க பாலாவும் எழுந்து உறக்கம் கலையாமல் வந்தவள்,
“ம்மா பசிக்குது எனக்கு. சாப்பிட தா…” என்றபடி வெற்றியின் அருகே வந்தமர்ந்தவள் அவனின் மடியில் சாய்ந்துகொண்டாள்.
இது பாலாவின் வழக்கமும் கூட. முன்பெல்லாம் பெரிதில்லை. இப்போது கணவன் என்று ஒருவன் இருக்க இப்படி மகள் நடந்துகொண்டால்?
“பாலா…” என ஜெய் தான் அவளை அழைத்தாள்.
“ஹ்ம்ம், பொறுக்காதே…” என்று வெற்றியும் கிண்டல் பேச,
“பாலா சூர்யா அண்ணா…” என்று மீண்டும் ஜெயஸ்ரீ சொல்லவும் தான் பாலாவிற்கு சற்று உறக்கம் தெளிந்தது.
எழுந்து அமர்ந்தவள் சூர்யாவை பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீ ஏன்டா எழுந்துட்ட? தூக்கம் வந்தா தூங்கு…” என வெற்றி சொல்லவும் பல்லை கடித்த ஜெயஸ்ரீ,
“போதும் தாலாட்டினது. சாப்பிட வேண்டாமா எல்லாரும்?…” என சொல்லிய ஜெயஸ்ரீ,
“இதான் புருஷனை பார்த்துக்கறதா பாலா? நீ தானே சாப்பிட்டாரா இல்லையான்னு கவனிக்கனும்…” என கேலி போல சொன்னாலும் அதில் கண்டிப்பே ஓங்கி இருந்தது ஜெயஸ்ரீயின் பேச்சில்.
“ஜெய் இப்ப ஏன் அவளை திட்டற?…” என வெற்றி மனைவியை முறைக்க பாலாவிற்கு என்னவோ போல் ஆனது.
எத்தனை சண்டைகள், பிடித்தமின்மை இருந்தாலும் அவன் அவனின் வீட்டில் தன்னை பார்த்துக்கொண்டானே என்ற நினைப்பே பாலாவை யோசிக்க வைக்க சூர்யாவை பார்த்தாள்.
‘போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. சாப்பிடலாம்’ என்றான் வாயசைப்பில் கண்ஜாடை காண்பித்து. அவனின் மௌனபாஷை கப்பென்று பிடித்துக்கொண்டவள் தலையசைத்து எழுந்து உள்ளே சென்றாள் பாலா.