“ஆமா, நாளைக்கு காலையில உங்க ரெண்டு பேரையும் அனுப்பி வைக்க சொல்லி சொன்னாங்க. அவங்களால இப்போ வர முடியாதாம். அங்க உமாவுக்கு உடம்பு இன்னும் சரியாகலைன்னு சொன்னாங்க…”
“ஓஹ்…” என்றான் ஒன்றை சத்தத்தில்.
“அப்பறம் அப்பறம்…” என மோகனா வெற்றியை பார்த்தபடி சூர்யாவிடம் பேச,
“சொல்லுங்க அக்கா, இன்னும் வேற என்ன?…” என சூர்யா கேட்க,
“இல்லை, கல்யாணம் திடீர்ன்னு ஆகிடுச்சு. செய்முறை எல்லாம்…”
“ஓஹ் டவுரிய பத்தி பேசறீங்களா?…” என கேட்டு,
“இதை பத்தி அம்மா ஒன்னும் சொல்லலையோ?…” என,
“இல்லையே. நாங்களே ஒரு நாள் வந்து பேசலாம்னு இருக்கோம். ஆனாலும் நாளைக்கு அனுப்பும் போது சும்மா அனுப்ப முடியாதுல…”
“வாஸ்தவம் தான்…” என்று தாடையை தடவிக்கொண்டவன்,
“ஓகே அக்கா, நாளைக்கு கிளம்பனும் இல்லை. போய் தூங்கறேன்…” என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே வந்துவிட்டான்.
“என்ன வெற்றி?….” என மோகனா தம்பியை பார்க்க,
“இப்போவே இதை எல்லாம் நீ பேசனுமாக்கா? அவன் என்ன நினைக்கிறான்னே தெரியலை…” என வெற்றி கடிந்துகொள்ள,
“கோச்சுக்கிட்டானா?…” என சந்திரன் கேட்க,
“அப்படியும் தெரியலை. இப்போதைக்கு இதை எல்லாம் பேசாம இருங்க. அதுதான் நல்லது. நேத்தே அண்ணா சொன்னாங்கல்ல. சில விஷயங்களை உடனே செய்யனும்னு நினைக்காதீங்கன்னு…” என்றாள் ஜெயஸ்ரீ.
அவள் சொல்லியதில் உள்ளதை புரிந்துகொண்டவர்கள் அமைதியாய் உறங்க சென்றனர். இங்கே அறைக்குள் வந்ததில் இருந்து எதுவும் பேசாமல் இருப்பவனை பார்த்த பாலா,
“கோவமா இருக்கீங்களா?…” என்றாள் அவனின் முகம் கண்டு.
“ஹ்ம்ம், ஆமா, கொஞ்சம்…” என்றான் மறையாமல்.
அதற்கு மேல் அவனிடம் என்ன கேட்பதென தெரியாமல் தடுமாறியவள் எடுத்து வைத்த பேக்கிங் அனைத்தையும் மொத்தமாய் ஒரு ஓரத்தில் வைத்தவள் அவனை தாண்டிக்கொண்டு படுக்க சென்றாள்.
“சொல்லிருந்தா எழுந்திருப்பேன்ல. தவந்துட்டு போற?…” என அவள் தன்னை தாண்டி சென்றதில் கண் விழித்து கேட்க,
“இல்லை தூங்கிட்டீங்களோன்னு தான் எழுப்பலை…” என்று சொல்லிவிட்டு அவள் படுத்துக்கொள்ள,
“சும்மா தான் கண்ணை மூடிருந்தேன்…” என சொல்லியவன் எழுந்து சென்று இரவு உடை மாற்றிக்கொண்டு வந்து படுத்துவிட்டான்.
————————————————————-
நடு இரவில் தண்ணீர் அருந்தவென எழுந்த அர்ச்சனா சாக்கில் எடுத்துவைக்க மறந்ததில் எழுந்து கிட்சனுக்கு சென்றார். கோபாலசுவாமி அலுவலக அறையில் விளக்கு ஒளிருவதை கண்டவர்,
“இன்னுமா இவர் தூங்காம இருக்காரு?…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு நேராக அங்கே செல்ல ஒருபக்கமாய் சாற்றி வைக்கப்பட்டிருந்த கதவின் வழியே லேசாய் திறக்க அங்கே அவர் பேசிக்கொண்டிருப்பவளை பார்த்து அதிர்ந்து போனார்.
“இங்க எல்லாம் நார்மலாகிடுச்சு மாமா. செட்டாகிட்டே இர்க்கோம். குளிர் தான் அதிகமா இருக்குது. மத்தபடி ஓகே. இங்கையே ஒரு ஹாஸ்பிட்டல்ல பேசி வச்சிட்டதால இன்னும் ரெண்டு நாள்ல அங்க போய் ஜாயின் பண்ண வேண்டியதா இருக்கும்னு ராகுல் சொன்னார்…”
“பார்த்து இருந்துக்கனும் திவ்யா. புது ஊர். மனுஷங்கள் எல்லாமே புதுசு. எத்தனை தான் புத்திசாலித்தனமா இருந்தாலும் எந்த இடத்துலையும் கவனம் சிதற கூடாது. என் பொறுப்புல உன்னை அனுப்பிருக்கேன். புரியுதா?…”
“புரியுது மாமா…” என்றவள் அப்போது தான் திரையில் கதவிடுக்கில் அர்ச்சனா நிற்பதை கண்டு அதிர்ந்து போனாள்.
“மாமா அத்தை பின்னால…” என்று திவ்யா சொல்லவுமே திடுக்கிட்டு திரும்பியவர் அர்ச்சனாவை பார்த்ததும் ஒருநிமிடம் பேச்சற்று போனார். எல்லாம் நொடி பொழுதில் தான். உடனே முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டார்.
“என்னங்க இதெல்லாம்?…” என அர்ச்சனா நடுக்கத்துடன் கேட்க,
“திவ்யா மாமா நாளைக்கு பேசறேன். இப்போ வைக்கறேன்…” என வெகு நிதானமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவர்,
“இங்க இந்நேரம் என்ன பன்ற அர்ச்சு?…” என கேட்டார் அழுத்தமாக.
“தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். அப்போ தான்…” என்றவர்,
“என்ன பண்ணிவச்சிருக்கீங்க நீ? அப்போ திவ்யா போனது உங்களுக்கு முன்னமே தெரியும் தானே?…” என கேட்க,
“அஸ்வினி எங்க?…” என்றார்.
“உமாவுக்கு துணையா அங்க தூங்கறா…”
“ஹ்ம்ம், என்ன தெரியனும் உனக்கு? ஆமா நான் தான் திவ்யாவை அனுப்பி வச்சேன். அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு குடுத்தேன். இப்போ அதுக்கு என்ன?…” என்றார் கொஞ்சமும் அலட்டாமல்.
“என்னங்க இப்படி சொல்றீங்க? இந்த விஷயம் உமாவுக்கும், உத்தமன் அண்ணனுக்கும் தெரிஞ்சா?…”
“ஏன் நீ சொல்ல போறியா?…”
“அதுக்கில்ல…” என யோசித்தவர் அதற்கு மேல் கோபாலசுவாமியிடம் என்ன கேட்பதென்று தடுமாறி நின்றார். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது.
“சரி செஞ்சீங்க. ஆனா அதை கல்யாணத்துக்கு அத்தனை ஏற்பாடு பண்ணுறதுக்கு முன்னவே உமாட்ட, வீட்டுல எல்லார்ட்டயும் பேசி செஞ்சிருக்கலாமே? ஏன் கல்யாணத்தன்னைக்கு அனுப்பிட்டு பாலாவை சூர்யாவுக்கு…” என்றவருக்கு அப்போதுதான் பொறிதட்டியது.
“அப்போ இது எல்லாமே உங்களோட ஏற்பாடு. பாலா இந்த வீட்டு மருமகளா வரனும்னு முடிவு பண்ணிட்டு தான் எல்லாத்தையும் ஆரம்பிச்சீங்களா?…” என கேட்க ஆமாம் என அப்போதும் அசையா பார்வையோடு தலையாட்டினார்.
“ஏன் இப்படி எல்லாம் பண்ணுனீங்க? பிடிக்காத ரெண்டு பேருக்கு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு அந்த பொண்ணை நாமளும் ஏத்துக்க முடியாம அவளாளையும் இங்க ஓட்ட முடியாம இன்னைக்கு எல்லாத்துக்கும் மேல என் மகன் மொத்தமா அங்க போய்ட்டான்…”
சொல்லி சொல்லி அர்ச்சனா அழ அழாதே என்றும் அவர் சொல்லவில்லை. எதுவும் பேசவும் இல்லை. கல் போலவே அசையாது நின்றார்.
“எத்தனை அசிங்கம்? நம்ம ஹரிணி கல்யாணத்தையும் வச்சுட்டு உங்களால எப்படி இதை எல்லாம் செய்ய முடிஞ்சது. சொல்லுங்க, இன்னைக்கு எனக்கு தெரியனும். முழுசா தெரியனும். சொல்லுங்க. இப்போ பாதிக்கப்பட்டது நம்ம குடும்பம் மட்டுமில்ல, சம்பந்தமே இல்லாம வெற்றி குடும்பமும் தான்…”
“நானும் கொஞ்சமும் யோசிக்காம நிறையவே பேசிட்டேன். இதனால என் மகனோட மனசுல இருந்து இறங்கிட்ட மாதிரி ஒரு பயமாவே இருக்குது. இப்போ இந்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சா? சும்மாவே பாலாவை சிக்கல்ல இழுத்துவிட்டுட்டதா அவன் பேசறானே…” என்று அமர்ந்து அழுதார்.
“இங்க பாரு அர்ச்சு, நான் எதையும் யோசிக்காம செய்யறது இல்லை. இந்த குடும்பத்துக்கு பாலா தான் மருமகளா வரனும்ன்றது விதிக்கப்பட்டது. அவ வரலைன்னா கண்டிப்பா நம்ம பையன் நமக்கு உயிரோட இல்லை. வருஷம் தேய தேய அவனோட ஆயுளும் தேய்ஞ்சுட்டே தான் போகும்…”
அழுத்தம் மாறாமல் சொல்லியவர் கடைசியாய் மகனை பற்றி சொல்லிய பொழுது குரல் கரகரத்து லேசாய் நடுங்கி போய் இருந்தது.
“என்ன சொல்றீங்க?…” என அடுத்த அதிர்ச்சியோடு கேட்டவர் அப்படியே சமைந்து போனார்.
“ஆமா, அதனால தான் திவ்யா சூர்யா கல்யாணத்தை பத்தி பேசும் போது தள்ளி போட்டேன். தற்செயலா திவ்யா இன்னொரு பையனை விரும்பறான்னு கண்கூட பார்க்க முடிஞ்சது. அதையும் வச்சு நல்ல பையனா இருக்கறதையும் வச்சு தான் அவளுக்கும் ஒரு வாழ்க்கையை அமைச்சு குடுத்தேன்…”
“அவளுக்கு பெத்தவங்க இருக்காங்க. எத்தனை இருந்தாலும் திவ்யா விஷயத்துல பெரிய தப்பு இது. இது உமாவுக்கு தெரிஞ்சா?…”
“தெரியாது. தெரியலைல. இவ்வளோ சொல்ற சொல்லி எதையும் உமா நம்பாம இருந்தா சூர்யாவுக்கு எதுவும்னா உனக்கு பரவாயில்லையா? இத்தனை வருஷமா இதை மனசுல வச்சுட்டு நான் பட்டுட்டு வரும் பாடு உனக்கு தெரியுமா?…” என வேகமாய் கேட்டார்.
அர்ச்சனாவிற்கு நெஞ்சுக்கூடே காலியான உணர்வு. மகனுக்கு இப்படி ஒரு கண்டம் இருப்பதே இப்போது தான் தெரிந்தது.
“அவனுக்குன்னு ஆயுசு பலத்தை கூட்டக்கூட பொண்ணோட ஜாதகத்தை தேடிட்டு இருந்தப்போ தான் பாலாவோட ஜாதகம் நம்ம வீட்டுக்கு வந்துச்சு….”
“ஆனா அன்னைக்கு பார்க்கமாட்டேன்னு சொன்னீங்களே?…”
“ஹ்ம்ம், பார்க்கமாட்டேன்னு சொன்னேன் தான். ஆனா பேச்சுவாக்குல நீ அதோட பக்கங்களை திருப்பும் பொது என்னையறியாம கண்ணு அங்க தான் போச்சு. கட்டங்கள் எல்லாம் மனசுல பதிஞ்சு போச்சு. அன்னைக்கே பாலா ஜாதகத்தை கணிச்சுட்டேன்…”
“என்கிட்ட ஏன் முதல்லையே சொல்லலை நீங்க? இத்தனை நடந்திருக்குது…” என்று கேட்க,
“சொல்லியிருந்தா? சூர்யா கல்யாணத்துக்கு முன்னாடி பாலா குடும்பத்தோட அத்தனை நல்லா பழகிட்டு இருந்த உன்னாலையே அவ தான் மருமகன்னு சொன்னதும் ஏத்துக்க முடியலை. சொல்லியிருந்தா சம்மதிச்சு இருந்திருப்பியா? எனக்கு அதுக்கு நேரமில்லை…” என்றவர்,
“இங்க பாரு அர்ச்சு, இந்த விஷயத்தை அப்படியே மறந்திடனும் நீ. பாலா இப்போ நம்ம வீட்டு பொண்ணு. முழுமையா நம்ம பழக்கவழக்கங்களோட அந்த பொண்ணு மாறனும். இனி அதுக்கு என்ன செய்யனுமோ செய். அதை விட்டுட்டு முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காத. புரியுதா?…” என சொல்ல,
“பெரிய தப்பு, இது அந்த குடும்பத்துக்கு தெரிஞ்சா?…”
இப்போ தானே சொன்னேன். யாருக்கும் தெரியாதுன்னு. சும்மா அதையே பேசாம போய் படு. எனக்கு வேலை இருக்குது…” என்றார் அதட்டலாக.
அவரிடம் இத்தனை பேசியதே பெரிதல்லவா. அர்ச்சனாவிற்கு நெஞ்சை முட்டும் துக்கம் பொங்கியது.
“இப்போ அந்த கண்டம்? சூர்யாவுக்கு ஒன்னும் ஆகாது தானே?…” என்றார் தவிப்பாய்.
“ஹ்ம்ம், ஆகாது. அதுக்கு முதல்ல அவங்க சேர்ந்து வாழ ஆரம்பிக்கனும். சூர்யா நடந்துக்கிட்டத வச்சே தெரியுது அந்த பொண்ணு மேல அவன் அக்கறையா இருக்கான்னு. கண்டிப்பா அனல்லதே நடக்கும்…” என்றார் அமைதியாக.
“இது வேற யாருக்கும் தெரியாதா?…” என அர்ச்சனா கேட்க,
“தெரியாது…” என்று முடித்துக்கொண்டார். இதில் வெற்றியை, ஹரிணியை எல்லாம் மாட்டிவிட அவர் விரும்பவில்லை. மகனிற்கே தெரிந்தாலும் அது தன்னோடு போகட்டும் என்றே நினைத்திருந்தார்.
மேலும் அர்ச்சனா பேச வந்தவர் கோபாலசுவாமி உக்கிர பார்வையில் அங்கிருந்து சென்றுவிட்டார். தனது படுக்கைக்கு வந்தவருக்கு அன்றைய தூக்கம் மொத்தமாய் தொலைந்து போனது.
அமர்ந்தவாக்கில் சாய்ந்து இருந்தவர் வெகுநேரம் அப்படியே இருக்க கோபாலசுவாமி உள்ளே வந்தவர்,
“இன்னும் தூங்கலையா?…” என்றார் அவரிடத்தில்.
“ஹ்ம்ம், தூங்கனும்…” என சொல்லிய அர்ச்சனா வழிந்த கண்ணீரை துடைத்தபடி இருக்க,
“இன்னும் பத்து நாள்ல ஒரு நல்ல நாள் வருது. அன்னைக்கு பாலாவுக்கு தாலி பிரிச்சு கோர்க்கனும். எல்லாரையும் சொல்ல வேண்டாம். வீட்டாளுங்களை வச்சு செஞ்சா போதும். அதுக்கு மறுநாள் கோவில்ல பூஜைக்கு சொல்லியிருக்கேன்…” என தகவலாக சொல்லியவர் படுத்துவிட்டார்.
தெரிந்த உண்மைகளின் தாக்கம் அர்ச்சனாவை தான் பலமாக தாக்கி இருந்தது. எதிர்த்து சண்டையிடவும் முடியாமல், யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்து போனார்.
இத்தனை விஷயங்கள் தங்கள் பக்கம் இருக்க ஆரம்பப்புள்ளியே தனது கணவனாக யாரை சொல்லி நோவது. இத்தனை தவறுகள் தங்கள் பக்கம் இருக்க தான் நடந்துகொண்டமைக்கு வருந்தினார் அர்ச்சனா.
அவரின் வருத்தமும் குற்றவுணர்வும் அதிகமககுவதை போல பாலாவுடன் மகன் தங்கள் இல்லம் வராமல் தங்களின் பிளாட்டிற்கு சென்றுவிட்டதில் வெகுவாய் கலங்கி போனார்.
“எப்படியும் அங்க தானே வருவோம்? ரெண்டு நாள் கழிச்சு வரமே…” என்றுவிட்டான் சூர்யா.