நிலா – 12
சொல்லியபடி பாலா உடை மாற்றி தலையை வாரிவிட்டு முகம் கழுவி வரவும் சாப்பிட அமர்ந்தனர்.
“பாலா நீயும் சூர்யாவோட உட்கார். நாங்க பரிமாறுவோம்…” என ஜெய் சொல்ல,
“இல்லை வேண்டாம். அவங்க முதல்ல சாப்பிடட்டும்…” என பாலா மறுக்க,
“ப்ச், அதான் சொல்றாங்கல்ல. காலையில இருந்து சாப்பிடல நீ. வா வந்து உட்கார்…” என்று சூர்யா சொல்லவும் மோகனாவுக்கு அத்தனை திருப்தி.
அவருக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே தான் இருந்தது. சூர்யா அத்தனை மறுத்து வேறு வழியில்லாமல் மகளை திருமணம் செய்துகொண்டவன். இருவரின் பேச்சுவார்த்தைகளே எப்படி இருக்குமோ என்று பயந்து தான் இருந்தார்.
அதிலும் முதல்நாள் வீட்டிற்கு சென்றதும் அவனறையில் சென்று முடங்கியவன் தங்களை பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை என்றதும் வெகுவாய் யோசிக்க ஆரம்பித்திருந்தார் தவறு செய்துவிட்டோமோ என்று.
இப்போது மகள் சூர்யா பேச்சை கேட்பதுவும், சூர்யா அவளிடம் அனுசரணையாக நடப்பதுவும் தாயின் வயிற்றை குளிரவைத்தது.
வந்தவள் வெற்றியின் அருகே அமர மோகனாவிற்கும், ஜெயஸ்ரீக்கும் அய்யோவென்றானது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளாத குறை தான்.
ஜெயஸ்ரீ பாலாவை மெல்லிய குரலில் கூப்பிட பார்க்க அவளை கண்டுகொண்ட சூர்யா,
“ஜெய் நீயும் வேணும்னா பாலா பக்கத்துல உட்கார். அவளோட சேர்ந்து சாப்பிடு…” என்று சொல்ல,
“இல்லை, எனக்கு பசிக்கலை. கொஞ்சம் லேட் ஆகும்…” என்று சொல்லவும் அவளை முறைத்தவன்,
“அப்பறம் எதுக்கு அவளை கூப்பிடற?…” என்றதுமே அவன் கண்டுகொண்டான் என புரிந்துபோனது அவளுக்கு.
“அக்கா, பார்த்துட்டே இருக்க. எடுத்து வை…” என வெறி சொல்ல சந்திரனுமே,
“வை மோகனா, சூடு ஆறிடும்ல…” என சொல்ல இருவரின் தலையில் எதையாவது தூக்கி போட்டால் என்ன என்று இடுப்பில் கை வைத்தபடி ஜெயஸ்ரீ நிற்க அதை கண்ட சூர்யாவிற்கு அத்தனை சிரிப்பு.
“போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு…” என சூர்யா விசிலடித்து பாட,
“என்னடா பாட்டு எல்லாம் பலமா இருக்குது?…” என வெற்றி கேட்க,
“உன் மனசுக்கு உனக்கு தீபாவளி பரிசு இருக்குதுடா…” என்றான் சூசகமாய் சூர்யா.
“நிஜமாவா? யார் குடுப்பா?…” என வெற்றி எக்ட்க,
“அதோ, சாட்சாத் உன் வொய்ப் தான். வேற யாரு?…” என்று கிண்டல் பேச அதை கூட உணர முடியாமல்,
“ஈஸிட்?…” என்ற வெற்றி,
“சப்ரைஸ் கிப்ட்டா ஜெய்?…” என்று வேறு கேட்டுவைக்க,
“அதான் தெரிஞ்சிடுச்சே கிப்ட்ன்னு. அப்பறம் என்ன சப்ரைஸ்?…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
வெற்றிக்கு இன்னும் புரியாததில் அடக்கமாட்டாமல் சிரித்த சூர்யா வெற்றியின் தோளில் தட்டியவன்,
“ஆள் தி பெஸ்ட் டா வெற்றி…” என்று சொல்லிவிட்டு,
“இவனை வச்சுட்டு தேறவே தேறாது. தேரும் நகராது…” என்று சொல்லியவன் சாப்பிட ஆரம்பித்தான்.
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட கவனிக்கமுடியாமல் வேக வேகமாய் சாப்பிட்ட பாலா,
“ம்மா, ஒரு ஆம்லேட், தூக்கலா பெப்பர் போட்டு…” என்று கேட்க மோகனாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“ஆம்லேட்?…” என்று இப்போது வெற்றிக்கு பல்ப் எரிந்தது.
அவன் சூர்யாவை பார்க்க இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை போல அவன் சாப்பாட்டில் கவனமாய் இருந்தான். அனைத்தையும் கவனித்துக்கொண்டே.
“அக்கா, அவியல் வைங்க. ஸ்பெஷல் சமையல்ல இன்னைக்கு அவியல் தான் டாப்…” என சில்லாகித்துக்கொண்டே வாங்கி சாப்பிட்டான் சூர்யா.
“ம்மா, ஆம்லேட்…” என்றாள் பாலா மீண்டும்.
‘இன்னைக்கு ஆம்லேட் தான்டி நீ’ என நினைத்தபடி சூர்யா சாப்பிட்டு முடிக்க வெற்றி முடிக்கமுடியாமல் அமர்ந்திருந்தான்.
“என்னடா, உன் அக்கா மகளுக்கு சப்போர்ட் பண்ணனும்னா நால்கால் பாய்ச்சல்ல பறப்ப. இப்ப பேசேன். அட தைரியமான ஆளாச்சே நீதான். பேசேன்…” என்றுவேறு தூண்டிவிட,
“நிஜமாத்தான் சொல்றியா?…” என வெற்றி அவனின் முகம் பார்க்க,
“என்னை பார்க்காத, அக்காவையும், ஜெய்யையும் பாரு…” என்றவன்,
“மோகனாக்கா பாயாசம் கப்லா தாங்க. எனக்கு ஃபுல் ஆகிடுச்சு. போதும்…” என எழுந்துகொண்டான் கையை கழுவுவதற்காக.
“பாலா இன்னைக்கு வெஜ் தான். அதனால முட்டை வேண்டாம்…” என்று ஜெய் சொல்ல,
“இன்னைக்கு வீட்டுல சாமி கும்பிடறோமா?…” என்று கேட்டவள்,
“இன்னைக்கு என்ன நாள்?…” என்றாள் விளக்கம் கேட்கும் விதமாய்.
“அண்ணா இந்தாங்க…” என ஒரு டவலை கொண்டுவந்து சூர்யாவிற்கு கை துடைக்க தந்த ஜெய்,
“முதல்ல சாப்பிட்டு முடி. பேசனும்னா வாய் மட்டும் வலிக்காது…” என்று சொல்ல பாலாவின் அருகே இருந்த சேரில் வந்து அமர்ந்தான் சூர்யா.
அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல் பாலா மௌனமாக சாப்பிட மோகனாவிற்கு அத்தனை வருத்தமாய் இருந்தது.
மகள் ஆசைப்பட்டு கேட்டதை கூட செய்து தர இத்தனை யோசிக்கவேண்டி உள்ளதே என முகமே வாடிவிட்டது.
சாப்பிட்டு முடித்தவள் ஜெய்யிடம் கேட்டு ஒரு டோலோவை வாங்கி போட்டுக்கொண்டாள்.
“டாக்டர் ப்ரிஷ்க்ரிப்ஷன் இல்லாம இப்படித்தான் டேப்லெட் எடுப்பாங்களா?…” என சூர்யா கேட்க,
“இல்லை எப்பவும் எடுத்துக்க மாட்டா அண்ணா. இன்னைக்கு தான்…” என ஜெய் சமாளிக்க,
“ஓகே…” என்று முடித்துக்கொண்டவன்,
“வெற்றி வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்டா…” என சொல்லவும்,
“என்ன சூர்யா அதுக்குள்ளே கிளம்பிட்ட?…” என்ற மோகனாவை பார்த்தவன்,
“ட்ரெஸ் எதுவுமே எடுத்துட்டு வரலை அக்கா. அதான் போய் எடுத்துட்டு வரேன்…” என எழுந்துகொண்டான்.
“நானும் கூட வரேன்டா…” என வெற்றியும் உடை மாற்றி கிளம்ப,
“நான் கம்பெனிக்கு போய்ட்டு தான் வீட்டுக்கு போவேன். இன்னைக்கு நீ வீட்ல இரு…”
“அதனால என்ன? நானே கம்பெனிக்கு போகனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். வா போகலாம்…” என்று அவனுடன் சேர்ந்தே கிளம்பினான்.
அவன் கிளம்பியதுமே பாலா உள்ளே சென்று படுத்துக்கொள்ள அவளிடம் எதுவும் பேச முடியாமல் மோகனா திணறி நின்றார்.
“ப்ச், என்ன அண்ணி இது? அவளுக்கு புரியாம இல்லை. ஆனா ஏத்துக்க கொஞ்சம் அவகாசம் வேணும் தானே? உடனே எல்லாம் மாறிடுமா என்ன?…” என ஜெயஸ்ரீ சொல்ல,
“இல்லை ஜெய், எனக்கு இன்னுமே படபடன்னு தான் அடிச்சுக்குது. முடிவெடுக்கும் போது பெருசா தெரியாததெல்லாம் இப்போ சின்ன சின்ன விஷயம் நடக்கும் பொது பூதாகாரமா தெரியுது. என் பொண்ணு வாழ்க்கை…” என சொல்லி கண் கலங்க,
“அச்சோ அண்ணி, இதை எல்லாம் இனிமே யோசிக்க முடியாது. பாலா நல்லா இருப்பா. இப்ப விஷயம் அது இல்லை. நம்ம சொந்தங்களுக்கு சொல்லனுமே. என்ன செய்ய?…”
“சொல்லாம என்ன? ஆனா இந்நேரம் ஓரளவுக்கு அரசல்புரசலா தெரிஞ்சிருக்கும்னு தான் நினைக்கறேன். அதான் எல்லாத்துலையும் இவங்க கல்யாணம் வந்திருச்சே. யார் முதல் கேட்கறதுன்னு எல்லாரும் பேசிட்டிருப்பாங்க. வரட்டும். அப்போ பேசிக்கலாம்…”
“அப்போ நாமளா சொல்ல வேண்டாமா? பிரச்சனை ஆகாதா?…”
“எப்படி இருந்தாலும் பிரச்சனை ஆகும். ரொம்ப இளக்காரமா பேசுவாங்க. அவங்களா எதையாச்சும் யூகிப்பாங்க. முடிச்சு வரட்டும். நாமளா போனா காயம் நமக்கு தான் அதிகம் ஜெய். அவங்களே பேசட்டும் அப்போ பதில் சொல்லுவோம்…” என்று சொல்ல ஜெயஸ்ரீ அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
வெற்றியுடன் கம்பெனிக்கு சென்றவன் அங்கே மேற்பார்வை மட்டும் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் வீட்டிற்கு கிளம்பினான்.
“வெற்றி நான் உமா அத்தை விஷயமா சொன்னதா வீட்டுல காமிச்சுக்க வேண்டாம். புரியுதா?…” என்று வாசலை அடையும் முன்பே பலமுறை வலியுறுத்தினான் சூர்யா.
“ஏன்டா இத்தனைதடவை சொல்லி என் காதை பஞ்சர் பன்ற? ஒன்னும் காமிச்சுக்கலை. இல்லைன்னா கார்லயே இருந்துக்கறேன். நீ போய்ட்டு வா. போதுமா?…”
“அம்மாவா சொன்னா கேட்டுக்கோ. அப்போதான் தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்கோ. நான் சொல்லலைன்னு என்னை கூட திட்டிக்கோ. ஆனா…”
“போதும்டா சாமி. விட்டா இறங்கி ஆட்டோ புடிச்சு வீடு போய் சேர்றேன். சும்மா இதையே சொல்லாத…” என்று வெற்றி சொல்ல,
“ப்ச், உன்னை நம்ப முடியாதேடா…” என்றான் கேலியாய்.
சூர்யா சாதாரணமாக சொல்லிய வார்த்தையே வெற்றியை குத்தியது. அவனின் திருமண விஷயத்தில் தான் செய்துவைத்த விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ? என்ற பயம் கவ்வியது வெற்றியை.
காரை நிறுத்திவிட்டு தன் வீட்டிற்குள் செல்ல உமா வீடு வெளியே போனில் பேசிக்கொண்டிருந்த அஸ்வினி தன் அண்ணனை பார்க்கவுமே அர்ச்சனாவை அழைக்க உமாவின் வீட்டினுள் ஓடினாள். இதை பார்த்தபடியே தான் சூர்யாவும் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
“உட்கார் வெற்றி, நான் வந்திடறேன். இல்லைன்னா ரூம்க்கு வாயேன்…” என அழைக்க,
“ஒன்னும் தேவையில்லை. அர்ச்சும்மா, அஸ்வி வருவாங்க. நான் பேசிட்டு வரேன். நீ போ…” என்றவன் அங்கேயே அமர்ந்துகொண்டான்.
ஒரு தோள் குலுக்களில் அங்கிருந்து மாடியேறினான் சூர்யா. எப்படியும் உமாவை பார்க்க செல்ல வேண்டும். போவதா வேண்டாமா என்ற யோசனையுடன் இரு உடைகளும் தனக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் ஒரு பேக்கில் எடுத்து நிரப்பினான்.
“வெற்றி சூர்யா எங்க?…” என்றபடி வேகமாய் வந்தார் அர்ச்சனா.
“மாடிக்கு போயிருக்கான் அர்ச்சும்மா. என்ன வீட்டுல இல்லாம உமா ஆன்ட்டி வீட்டுல இருந்து வரீங்க?…” என கேட்கவும் அர்ச்சனாவிற்கு சொல்வதா வேண்டாமா என்ற யோசனை வலுத்தது.
“இன்னும் திவ்யாவை நினைச்சு அழுதுட்டே இருக்காங்களா?…” என்றான் வெற்றி. ஏதாவது பேசவேண்டுமே என்று கேட்டு வைத்தான்.
அதிலும் தான் கேட்டதும் உமாவை பற்றி சொல்ல தயங்கி யோசித்து நிற்பவரிடம் பேச்சை மாற்றவெனவே அவ்வாறு கேட்டுவைத்தான்.
“ஹ்ம்ம், ஆமா. அழுதுட்டே தான் இருக்கா. இப்போ கொஞ்சம் பரவாயில்லை…” என்றவர் ஒன்றும் பேசாமல் இருக்க,
“அஸ்வி, ஹரிணிட்ட பேசினியா? எப்படி இருக்கான்னு கேட்டியா?…” என கேட்க இல்லை என்று மட்டும் தலையசைத்த அஸ்வினி,
“நான் என் ரூம்க்கு போறேன்…” என பட்டென சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அவளின் இந்த முகத்திருப்புதலை அப்போதுதான் கவனித்த வெற்றி வாடிய முகத்துடன் அர்ச்சனாவை பார்த்தான்.
“அஸ்விக்கு எதுவும் கோபமா அர்ச்சும்மா? ஏன் பேசாம போகுது?…” என கேட்க,
“இல்லை, நைட் எல்லாம் தூங்கலை. அதான்…” என அர்ச்சனா சமாளிக்க சூர்யா வந்துவிட்டான்.
அவனை உமாவை பார்க்க செல்ல சொல்லவேண்டும் என நினைத்தபடி இருந்த அர்ச்சனா அவன் பேக்குடன் வருவதை பார்த்து நெஞ்சில் கை வைத்தபடி நின்றுவிட்டார்.
“கிளம்பலாம் வெற்றி…” என்றவன்,
“வரேன்ம்மா…” என சொல்ல,
“என்ன சூர்யா இது?…” என்றார் லேசாய் கலங்கிவிட்ட கண்களுடன்.
அழுதுவிடுவாரோ என எச்சரிக்கும் பாவனையுடன் அவரை பார்த்தவன் பார்வையில் இறங்க இருந்த கண்ணீர் நின்றுவிட்டது. புடவை முந்தானையில் முகத்தை அழுத்தமாய் துடைத்துக்கொண்டவர்,
“பாலா எப்படி இருக்கா சூர்யா? சாப்டீங்களா ரெண்டு பேரும்?…” என்றார் வரவழைத்துக்கொண்ட சாதாரண குரலில்.
“ஹ்ம்ம், நாங்க சாப்பிட்டோம் அர்ச்சும்மா. நீங்க சாப்பிட்டீங்களா?…” என வெற்றி கேட்க,
“ஹ்ம்ம், சாப்பிட்டாச்சு வெற்றி. உமா வீட்டுல தான் சாப்பாடு. அங்க ஆளும்பேருமா இருந்தா அவ கொஞ்சம் அமைதியா இருப்பாளேன்னு தான்…”
“நான் உமா ஆன்ட்டியை பார்க்கலாமா அர்ச்சும்மா?…” என்றான் வெற்றி மனது கேட்காமல்.
அவன் கேட்டதுமே அர்ச்சனாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. போவென்றாலும், போகாதே என்றாலும் இரண்டுமே சங்கடமான சூழ்நிலையை தான் உருவாக்கும் என்பதால் மகனை பார்க்க,
“வெற்றி நீ வரவேண்டாம். இங்கையே இரு. நான் போய் பார்த்துட்டு வரேன்…” என்றான் சூர்யா.
“ம்மா, கூட வரீங்களா?…” என அர்ச்சனாவை பார்த்து கேட்க,
“ஹ்ம்ம், வா…” என்றவர்,
“உட்கார் வெற்றி. ஏதாவது சாப்பிடறியா?…” என கேட்க அதிலும் சிறு வித்தியாசம் வெற்றியால் உணர முடிந்தது.