நிலா – 16
மதிய உணவிற்கு வந்த கோபாலசுவாமியிடம் எப்படி இதை கேட்பதென்று யோசனையுடனே இருந்தார் அர்ச்சனா.
“எதாச்சும் கேட்கனுமா அர்ச்சு?…” என அவர் சத்தமாய் அழைத்ததும் தான் மகனின் நினைப்பிலிருந்து வெளியே வந்தவர்,
“ஹ்ம்ம், ஆமா. இல்லை இல்லை…” என சமாளிக்க,
“அப்போ மோர் போடு. உன்கிட்ட கேட்டா யோசனையோடவே நிக்கிற?…” என்றதும் வேகமாய் அவருக்கு மோர் ஊற்றியவர்,
“ஏதோ ஞாபகத்துல…” என லேசாய் தலையை பிடித்துக்கொண்டு சொல்லியவரை பார்த்த கோபாலசுவாமி மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தார்.
“மகன், மருமக ஞாபகமா?…” என கேட்க அர்ச்சனா பதில் பேசவில்லை.
“என்கிட்டே மெசேஜ் அனுப்பிட்டான். நானும் சரின்னுட்டேன். இப்போ என்ன? ரெண்டு நாள் தனியா இருந்துட்டு வரேன்னுட்டு தானே போயிருக்கான். வரட்டும்…”
“அதுக்கில்லை. சந்தோஷமா அவங்க போய் தங்கியிருந்தா எனக்கு அதுல வருத்தமில்லை. ஆனா இப்படி ஒரு வருத்தத்தோட போய் தங்கியிருக்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருக்குது…” என உள்ளபடி சொல்ல,
“ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். போக போக சரியாகிடுவாங்க. அது பாலாவை நீ மாத்தறதுல தான் இருக்குது…”
“எனக்கு முடியுமான்னு தெரியலைங்களே?…” என்றார் கொஞ்சமும் நம்பிக்கையற்ற தொனியில்.
மகனின் கோபம் இத்தோடு முடிந்துவிடக்கூடியதல்ல என்று உறுதியாக நினைத்தார். அவர் நினைத்ததை போலவே தான் நடக்க இருக்கிறதென அவருக்கு தெரியவில்லை. கோபாலசுவாமிக்கும் புரியவில்லை.
மகன் ஓரளவு கோபம் குறைந்து பாலாவுக்கென நின்றதே கோபாலசுவாமி பெரிய வெற்றியாக கருதினார். இனி அனைத்தும் சுமூகமாகவே செல்லும் என்று நினைத்திருந்தார்.
கட்டங்களின் கணிப்பிற்கு அப்பாற்ப்பட்டது மனங்களும் அதன் உணர்வுகளும் என கணிக்க தவறினார் பிரபல ஜோதிட வல்லுநர்.
“அஸ்வி சாப்பிட்டாளா? எங்க?…” என கேட்க,
“உமாவோட சாப்பிடறேன்னு சொல்லிட்டா…” என்றவர்,
“ஹரிணிட்ட பேச ட்ரை பண்ணினேன். என் பொண்ணு எப்படி இருக்கான்னு தெரியலை. என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? அவங்க கோவமா இருந்தா அப்படியே விட முடியாதுல…” என அர்ச்சனா கேட்க,
“ஹ்ம்ம், முதல்ல இதை ஆற போடுவோம். ஹரிணி மாமியார் ரொம்ப பேசிட்டாங்க. அதே சூட்டோட போய் பேசினா இன்னும் கோபம் வரத்தான் செய்யும். முதல்ல மருமகன்கிட்ட பேசி பார்ப்போம்…” என மழுப்பினார் அவர்.
“பேசுங்க, முதல்ல பொதுவான ஒருத்தரை வச்சு பேச முயற்சி செய்யுங்க. இப்படியே தள்ளி போட போட இன்னும் பிரச்சனை பெருசாகுமோன்னு பயமா இருக்குது. என்னதான் அவங்க பேசினாலும் நாம பொண்ணை குடுத்திருக்கோம். நாம தான் இறங்க பேசனும்…” என்று சொல்லவும்,
“சரி சூர்யா வரட்டும். அவன்கிட்ட பேசிட்டு முடிவு செய்வோம்…” என்று கையை கழுவிவிட்டு எழுந்த கோபாலசுவாமி,
“தாலி பிரிச்சு கோர்க்கறதை பத்தி பாலா வீட்டுல பேசிட்டியா?…”
“ஹ்ம்ம், மோகனாட்ட பேசினேன். இந்த வாரம் வரேன்னு சொல்லியிருக்காங்க. அவங்களும் ஏதோ முக்கியமான விஷயமா பேசனுமாம். அன்னைக்கு சொல்லிடலாம்னு இருக்கேன்…”
“என்ன முக்கியமான விஷயம் அர்ச்சு? சொன்னாங்களா?…” என்றதும்,
“முக்கியமான விஷயம் எதுவும் நீங்களும் சரி, சூர்யாவும் சரி என்கிட்டே சொல்றதில்லை. அவங்க மட்டும் சொல்லுவாங்களா என்ன? நான் கேட்கலை…” என்றார் அர்ச்சனா மனத்தாங்கலுடன்.
அவர் சொல்லியதை கேட்டு முகம் சுளித்த கோபாலசுவாமி ஒரு முறைப்புடன் அர்ச்சனாவின் ஆதங்கத்தை அலட்சியம் செய்தவராக நகர்ந்துவிட்டார்.
அது இன்னும் பெரிய வலியை தந்தது அவருக்கு. அங்கேயே அப்படியே அமர்ந்துவிட்டார் அவர்.
அறைக்குள் வந்த கோபாலசுவாமி வெற்றிக்கு அழைத்து பேசியவர் பேச்சுவாக்கில் மோகனா பேச இருக்கும் முக்கியமான விஷயம் என்னவென கேட்க,
“நகை, சீர்வரிசை பத்தி தான் அங்கிள் பேசனும்னு மாமா, அக்கா சொல்லிட்டிருந்தாங்க. அதை பத்தி தான் நேர்ல பேசிக்கலாம்னு சொல்லிருக்காங்க…” என்று சொல்ல,
“சரி இருக்கட்டும்ப்பா. பார்த்துக்கோ…” என்றதும்,
“உமா ஆன்ட்டி எப்படி இருக்காங்க அங்கிள்?…” என்றான் வெற்றி.
ஒரு நிமிடம் மௌனமாய் இருந்த கோபாலசுவாமி வெற்றி தெரிந்து கேட்கிறானா இல்லையா என்றே தெரியாமல் என்ன பதில் சொல்வது என்று தயங்கி பின்,
“இப்போ நல்லா இருக்கா வெற்றி…” என்றார் அவரும் பொதுவாக.
அதற்கு மேல் வெற்றி துருவி கேட்கவில்லை. தெரிந்ததாகவும் காட்டிக்கொள்ளவில்லை. போனை வைத்துவிட்டான்.
அவன் வேறெதுவும் கேட்காததிலிருந்தே தெரிந்திருக்கவில்லையோ? என்று நினைத்தபடி அதை அப்படியே விட்டுவிட்டார். வெற்றிக்கு தான் ‘ஏன்தான் கேட்டோமோ’ என்றானது.
‘கேட்டிருக்கவே கூடாது. இது அவங்க குடும்ப விஷயம். இதை சொல்லனும்னு எதிர்பார்த்திருக்க கூடாது.’ என தலையை கோதியபடி அமர்ந்துவிட்டான். அப்படியே அமர்ந்திருந்தவன் பின் சூர்யாவின் போன் வரவும் தான் தெளிந்தான்.
அவனிடம் கம்பெனி சம்பந்தமான பேச்சுக்கள் சற்று நேரம் நீடிக்க அதில் மூழ்கி போனவன் அதன் பின்பே வேலையில் கவனம் செலுத்தினான்.
இங்கே வெற்றியிடம் பேசிவிட்டு வைத்த சூர்யா மூடியிருந்த கதவை பார்த்தான். அறைக்குள் சென்ற பாலா இன்னும் வெளியே வராமல் இருக்க நேரமோ அரைமணி நேரம் கடந்திருந்தது.
எழுந்து சென்று கதவை திறக்க தாழிடப்படாமல் வெருமனே அடைத்திருந்த கதவை திறந்ததும் எட்டி பார்க்க அங்கே உடலை சுருக்கி முகத்தை இரு கைகள் கொண்டு மூடியபடி அப்படியே உறங்கி போயிருந்தாள் பாலா.
“அடிப்பாவி தூங்கிட்டு இருக்கா?…” என தாடையில் கைவைத்து பார்த்தவன் முகம் மலர்ந்து சிரித்தது அவள் படுத்திருந்த கோலம் கண்டு.
“எக்ஸ்பெக்ட் பண்ணிருந்திருக்க மாட்டா போல? நானுமே தான். சட்டுன்னு டைட்டா கட்டிட்டேன்…” என பின்னந்தலையை கோதி கலைத்துகொண்டான்.
பின் அவளின் தூக்கத்தில் ஆழத்தை அறிந்தவனாக நேராய் காலை நீட்டி வைத்து முகத்திலிருந்த கையை பிரித்துவிட சிவந்து போய் லேசாய் வியர்த்து இருந்தது.
பின் ஏசியை போட்டுவிட்டவன் மிதமான அளவில் வைத்துவிட்டு போர்வையை போர்த்திவிட்டு வெளியே வந்தான்.
ஹாலில் இருந்த மெத்தையில் விழுந்தவன் எதையும் நினைக்க தோன்றாமல் அப்படியே கவிழ்ந்து படுத்து கண்ணை மூடிக்கொண்டான்.
எதையும் பார்க்க பிடிக்கவில்லை. யாரிடமும் பேச தோன்றவில்லை. மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் கூச்சலிட அதன் களேபரம் பிடித்து அதனுள் மூழ்கினான்.
தன் எண்ணம் போகும் திசையும், தன் செயலும் சரியானதாக இருந்தாலும் அதற்கான நேரமும், காலமும் இதுவல்ல என்பதில் தெளிவாய் இருந்தான். முதலில் பாலாவின் மனது தன்னை முழுமையாய் கணவனா ஏற்கவேண்டும் என்று நினைத்தான்.
இன்னும் படிப்பு முடிய இரண்டு மாதமே இருக்க அதுவரையாவது அவளை நெருங்காமல் இருக்கவேண்டும் என வேகமாய் இருக்கும் மனதிற்கு சொல்லிக்கொண்டான்.
‘என் வேகத்தை அவ தாங்கமாட்டா. பிச்சுக்கோன்னு போனாலும் போய்டுவா ராட்சஸி’ என ரசனையுடன் நினைத்துக்கொண்டான் மனைவியை.
அப்படியே தானும் தூங்கிவிட மாலை எழும் பொழுதே லேசாய் இதமான மனநிலை அந்த வானிலையுடன் போட்டிபோட்டது.
எழுந்தமர்ந்தவன் வெளியே ஜன்னல் பக்கம் பார்க்க அப்போதுதான் இருள் சூழ ஆரம்பித்தது. ஜன்னலை திறந்து வைத்திருந்ததால் மழைவாசம் மண்வாசத்துடன் வீட்டுக்குள் வாசம் செய்துகொண்டிருக்க எழுந்துகொண்டவன் இன்னொரு அறையில் முகம் கழுவிவிட்டு இருவருக்கும் டீயை வைத்தவன் பாலாவை எழுப்ப சென்றான்.
அங்கே அவள் இல்லாதிருக்க மற்ற அறைகளையும் திறந்து பார்த்தவன் எங்குமில்லாமல் இருக்க பிரெஞ்ச் விண்டோ பக்கமாய் அவர அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
சூர்யா வந்ததுமே அவனை நிமிர்ந்து பார்த்தவள் லேசாய் குனிந்துகொள்ள அவளிடம் பேச வந்தவனோ அந்த செயலில் தானும் மௌனமாகி கைப்பிடிக்கு போடப்பட்டிருந்த குழாயை பிடித்தபடி நின்றுவிட்டான்.
ஐந்து நிமிடங்கள் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டாலும் பேசாமலே இருக்க,
“ப்ச், ஓகே. வெல்…” என சொல்லிக்கொண்டவன் அவளை பார்த்து,
“வெளில ஒரு வாக் போய்ட்டு வரலாமா பாலா?…” என சாதாரணமா கேட்டதும்,
“ஹ்ம்ம், போலாம் தான். ஆனா மழை…” என அதனை காண்பிக்க,
“சோ வாட்? கார்ல தானே போக போறோம். இன்னும் ரெண்டு நாளைக்கு தேவையான ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங் இப்படி எதாச்சும் வாங்கிட்டு வரலாம். சும்மாவே இருந்தா போரடிக்கும். சாப்பிடவும் வேணும்ல. நான் போறேன். அதான் உன்னையும் கூப்பிட்டேன்….”
“ஓஹ், அதானா? அப்போ நீங்களே போய்ட்டு வாங்க…” என்றாள் பளிச்சென்று.
“ஏன்? ஏன்?…” என அவனும் திரும்பி கேட்க,
“என்ன ஏன்? வெளில போவோம்னு சொன்னீங்க. சரின்னேன். நான் போறேன். அதனால போனா போகுதுன்ற மாதிரி கூட்டிட்டு போறேன்னு பேச்சை மாத்தறீங்க. அதான் வேண்டாம்னு சொன்னேன். நீங்களே போய்ட்டு வாங்க…” என எழுந்து வீட்டிற்குள் செல்ல,
“ஒரு வார்த்தை கூட கூட பேசிட கூடாதோ? இப்போ என்ன? என் கூட வா. போதுமா?…”
“போதாது. நான் பாயின்ட்அவுட் பண்ணின பின்னால சொல்றீங்க. இது சேர்த்தி இல்லை…” என்று மல்லுக்கு நின்றாள்.
அவளுக்கு அவன் நேரடியாக சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அவனோ நன்றாக ஆரம்பிப்பவன் முடிவில் சொதப்பிவிட அதனால் உண்டாகும் கடுப்பில் வாய் கொடுக்க ஆரம்பித்தாள்.
“உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு என்ன தெரியும்?…” என சூர்யாவும் ஏகத்துக்கும் கோபத்துடன் பேச,
“உங்களுக்கு பிடிச்சதையே வாங்கிட்டு வாங்க. அதையே சாப்பிட்டுக்குவேன்…” என்று பாலா சொல்லவும் பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்ததை போல கோபம் அடங்கி போனது அவனுக்கு.
அந்த மாயத்தின் விந்தை தான் அவனுக்கு புரியவில்லை. எப்போதும் மல்லுக்கு நிற்கும் ஒருத்தியின் ஒரு சிறு பேச்சு கூட இத்தனை சந்தோஷம் தருமா என உள்ளுக்குள் வியப்பு தான்.
“ஓகே, ஓகே. என்னோட வா. சேர்ந்தே போகலாம். சேர்ந்தே ஷாப்பிங் பண்ணலாம். தனியா போகனும்னு கூப்பிடலை. சேர்ந்து போகலாம்னு தான் கூப்பிட்டேன். போதுமா?…” என்று சமரசமாய் பேச பாலாவிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.
சின்ன சின்ன விஷயத்திற்கும் அவனிடம் எதையோ மனது எதிர்பார்த்தது. அது கிடைக்காமல் போகும் பட்சத்தில் முணுக்கென கோபம் முளைவிட்டது பாலாவிற்கு.
“ஹ்ம்ம், ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…” என குதித்துக்கொண்டு அவள் ஓட,
“பிடிவாதம் ட்ரம்மு…” என செல்லமாய் சொல்லிக்கொண்டான்.
அவள் உடை மாற்றி வரவும் அவளுக்கு டீயை கொடுத்துவிட்டு தானும் எடுத்துக்கொண்டு டிவியை போட்டு அமர்ந்துவிட்டான்.
பாலா குடித்து முடிக்கும் வரை டிவியில் ஒரு கண்ணும், அவளின் மேல் ஒரு கண்ணுமாக இருந்தவன் அவளுடையை பார்த்தான்.
வொய்ன் நிறத்திலான ஒரு டாப்பும், லைட் கலரில் பிளாசா பேண்டும் போட்டிருந்தவள் முடியை கேட்ச் க்ளிப்பில் அடக்கியிருந்தாள்.
“முடிஞ்சதா?…” என கேட்டுக்கொண்டே எழுந்தவன் தானும் உடை மாற்றி வர இருவருமாய் கிளம்பி அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட் சென்றனர்.
தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்ப காரில் ஏறி அமர்ந்ததும் இரவு உணவு வேளை நெருங்க இருக்க ‘இருவருக்கும் உணவு அனுப்புகிறேன், என்ன வேண்டும்?’ என கேட்க அர்ச்சனா சூர்யாவுக்கு அழைத்தார்.
“ம்மா, நானே கூப்பிடறேன். வெளில இருக்கேன்…” என சொல்லிவிட்டு அவன் வைத்துவிட உடனே பாலாவுக்கு அழைத்தார்.
“எப்படி இருக்க பாலா?…” என கேட்க,
“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி…” என்றாள் பாலாவும் கொஞ்சம் குழப்பத்துடன்.
அப்போதுதான் சூர்யாவிடம் பேசியிருக்க உடனே தனக்கழைத்தது அவளுக்கு புரியவில்லை.
அதிலும் அங்கிருந்து அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பிய பின் இப்போதுதான் பேசுகிறார். அதுவே அவரிடம் கண்ணுக்கு தெரியாத ஒரு இனம் புரியாத விலகலை தந்திருந்தது பாலாவிற்கு.
“இங்க கொஞ்சம் வேலைம்மா. அதான் பேச முடியல. நீ நல்லா இருக்க தானே?…” என மீண்டும் கேட்க,
“ஹ்ம்ம், நல்லா இருக்கேன்…” என்றவள் பின் தானாகவே,
“உமா ஆன்ட்டி எப்படி இருக்காங்க? இப்போ அவங்களுக்கு உடம்புக்கு பரவாயில்லையா?…” என கேட்க அர்ச்சனாவிற்கு அதுவே பெரும் மகிழ்ச்சியை தந்தது.
இந்தளவிற்கு இருக்கிறாளே மருமகள் என்று மனதார மகிழ்ந்துகொண்டவர் அதே உற்சாகத்துடன்,
“நல்லா இருக்காம்மா. நீ வரவும் போய் பார்க்கலாம்…” என்றார்.
அடுத்து என்ன பேசவென்று தெரியாமல் பாலா சூர்யாவை பார்க்க மறுபக்கம் அர்ச்சனாவும் ஒரு நொடி மௌனித்து பின்,
“நைட் என்ன சாப்பிட குடுத்தனுப்பனும்னு கேட்க சூர்யாவுக்கு கூப்பிட்டேன். அவன் வெளில இருக்கேன்னு சொல்லிட்டான்…” என சொல்லியவர்,
“உன்னை தனியாவா விட்டுட்டு போய்ட்டான்?…” என்றார் மெதுவாக தயக்கமான குரலில்.
“என்ன ஆன்ட்டி, சரியா கேட்கலை…” என்ற பாலா சட்டென ஸ்பீக்கரில் போட்டுவிட்டு சூர்யாவை பார்த்து சிரித்துக்கொண்டே ‘பேசாதே’ என்பதை போல சைகை செய்தவள்,
“சொல்லுங்க ஆன்ட்டி…” என்றதும்,
“இல்லை சூர்யா உன்னை தனியா ப்ளாட்ல விட்டுட்டா போய்ட்டான்னு கேட்டேன்ம்மா. உன்கிட்டயும் கோபமா இருந்தானா?…” என கேட்க கேட்டுக்கொண்டிருந்த சூர்யா ‘சுத்தம்’ என்பதை போல தலையை அசைத்துக்கொள்ள பாலாவிற்கு சிரிப்பு.
“ஹ்ம்ம், ஆமா ஆன்ட்டி. தனியா இருக்கேன். விட்டுட்டு போய்ட்டாங்க. வரியான்னு கூட கேட்கவே இல்லை…” என பாலாவும் அப்பாவியாய் சொல்ல, சூர்யா ‘அடிப்பாவி’ என வாய் திறக்கும் முன் தனது கையால் அவனின் பேச்சை நிறுத்தினாள் அவன் அதரங்களை மூடி.
மூடிய காருக்குள் எந்த சத்தமும் இல்லாமல் இருக்க பாலா சொல்லியதை அப்படியே நம்பினார் அர்ச்சனா. பாலாவுக்கும் இருந்த இறுக்கங்கள் தளர்ந்து அந்த நேரத்தை விளையாட்டாய் ரசித்தாள்.
சூர்யா சொல்லவே வேண்டாம். சுத்தமாய் மொத்தமும் மறந்து அப்படியே அமர்ந்தவன் என்னதான் பேசுகிறாள் என பார்க்க உடல் தளர்த்தி அமர்ந்துவிட்டான்.
“நினைச்சேன். கூட்டிட்டு போனவன் விட்டுட்டு போயிருக்கான். இதுக்குத்தான் தனியா பிளாட்டுக்கு கூட்டிட்டு போனானாக்கும்? ஆனா அவன்கிட்ட இதை சொல்லமுடியாதே?…” என மருமகளிடம் முறையிட்டவர்,
“உனக்கு நான் சொல்லவேண்டியதில்லை பாலா. சூர்யாவுக்கு கோபம் அதிகம் தான். ஆனாலும் ரொம்ப அக்கறை இருக்கும். அதை இல்லன்னு சொல்லமுடியாது…” என மகனையும் விட்டுகொடுக்காமல் பேச,
“நீங்க சொல்றது சரிதான் ஆன்ட்டி…” என்று ஒத்து ஊதினாள் பாலா.
‘நீ நடத்து. எத்தனை தூரம் போறன்னு பார்க்கறேன்’ என்னும் பாவனை தான் பாலாவின் கணவனிடம்.
“இப்ப என்ன? அவன் வர வரைக்கும் நான் உன் கூட பேசிட்டே இருக்கேன். பொழுது போய்டும்…” என்று அர்ச்சனா கேட்க பாலா திருதிருவென இங்கே விழித்தாள்.
‘இப்ப பதில் சொல்லுடி’ என்னும் விதமாய் கண்கள் சிரித்தது சூர்யாவிற்கு.
“இல்ல இருக்கட்டும் ஆன்ட்டி. உங்களுக்கு வேலை இருக்கும். நான் இங்க அப்படியே டிவி பார்த்துட்டு…”
“இல்ல இல்ல. ஒரு பிரச்சனையும் இல்லை. பேசிட்டே சமைக்கிறேன்…” என்றவர்,
“நைட்க்கு என்ன வேணும்னு சொல்லு. அவன் என்ன சாப்பிடுவான்னு தெரியும். உனக்கு என்ன வேணும்னு சொன்னா செஞ்சு அனுப்பிடுவேன். நீ சொல்லு…” என்று விடாமல் ஒரே நாளில் மருமகளை தன் அன்பு மழையில் குளிப்பாட்ட ஆரம்பித்தார்.
“இல்லை நீங்க மதியம் குடுத்ததே இருக்குதே ஆன்ட்டி. அதை சாப்பிட்டுக்கறோம்…” என்று சொல்ல சூர்யா முறைக்க,
“மதியம் வச்சதா? நைட் டிபன் சாப்பிடு பாலா…” என அர்ச்சனா வலியுறுத்த,
“இல்லை ஆன்ட்டி நான் அதையே சாப்பிட்டுக்குவேன். நிறையவே இருக்குதே…”என்றுவிட்டாள் கொஞ்சம் அழுத்தமாய்.
“ஓஹ்…” என்ற அர்ச்சனா ஒன்றும் பேசாமல் இருக்க,
“நீங்க வேணும்னா சூர்யாட்ட கேட்டுக்கோங்க. அவங்களுக்கு என்ன வேணும்னு…” என்றும் தனது மொபைலை எடுத்தவன் உடனே சைலன்ட்டில் போட்டுவிட்டான்.
இத்தனை பேச்சிலும் அவளின் கையை அவன் விலக்கவும் இல்லை. அவள் அதை கவனிக்கவும் இல்லை.
“ஹ்ம்ம், நான் கேட்டுக்கறேன். அப்பறம் இன்னொரு விஷயம்…” என அர்ச்சனா சொல்லவா வேண்டாமா என யோசித்து பேச்சை நிறுத்த,
“எதுவானாலும் சொல்லுங்க ஆன்ட்டி…” என பாலா சொல்லவும்,
“நீயும், சூர்யாவும் தனியா இருக்கும் போது என்னவேணாலும் பேசிக்கோங்க பாலா. ஆனா வெளில என்கிட்டன்னு இப்படி பேசறப்போ சூர்யான்னு பேர் சொல்லி பேசவேண்டாம் பாலா. நான் சொல்ல வரத்து உனக்கு புரியுதா?…”
அர்ச்சனா கேட்டதும் சூர்யா வேகமாய் தனது டிஷர்ட் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அவனை கண்டு அலட்சியமாய் உதடு பிதுக்கியவள்,
“ஓகே, ஆன்ட்டி…” என்று பேச்சை முடித்துக்கொள்ள,
“சரிம்மா, நான் அவன்கிட்ட பேசறேன்…” என்று வைத்துவிட்டார்.
“உங்களுக்கு கால் பண்ணினா உங்களுக்கு மட்டும் என்ன வேணுமோ சொல்லிக்கோங்க…” என சொல்ல அவளின் கையை பார்வையால் சுட்டி காண்பித்ததும் தான் தனது கையை எடுத்துக்கொண்டவள்,
“தட்டிவிட வேண்டியது தானே? இதுலையுமா கெத்து? நீ வச்சா நீயே எடுத்துக்கோன்னு…” என்று சொல்ல,
“மெக் அப்டினாலே கெத்துதான்…” என்று சொல்லியபடி சூர்யா காரை கிளப்ப,
“ஸ்யப்பா…” என காதை சுண்டுவிரல் கொண்டு குடைவதை போல ஆக்ஷன் செய்ய,
“சரியான ஸ்டமக் பர்னிங் கேர்ள்…” என்று அவனும் அவளை கேலி பேச அவர்களின் அந்த பயணம் இனிமையாகவே நகர்ந்தது.
பயணங்கள் முடிவதில்லை. வினைகள் விலகுவதில்லை.