பழக்கவழக்கங்கள் என்றதுமே தனது குடும்ப வழக்கங்கள் வரிசையாய் ஞாபகம் வந்தது. கண்டிப்பாக அர்ச்சனா அதற்கு ஆரம்பிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பாலாவால் முடியுமா? இதுதான் அவனின் யோசனை.
“லைன்ல இருக்கீங்களா? இதுவும் பழக்கமோ? கால் பண்ணிட்டு பாதி பேச்சுல சைலன்ட் ஆகிடறது?…” என பாலா சிரிக்க,
“இருக்கேன். எங்கயும் போகலை. உன் கூடதான் இருக்கேன். பேசிட்டு இருக்கேன்…” என்றான்.
“வேலை இருக்குன்னு சொன்னீங்களே?…”
“ப்ச், நான் விட்டாலும் நீ விடமாட்டியோ? ரிலாக்ஸா பேச விடுடி…” என்றான் அவன்.
“இப்பலாம் அடிக்கடி டி…” என பாலா முணுமுணுப்பாய் சொல்ல,
“ஏன் பிடிக்கலையா? ஆனா வான்ட்டடா சொல்லலை. தானாவே வருது…” என விளக்கம் போல அவன் சொல்ல,
“ம்ம்ம்…” என்று மட்டுமே பதில் அவளிடத்தில்.
“பாலா, நான் இதுவரைக்கும் இப்படி யார்ட்டையும் பேசினதில்லை…”
“ஹ்ம்ம்…”
“வெற்றிட்ட கூட…” என்றதும் பக்கென்று பாலா சிரிக்க,
“பேசும் போது டிஸ்டர்ப் பண்ணாத…” என்றான் கோபமாய்.
“ஹ்ம்ம்…”
“யாரையும் சமாதானம் செஞ்சதும் இல்லை. பழக்கமும் இல்லை…”
“அப்போ நீங்களும் பழக வேண்டியது நிறைய இருக்குன்னு சொல்லுங்க…”
“அடங்கு பாலா. பேசிட்டு இருக்கேன்ல…”
“ஹ்ம்ம் பேசுங்க பேசுங்க…” என சொல்ல,
“என்ன நக்கலா? ஒரு வேலை கூட பார்க்க முடியலை உன்னை வச்சுட்டு…” என்றவன்,
“வேலையை பாருங்கன்னு போனை கட் பண்ணிடாத உடனே? அதை பார்க்க வெற்றியை அனுப்பிட்டேன்….” என்றான் அவசரமாய்.
அவனின் அந்த அவசர விளக்கமும் பேச்சும் அத்தனை பிடித்தது அவளுக்கு. புதுவித உணர்வை அளிக்க கண்மூடி அப்படியே சாய்ந்தமர்ந்தாள் அவனின் பேச்சை கேட்டுக்கொண்டே.
“அம்மாக்கிட்ட வாட்ரோப் வருதுன்னு சொல்லிடறேன். எப்படியும் ஆஃப்டர்நூன் வந்திரும். வரவும் உள்ள வைக்க சொல்லு. நானும் வந்து உனக்கு ஹெல்ப் பன்றேன்…” என்று சொல்லிமுடிக்க பாலாவிற்கு வியப்பும், சிரிப்புமாய் இருந்தது.
“பாலா, சிரிச்சியா?…” என்று கண்டுபிடித்தவன்,
“பாவமாச்சே, புள்ளை புலம்பறாளேன்னு ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா நக்கலு…” என்றவன்,
“சாப்ட்டு ரெஸ்ட் எடு. இப்போ போனை கட் பன்றேன்…” என்று அவளின் பதிலை கேட்காமல் வைத்தவன் மனமோ,
‘நான் இப்படியெல்லாம் இருந்ததில்லைடி பாலா. மேரேஜ் லைப் இப்படித்தான் இருக்குமோ?’ என தலையை அழுத்திக்கொண்டான். வீட்டிலிருந்து போன் வந்தால் கூட அலட்சியம் செய்தவனுக்கு பாலாவிடம் அப்படி இருக்க முடியவில்லை.
‘என்னவோ போடா சூர்யா. ஒன்னும் சரியில்ல’ என சொல்லி சின்னதாய் சிரித்துக்கொண்டான்.
சூர்யா சொல்லியதை போலவே மதியம் வாட்ரோப் வந்து பிக்ஸ் செய்துவிட்டு சென்றுவிட அன்று சூர்யா வரவும் வெகு நேரம் ஆனதால் முடிந்தளவுக்கு பாலாவே அனைத்தையும் எடுத்து அடுக்கியிருந்தாள்.
இன்னும் சிலவற்றே இருக்க இரவு உணவு நேரம் தாண்டி வந்தவன் அவள் செய்துகொண்டிருந்த வேலையை பார்த்துவிட்டு முறைப்புடன் கீழே சாப்பிட சென்றான்.
அவளிடம் எதுவும் பேசவில்லை. சொல்ல சொல்ல கேட்காமல் ஒற்றையாய் அவள் செய்திருக்க ‘மதிக்கவே மாட்டாளா என்னை?’ என்ற கோபம் பொங்கியது.
சாப்பிட்டு முடித்து வந்தவன் வந்ததும் படுத்துவிட பாலாவும் ஒன்றும் பேசவில்லை. அவன் கோபமாக இருக்கிறான் என்று மட்டும் அவளுக்கு தெளிவாய் புரிந்தது. ஆனால் தன்னால் தான் என்று புரியவில்லை.
வேலையில் எதுவும் கோபமோ என்று தான் நினைத்திருந்தால் அவள். அதனை கொண்டு பேசாமல் இருக்க அது இன்னும் அவனை எரிச்சல் மூட்டியது.
“ப்ச், முதல்ல இந்த வேலையை தள்ளி வச்சுட்டு பேசாம படுத்து தூங்கு. பயங்கர கோவத்துல இருக்கேன். நான் தூங்கனும். நீ எடுக்க வைக்கன்னு நடக்கற சத்தம் உன் கொலுசு சத்தம் எனக்கு டிஸ்டர்ப்பா இருக்குது…” என்றான் ஆவேசத்துடன்.
‘இவள் எப்படி தான் சொல்லியதை மீறலாம்’ என்கிட்ட கோபமும், ஒற்றையாய் இத்தனையும் செய்திருக்கிறாளே என்கிற ஆற்றாமையும் ஆவேசமாய் வெளிப்பட கையில் இருந்த புத்தகங்களை சத்தமின்றி கீழே வைத்தாள்.
‘பெரிய பிரச்சனை தான் போல. பேசாம படுத்துடுடி பாலா’ என்று நினைத்துக்கொண்டே சென்று படுக்க போக அவளை முறைத்தபடி தலைக்கு கையை கொடுத்து படுத்துக்கொண்டான்.
கட்டிலருகே வந்தவள் அமைதியாய் அப்படியே நிற்க இன்னும் என்னதான் இவளுக்கு என பார்த்தவன்,
“என்ன, உனக்கு தனியா தாலாட்டு பாடனுமா? என்ன சொன்னாலும் அதுக்கு அகைன்ஸ்ட்டா தான் எல்லாம் பன்றது. படு பேசாம…” என கத்த முணுக்கென்று கண்ணீர் முட்டியது பாலாவுக்கு.
“இங்க பாருங்க. என்ன கோபமா இருந்தாலும் ஏன் என்கிட்டே காட்டறீங்க? சும்மா இப்படி கத்தாதீங்க…” என்றதும்,
“பின்ன பேசாம படுன்னா பார்த்துட்டே நிக்கற. வேற என்ன சொல்ல?…”
“தூங்கு, படுன்னா. அது தூக்கம் வரலை. அதான்…” என்றாள் அவளும் லேசாய் விசும்பியபடி.
“ப்ச், உன்னோட…” என்று கையை பிடித்து இழுக்க,
“ஒன்னும் வேண்டாம். நானே தூங்கிப்பேன்…” என்று சொல்லி கட்டிலோரத்தில் குறுகி படுத்துக்கொள்ள விளக்கை அணைத்துவிட்டு தானும் உறங்க நினைத்தான்.
நினைக்கத்தான் முடிந்தது. முடியவில்லை. சுத்தமாய் உறங்க முடியவில்லை. கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டான்.
‘இவ கழுத்தில தாலி கட்டினதுல இருந்து என் தூக்கமே போச்சு’ என உள்ளுக்குள் புலம்பத்தான் முடிந்தது அவனால்.
அரைமணிநேரம் சென்றிருக்கும். அவனின் மொபைலுக்கு அர்ச்சனா அழைத்துவிட இந்த நேரத்தில் ‘ஏன்?’ என்று எடுத்தான்.
“என்னம்மா இது? தூங்கிட்டிருக்கேன்….” என அதே காட்டமான குரலில் கேட்க,
“என்னப்பா அதுக்குள்ளே இன்னேரமே தூங்கிட்டியா?…”
“இதை கேட்கத்தான் கால் பண்ணுனீங்களா?…”
“அதுக்கில்லை, பாலா இன்னும் சாப்பிடலை. அதான் உனக்கு கூப்பிட்டேன்…” என்று சொல்ல படக்கென்று எழுந்தமர்ந்தான்.
“என்ன?…” என கேட்டுக்கொண்டே விளக்கை போட்டவன் தன்னருகே படுத்திருந்தவளை பார்க்க,
“என்ன என்ன? அவ நீ வரவும் சாப்பிடறேன். பசிக்கலைன்னா. நீயும் வந்து ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு போய்ட்ட…”
“இதை நான் கீழே வந்தப்பவே சொல்ல வேண்டியது தானே?…” என்று இன்னும் கடுப்புடன் கேட்க,
“ப்ச், உன்கிட்டயும் அப்படியே சொல்லிட்டாளோன்னு நினைச்சேன். அதான் கேட்கலை…” என,
“ப்ச், சரி நீங்க போய் படுங்க. நான் பார்த்துக்கறேன்…” என்றவன் போனை வைத்துவிட்டு பாலாவை பார்க்க கண்ணீர் கோடுகள் இமை மீறி கன்னத்தில் வழிந்து காய்ந்திருந்தது.
“ப்ச்…” என்று தன்னையே நொந்துகொண்டவன் எழுந்து கீழே செல்ல அர்ச்சனா இன்னும் அங்கேயே இருந்தார்.
“என்ன சூர்யா, எங்க பாலா? சாப்பிடலையா?…” என கேட்க தலையை சொரிந்தபடி,
“ம்மா, அவளுக்கு ஹாட்பேக்ல பேக் பண்ணி தாங்க. அப்படியே ப்ளாஸ்க்ல பாலும். வேலை பார்த்துட்டே தூங்கிட்டா. நானும் கேட்க மறந்துட்டேன். இப்ப நீங்க சொல்லவும் தான் எழுந்து வந்தேன்…”
“என்ன தூங்கிட்டாளா?…” என்றவர் மகனை அதிசயமாய் பார்த்தவர்,
“நீ கொண்டு போறியா?…” என்றார் மீண்டும் சந்தேகமாய்.
“ஆமா ஆமா. எடுத்து குடுங்க. அதான் வந்து நிக்கறேன்ல…” என்றான் சற்று சங்கடத்தோடு.
“அட இதுல என்னப்பா இருக்குது? எனக்கு சந்தோஷம் தான். இரு தரேன்…” என்றவர் அனைத்தையும் பேக் செய்து தர அவனும் அவளுக்கான உணவை எடுத்து வந்தான்.
டேபிளில் வைத்தவன் அவளை அப்படியே எழுப்பி அமர வைக்க தூக்கத்தில் அவன் இழுத்த வேகத்தில் பதறி போனாள் பாலா.
“என்ன என்ன? சூர்யா. சூர்யா…” என்று பதட்டமாய் அவன் படுத்திருந்த இடத்தை துழாவியபடி அழைக்க,
“ஹேய் நான் தான் பாலா, நாந்தான்ம்மா…” என்று அவளின் கன்னம் தட்டி ஆசுவாசப்படுத்த,
“ஓஹ்…” என்றவள் நன்றாக கண்திறந்து பார்த்து தன் முன்னே நின்றவனை பார்த்து முறைத்ததோடு அதே வேகத்தில் அவனின் வயிற்றில் குத்தி பின்னே தள்ளினாள்.
“வேலையும் பார்க்க விடல, சாப்பிட்டியான்னும் கேட்கலை. தூங்கவும் விடமாட்டியா? போடா…” என்று மீண்டும் அருகே வந்து கன்னத்தை பற்ற போனவனை திரும்பவும் தள்ள,
“ஸாரி, ஸாரி, ரியலி ஸாரிடா. பாலா. டேய் ஸாரிடா….” என்றவனின் எந்த கெஞ்சலும் அவளை அசைக்கவில்லை. அருகே வர வர அவனை அடித்து துரத்திக்கொண்டே இருந்தாள்.
“ஹேய் இத்தனை அடிக்கிறதுன்னா பிளாட்லையே அடிச்சு, எவ்வளவு வேணாலும் சத்தமா திட்டியிருக்கலாம்ல. இங்கனா வெளில கேட்டாலும் கேட்டுடும்டி…” என்றவனின் கொஞ்சல், கெஞ்சல் எதுவும் அவளின் மண்டைக்குள் இறங்கவில்லை.
அப்படி ஒரு பசி, விட்டால் மயங்கி இருந்திருப்பாள். காலை இருந்து பார்த்த வேலை வேறு அவளை சோர்வடைய செய்திருந்தது.
“உனக்கு டிபன் கொண்டு வந்திருக்கேன். வா சாப்பிடலாம்…”
“போ, என்னை கேட்டியா நீ சாப்பிட போகும் போது? எனக்கும் வேண்டாம்.போ…” என, அவன் கெஞ்ச கெஞ்ச இவள் மிஞ்ச சிறிது நேரம் அவள் தள்ளவும் இவன் அள்ளவுமாகவே செல்ல,
“இப்ப என்ன செய்யனும்ன்ற? வேணும்னா என்னை இன்னும் நாலு அடிச்சுக்கோ. நாளைக்கு என்னை கேட்காம நீ மட்டுமே போய் சாப்பிட்டுக்கோ. இப்போ நான் சொல்றதை கேட்பியாம்…” என பேசி பேசி தன் வயிற்றில் அவளின் முகத்தை புதைத்துக்கொள்ள பாலாவும் கை போட்டு இறுக்கிக்கொண்டாள்.
“ரொம்ப பசிச்சிடுச்சு. தூங்க சொல்லிட்டீங்க. அதான்…”என அவளும் முணங்க சூர்யாவின் மனது பாகாய் கரைந்தது.
“ஸாரிடாம்மா…” என்றான் வாய் ஓயாமல் அவளின் கன்னம் தட்டிக்கொண்டே.
வாழ்நாளில் இத்தனை மன்னிப்பு யாரிடமும் கேட்டிருக்கமாட்டான். அவளிடத்தில் கொஞ்சமும் வெட்கம் பாராது மண்டியிட்டு மன்னிப்பை கேட்க பாலாவும் இறங்கி வந்தாள்.
“இப்படி கேட்டுட்டே இந்த சாப்பாடும் ஆறிடும். எனக்கு இறங்காது…” என அதற்கும் குறை சொல்ல,
“அதுக்குத்தான் ஹாட்பேக்ல பேக் பண்ணி கொண்டு வந்தேன்…” என சொல்லி அவளுக்கு எடுத்து வைக்க இடியாப்பமும், சொதியும் சுட சுட இருந்தது.
அவன் எடுத்து வைத்ததை பாலா வேகமாய் சாப்பிட அவளை பார்த்தபடி தனக்கு பாலை ஊற்றிக்கொண்டான்.
“சாப்பிட்டு பாலை குடி…” என்றதும் தலையசைத்தவள் சாப்பிட்டு முடிக்க அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தான்.