என்றும் சாப்பிடு என்று சொல்லுபவரல்லவே. இதை பிடி என எதுவாக இருந்தாலும் அவன் கேட்கும் முன்னரே கையில் திணிப்பவர் இன்று இப்படி கேட்க அவனுக்கு சரி என்று சொல்ல மனதே இல்லை.
“இல்லை வேண்டாம் அர்ச்சும்மா. நீங்க போய்ட்டு வாங்க…” என்ற வெற்றி,
“டேய் கார்ல இருக்கேன். வா…” என்று சென்றுவிட்டான்.
“இந்த பேக்கை கார்ல வச்சிட்டு காரை திருப்பி வை. வரேன்…” என்று சூர்யா சொல்லவும் அர்ச்சனாவுக்கு ஒன்றும் சொல்லமுடியாத நிலை.
போகாதே என்றும் சொல்ல முடியாமல், பாலாவை அழைத்துக்கொண்டு வா என்றும் சொல்லமுடியாமல் குழப்பத்துடன் இருந்தார். வெற்றி சென்றதும் தாயுடன் சேர்ந்து நடந்தவன்,
“அப்பா எங்க?…” என்றான்.
“அப்பா சாப்பிட்டதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்னு போனார்…”
“ஓஹ்…” என்றான்.
“சூர்யா நான் தப்பா எல்லாம் யாரையும் நினைக்கலைப்பா…” என அவராகவே ஆரம்பிக்க,
“நான் எதுவும் கேட்கலைம்மா. ஒவ்வொருத்தவங்களும் இப்படித்தான் இருக்கனும்னு சொல்ல முடியுமா? உங்களுக்கு அப்படி நடந்துக்க தோணிருக்கு. முடிஞ்சு போச்சு விடுங்க…”
“சூர்யா ப்ளீஸ், அம்மா பக்கமும் பாரேன் நீ…”
“ம்மா, இதுல பக்கம் பார்க்கறது எல்லாம் இருக்கட்டும். முதல்ல நடந்த எல்லாத்தையும் நீங்க யோசிச்சு பாருங்க. உங்களுக்கே புரியும் எது சரி, எது தப்புன்னு. நான் எதையும் புரியவைக்க நினைக்கலை…” என்று வேகமாய் நடக்க உமா வீட்டிற்குள் வந்துவிட்டதால் பேச்சு அத்துடன் நின்றது.
சூர்யா நுழைந்ததுமே அங்கிருந்தவர்கள் சலசலவென தங்களுக்குள் பேச நேராக உத்தமனிடம் வந்தான்.
“அத்தை எப்படி இருக்காங்க மாமா?…” என கேட்க கலங்கிய கண்களுடன் தலையை மட்டுமே அசைத்தார் அவர்.
“யார்ட்டையுமே பேச மாட்டேன்றார். யார் பேசினாலும் அழ தான் செய்யறார் சூர்யா…” என அர்ச்சனா சொல்ல,
“மாமா என்ன இது? அதான் அத்தை நல்லபடியா வந்துட்டாங்கல்ல. அழாம அவங்களுக்கு நீங்க தான் தைரியம் சொல்லனும்…” என்றான் அவன்.
‘என் மகன் இப்படி எல்லாம் கூட பேசுவானா?’ என அன்றைய நாளில் ஆயிரமாவது முறையாய் அதிசயித்தார் அர்ச்சனா.
“உமா உள்ள தான் படுத்திருக்கா. போய் பேசு…” என மகனிடம் சொல்ல அவனும் அறைக்குள் எட்டி பார்த்தான்.
சூர்யாவை பார்த்ததுமே அந்த பெரியம்மா நொடிப்புடன் எழுந்து வெளியே வந்துவிட்டார்.
“அத்தை…” என்றவனின் குரலில் திரும்பி பார்த்த உமாவின் முகம் அழுது அழுது வீங்கி இருக்க கண்கள் கண்ணீர் இன்றி வறண்டு போய் இருந்தது.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனா நீங்க எடுத்த முடிவு மட்டும் தப்புன்னு சொல்லுவேன். இனி இப்படி ஒரு காரியத்தை செய்யாதீங்க. எல்லாரையும் வேண்டாம்னு போனவ போனவளாகவே இருக்கட்டும். இருக்கறவங்களை பாருங்க. மாமாவை பாருங்க…” என்றான் சுருக்கமாய்.
“சூர்யா, இப்படி எல்லாரையும் பேச வச்சுட்டு போய்ட்டாளே…” என உடைந்து போய் உமா கதற,
“அதன நாங்க இருக்கோமே. அதை விடுங்க. நீங்க இப்படி இருக்க இருக்க மாமா தான் உடைஞ்சு போறார். பார்த்துக்கோங்க…” என்றவன் ஒன்றும் பேசாமல் வெளியே வர,
“ஊருல இல்லாத பொண்ண கட்டிட்டானாம். பார்த்தியா அவ வந்து பாக்க கூட நினைக்காம அவ அம்மா வீட்டுல போயி உக்கார்ந்துட்டா. இந்தா இருந்துட்டு இவனும் இந்நேரம் வாரான். நல்லா வளத்து விட்டிருக்காங்க…” என அந்த பெரியம்மா சூர்யா வந்தது தெரியாமல் மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
“இவன் வந்து கேட்டதும் உமாவும் பொலபொலன்னு அழுகுறா. சட்டைய புடிச்சு என் பொண்ணு போகவும் இன்னொருத்திய கட்டினியேன்னு கேட்க வேண்டாம்? அவளும் அவ பொண்ணும். கொஞ்சமாவா உமா ஆடினா?…” என மேலும் பேச,
“அவ்வளவு தானா? இன்னும் இருக்கா?…” என்றவனின் கடுமையான குரலில் தூக்கிவாரி போட அவர் திரும்ப,
“ம்மா…” என வேகமாய் கத்தியவன்,
“முதல்ல இவங்களை கிளம்ப சொல்லுங்க. ஏன் உங்களால அத்தையை பார்த்துக்க முடியாதா?…” என்றான் ஆவேசமாய்.
“சூர்யா என்ன இது?….” என உத்தமன் வந்து பேச,
“இங்க என்ன இழவா விழுந்துருச்சு? ஆளாளுக்கு கூடி கூடி அழுகவும், தனியா ஒரு கூட்டம் சேர்த்துட்டு இருக்கற வீடாளுங்களையே தப்பா பேசவும் இதுக்குத்தான் இங்க இருக்காங்களா?…” என இரைய,
“ஒத்தாசைன்னு வந்து இருந்தா பார்த்தியா அர்ச்சு உன் மகன் பேசறதை?…” என கோபத்துடன் அந்த பெரியம்மா பேச,
“உமா அத்தை நல்லபடியா எழுந்து வரனும்னு நினைச்சா முதல்ல இந்தம்மாவை அனுப்பிவிடுங்க. இல்லை நீங்க இருக்கும் பொது ஒரு பேச்சு, இல்லைன்னா ஒரு பேச்சுன்னு பேசி குடும்பத்தை உடைச்சுட்டு தான் போவாங்க…” என்று சொல்ல,
“நானா குடும்பத்தை உடைக்க பார்க்கறேன்?…” என சூர்யாவிடம் முறைத்தவர்,
“அர்ச்சு உன் மகன் காலையில இருந்தே என்கிட்டே இப்படியே பேசிட்டு இருக்கான். ஒன்னும் நல்லதுக்கு இல்லை…” என அர்ச்சனாவை பார்க்க உமாவே மெதுவாய் எழுந்து வந்துவிட்டார் தடுமாறி.
“பார்த்தியா உமா, உன்னை பார்த்துக்கலாம்னு வந்து இருந்தா என்னையே வெளில போக சொல்லுறான் உன் அண்ணன் மகன். நான் போய்ட்டா உன்னை யாரு கவனிச்சுப்பா? என்ன இருந்தாலும் நான் பார்த்த மாதிரி வருமா?…” என அர்ச்சனாவை மறைமுகமாய் பேசுவதை போல பேச,
“ம்மா, பார்த்தீங்களா பேச்சை? இதுக்குத்தான் அனுப்புங்கன்னு சொல்றேன்…” என்றவன்,
“அவங்க என்ன சொல்றது, நீங்க முதல்ல கிளம்புங்க. அத்தையை பார்த்துக்க எனக்கு தெரியும். எங்க குடும்பத்துக்கு தெரியும். போங்கன்றேன்ல…” என சூர்யா சொல்ல உமாவும், உத்தமனும் வாயை திறக்கமுடியவில்லை.
இத்தனை வருடத்தில் என்று இவன் இவ்வளவு பேசியிருக்கிறான்? இப்படி உரிமையாய் பேசிவிடமாட்டானா என்று எத்தனை நாள் பார்த்திருந்திருக்கிறார்கள்.
அனைவரும் சூர்யாவின் பேச்சிற்கு எதிர்த்து பேசாமல் இருக்க அதை கண்டே அந்த பெரியம்மா பொங்கினார். மற்ற உறவுகளையும் பார்த்து,
“வீட்டு பெரியமனுஷி எனக்கே இந்த நிலைமை. உங்களுக்கெல்லாம் என்ன? இனி இந்த வீட்டு படியேறலாமா? கிளம்புங்க…” என பேச பேச இருந்த உறவுகள் எல்லாம் பெரியம்மா பேச்சை பெரிதாக நினைத்து அவர்களும் கிளம்பி சென்றனர்.
“என்ன சூர்யா இப்படி பண்ணிட்ட? பேசினா பேசிட்டு போகட்டுமே? இப்ப பாரு எல்லார்ட்டயும் சொல்லுவாங்க இதை ஒரு பெரிய விஷயமா பேசி. அவங்க இங்க என்ன பண்ணினாங்கன்னு வெளில வராது. நீ வெளில போக சொன்னது தான் வரும்…” என அர்ச்சனா ஆற்றமாட்டாமல் சொல்ல,
“ப்ச், போகட்டும். கொஞ்சம் மன நிம்மதியாவது மிச்சமாகும். நாளு வாய் சோறு ஊட்டிட்டே நடந்ததை மறக்கவிடாம பேசிட்டே இருக்கறதுக்கு யாரும் பேசாம இருக்கறது பெட்டர் தான்…” என்றவன்,
“அத்தை நீங்க இங்க இருக்க வேண்டாம். அங்க நம்ம வீட்டுல போய் இருங்க…” என்று சொல்லிவிட்டு உத்தமனிடமும் பேசிவிட்டு கிளம்பிவிட்டான்.
“குடும்பஸ்தன் ஆனதும் பேச்சுல நிதானம் வந்திருச்சு சூர்யாவுக்கு. நின்னு பேசறான்…” என்றார் உத்தமன்.
“ஆமாங்க, இவ்வளவு பேசுவான்னு தெரியாது எனக்கும்…” என்றார் உமா.
இரண்டு நாளில் அழுகை, புலம்பலை கடந்து அந்த வீட்டில் வேறு ஒரு பேச்சு பேசப்பட்டிருக்கிறது. அதுவும் நல்லவிதமாய்.
அர்ச்சனாவிற்கு மனதில் ஒரு நிம்மதி தான். உத்தமனும், உமாவும் பேசியதை கேட்டதில்.
வெளியே வந்த சூர்யா வெற்றியை பார்க்க காரில் அமர்ந்தபடி நன்றாக தூங்கியிருந்தான் வெற்றி. அதை கண்டதும் சிரிப்புடன் மெதுவாய் கதவை திறந்து காரில் அமர்ந்தவன் ஹார்னை அழுத்த அடித்துபிடித்து முழித்தான்.
“நான் கார்ல ஏறினது கூட தெரியாம நல்ல தூக்கம் போல?…” என சிரிப்போடு காரை கிளப்பியவன் போக்குவரத்தில் கலந்து செல்ல,
“மனுஷனாடா நீ? எழுப்ப வேண்டியது தானே? நீ பாட்டுக்கு ஹார்ன் இப்படி அடிக்கிற?…” என்று எரிந்துவிழ,
“பின்ன அங்க நான் அத்தனை கோபத்துல பேசிட்டு இருந்தா இங்க நீ ஹாயா ஏசியை போட்டுட்டு தூங்கிட்டு இருக்க. காண்டாகுமா? ஆகாதா?…”
“ஏன் ஆகாது? நீ அங்க எப்படி இருந்தன்னு எனக்கு தெரியுமா? சும்மா…” என்று முகத்தை துடித்தவன் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு,
“என்னவாம்? எப்படி இருக்காங்க உமா ஆன்ட்டி?…” என கேட்க சூர்யாவும் நடந்ததை சொல்ல வெற்றிக்கு கஷ்டமாகி போனது.
“இப்ப நீ ஏன் பீல் பன்ற? திவ்யா செஞ்சதுக்கு எல்லாரும் சேர்ந்து கஷ்டப்படறோம். ப்ச்…” என்று சலிப்புடன் சூர்யா சொல்ல,
“பாலா உனக்கு கஷ்டமா சூர்யா?…” என்றான் வெற்றி.
சூர்யாவிடம் எந்த பதிலும் இல்லை. பதில் சொல்லமுடியாது என்பதை போல உதட்டை மடித்தபடி காரை செலுத்திக்கொண்டிருந்தவன் முகத்தில் இருந்து எதையும் கணிக்கமுடியாமல் வெற்றியும் அமைதியானான்.
வீட்டிற்கு செல்ல அங்கே பாலாவும் கல்லூரி தோழிகள் நான்கு பேர் ஹாலில் அமர்ந்து அவளுடன் பேசிக்கொண்டு இருக்க சூர்யாவை பார்த்ததும் எழுந்து நின்றனர் அந்த பெண்கள்.
“இவர் தான் ஸாரா?…” ஒரு பெண் கேட்க மற்ற பெண்கள்,
“ஹாய் ஸார்…” என்றனர்.
“ஹாய்…” என சொல்லியவன் ஒரு சிரிப்புடன்,
“பேசிட்டு இருங்க…” என சொல்லிவிட்டு பாலாவின் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
ஒரு அரைமணி நேரம் போல அவர்கள் இருந்து பேசிவிட்டு செல்ல அதன் பின்னரே வெற்றி அழைத்ததும் வெளியே வந்தான் சூர்யா.
வீட்டில் இருக்க என்னவோ போல இருக்க வெற்றியுடன் வெளியே நடந்துவிட்டு வரலாம் என்று சென்றவன் இரவு உணவிற்கு தான் வந்தான்.
“சூர்யா அம்மா பேசினாங்க…” என்றார் அவன் உள்ளே நுழைந்ததும்.
“ஓஹ் அப்படியா?….” என மட்டும் சொல்லியவன்,
“ஜெய் கொஞ்சம் தண்ணி?…” என கேட்டு சோர்வுடன் அமர,
“ஹ்ம்ம், உமாவுக்கு உடம்புக்கு முடியலை. அங்க இருக்கோம்னு சொன்னாங்க. அதான் போன்ல பேச முடியலைன்னு. எல்லாம் சரியாகவும் வீட்டுக்கு வரோம்னு சொன்னாங்க…” என மோகனா பேச அவரை பார்த்தவன் முகத்தில் சிறு நிம்மதி.
‘சின்ன பேச்சிற்கே எத்தனை நிம்மதியாகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் பங்கம் ஏற்பட விடமாட்டேன்’ என நினைத்துக்கொண்டான்.
“பாலா எங்க?…” என வெற்றி கேட்க,
“ப்ரெண்ட்ஸ் வந்துட்டு போனாங்க இல்ல. அதான் மாத்தி மாத்தி போன் வருது. கல்யாணம் பத்தி விசாரிக்க. வெளில தானே நின்னு பேசிட்டு இருந்தா?…” என ஜெயஸ்ரீ சொல்ல,
“நாங்க வரப்போ பார்க்கலையே…” என்றான் வெற்றி.
எழுந்து சென்று பார்க்க எலுமிச்சை மரத்தின் அருகே இருந்த திண்டில் காலை மடித்தபடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். வெற்றி எதுவும் சொல்லாமல் வந்துவிட்டான்.
“என்ன இருக்கா தானே?…” என ஜெய் சொல்ல,
“ஹ்ம்ம், பேசிட்டு இருக்கா. முடிச்சுட்டு வரட்டும்னு வந்துட்டேன்…” என வெற்றி சொல்ல,
“அக்கா, டின்னர் என்ன? லைட்டா ஏதாவது செய்ங்க. ரொம்ப டயர்டா இருக்குது…” என்றான் சூர்யா.
“தோசை ஊத்தட்டுமா?…” என்றவர் வேகமாய் அவனுக்கு தோசை வார்த்து வர அமர்ந்த இடத்திலேயே இருந்து வாங்கிக்கொண்டான்.
“நான் பாலாவை கூப்பிடறேன்…” என ஜெய் வாசலுக்கு போக,
“அவ பேசிட்டு வரட்டும் ஜெய். டிஸ்டர்ப் செய்யாதே…” என்றுவிட்டான் சூர்யா.
“இல்லை நீங்க சாப்பிட்டுட்டு இருக்கீங்களே?…”
“நான் சாப்பிட்டா கூடவே இருக்கனுமா அவ? சும்மா போட்டு போர்ஸ் பண்ணாதம்மா. அவளுக்கும் ஒரு ஸ்பேஸ் வேணும். அதை முதல்ல எல்லாரும் புரிஞ்சுக்கோங்க…” என சொல்லியவன்,
“எல்லாமே உடனே மாறிடாது. உடனே நீங்க எல்லாம் சொல்றதுக்காக மாறனும்னு நினைச்சா அந்த ப்ரெஷர்ல பிரஸ்ட்ரேஷன்ல தான் கொண்டு போய் விடும். சட்டுன்னு எதையும் அடாப்ட் பண்ணிக்க யாருக்கும் கஷ்டமா தான் இருக்கும். சோ…” என்றவன் பேச்சை மீறமுடியாமல் அப்படியே நின்றுவிட சாப்பிட்டு முடித்து உள்ளே சென்றவன் உடை மாற்றி படுத்துவிட்டான்.
எத்தனை சோர்வுடன் படுத்ததும் உறங்கிவிடவேண்டும் என்று வந்து படுத்தானோ அதே வேகத்தில் உறக்கம் ஓடியே போனது.
தங்கள் வாழ்க்கை இப்படியே சென்றுவிடுமோ என்னும் பெரும்தவிப்பு அவ்விடத்தில் ஆரம்பித்தது.
ஒன்றமுடியாத உறவுக்குள் ஒன்றிவிட முயன்றாலும் அந்த முயற்சியும் எண்ணங்களும் தரும் நினைப்பே அதை தகர்த்தெறிந்தது.
ஆனாலும் ‘வாழ்ந்துதான் பார்ப்போமே’ என வாழ்க்கை வைத்த சவாலை ஏற்கவே நினைத்தான். கதவு திறக்கும் சத்தத்தில் தலையை திருப்பி பார்க்க அங்கே பாலா கதவை அடைத்து தாழிட்டுக்கொண்டு திரும்பினாள் இவனை பார்த்து.
பார்த்தவனுக்கு முதல்நாள் தன்னறையில் அவள் வந்து நின்றது தான் ஞாபகத்தில் வந்தது. பேச்சுக்கள் எதுவும் தோன்றாமல் தன் செய்கை கண்முன் படமாய் விரிய அவளை பார்த்தபடியே அசையாமல் படுத்திருந்தான்.
விழியில பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா