நிலா – 13
கதவை அடைத்துவிட்டு திரும்பிய பாலா அங்கேயே நிற்க அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் அவள் நகராமல் இருப்பதை கண்டவன் கேள்வியாய் புருவத்தை உயர்த்தினான்.
“என்னாச்சு?…” என கேட்க,
“இதென்ன இப்படி இங்க படுத்திருக்கீங்க?…” என்றாள் பாலா.
“ஓஹ், அதான் இஷூவா? ஓகே நான் ஹாலுக்கு போறேன்…” என வேண்டுமென்றே வேகமாய் எழுந்துகொள்ள,
“இல்லை இல்லை. நான் அதை சொல்லலை…” என வேகமாய் கட்டிலை நெருங்கி சொல்லியவள்,
“எப்படி சொல்றது?…” என முணுமுணுத்தபடி அவனை பார்த்தாள்.
எழுந்தமர்ந்திருந்த சூர்யா ஒருகாலை நீட்டி ஒருகாலை மடக்கியபடி இடது கையை மெத்தையில் ஊன்றிக்கொண்டு வலது கை கட்டைவிரலால் நேற்றை நீவினான்.
“இன்னைக்கும் தூங்கின மாதிரி தான்…” என சொல்லியவன்,
“எனக்கு ரொம்ப டயர்டா இருக்குது பாலா. என்னன்னு டக்குன்னு சொல்லு. தூங்கனும்…” என வேகமாய் பேச,
“எதுக்கு கத்துறீங்க? பக்கத்துல தானே இருக்கேன். மெதுவா பேசினாலே கேட்கும். சத்தத்தை குறைங்க. மெதுவா பேசுங்க…” என்றாள் அவனிடம் மெல்லிய குரலில் அவனின் முகம் நோக்கி குனிந்து ஒற்றை விரலால் மிரட்டியபடி.
“சரி மெதுவா பேசறேன். நீ சொல்லு. எதுக்கு அப்படி கேட்ட?…” என ஹஸ்கி வாய்ஸில் கிசுகிசுக்க ‘என்னடா இது?’ என்றானது பாலாவுக்கு.
“இதை சொல்லத்தான் கூப்பிட்டியா என்ன?…” என அவன் கேட்க,
“இல்லை, இல்லை. இது, இங்க, இந்த உங்க ட்ரெஸ்…” என அவனின் உடையை சுட்டி காண்பிக்க புருவங்கள் முடிச்சிட அவளை பார்த்தான்.
அவள் சொல்லவும் தன்னை குனிந்து பார்த்துக்கொண்டான். கையில்லாத ஸ்லீவ்லெஸ் பனியனுடன் அவன் இருக்க ‘இதெற்கென்ன? என்பதை போல அவளை பார்த்தான்.
“இதுக்கென்ன? நைட் இதான் போடுவேன்…” என்றான் சாவகாசமாய்.
அது பாலாவை ஒருபாடு படுத்தியது. ஆபீஸ் உடைகளிலும், கேஷுவல் உடைகளிலும் அவனை பார்த்திருக்கிறாள்.
இப்படி என்றுமே பார்த்ததில்லை என்பதால் அந்த அறைக்குள், தனிமையில் அதுவும் கணவன் மனைவி என்னும் வரையறைக்குள் இருக்க மூச்சு முட்டுவதை போல ஆனது பாலாவிற்கு.
“எனக்கு அன்கம்பர்டபிளா இருக்குது நீங்க இப்படி போட்டிருக்கறது…” என்றாள் வேறு பக்கம் பார்வையை வைத்துக்கொண்டு.
இதை பாலாவிடம் சுத்தமாய் அவன் எதிர்பார்க்கவில்லை. அவளின் பேச்சும், செயலும் லேசாய் இதழ்களுக்குள் சிரிப்பு முட்ட லேசாய் தலையை அசைத்துக்கொண்டவன் மனதிலோ சுவாரஸியம் மூண்டது.
சற்று முன்னர் வரை எங்கே ஆரம்பிப்பது, எப்படி சரி படுத்த பார்ப்பது என ஆயிரம் யோசனைகளை இருந்தாலும் அதை தாண்டி எதுவுமே தோன்றவில்லை. எப்படி என்கிற கேள்விகள் மட்டுமே அவனிடத்தில்.
இது வாழ்க்கை. கணவன், மனைவி என இருவருமே பயணப்பட போகும் அந்தரங்க புரிதல் முகிழ்க்கும் தருணங்கள் அடங்கிய பொக்கிஷ சாம்ராஜ்யம்.
கொடுக்கும் போது இருக்கும் சந்தோஷங்கள் மீண்டும் பலமடங்கு திரும்ப கிடைக்கும் பொழுது இன்னும் அபரிமிதமாக இருக்கும்.
அந்த வாழ்க்கையை வாழ தான் முதல் அடி எடுத்து வைக்க நினைத்தான். அதற்கு பாலாவும் வழிவிடவேண்டுமே? இந்த படகு கரை சேரவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தால் மட்டுமே ஆழ்கடலில் சீராக பயணிக்க முடியும் என்பதில் திண்ணமாக இருந்தான்.
வெற்றி வீட்டு பெண்ணாக, மோகனாவின் மகளாக பார்ப்பதை கொஞ்சம் மாற்றி பாலாவை முதலில் தன் மனைவியாய் மனதிற்குள் வைக்க முயன்றான். ஓரளவு கொண்டு வந்துவிட்டதாகவே நினைத்தான்.
‘இவளானால் இந்த உடையில் தன்னை பார்க்கவே இத்தனை பேசுகிறாளே?’ என நினைத்தவனுக்கு மேலும் எண்ணங்கள் தறிகெட்டு பறக்க தலையை உலுக்கிக்கொண்டான். அவனுக்கு குப்பென வியர்த்தது மொத்தமாய்.
இவனின் பதிலுக்காக பாலா காத்திருக்க இப்படியே விட்டால் வேலைக்காகாது என நினைத்தவன்,
“அப்போ இங்க ட்ரெஸ் கூட நான் உன் கம்பர்ட்க்கு தான் போடனுமா?…” என அவன் கேட்க,
“அதுக்கில்லை…” என்று கையை பிசைந்துகொண்டு அவனை பார்த்தவள் மீண்டும் பார்வையை திருப்பிக்கொள்ள இப்போது அவனுடல் சிரிப்பில் குலுங்கியது. மிதமான அந்த நகைப்பு கூட அவளை கலவரப்படுத்தியது.
“நேத்து நீங்க புல்ஹேன்ட் டிஷர்ட் தானே போட்டிருந்தீங்க?…” என்றாள் வேகமாய்.
“பாத்ரூம்ல அவசரத்துக்கு அதான் இருந்தது. அதன் எடுத்து போட்டுட்டேன். அது ஒரு குத்தமா?…” என அதற்கும் பதில் சொல்ல,
“இல்லை நீங்க மாத்துங்க. மாத்துங்க. எழுந்துக்கோங்க…” என்றவள் அவன் அசையாமல் இருக்கவும்,
“அப்படியெல்லாம் மாத்த முடியாது…” என்றவன் இப்போது இரு கையையும் பின்னால் ஊன்றி காலை ஆட்டிக்கொண்டு வம்பாக அவளை பார்த்தான்.
பாலா அவனிடத்தில் சண்டை போட்டிருந்தால் பேச்சே வேறாக இருந்திருக்கும். ஆனால் பார்த்ததில் இருந்து தடுமாறி தவித்து உதடு மடித்து பேசியபடி நிற்பவளிடம் சண்டையிட தோன்றவில்லை சூர்யாவிற்கு.
‘பேசு பாலா பேசு. இப்படி நீ பேசி கேட்டதில்லையே. என்ன ஒரு எக்ஸ்ப்ரஷன்ஸ் உன் முகத்துல. ஓஹ் வாவ். ஐ லவ்ட் இட்’ என அவனறியாமல் ரசனையோ ரசனை அவளை பாத்தபடி கண்களில் நிரம்பியது.
‘அடங்கமாட்டேன் என்பதை போல இருக்கிறானே’ என கடுப்பானவள் சத்தமாகவும் பேசமுடியாமல், சண்டையிடவும் முடியாமல் சமரசமாய் பேச முயன்றாள்.
“ப்ச், என்னால வெளிலயும் போக முடியாது. ப்ச்…” என சொல்லியவள்,
“எனக்கு உங்களை இப்படி பார்க்க அன்ஈஸியா இருக்குது. ப்ளீஸ்…” என்றாள் சற்று இறங்கிய குரலில்.
வேகமாய் அந்த பனியனையும் கழற்றி போட்டவன் அப்படியே படுத்துவிட இன்னும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள் சட்டென திரும்பிக்கொண்டு நின்றாள்.
“என்ன பன்றீங்க நீங்க? நான் சொல்லியும் இப்படி பண்ணிட்டு…” என்று பல்லை கடிக்க,
“நீ கூட தான் இன்னைக்கு முட்டி வரைக்கும் ஒரு ட்ரவுசரை போட்டிருந்த. எனக்கும் கூட தான் அது ரொம்ப டிஸ்டர்ப் ஆச்சு. நான் கேட்டேனா?…” என்றான் அவளை சீண்டும் விதமாய்.
“வாட்? டிஸ்டர்ப் பண்ணேனா?…” என வேகமாய் திரும்பி பார்த்து முறைக்க அவளின் கேள்வியிலும் வேகத்திலும் சிரிப்பை அடக்கியவன்,
“டிஸ்டர்ப் பண்ணினேன்னா நல்லவிதமா தான். நீ ஏன் வேற மாதிரி நினைக்கிற?…” என்றான் விஷமம் நிறைந்த குரலில்.
இது இன்னும் அவளை அதிர செய்ய விழிவிரித்து வாயில் கையை வைத்து அவனை பார்த்தாள்.
“என்ன? என்ன லுக்கு?…” என்றான் மிதப்பாய் அவளை பார்த்துக்கொண்டே. பின் அவனே மனமிறங்கியவனாக மெதுவாய் கரிசனையான பார்வையுடன்,
“பாலா பாலா இன்னும் என்ன? இதெல்லாம் நீ க்ராஸ் பண்ணனும். இதை எல்லாம் பழகிக்கோ…” என்றான் சாதாரணமாய்.
அவன் சொல்ல வருவது புரிந்தாலும் மனதிற்குள் அமிழ்ந்திருந்த பயமும், ஒரு பதட்டமும் மேலெழும்ப பார்த்தது. முயன்று அடக்கி கொண்டவளுக்கும் புரிந்தது இது திருமணவாழ்வில் ஒரு அங்கம் என்று.
ஆனாலும் ஆனாலும் பாலாவால் முடியவில்லை. எச்சிலை கூட்டி விழுங்கியபடி நின்றவள் பின்,
“எனக்கு சுவத்தை ஒட்டி படுத்தா தான் தூக்கமே வரும்…” என்றாள் அடுத்ததாக.
“வாட்?…”
“நீங்க இந்த பக்கம் வாங்க. நான் அங்க தூங்கறேன்…” என்றாள் வேறெதுவும் பேச்சை வளர்க்க விரும்பாமல்.
“ஓஹ் அதான் நேத்து என்னை ஒட்டி படுத்தியா? சுவர் மாதிரியா இருந்தேன்?…” என்று கேலியாய் கேட்க,
“என்னது?…” என்றாள் பலமாகவே.
“இன்னும் நல்லா கத்தியே பேசு. எல்லாருக்கும் கேட்கட்டும்…” என அவள் சொல்லியதையே திருப்பி சொல்ல கோபமும், ஆற்றாமையும் பொங்கியது பாலாவிடம்.
அவனிடம் கத்தி பேச கூட முடியாமல் மௌனமாய் நின்றாள். அவனின் வீட்டில் கூட அத்தனை தெளிவாய் பேசியவள் இங்கே இந்த சூழல் என்னவோ செய்தது. வெகுவாய் குழம்பினாள்.
தோழிகளின் பேச்சும், அதனை தொடர்ந்து சூர்யாவின் இந்த இலகு தன்மையும் பதட்டத்தை தந்தது அவளுக்கு.
“வா வந்து படுத்துக்கோ…” என்று நகர்ந்து ஓரம் வந்தான்.
அப்போதும் அவள் அப்படியே இருக்க சூர்யாவுக்கு தான் அவளின் அசையா தன்மையில் சுறுசுறுவென வந்தது.
‘எனக்கு மட்டுமா இது எதிர்காலம்? இவளுக்கு இல்லையா? தான் மட்டுமே இதிலிருந்து தாண்டி வரமுடியுமா? இவள் மெனெக்கெட வேண்டாமா?’ என்னும் கோபம் மூள,
“என்ன தான் பிரச்சனை உனக்கு பாலா?…” என்றான் அவளின் கையை பிடித்து வேகமாய் இழுத்து அமரவைத்துவிட்டான்.
அவனின் இந்த செயலில் தடுமாறி அவன் மீதே சாய போனவளை பிடித்து தள்ளியே அமர்த்தி வைத்தவன்,
“நேத்து இருந்த தெளிவு இன்னைக்கு இல்லையா உனக்கு? ஏன் இப்படி ஆகற? காலையில கார்ல கூட நல்லா தானே பேசின?…” என அவன் கேட்க என்னவென சொல்வாள்? மௌனமே பதிலாய் இருக்க,
“என்னை நீ என்னன்னு நினைக்கிற? உன்னோட அமைதி எனக்கு வேற என்னவோ சொல்லுதே. என்னடா திடீர்ன்னு இத்தனை ஹம்பிளா பேசறானேன்னு பார்க்கற மாதிரி தோணுதே? என்னோட ஹஸ்பண்ட் ரைட்ஸ உன்கிட்ட எடுத்துக்க பார்க்கறேன்னு நினைக்கறியோ?….” என்றான் நேரடியாக.
சட்டென நிமிர்ந்து பார்த்தவள் என்ன பதில் இதற்கு பதில் சொல்ல என்று தடுமாறி நிற்க,
“அப்படி நினைச்சா என்ன தப்பு?…” என கேட்டு அவளின் பிபியை உயர்த்த வியர்த்தது அவளுக்கு.
“லுக் பாலா, கல்யாணம் ஆகிடுச்சேன்னு உடனே எல்லாமே நடக்கனும்னு நான் எப்பவும் நினைக்கலை. கல்யாணம், இது ஒரு கமிட்மென்ட். அதுக்காக பிடிக்காதுன்னு விலகி ஓடனும்னு நான் நினைக்க மாட்டேன். புரியுதா?…”
“இப்ப நான் என்ன ஓடியா போய்ட்டேன். எதுக்கு இத்தனை விளக்கம்?…” என்றாள் கோபமாய்.
முரட்டுத்தனமாய் அவன் இழுத்து பிடித்ததில் அமரவைத்ததில் கை வலிக்க உடல்நிலை வேறு தாங்கமுடியவில்லை அவளுக்கு. இதில் சூர்யாவின் இந்த பேச்சுக்கள் அயர்வை தந்தது.
“நீ இருக்கறதை பார்த்தா என்னை விட்டு ஓடி போற மாதிரி தான் இருக்குது…” என சொல்ல,
“ஏன் சொல்லமாட்டீங்க? ஓடி போறதா இருந்த அகல்யானம்னு சொன்னப்பவே முடியாதுன்னு போயிருக்க மாட்டேனா? நானா பயந்துட்டு கல்யாணம் வேண்டாம்னு கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணேன்?…” என்றாள்.
“நான் கன்வின்ஸ் பண்ணினதுக்கு ரீசன் தான் இன்னைக்கு காலையில வீட்டுல நடந்துச்சே…” என்றவன் பின்,
“ப்ரெண்ட்ஸ் கூட பேசினா மெதுவா பேசமாட்டியா?…” என கேட்க திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்போது தான் சூர்யாவிற்கு பின்னால் இருந்த சுவற்றில் ஜன்னல் திறந்திருப்பதை கண்டு அதிர்ந்தாள்.
“அங்க என்ன பார்வை? நான் வந்ததும் அங்க நின்னதும் கூட தெரியாம பேசிட்டு இருக்க…” என சொல்ல,
“அது ப்ரெண்ட்ஸ் எல்லாம் கான்-கால்ல இருந்தோம்…” என்று சொல்லியவள் எதையெல்லாம் கேட்டானோ என அச்சத்துடன் பார்க்க அவள் நினைத்ததை போல அவளின் பேச்சுக்களை அவனும் கேட்டான் தான்.
“நேத்து நான் எதையும் இழக்கலை, கல்யாணம்னா எல்லாம் இருக்கும்னு அத்தனை பேச்சு பேசிட்டு இன்னைக்கு என்னடான்னா அந்த பயம் பயப்படற?…”
“நான் ஒன்னும் பயந்து போகலை. கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா இன்னும் படிப்பு முடியலை. அதுக்குள்ளே பிசிக்கல் ரிலேஷன்ஷிப், பேபி பார்மிங்ன்னு ஆகிட்டா அப்டின்னு எல்லாம் சேர்ந்து கலவரப்படுத்திருச்சுங்க…” என்று உளறியவள் முகம் இன்னும் கலக்கத்துடன் இருக்க கோபமாய் பார்த்தான் அவளை.
“அறிவில்ல, இதை எல்லாம் போய் பேசுவியா நீ?…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
அப்போதுதான் தான் சொல்லியதுவும் புத்தியில் உரைக்க வெடவெடவென நடுங்கி போனாள். அவனின் அருகில் அமரவே கூசி போனவள் வேகமாய் எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்துகொள்ள சூர்யாவின் மனதிற்குள் பாரமேறிய உணர்வு.
‘ரொம்ப பண்ணிட்டோமோ? ச்சே’ என தன் தலையில் அடித்துக்கொண்டவன் அவள் வருவதற்காக அமைதியாய் காத்திருந்தான்.
அரைமணி நேரம் சென்றும் பாலா கதவை திறக்கும் வழியை காணோம் என்றதும் அவனே எழுந்து சென்று கதவை தட்ட பதிலில்லை.
“பாலா, இப்ப டோர் ஓபன் பண்ணிட்டு நீ வரலைன்னா நான் உடைச்சுட்டு தான் உள்ள வருவேன். எல்லாரும் எழுந்து வந்துட்டா நான் பொறுப்பில்லை…” என்றதும் கதவை மெதுவாய் திறந்து வெளியே வந்தாள்.
மதியம் அணிந்திருந்ததை போலவே ஒரு உடையை மாற்றியிருந்தாள். அவள் வரவும் வழிவிட்டு நின்றவன் தானும் சென்று முகத்தை கழுவிவிட்டு வர அதற்குள் சுவற்றை ஒட்டியபடி பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்.
ஒருநிமிடம் நின்று பார்த்தவன் விளக்கை அணைத்துவிட்டு ஜன்னல் கதவை மூடிவிட்டு வந்து அமர்ந்தான்.
“பாலா, நீ தூங்கலை. நல்லா தெரியும். எழுந்து உட்கார். பேசனும் உன்னோட…” என்று சொல்ல அவள் அசையாமல் இருக்க அவளின் கையை பிடித்து எழுப்ப போக அவன் தொட்டதுமே பட்டென்று தட்டிவிட்டவள் அவளே எழுந்து அமர்ந்தாள்.
“லுக், இப்படி சின்ன சின்ன தொடுகைக்கெல்லாம் உதறிவிட்டுட்டே இருந்தா நான் டென்ஷன் ஆகிடுவேன்…” என்று சொல்ல,
“எனக்கு இப்போ பேச வேண்டாம். அதான் படுத்துட்டேன். இன்னைக்கு நிறைய குழப்பம். எல்லாம் கன்ப்யூஸ் பண்ணி நானும் ஏதேதோ பேசி. இல்லை இன்னைக்கு சரியில்லை. நாளைக்கு பேசறேன். நான் இதை விட்டு வெளில வரனும். உங்கட்ட பேசினதே எனக்கு என்னவோ மாதிரி இருக்குது. ப்ளீஸ்…”
“ஓகே, என்கிட்டே இதை பத்தி பேசாம வேற யார்க்கிட்ட பேசுவ?…” என சூர்யா அவளை விடுவதாய் இல்லை என்பதை போல பேச்சில் நிறுத்தினான்.
“அதான் பேசலைன்னு சொல்றேனே?…”
“எப்படி பேசாம? இது நம்ம ரெண்டு பேரோட லைப். அப்போ இதை பத்தி என்கிட்டே நீ பேசினதுல என்ன தப்பு? நீ என்ன குழந்தையா பாலா?…” என கேட்டவன் அவளின் முகம் இன்னும் தெளியாமல் இருக்கவே ஆயாசம் கொண்டான்.
“இங்க பாரு என்னால திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க முடியாது. உனக்கே தெரியும், நான் வெற்றி மாதிரி ஸ்வீட் பெர்சன் கிடையாது. அதே நேரம் மோசம்னு சொல்ல முடியாது. ஒரு டிபிகல்ட் ஹஸ்பண்ட் லைப்ல எப்படி இருப்பானோ அப்படி தான் நானும் இருப்பேன்…”
“இன்னொன்னு நான் பிஸ்னஸ் மேன். பிஸ்னஸ்ல மட்டுமில்ல எந்த ஒரு விஷயத்துக்கு கமிட் பண்ணிக்கிட்டாலும் அதை சக்ஸஸ்ஃபுல்லா மாத்திடுவேன். சின்ன சின்ன விஷயத்துக்கே அப்படின்னு வரும் போது இது மேரேஜ். தோக்க நான் தயார் இல்லை…”
“மேரேஜ் லைப் கமிட்மென்ட் ஓகே. இது என்ன தொழிலா தோற்க மாட்டேன் அப்படின்னு சவால் பேச? உங்க பிஸ்னஸ் மைண்ட் எல்லாம் அங்கயே வச்சுக்கோங்க…” என்றாள் பாலா வேகமாய்.
“நான் இன்னும் முடிக்கலை பாலா. எஸ், நீ சொன்ன மாதிரி தான். இந்த கல்யாணம் இதனால நீயும் எதையும் இழக்கலை. நானுமே இதையே எடுத்துக்கறேன். நானும் இழக்க போறதில்லை. நீ சொன்ன மாதிரி எப்படியும் மேரேஜ் ஆகனும். இப்போ நமக்கு நடந்திருக்குது. அவ்வளோ தானே?…” என்றவனை அழுத்தமாய் பார்த்தவள்,
“இப்போவும் நான் சொன்னேன் நான் சொன்னேன்னு ஏன் என் பின்னாடி நிக்கறீங்க? நீங்க என்ன நினைக்கறீங்க? உங்களுக்கு என்ன தோணுதுன்னு முதல்ல சொல்லுங்க. அதை விட்டுட்டு…” என அவள் கடுப்படிக்க,
“நீயா எதையோ நனைச்சுட்டு பேசற பாலா. நான் என்ன நினைக்கனும்? எதுவா இருந்தாலும் பேசிடுவேன். இதோ இப்போ பேசின மாதிரி. நீ கற்பனை பன்றதுக்கேல்லாம் நான் ஆளில்லை. நீ உன் ப்ரெண்ட்ஸ் சொல்றதை கேட்டுட்டு எதையாச்சும் நினைச்சுட்டு குழம்பி போய் இருக்கியேன்னு பார்த்து பேசினா…” என்றவனின் நேரே கையை காட்டி நிறுத்தியவள்,
“உங்களை பத்தி கற்பனை பன்ற மைன்ட் செட்ல நானும் இல்லை. ஏதோ நீங்களும் பேசினீங்கன்னு தான் நானும் பேசினேன்….” பாலா அவனுக்கு பல்ப் கொடுக்க,
“என்ன சொல்றேன்னு புரியாதா உனக்கு?…”
“புரிஞ்சுக்க வேண்டாம். எனக்கு டயர்டா இருக்குது…” என்றவள் மீண்டும் படுத்துக்கொள்ள,
‘கேட்கவே மாட்டேன்றாளே’ என்ற ஆற்றாமையுடன் அவளருகே படுத்துவிட்டான். பாலாவுக்கு இன்னும் மனதிற்குள் படபடப்பு தான்.
“பாலா சோ லக்கிடி நீ. உன் ஹஸ்பண்ட் சார்மிங் பெர்சனாலிட்டி. உன்னோட லைப் வெல் செட்டில்ட் ஆகிடுச்சு. இருந்தாலும் படிப்பு முடியறதுக்குள்ள கவனமா இரு. பார்த்துக்கோ. காலேஜ்க்கு உடனே வராத. எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. ஆளாளுக்கு கேட்பாளுங்க…” என்று ஆளுக்கொன்றாய் சொல்லி சொல்லி பாலாவின் மனதில் ஏதேதோ எண்ணங்கள்.
திருமணம், தாம்பத்தியம், குழந்தை வரை அவர்கள் பேசியிருக்க முதல்நாளே சூர்யா கொடுத்த முத்தமும், அழுத்தமான அணைப்பும் என வெகுவாய் கலவரப்படுத்தியது. அடிவயிற்றில் பயப்பந்து சுழல தோழிகள் எல்லை மீறி பேசுவதை கூட தடுக்க முடியாமல் இன்னுமே உள்ளுக்குள் நடுங்கினாள்.
சுத்தமாய் உறக்கம் தொலைந்து போக மனதிற்குள் தன்னையே திட்டிக்கொண்டாள் பாலா.
‘சும்மாவே இவன் எதுடா சாக்குன்னு ஓவரா நான் ஈஸி பர்சனாலிட்டி இல்லைன்னு கெத்து காமிக்க பார்ப்பான். இப்ப அவன்கிட்ட போய் நீயா பேபி வரைக்கும் உளறிட்டியேடி பாலா’ என தன் தலையை சுவற்றில் முட்டிக்கொள்ள அது எழுப்பிய சத்தத்தில் அவள் பக்கம் திரும்பினான்.
“தள்ளி படுத்துக்கோ. ஏன் சுவத்தை போய் முட்டிட்டு இருக்க?…” என சொல்ல,
“எனக்கு பழக்கம் தான்…” என்றாள் அவளும் திரும்பாமல்.
“தேவைதான். இன்னும் என்னென்ன பழக்கம் எல்லாம் இருக்கோ?…” என்று சொல்லியவன் அவளின் ரோஷத்தில் புன்னகையுடன் சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கி போனான்.
வெளியே நடமாட்ட சத்தம் கேட்டு சூர்யா கண் விழிக்க பாலா சுகமாய் அவனின் கையில் முகம் புதைத்து அவன் மேல் கையை, காலை போட்டபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
“ஃபுல்லா ஷர்ட் போடாம கூட தூங்க மாட்டேன்னு அலும்பு பண்ணிட்டு இப்ப இவ இருக்கறதென்ன? பேச்சை கேளு நேத்து அத்தனை பேசிட்டு இன்னைக்கு கட்டி புடிச்சு தூங்கறா. சொன்னா நம்பவும் மாட்டா…” என முணுமுணுத்தவான் பார்வை கொஞ்சமும் வஞ்சனையின்றி அவளை அளவெடுக்க கைகள் தானாய் லேசாய் தழுவிக்கொண்டது.
சட்டென குறும்பு தலைதூக்க ஜன்னல் திண்டில் வைத்திருந்த தனது மொபைலை எட்டி எடுத்தவன் அப்படியே இருவரையும் ஒரு செல்பி எடுத்துக்கொண்டான்.
“பேசுடி, எந்திச்சு இதை காமிக்கும் போது நீ பேசு. என்ன பேசறன்னு நானும் பார்க்கறேன்…” என சொல்லிக்கொண்டவன் அவள் காதில் சத்தமாய் கத்துவோமா என நினைத்து பின் பாலாவின் உடல் உபாதையை முன்னிட்டு உறக்கம் கலையாமல் விலகி எழுந்தவன் பார்வை மீண்டும் உறங்குபவளிடம் லயிக்க,
“விட்டுட்டும் போக முடியலை. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாமோ?…” என நினைத்துக்கொண்டே அவளை பார்த்தவன் அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டான்.
பின் நேரமாவதை உணர்ந்து குளித்து வெளியே வந்தவன் வெற்றியோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு முதலில் கம்பெனிக்கு கிளம்பி சென்றான் சூர்யா.
சாப்பிட்டு போகும்படி மோகனா சொல்ல பசியில்லை என மறுத்துவிட்டு கிளம்பிவிட்டான். மதிய உணவும் கூட கம்பெனிக்கே வரவழைத்து உண்டவன் மீண்டும் வீடு வர மாலை ஆனது.
அதற்குள் அர்ச்சனாவே போன் செய்து மோகனாவிடம் பாலாவையும், சூர்யாவையும் அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ள அன்றைய நாள் வேண்டாம் என்று மறுநாள் அவர்களை அனுப்புவதாக பேசிக்கொண்டனர்.
இந்த முடிவும் பாலாவையும், சூர்யாவையும் கேட்காமலே எடுக்கப்பட்டது.