“அர்ச்சு, இன்னொருவாட்டி அவ பாலான்னு சொல்ல கூடாது. அண்ணன் பொண்டாட்டியை எப்படி கூப்பிடனும்னு உன் பொண்ணுக்கு தெரியாதா? இல்லை நான் சொல்லி தரனுமா?…” என வந்து நின்ற கோபாலசுவாமியின் முகத்தில் தெரிந்த உக்கிரத்தில் இருவரும் வாயடைத்து எழுந்து நிற்க,
“நான் வெளில போய்ட்டு வரேன்…” என்றுவிட்டு கிளம்பிவிட்டார். அவர் சென்றதும் மகளை பார்க்க அழுதுகொண்டே அவளும் உள்ளே சென்றுவிட,
“அஸ்வி…” என்ற அழைப்பும் கூட மகள் கண்டுகொள்ளவில்லை.
அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார் அர்ச்சனா. இருக்கும் பிரச்சனைகளில் இன்னொரு பிரச்சனையாக முதல் நாளில் இருந்தே மனதை குடைந்து கொண்டிருந்தது வேறொரு எண்ணம்.
பாலாவின் ஜாதகத்தால் சூர்யாவின் ஆயுள் கெட்டிப்படும் என்றாலும் சூர்யாவின் ஜாதக கோள்களால் பாலாவிற்கு ஏதேனும் ஆபத்துகள் உண்டாகுமா என்ற யோசனைகளை தான்.
இப்படியான திருமணங்களில் சில நேரம் எதிர்வினைகளும் பலமாகவே தனது ஆற்றலை காண்பிக்கும் என்றும் கோபாலசுவாமியே சொல்லியதுண்டு. அதை எண்ணியே இப்போது இன்னும் பயம் கூடியது அவருக்கு.
என்னவும் இருந்தாலும் பயத்தை வெளிக்காட்டாமல் பாலாவை நன்றாக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார் அர்ச்சனா.
——————————————————–
கிளம்பியதில் இருந்து காரில் அத்தனை அமைதி. சூர்யாவும் எதுவும் பேசவில்லை. முதலில் பாலாவும் அதனை கவனிக்கவில்லை. வீட்டில் மோகனா சொல்லியவத்ரியா எல்லாம் அசைபோட்டபடி இருந்தவள் தாங்கள் பயணிக்கும் பாதையை கவனிக்க தவறினாள்.
அவளின் சிந்தனைவயப்பட்ட முகத்தை அவ்வப்போது கவனித்துக்கொண்டே பாதையில் அவன் பார்வையை வைத்திருக்க சட்டென போடப்பட்ட பிரேக்கில் சிந்தனை அறுபட்டு சுற்றிலும் பார்த்தாள் பாலா.
எங்கே வந்திருக்கிறோம் என்ற யோசனையுடன் சூர்யாவை பார்க்க அவன் காரை விட்டு இறங்கி டிக்கியை திறந்து இருவருக்குமாக இரண்டு பேக்கை எடுத்துக்கொண்டான்.
முதல்நாள் பேக்கிங் செய்யும் பொழுதே பார்த்துக்கொண்டு தானே இருந்தான். அதனால் அவளின் உடைகள் இருக்கும் பேக்கை சரியாக எடுத்துக்கொண்டு முன்னால் வந்தவன்,
“நீ இன்னும் இறங்கலையா?…” என கேட்க,
“எங்க வந்திருக்கோம்? வீட்டுக்கு தானே போகனும்னு அம்மா சொன்னாங்க…” என கேட்டுகொண்டே அமர்ந்திருக்க,
“இதுவும் நம்ம வீடு தான். இறங்கு…” என்றான் அமைதியாக.
“இங்கயா?…” என்று எட்டி பார்க்க,
“பாலா…” என்றான் அழுத்தமாய். அவள் இறங்காமல் இருந்ததில் இவனுக்கு கடுமை ஏறியது.
“எங்க வந்திருக்கோம்னு சொன்னா குறைஞ்சு போய்டுவீங்களா? உடனே அதட்டறீங்க?…” என்றாள் அவளும்.
“இப்போ நீ இறங்கலைன்னா கார்லயே வச்சு பூட்டிட்டு போய்டுவேன்…”
“நோ ப்ராப்ளம். நான் இருந்துக்கறேன்…”
“ப்ச், என்னடி உனக்கு பிரச்சனை? கேட்கிறதை வீட்டுக்குள்ள வசச் கேளேன். எல்லாரும் பார்க்கறாங்க…” என்றான் கொஞ்சம் இறங்கி வந்து.
அதன் பின்னரே அவளும் இறங்கி வர காரை லாக் செய்துவிட்டு அவளுடன் சேர்ந்து லிப்ட்டில் ஏறினான். பத்தாவது தளத்திற்கு எண்ணை அழுத்த அதையும் பார்த்தவள் அமைதியாய் இருந்தாள். பிளாட்டின் முன்னே சென்று தனது பிங்கரை வைத்தவன்,
“வா…” என்று பாலாவையும் அழைத்தபடி உள்ளே சென்றான்.
“உன்னோட பிங்கரையும் இதுல செட் பண்ணிடறேன். வெளில போகனும்னா, உள்ள வரனும்னா யூஸ் ஆகும்…” என்று சொல்ல,
“இப்போவாச்சும் சொல்லுங்க இங்க ஏன் வந்திருக்கோம்?…” என்றாள் வேறெங்கும் பார்க்காமல் அவனை மட்டும் பார்த்தபடி.
“ஹாங், உன்னோட தனியா இருக்கனும்னு தோணுச்சு. அதான் உன்னை இங்க கடத்திட்டு வந்தேன். போதுமா?…” என அமர்த்தலாக சொல்லியவன்,
“இங்க தான் நாம இருக்க போறோம். ஒரு த்ரீ டேய்ஸ். போய் ப்ரெஷ் ஆகிட்டு வா…” என சொல்ல,
“என்ன இங்க எதுக்கு? வீட்டுல ஆன்ட்டி வெய்ட் பண்ணுவாங்களே?…” என்றாள் விடாமல்.
“அடடா. எல்லாம் சொல்லிட்டேன். இப்போ வா உனக்கு சுத்தி காண்பிக்கறேன்…” என்றவன்,
“இது ஹால். அங்க கிட்சன் இருக்குது. சமைக்க பாத்திரங்கள் எல்லாம் இருக்கும். ஆனா சமைக்கிற ப்ரவிஷன்ஸ் ரொம்ப கம்மி தான். வேணும்னா செக்யூரிட்டிட்ட சொன்னா வாங்கிட்டு வருவார். இன்னைக்கு வெளில ஆடர் பண்ணிக்கலாம்…” என்றவன்,
“இங்க வா. இது தான் மாஸ்டர் பெட்ரூம். ஆனா நான் வந்தா ஹால்ல தான் ஆல்ட். இங்க ரொம்ப ரேரா தான் யூஸ் பண்ணுவேன்…” என ஒவ்வொன்றாய் காண்பித்தவன்,
“நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்…” என உள்ளே சென்றவன் ஒரு மெத்தையுடன் வந்தான்.
“இங்க வந்துட்டா எனக்கு இதான் ப்ரென்ட். எப்பவும் இதை தூக்கி போட்டு இதுல தான் உருண்டுட்டு இருப்பேன்…” என்று சிரித்தபடி சொல்லியவன் மெத்தையை போட்டுவிட்டு உள்ளே சென்றான்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தவள் பின் சோபாவில் வந்து அமர்ந்துகொண்டாள்.
மூன்று நாளில் என்னவெல்லாம் நடக்கிறது தன் வாழ்க்கையில் என நினைக்கும் பொழுதே ஆச்சர்யமாகவும், அடிமனதில் லேசான பயமுமாகவும் இருந்தது. இப்போதெல்லாம் பேச்சுக்கள் கூட குறைந்ததை போல உணர்ந்தாள் தன்னிடத்திலே.
ஆளுக்கொரு கயிறை வைத்துக்கொண்டு தன்னை எங்கெங்கோ இழுப்பதை போலவே எண்ணியபடி அமர்ந்திருந்தவளை உடை மாற்றி வந்தவன் ஐந்து நிமிடம் போல அரை வாசலிலே நின்று பார்த்தபடி இருந்தான்.
‘இப்படியே குழம்பி குழம்பி என்னையும் ஒருவழி ஆக்கிடுவா.’ என நினைத்தவன் சட்டென யோசனை பிறக்க சிறு புன்னகையுடன் வந்து மெத்தையில் விழுந்தான். அதன் அதிர்வில் திடுக்கிட்டு திரும்பியவள்,
“மெதுவாவே படுக்க தெரியாதா உங்களுக்கு? இப்படியா?…” என்று முறைக்க,
“ஓகே ஓகே. அதை விடு. லஞ்ச்க்கு என்ன வேணும் சொல்லேன். ஆடர் பன்றேன்…” என கேட்க,
“எதுவா இருந்தாலும் ஓகே. லைட்டா…”
“ஓகே, நானே பண்ணிடறேன். இங்க ஒரு ஹோட்டல்ல ஜீரா ரைஸும், பனீர் பட்டர் மசாலாவும் நல்லா இருக்கும். ட்ரை பன்றியா?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஓகே…” என்றாள்.
எது கேட்டாலும் சரி சரி என சொல்லும் பெண்ணை என்ன செய்வது என பார்த்தபடி இருந்தவன்,
“இன்னும் டைம் ஆகலை. பன்னிரெண்டு மணி ஆகட்டும். குடுப்போம்…” என்றவன் ஒரு மூவியை போட்டுவிட்டு படுத்தபடி பார்க்க பாலா மொபைலில் ஒரு கண்ணும், திரையில் ஒரு கண்ணுமாய் இருக்க,
“பாலா ட்ரஸ் சேஞ்ச் பண்ணலையா? போய் மாத்திட்டு வா…” என அனுப்ப,
“இல்லை…” என்றவள் பின் தானாக எழுந்து உடை மாற்ற சென்றாள்.
அந்நேரம் அர்ச்சனாவிடம் இருந்து போன் வர எடுப்பதா வேண்டாமா என யோசித்தவன் பின் எழுந்து பால்கனிக்கு சென்றான்.
“சொல்லுங்கம்மா…” என கேட்க,
“சூர்யா நீ ப்ளாட்க்கு போயிருக்கியா?…” என்றார் அர்ச்சனா.
“ஹ்ம்ம், ஆமா. செக்யூரிட்டி சரியா தானே சொல்லியிருக்கான். இதுல என்ன டவுட் உங்களுக்கு?…” என்றான் வெகு சாதாரண குரலில்.
“ஏன் சூர்யா இப்படி பன்ற? அப்பாவுக்கு தெரிஞ்சா…”
“அப்பாவுக்கு மெசேஜ் பண்ணிட்டேன் இங்க வந்ததும்…” என முடித்துக்கொள்ள,
“அப்போ என்கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறியா சூர்யா?…” என்றாள் லேசாய் விசும்பலுடன் கூடிய குரலில்.
“எப்படி? என்கிட்டே எதுவும் சொல்லாம, கேட்காம செய்யனும்னு நீங்க முடிவு பண்ணின மாதிரியாம்மா?…” என கேட்க,
“நான் என்ன பண்ணேன்?…”
“என்ன பண்ணலை? ஏன் மோகனாக்காக்கிட்ட சொல்லி எங்களை அனுப்பி வைக்க சொன்னீங்க? நான் உங்ககிட்ட சொல்லிட்டு தானே அங்க போனேன். அப்படி இருந்தும் இதை பத்தி என்கிட்டே கேட்கலை. அட்லீஸ்ட் இப்படி சொல்லியிருக்கேன்னு இதுவரைக்கும் எனக்கு நீங்க சொல்லலையே…”
“அதுக்கு பதிலா இது சூர்யா? நீ ஏற்கனவே கோபமா இருந்தியேன்னு தான்…”
“அப்போ நீங்களா முடிவு பண்ணிப்பீங்களா? நான் என்ன குழந்தையா? வான்னா வரவும், நில்லுன்னா நிக்கவும்? ஆட்டிவைக்கனும்னு பார்க்கறீங்க இல்ல?…”
“இல்லப்பா அப்படி இல்லை…”
“இன்னைக்கு காலையில வரைக்கும் என்கிட்டே இதை பத்தி பேசலை. அப்போ அதுக்கு என்ன அர்த்தம்? எல்லா முடிவையும் நீங்களே எடுக்கனும்னா நான் எதுக்கு அப்போ? இழுத்த இழுப்புக்கெல்லாம் கல்யாணத்துக்கு வேணும்னா சம்மதிச்சேன். அதுக்குன்னு எல்லாத்துக்கும் எதிர்பார்க்கறீங்க?…”
“இல்லைப்பா. அம்மா சொல்றதை கேளு…”
“ம்மா, எனக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் வேணும். புரிஞ்சுக்கோங்க. நாங்க இங்க ரெண்டு நாள் தனியா இருந்து பார்க்கறோம். எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டேண்டிங் வேணும் தானே? அதுக்கு இது ஒரு சான்ஸ்ன்னு நினைச்சுக்கோங்க. ப்ளீஸ்…” என்று சொல்ல அர்ச்சனாவால் எதுவும் பேசமுடியவில்லை.
அதட்டாமல், அதிராமல் அழுத்தமாய் மகன் அவரின் மனதில் பதியவைத்துவிட்டான் இனி தன்னை ஆட்டிப்பார்க்க முயலாதீர்கள் என்னும் விதமாய்.
சின்ன விஷயத்திற்கே இப்படி கோபம் கொண்டு சென்றவனுக்கு கணவர் செய்துவைத்திருக்கும் வேலை தெரிந்தால்? நினைக்கவே நடுநடுங்கி போனார் அர்ச்சனா.
“சரிப்பா, சாப்பாடு மட்டும் குடுத்தனுப்பறேன்…” என சொல்ல மறுக்காமல்,
“ஹ்ம்ம்…” என்று மட்டும் பதில் சொல்லி வைத்துவிட்டான்.
அங்கேயே சில நிமிடங்கள் நின்றுகொண்டிருக்க பின் உள்ளே வந்தவன் கிட்சனில் தண்ணீர் குடித்துக்கொண்டு நின்ற பாலாவை பார்த்து,
“பசிக்குதா? ஆடர் பண்ணட்டா வேற ஏதாவது?…” என கேட்க,
“இல்லை கொஞ்சம் நேரம் ஆகட்டும்…” என்று சொல்லி வந்து படம் பார்க்க அமர்ந்துவிட்டாள்.
பின் மதிய உணவு நேரம் இவன் ஆடர் செய்ததும் வந்திருக்க அடுத்த சில நிமிடங்களில் வீட்டில் இருந்தும் உணவு வந்துவிட்டது.
“சாப்பாடு வருதுன்னா ஆடர் செய்வாங்களா? செய்யாம விட்டிருந்திருக்கலாம் தானே?…” என்று அவனை திட்டியபடி அதனை எடுத்து சென்று கிட்சனில் வைத்துவிட்டு வர,
“ரொம்ப திட்டிட்டே இருக்க நீ…” என்றவன்,
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். சொன்னா நம்பமாட்டியே?…” என்று இழுக்க அவன் பக்கம் திரும்பி அமர்ந்தவள்,
“முதல்ல சொல்லுங்க, நம்பறதா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணிக்கறேன்…” என சொல்ல,
“சொல்லிடுவேன். ஆனாலும் நம்ப மாட்ட….”
“ஓஹ், அப்போ நம்ப மாட்டேன்னு தான் சொல்லவே யோசனையா? சொல்ல வேண்டாம். சொன்னாலும் நம்ப மாட்டேன் போதுமா?…” என்றாள் அவளும்.
“அதுக்குத்தான் உனக்கு வாட்ஸாப் பண்ணலாம்னு இருக்கேன்…” என்றவன் தனது மொபைலில் இருந்து பாலாவின் எண்ணிற்கு ஒரு போட்டோவை அனுப்ப அவனின் முகத்தில் தெறித்த கல்மிஷத்தில் பரபரப்பாய் அந்த போட்டோவை திறந்து பார்த்தவள் விழிகள் அகன்றது.
பார்த்ததை நம்பவே முடியவில்லை அவளால். ஆனால் உண்மை. அவனின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தவளின் புகைப்படங்கள் வேறு வேறு கோணத்தில் ஐந்து படங்களாக வந்திருக்க,
“இது இதுஎப்படி?…” என்றாள் அதிர்ச்சியுடன்.
“எப்படின்னா? பார்த்தா தெரியலையா? உன்னாலையே நம்ப முடியல தானே? அதான் போட்டோ எடுத்தேன்…” என தனது மொபைல ஆட்டி காண்பிக்க வேகமாய் எழுந்து நின்றவள்,
“அது ஏதோ தூக்கத்துல தெரியாம பண்ணிருப்பேன். போட்டோ எல்லாம எடுப்பீங்களா? டெலிட் பண்ணுங்க…” என்றாள் கறாராக.
“முடியாது, முடியாது…” என்று சொல்லியவன் தனது மொபைலில் தெரிந்த படத்தில் பார்வையை பதிக்க அதில் கூச்சமுற்றவள்,
“அதை பாக்காதீங்க. குடுங்க…” என்றாள் அவனருகே மண்டியிட்டு.
“முடியாதுன்னா என்ன பண்ணுவ?…” என்றான் புருவம் உயற்றி கேலியாய் கேட்டு.
“நான் டெலிட் பண்ணுவேன்…”
“ஆஹாங், எங்க பண்ணேன் பார்ப்போம்…” என்றான் சவாலாய். அதில் முறைப்புடன் பார்த்தவள்.
“குடுங்க, போனை குடுங்க…” என கை நீட்டி அதட்டலாக கேட்க,
“ம்ஹூம், இனிமே மார்னிங் எழுந்ததும் இதுல தான் கண்ணு முழிக்கனும்னு சபதமே எடுத்திருக்கேன். முடிஞ்சா வாங்க பாரேன்…” என்று வேண்டுமென்றே அவளின் முன்னால் நீட்டி ஆட்டம் காட்ட அவனிடம் இருந்து அதனை பறித்தாகவேண்டும் என்ற முனைப்புடன் பாலாவும் அவனுடன் மல்லுக்கட்டினாள்.
“நோ சான்ஸ். உன்னால முடியவே முடியாது…” என்று அவன் சீண்ட சீண்ட,
“என்னால முடியும். என்னால கண்டிப்பா முடியும்…” என்றபடி அதை பறிக்க பார்க்க எழுந்து ஓட ஆரம்பித்தான் சூர்யா.
விரட்டி துரத்திக்கொண்டே அவனை பிடிக்க பார்க்க இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி கொஞ்சமாய் குறைய மீண்டும் ஹாலுக்கு வர மேட்டஹியில் கால் இடறி இருவருமாய் ஒருவராய் ஒருவர் பிண்ணியபடி கீழே விழ அப்போதும் பாலாவின் பார்வை மொபைலில் தான் இருந்தது.
“எஸ், ஐ காட் இட்…” என்று கூவியவள் அப்போதுதான் தானிருக்கும் நிலையை உணர்ந்தவள் குனிந்து பார்க்க,
“பாலா…” என்ற சூர்யாவின் கிறக்கமான குரலோடு அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
ஒரு அழுத்தமான இறுகிய அணைப்பு. பெண் தளர்ந்து போனாள். அவனிதழ்கள் கழுத்திலிருந்து காதை கடந்து கன்னக்கதுப்பில் இடம்பெயர சூர்யாவின் அணைப்பு இன்னும் அழுத்தம்பெற அதனை உள்வாங்க முயன்றவளின் மனதிலோ பேரலை.
மொபைலை அப்படியே நழுவவிட்டவள் தாளமாட்டாமல் அவனை தள்ளிவிட்டு எழுந்து அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டாள்.
சூர்யா அவள் தள்ளிவிட்டு சென்றதை போல அப்படியே கிடந்தான். மனதில் புதுவித மயக்கம் பரவ அதை கிரகித்து அனுபவித்தபடி படுத்திருந்தவன் இதழ்களில் உறைந்துவிட்டிருந்தது மனையாள் மீது மையல் கொண்ட புன்னகை.
இங்கே பாலாவிற்கோ இந்த எதிர்பாராத நெருக்கம், அவனின் அணைப்பும், இதழ் ஊர்வலமும் இன்னும் கழுத்தோரம் குறுகுறுப்பை மூட்ட அப்படியே முகத்தை கைகளில் பொத்தியபடி படுக்கையில் குறுகி சுருண்டுகொண்டாள்.
இருவரின் மனதிலும் ஒரு ரகசிய சிலிர்ப்பு.
விழியாலே நீ தீண்ட பெண் திண்டாடி போகிறேன்.
திண்டாடி நான் திண்டாடி திண்டாடி போகிறேன்