நிலா – 17
அப்போது தான் பிளாட்டிற்குள் நுழைந்து வாங்கி வந்ததை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு உணவை ஓவனில் சுட வைத்துக்கொண்டு இருந்தார்கள் பாலாவும், சூர்யாவும்.
அர்ச்சனா மீண்டும் சூர்யாவிடம் கேட்டதும் அவனும் இருப்பதே போதும், மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட அவராலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
பாலா சொல்லியதை போல நிறையவே இருந்தது உணவு. வேண்டாம் என்றிருந்தால் நிச்சயம் வீணாகி தான் போயிருக்கும் என நினைத்தான் சூர்யா.
“இங்க இருந்தே போட்டுக்கலாம். இல்லைன்னா ஒண்ணொண்ணா எடுத்துட்டு வரவேண்டியதா இருக்கும்…” என பாலா சொல்ல,
“ஹ்ம்ம். ஒவ்வொருதடவைக்கும் இங்கைக்கும் அங்கைக்குமா நடக்கனும்னு சொல்ற…” என்றவனும் மறுக்காமல் தனக்கொரு தட்டை வைத்து சாப்பிட பாலா உண்டு முடித்து கையை கழுவும் நேரத்தில் அவளுக்கு மோகனாவிடமிருந்து அழைப்பு வந்தது.
எதார்த்தமாக மகள் உண்டாகிற்றா என கேட்பதற்கு போன் செய்தவர் அப்படியே அர்ச்சனாவிடம் கொடுக்கும் படி சொல்ல பாலாவும் இங்கிருப்பதை சொல்ல எடுத்ததுமே ஏகப்பட்ட கேள்விகள்.
‘ஏன் வீட்டிற்கு செல்லாமல் அங்கே சென்றீர்கள்? எதுவும் பிரச்சனையா?’ என பாலாவை ஒருவழி ஆக்கிவிட்டார் மோகனா.
“என்னம்மா இப்போ?…” என பாலா பதில் சொல்லமுடியாமல் அலுப்பாய் கேட்க,
“என்ன என்னம்மா? இப்படி பண்ணி வச்சுட்டீங்களே? சூர்யா வீட்டுல என்ன நினைப்பாங்க? இதையெல்லாம் யோசிக்கவே மாட்டியா பாலா?…”
“இதுல யோசிக்க என்ன இருக்கு? எனக்கே தெரியாது இங்கதான் வரோம்னு. இதுல இத்தனை கேள்வி கேட்டா?…” என எரிச்சலுடன் பதில் சொல்ல சூர்யா பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.
சூர்யாவிடம் கேட்க முடியவில்லை மோகனாவால். அதனால் மகளிடம் கேட்டு கேட்டு பாலாவும் கத்திவிட்டாள்.
“ம்மா, இங்க பாரு. என்னை அங்க இருந்து அனுப்பினது நீ. இங்க கூட்டிட்டு வந்தது நீ கட்டிக்க சொன்ன மாப்பிள்ளை. எதுவா இருந்தாலும் உன் மாப்பிள்ளைட்ட பேசிக்கோ…” என்று பேசிவிட மோகனாவிற்கு தாளமுடியவில்லை.
“பார்த்தியா வெற்றி? என்னவோ அவளை எங்கையோ பிடிச்சு தள்ளிவிட்ட மாதிரி பாலா பேசிட்டா. ஏன் அங்க போனீங்கன்னு கேட்டதுக்கு அவ்வளவு கோபப்படறா…” என்று தன் தம்பியிடம் புலம்ப,
“இரு சூர்யா லைன்ல வரான். இவ அவனை வச்சுட்டு பேசினாளா என்னன்னு தெரியலை…” என்றபடி வெற்றி தனது போனை அட்டன் செய்ய,
“ஏன்டா இதுக்காடா கட்டி வச்சீங்க? அவளை எங்க கூட்டிட்டு போகனும், போக கூடாதுன்னு ஒவ்வொருத்தவங்கட்டையும் நான் சொல்லனுமா?…” என்று குதிக்க,
“அதுக்கில்லைடா சூர்யா…” என சமாதானமாய் பேச பார்த்தான் வெற்றி.
“இப்ப பாரு, அவ திரும்ப ஆரம்பிக்கிறா நீங்க தானே கட்டி வச்சீங்கன்னு. எங்களை தனியா விடவே மாட்டீங்களாடா?…” என்று ஆயாசமாய் சொல்லியவன்,
“இப்படியே ஆளாளுக்கு போன்லயே எங்களை ரூல் பண்ணிட்டு இருந்தா நீங்களும் ஆச்சு, உங்க குடும்பமும் ஆச்சுன்னு அவளை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போய்டுவேன் பார்த்துக்கங்க…” என கத்த,
“அடேய் என்னடா நீ வேற?…” என்ற வெற்றியின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்த மோகனா,
“சூர்யாவா?…” என தம்பியிடம் மீண்டும் கேட்க அவரிடம் போனில் கனேக்ட்டில் இருந்த பாலா,
“சூர்யாவா? என்னம்மா சொல்ற?…” என கேட்டவள் சற்றுமுன் எழுந்து சென்றவனை தேட உள் அறையில் காதில் போனை வைத்துக்கொண்டு இடுப்பில் ஒரு கையை வைத்தபடி கோபமாய் நின்றிருந்தான்.
“வெற்றி லைன்ல சூர்யா வந்திருக்கான்…” என மோகனா பாலாவிடம் சொல்ல,
“சுத்தம்…” என்றாள் மகள்.
“அவனை வச்சுட்டே பேசினியா நீ?…” என மகளை அதற்கும் வசைபாட,
“அப்ப தான் சாப்பிட்டே முடிச்சேன். கை கூட கழுவலை. நீ கால் பண்ணதும் அட்டன் பண்ணினேன். நீ பண்ணின டார்ச்சர்ல சூர்யா இருக்கறதை மறந்து கத்திட்டேன்…” என்று அவளும் சொல்ல,
“அதான் வெற்றிட்ட என்னவோ கோபமா பேசிட்டு இருக்கான் போல…”
“நல்லா வாங்கிக்கட்டு. இப்ப பேசேன். ஏன் என் பொண்ணை மாமனார் வீட்டுக்கு கூட்டிட்டு போகாம தனியா கூட்டிட்டு போனீங்கன்னு கேளேன்…” என தாயை சீண்ட,
“கொழுப்புடி உனக்கு. நான் போனை வைக்கறேன்…” என்று கட் செய்துவிட பாலா மெதுவாய் சூர்யா பேசுவதை கேட்க நின்றாள்.
“ஒன்னொண்ணுக்கும் சொல்லிட்டு இருக்க மாட்டேன் வெற்றி. முன்னாடி வேற. இப்ப நான் சொன்னா மருமகன் பேசிட்டான்னு உட்கார்ந்து புலம்புவாங்க அக்கா…”
“இதெல்லாம் உனக்கு தெரியுதாடா?…” என வெற்றி சிரிக்க,
“அடங்குடா. வீட்டுல சாப்பிட்டு சும்மா தான இருக்க? பேசும் போதே கேட்க மாட்டியா நீ? ஆமா அதுக்குள்ளே இன்னைக்கு நீ ஏன் பேக்டரி விட்டு வந்த?…” என்று ஆரம்பிக்க,
“இதெல்லாம் அநியாயம்டா…”
“அதெல்லாம் நியாயம் தான். நானும் இன்னைக்கு வரலை. பொறுப்பா பார்த்துக்குவன்னு உன்னை நம்பி ஒப்படைச்சேன் பாரு…” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு திரும்பியவன்,
“ஒட்டு கேட்கறது குட் ஹேபிட் கிடையாது பாலா…” என்றான் அவளின் நிழலை கண்டு கண்டுகொண்ட விதமாய். மெல்ல எட்டி பார்த்தவள்,
“ஆனா நான் கேட்கறதை தான் நீங்க கண்டு புடிச்சாச்சுல. அப்போ தெரிஞ்சே கேட்கறது தான். நோ ஒட்டு…” என்று சொல்லிவிட்டு கை கழுவ செல்ல,
“கொழுப்பு…” என்றான் அவனும்.
மறுநாளே சூர்யா தனது தொழிலை பார்க்க செல்ல பாலா மட்டுமே வீட்டில் இருந்தாள். கல்லூரிக்கு செல்லாத நாட்களில் நடந்தவைகளை கேட்டு தெரிந்து அதில் மூழ்கி போக அடுத்த இரண்டு நாள்கள் நொடியில் கரைந்துபோனது போல தான் சென்றுவிட்டது.
அதற்கு மறுநாள் காலை அலுவலகத்திற்கு செல்லும் முன்பே பாலாவுடன் தனது வீட்டிற்கு வந்தவன் அவளை விட்டுவிட்டு சாப்பிட்டு கிளம்பிவிட்டான்.
“நீ வா பாலா நாம சாப்பிடலாம்…” என அர்ச்சனா அழைத்ததும் இருவருமாய் உண்டு முடிக்க அப்போது தான் சாப்பிட வந்த அஸ்வினி பாலாவை கண்டதும் முகம் மாறி நிற்க பாலாவும் அவளே பேசட்டும் என்பதை போல இருந்துகொண்டாள்.
“வா அஸ்வி, இப்போ கொஞ்சம் முன்னாடி தான் உன் அண்ணனும், அண்ணியும் வந்தாங்க. சரி, சரி நீ வந்து சாப்பிடு…” என மகளுக்கு எடுத்து வைக்க அஸ்வினி எதுவும் பேசவில்லை.
அதன்பின்னர் பாலாவும் சிறிது நேரம் அர்ச்சனா கேட்பதற்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்க அஸ்வினியின் பார்வை பார்த்தும் பாராமல் பாலாவின் உடையையும், காதில் தொங்கிக்கொண்டிருந்த தோடையும் பார்த்துக்கொண்டு இருந்தது.
“அஸ்வி என்ன பன்ற? ஒழுங்கா தட்டை பார்த்து சாப்பிடு…” என அர்ச்சனா அதட்ட,
“எனக்கு போதும். பசிக்கலை. நான் போறேன்…” என்று எழுந்துகொள்ள,
“ஆன்ட்டி, நானும் ரூம்ல இருக்கேன். திங்க்ஸ் எதையும் எடுத்து அடுக்கலை இன்னும். போய் எடுத்து வைக்கனும். கொஞ்சம் நோட்ஸ் எடுக்கனும்…” என்று எழுந்துகொள்ள,
“நான் வந்து ஹெல்ப் பண்ணட்டுமா பாலா? இல்லன்னா அஸ்வியை கூட வச்சுக்கோ. உதவியா இருக்கும்…” என அர்ச்சனா கேட்க,
“இல்லை, வேண்டாம் ஆன்ட்டி. எனக்கு என் வேலையை நான் பார்த்து தான் பழக்கம். அதோட மண்டேல இருந்து காலேஜ் போகனும். ரெண்டு ரிசப்ஷன் ஆடர் வேற பெண்டிங்க்ல இருக்குது. அதுக்கு டிஸைன் பண்ணனும்…” என்று சொல்லிக்கொண்டே போக,
“ஓஹ், ஹ்ம்ம்…” என்று மட்டுமே சொன்னார் அர்ச்சனா.
அவருக்கு பாலா கல்லூரிக்கு செல்வதை பற்றி ஒன்றுமில்லை. ஆனால் இந்த குடும்பத்தின் மருமகள் ஆன பின்பும் இப்படி டிஸைன் செய்துகொடுக்க வேண்டுமா? என்ற எண்ணம். அதை சொல்ல முடியாமல் தவிக்க அஸ்விக்கோ ஆர்வம் பொங்கியது.
பாலா எப்படி டிஸைன் செய்வாள் என்று தான் ஏற்கனவே பார்த்திருந்தாளே. கூட இருந்தால் நேரம் போவதே தெரியாது. இதில் அஸ்வினிக்கும் ஆர்வம் அதிகம் என்பதால் மனதிற்குள் ஆசை பொங்கியது. ஆனாலும் அதனை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“வரேன் ஆன்ட்டி…” என சொல்லியவள் பின்,
“ஆன்ட்டி உமா ஆன்ட்டியை பார்க்கனும் தானே?…” என கேட்க,
“ஆமாம்மா…” என்றவர் பதில் சொல்லும் முன்னர்,
“நீங்களே சொல்லுவீங்கன்னு பார்த்தேன். அதான் நானே கேட்டுட்டேன்…” என்றாள் பாலா.
“இல்ல பாலா, உமா உத்தமன் அண்ணாவோட அக்கா வீட்டுக்கு ஏற்காடுக்கு போயிருக்காங்க. நேத்து தான் ஈவ்னிங் போனாங்க. வர ரெண்டு நாள் ஆகும். உமாவுக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும் தானே?…”
“ஓஹ், அப்படியா?…”
“ஆமா, அதான் நீ வந்ததும் ஒன்னும் சொல்லலை. இல்லைன்னா நானே கூட்டிட்டு போயிருப்பேன்…” என்று சொல்ல,
“சரிங்க ஆன்ட்டி. நான் மேல இருக்கேன்…” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
“ஏன் அஸ்வி, பாலா தனியா எல்லாத்தையும் செய்யனுமே? ஒரு வார்த்தை நான் சொன்னதுக்காகவேணும் சரின்னு சொல்ல வேண்டியது தானே?…” என்று சொல்ல,
“ப்ச், பசிக்குது. சாப்பிட விடுங்களேன்…” என அஸ்வினி எரிச்ச்சலில் பேச,
“இப்பத்தான் போதும், பசிக்கலைன்னு சொன்ன?…” என கேட்க,
“இப்போ சாப்பிடவா வேண்டாமா?…” என்ற அஸ்வினிக்கு கண்ணில் நீர் கட்டியது. ஏனோ அழுகை வந்தது. அதை பார்த்த அர்ச்சனாவும் உருகிவிட்டார்.
“சரிடா, சரிடா. இப்ப என்ன சொல்லிட்டேன் அம்மா? நீ சாப்பிடு…” என்று அவளை சாப்பிட வைக்க அஸ்வினிக்கு உணவு இறங்கியபாடில்லை.
மாடிக்கு வந்த பாலாவுக்கு மலைப்பாய் இருந்தது. அர்ச்சனா உதவுகிறேன் என கேட்டதும் வறட்டுகௌரவமாய் தானே செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தாகிற்று. ஆனால் தனியாக நிச்சயம் செய்ய முடியாது என மருண்டு நின்றாள்.
உடனே மோகனாவிற்கு அழைத்தவள் அவர் மறுமுனையில் எடுக்க லேட் ஆனதும் மீண்டும் மீண்டும் அழைக்க அவர் எடுக்கவே இல்லை.
கட்டிலில் போனை தூக்கி போட்டு அப்படியே தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட மீண்டும் அவளின் எண்ணிற்கு அழைப்பு வர என்னவென்று கூட பார்க்காமல் அப்படியே அட்டென் செய்து,
“உனக்கு எத்தனை தடவை கூப்பிடறதும்மா? போன் பண்ணினா ஒரு ரிங்க்ல எடுக்கமாட்டியா? எப்பவும் பக்கத்துல தான் வச்சிருப்ப? இன்னைக்கு என்னவாம்?…” என இடைவிடாது பேசியவள்,
“என்னால முடியலை. எல்லா ட்ரெஸயும் எடுத்து வைக்க முடியாதும்மா. நீ வரியா? எனக்கு மலைப்பா இருக்குது இத்தனையும் பார்க்க. நீன்னா ஐடியா குடுப்பா தானே? வாம்மா. ப்ளீஸ். செல்லம்ல…”
சிணுங்கலுடன் சில முத்தங்களையும் லஞ்சமாய் தந்தவள் கொஞ்சலில் இறங்க மறுபக்கம் யாரோ சிரிப்பை அடக்குவதை அப்போது தான் கவனித்தாள்.
“ம்மா…” என சந்தேகமாய் அழைக்க,
“அலர்ட் ஆகிட்ட போல? இதை பேசுறதுக்கு முன்னாடியே பண்ணிருந்திருக்கனும் பாலா…” என்றவனின் குரலை கேட்டவள் மொபைலை பார்த்தாள்.
“நம்பர் செக் பண்ணிட்டியா? என்னோடது தான்…” என்றவன்,
“இன்னைக்கு ரூம்க்கு வாட்ரோப் வரும். அதோட உன் புக்ஸ் வைக்க ஷெல்பும். அதை சொல்ல தான் கால் பண்ணேன். பார்த்து அட்டன் பண்ண மாட்டியா பாலா? இதுல முத்தம் வேற?…” என கேலியுடன் கண்டிக்க,
“நான் பேசினா கட் பண்ணிட்டு திரும்ப கூப்பிட்டிருக்கனும். இல்லையா நாந்தான் பேசறேன்னு நீங்க க்ராஸ் பண்ணிருந்திருக்கனும்…” என்று அவனையே குற்றம் சாட்ட,
“அதுசரி, நீ எங்க கேப் விட்ட? படபடன்னு பொரிஞ்சு தள்ளின. உன்னை எப்டித்தான் மோகனாக்கா பார்த்தாங்களோ?…”
“அதான் இனிமே நீங்க பார்த்துக்க போறீங்க இல்ல. அப்போ தெரிஞ்சுப்பீங்க…” என்றாள் பாலாவும். அவளின் பதிலில் சத்தமின்றி சிரித்துக்கொண்டவன்,
“ஓகே, உன்கிட்ட பேச எனக்கு நேரமில்லை. நானும் வெட்டியா இல்லை. வேலை இருக்குது பாலா…” என்று சொல்லும் பொழுதே பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அதில் சூர்யா பல்லை கடித்தான். ‘இவ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறா’ என்று புலம்பியபடி மீண்டும் அழைக்க அவளும் எடுத்ததும்,
“என்னால உங்க வேலை கெட்டு போக வேண்டாம். அதான் கட் பண்ணேன்…”
“கட் பண்ணும் போது சொல்லிட்டு பண்ணனும்னு கட்டர்சி கூடவா தெரியாது?…” என அவளை மேலும் அவன் பேச,
“அதான் தெரியாதுன்னு தெரிஞ்சிருச்சுல…”
“ப்ச், பாலா, பாலா. சின்ன விஷயத்துக்கெல்லாம் இத்தனை ரியாக்ட் பண்ணனுமா?…” என ஆற்றமாட்டாமல் கேட்க பாலா மௌனமாகிவிட்டாள்.
“என்ன டல் ஆகிட்டியா?…” என்றவன்,
“இங்க பாரு பாலா. உனக்கே தெரியும் நான் இத்தனை காமா பேசறவன் இல்லை. ஆனாலும்…” என்று சூர்யா சற்று இடைவெளி விட,
“ஓகே, இனிமே இப்படி பண்ணலை. கட் பன்றப்போ சொல்லிட்டு பன்றேன். இப்போ கட் பன்றேன். நீங்க உங்க வேலையை பாருங்க. கோவமா எல்லாம் சொல்லலை. சும்மா எப்பவும் போலவே தான் சொல்றேன். பை…” என சொல்லி வைத்துவிட பத்து நிமிடங்கள் கடந்திருக்காது மீண்டும் சூர்யாவே அழைத்தான்.
“இப்பவும் நீங்களா தான் கூப்பிட்டிருக்கீங்க…” என எடுத்ததும் அவள் சொல்ல,
“போன் எடுத்தா ஹலோ சொல்ற பழக்கமும் இல்லை போல…” என்றான் வம்பிழுப்பதை போல.
“என்னென்ன பழக்கம் பழகனும்னு சொல்றீங்க? மொத்தமா சொல்லுங்க. கத்துக்க முயற்சி பன்றேன்…”
இதையும் பாலா சாதாரணமாக தான் சொன்னாள். கிட்டத்தட்ட விளையாடுவதை போல. ஆனால் கேட்டவனுக்கு ரசிக்கவில்லை.