நிலா – 18
பாலா சாப்பிட்டு முடித்ததும் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கீழே செல்ல போக,
“வெளில வச்சுடு. மார்னிங் எடுத்துப்பாங்க…”
“இப்படி வச்சா அதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்களா உங்க வீட்டுல?…”
“வாட்? உங்க வீடா?…” என அவன் முறைக்க அவளும் முறைத்தாள்.
“இனி இதுதான் உனக்கும் வீடு. இப்படி உங்க வீடுன்னு சொல்லி பேசாத. புரியுதா?…” என்றதற்கு பாலா தலையை ஆட்ட,
“எதுவுமே நானா தான் கேட்டு தெரிஞ்சுக்கனுமா உன்கிட்ட? நீயா சொல்லமாட்டியா பாலா? அத்தனை திமிரா உனக்கு? இவன்கிட்ட ஏன் சொல்லனும்னு நினைக்கிறியோ?…” என அவன் கேட்க ‘என்ன கேட்க வருகிறான்’ என புரியாமல் பார்த்தாள்.
“படுன்னு சொன்னா இன்னும் சாப்பிடலைன்னு சொல்லமாட்டியா நீ? ஒருவேளை அம்மா கால் பண்ணி சொல்லாம இருந்தா நானும் விட்டிருந்திருப்பேன். நீ சொன்னா தான எதுவுமே தெரியும் எனக்கும்…”
“என்னை எங்க பேசவிட்டீங்க? கோபமா வந்தீங்க, கீழே போனீங்க, திரும்ப வந்து தூங்குன்னு சொல்லிட்டீங்க…”
“ப்ச், என் பேச்சை கேட்காம உன்னை யாரு இதை எல்லாம் எடுத்து தனியா அடுக்க சொன்னா?…”
“அப்போ கோபம் என் மேல தான்…”
“ஆமா…” என்றான் சூர்யா. இப்படி சொல்லவும் அவனை முறைத்துவிட்டு படுத்துக்கொள்ள,
“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். கண்டுக்காம போனா?…”
“இது அர்த்தமே இல்லாத கோபம்னு அர்த்தம். அப்போ நான் சும்மாவே இருக்கறதா? எனக்கும் பொழுது போகனும்ல…”
“அதான் பொழுதானதும் இவ்வளவு டயர்ட் ஆனயோ? நான் தான் வரேன்னு சொல்லியிருந்தேன்ல…”
“அடடா, காலையில பேசும் போதே வேலை அதிகம்னு சொன்னீங்க. ஆபீஸ்ல இருந்து வர நேரமாகும்னு வெற்றி மாமாட்ட பேசும் போது சொன்னாங்க…”
“அவன்ட்ட ஏன் பேசின?…”
“எனக்கு பொழுது போகனும்ல. அதான் மாத்தி மாத்தி எல்லார்ட்டயும் பேசிட்டே இதை அரேன்ச் பண்ணினேன். அப்போ தான் மாமாட்ட பேசும் போது அவங்க சொன்னாங்க. நானும் எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னு தான். டயர்டா வருவீங்க…”
“சரி சாப்பிட்டிருக்கலாம்ல…” என்றான் காரத்துடன்.
“எல்லாரும் சாப்பிட்டாச்சு. தனியா எப்படி சாப்பிடுவீங்க? அதான் வரவும் கம்பெனி குடுக்கலாமேன்னு வெய்ட் பண்ணேன்…” என்றவள்,
“நானே எல்லாத்தையும் அடுக்கினதை பார்த்து அப்ரிஷேட் பண்ணலைன்னாலும் பரவாயில்லை. அப்படி அவ்வளவு கோவமா பேசிருக்க வேண்டாம்…” என்றாள் சின்ன குரலில் சுருங்கிவிட்ட முகத்துடன்.
அவள் பேசுவதையே பார்த்தபடி தலையசைத்து கேட்டு அமர்ந்திருந்தவன் தானும் கொஞ்சம் அதிகமாகவே கோபப்பட்டுவிட்டதில் வருந்தினான்.
“ஆமா, உன்னோட நைட் ட்ரெஸ் மாத்திக்கலை?…” என்றான் உடனே அதிமுக்கிய சந்தேகமாக.
“எல்லாமே வெற்றி மாமா வீட்டுல இருக்குது. இங்க நைட் போட நைட்டீசும், ஃபுல் பேண்டும், டிஷர்ட்டும் இருக்குது. எல்லாம் புதுசு. அம்மா எடுத்து வச்சது. இங்க நான் அரைகுறையா போட கூடாதாம்…” என்று சுவாதீனமாய் சொல்லிவிட்டு நாக்கை கடித்தவள் அவனை பார்க்க,
“அரைகுறையா? அப்படின்னா?…” என்று விஷமத்துடன் சிரித்தான் சூர்யா.
“அன்னைக்கு வெற்றி மாமா வீட்டுல நீங்க போட்டிருந்தீங்கள்ள. அதான் அரைகுறை…” என்றாள் அவனுக்கு குட்டும் விதமாய்.
“சொல்லிக்கோ. இனி அப்படித்தான். எல்லாமே அப்படித்தான். நீயும் போடேன், நான் வேண்டாம்னா சொல்றேன்…” என்று சொல்லி இன்னும் சிரிக்க,
“வேண்டாம், இப்ப நான் டென்ஷன் ஆகிடுவேன்…” என எச்சரித்தாள்.
இப்படியே பேசிக்கொண்டே இரவு பொழுது ரம்யமாய் மாறியது.
அடுத்த நாளில் காலை அவளை எழுப்புவதற்கே அத்தனை கஷ்டமாய் இருந்தது சூர்யாவிற்கு. ஐந்தரை மணிக்கே எழுந்து குளித்து முடித்து வந்தவன் ஆறுமணி வரை பார்த்துவிட்டு அவளை எழுப்பினான்.
“காலேஜ் இங்க இருந்து பக்கம் தானே? அட்லீஸ்ட் ஒரு எழரைக்காச்சும் எழுந்துக்கறேனே? தூக்கமா வருது…” என அரை உறக்கத்தில் அமர்ந்து கெஞ்ச சூர்யாவிற்கு மனதே இல்லை.
ஆனாலும் அவளை பார்த்தபடியே ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்க பாலாவும் அதற்கு மேல் அவனை படுத்தாமல் எழுந்து சென்று குளித்துவிட்டு சுடிதாரில் வந்தவள்,
“அடுத்து என்ன செய்யனும்?…” என்றாள் அவனிடத்தில்.
“பாலா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. அதுலயும் நீ இப்படி கேட்கறது…”
“எனக்கு தெரியாதுல. சொல்லி குடுங்க…” என்றாள் ஏற்றுக்கொள்ளும் விதமாக.
இதுவே அவன் திமிராய், அதிகாரமாய் சொல்லியிருந்தால் நிச்சயம் அதனை கேட்டிருக்கமாட்டாள் தான். இந்த சூர்யாவை பிடித்ததே. அதனால் கொஞ்சமே கேட்கலாம் என்று இறங்கி வந்தாள்.
இன்னொன்று மோகனாவின் அறிவுரை. அங்கே அப்படி இருக்காதே இப்படி செய்யாதே என்று மூக்கால் அழுதுகொண்டே மகளிடம் பேசியிருக்க தலை சுற்றத்தான் செய்தது.
“பாலா, கீழே போகலாம் வா…” என அழைத்து செல்ல,
“ஹ்ம்ம்…” என்று உடன் சென்றாள்.
முதலில் பூஜையை முடித்துவிட்டு அதன் பின்னரே காபி தரப்பட வாங்கி குடித்தவள் பின் சூர்யாவுடன் அந்த வீட்டை ஒட்டி இருக்கும் ஹோட்டத்தில் அவனுடன் நடந்தாள்.
“எல்லாரும் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் எல்லாம் முடிச்சுட்டு தான் குளிக்க போவாங்க. இங்க உல்ட்டா…” என்று சொல்ல,
“என்ன செய்ய? நான் கோபாலசுவாமிக்கு மகனா பிறந்துட்டேனே?…” என சூர்யாவும் கிண்டலுடன் சிரிக்க தூரத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டு நின்றாள் அஸ்வினி. தங்கையை பார்த்தவன் பின் பாலாவிடம் திரும்பி,
“அஸ்வி உன்கிட்ட பேசறாளா?…” என கேட்டான்.
திடீரென அப்படி கேட்கவும் ஏன் எதற்கு இந்த கேள்வி என புரியாமல் பாலாவும் தூரத்தே நின்ற அஸ்வினியை அப்போது தான் பார்த்தவளாக,
“ஏன் கேட்கறீங்க? என்ன விஷயம்?…” என,
“பேசறதா இருந்தா வந்திருப்பா. இல்லையா அங்க இருந்தே உனக்கு ஒரு ஹாயாவது சொல்லியிருப்பா. பூஜைல கூட சாமி கும்பிடற மாதிரில இருந்தா. அதான்…” என கேட்க,
‘மூளைக்காரன்டா நீ’ என அவனை எண்ணிக்கொண்ட பாலா அஸ்வினியை திரும்பி பார்த்துவிட்டு,
“நான் மண்டேல இருந்து காலேஜ் போகலாம்னு இருக்கேன்…”
“ஹ்ம்ம், போய்ட்டு வா…”
“இன்னும் ரெண்டு ஆடர் வேற டிஸைன் பண்ணி தரேன்னு வாங்கிருக்கேன்…”
“வெல். தாராளமா பண்ணு…”
“அதுக்கு திங்க்ஸ் வாங்கனும். என்னோட ஸ்கூட்டி அங்க வெற்றி மாமா வீட்டுல இருக்குது…”
“உன் மாமன்ட்ட சொன்னா அவனே கொண்டு வந்துட போறான். அதுக்கென்ன?…” என்றவன் நேரமாவதை உணர்ந்து,
“ஓகே நான் போய் பேக்டரிக்கு கிளம்பனும். நேரமாகுது. வா. நீ சாப்பிட்டு தூங்கனும்னா தூங்கு பாலா…” என்றுவிட்டு உள்ளே செல்ல பாலாவும் அவனை தொடர்ந்து சென்றாள்.
காலை உணவை முடித்துக்கொண்டு சூர்யா கிளம்பிவிட பாலாவும் தனது வேலையில் ஆழ்ந்து போனாள். அர்ச்சனா அதிகமாய் அவளை நெருக்கவில்லை. இன்னும் சற்று நாள் போகட்டும். தானாகவே தெரிந்துகொள்வாள் என்று விட்டுவிட்டார்.
கோபாலசுவாமி கேட்டதற்கு கூட இனியாவது அவளை போட்டு இம்சிக்க வேண்டாம். தானாக சரியாகட்டும். வற்புறுத்த வேண்டாம் என வேண்டுதலாய் சொல்ல அவரும் ஒன்றும் பேசவில்லை.
அந்த வார இறுதியில் மோகனா குடும்பத்துடன் வந்துவிட அன்று தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் பற்றி அனைவரையும் வைத்தே பேசி முடிவு செய்தனர்.
மோகனாவும் சீர்வரிசை பற்றி கேட்க அவர்கள் விருப்பம் போல என்ன செய்ய வேண்டுமோ செய்துகொள்ளுங்கள் என்று கோபாலசுவாமி சொல்லிவிட்டார்.
அன்று மாலை அவர்கள் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் உமாவும் உத்தமனும் வந்திறங்கினார்கள்.
பாலாவை அழைத்துக்கொண்டு அர்ச்சனா செல்ல உமா வா என்று சொல்லியதோடு சரி பொதுவாய் இருந்தார். முகம் சுழித்தும் பேசவில்லை. அதிகமாக பாலாவிடம் ஒட்டிக்கொள்ளவும் இல்லை. வந்த பெண்ணிற்கு உபசரிப்பு நிறைவு தான்.
உமாவின் அகங்காரம், ஆணவம் அனைத்தும் பெண் சென்றதோடு சென்றுவிட்டிருந்தது. அதிலும் தான் செய்த செயலில் வீரியம் வேறு. உயிர்பயம், கணவர், குடும்பம் என்று நிறையவே யோசித்திருந்தார்.
அதனை கொண்டு ஒரு அசாத்திய மௌனம் அவரிடத்தில். முன்பிருந்த உமாவாக இருந்திருந்தால் நடப்பதே வேறு. இப்போது அப்படி அல்லவே. நிறையவே மாற்றம் அவரிடத்தில் உத்தமனின் பேச்சும், ஆறுதலும் அவரை அமைதியாக மாற்றியிருந்தது.
யாரையும் வெறுக்கவும் இல்லை. யாரையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவர் அவரின் நிலையில் இருந்துகொள்வதென்ற முடிவில் இருக்க அர்ச்சனாவிற்கு இந்தளவிற்கு உமாவின் மாற்றம் திருப்தியே.
பயந்துகொண்டே தான் பாலாவை அவர் அழைத்து சென்றது. ஆனால் பயந்ததை போல எதுவும் நடக்கவில்லை. பாலாவிடமும் இன்முகமாகவே பேசி அனுப்ப பாலா சென்றதும் அர்ச்சனா தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் பற்றி உமாவிடம் சொல்ல அவரும் ‘செய்யலாமே’ என முழுமனதாய் சொல்லிவிட வேறென்ன வேண்டும் இவர்களுக்கு?
மறுநாளில் இருந்து கல்லூரிக்கு செல்ல வர என பாலாவின் பொழுதுகள் சென்றால், சூர்யாவின் வேலைகளும் அவனை விழுங்கியது.
புதிதாய் ஒரு ஆடர். கார் ஸ்ட்ரியரிங் தயாரிப்பதில் இது இன்னும் பெரிய ஆடர். அதன் வேலைகள் அவனை இன்னும் அதனுள் இழுத்தன.
அன்று தாலி பிரித்து கோர்க்கும் நாள். காலையே வீடு பரபரப்பாகிவிட்டது. அர்ச்சனாவிற்கு உமா உதவியாய் இருக்க அஸ்வினி ஹரிணியுடன் பேச்சில் இருந்தாள்.
கோபால்சுவாமியும் ஹரிணியின் கணவனுமாக பேசி முதலில் ஹரிணியை குடும்பத்துடன் பேச வைத்தனர்.
அதனோடு சம்பந்திகளிடம் பேச்சுவார்த்தை போக இப்போது அவர்களின் கோபம் முன்பு போல இல்லை என்றாலும் கொஞ்சம் காது கொடுத்து கேட்கும் நிலைக்கு வந்திருந்தனர். ஆனாலும் அதே முறைப்பு தான்.
விடாமல் பேச வைத்தார் கோபாலசுவாமி. எப்படியும் பேச பேச அவர்களும் சரியாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை. இப்போது தானே மகள் பேச மறுப்பு சொல்லாமல் இருக்கின்றனர் என்பதில் இன்னும் தைரியமாய் இருந்தார் அவர்.
“பாலா, கிளம்பிட்டியா?…” என மோகனா போனில் பேசிக்கொண்டு இருக்க,
“நான் இங்க ரெடியாகிட்டு தான் இருக்கேன். நீ என்னம்மா பன்ற? கீழே இருந்துட்டே போன்ல பேசற? சேரி கட்ட ஹெல்ப் பண்ணலாம்ல. மேல வரமாட்டேன்னு அவ்வளவு பிடிவாதம்…” என்று திட்டிக்கொண்டு இருந்தாள் பாலா.
காலையே மோகனாவும் குடும்பத்துடன் வந்துவிட முதலில் உமாவை பார்த்து நலம் விசாரித்துக்கொண்டார். உமாவும் பொத்தாம்பொதுவாக பதில் சொல்லிவைத்து லேசாய் சிரித்தபடி நகர்ந்துவிட்டார்.
“உமா, இன்னும் பாலாவை தவிர அவங்க வீட்டுல யாருக்குமே தெரியாது. பாலாவும் எதுவும் சொல்லலை. நீ எப்பவும் போலவே இரு…” என அர்ச்சனா சொல்ல பாலாவின் மீது ஒரு நல்ல அபிப்ராயம் உருவானது உமாவிற்கு.
அதன் பின்பே கொஞ்சம் நார்மலாக இருந்தார். அஸ்வினி வெற்றியை பார்ப்பதும் வேலையில் இருப்பதை போலவுமே இருக்க அவன் பேச முயலவில்லை.
‘என் வீட்டு பெண் இங்கே வாழ வந்தால் பிடிக்காதா? அத்தனை இளக்காரமாக போனதா உனக்கு?’ என்ற கோபத்துடனே எட்டி நின்றுகொண்டான் அவன்.
அஸ்வினியிடம் தானாக சென்று பேச மனம் வரவில்லை. ஆனால் ஜெயஸ்ரீ அப்படி தள்ளி எல்லாம் நிற்கவில்லை.
கூட கூட சென்று கலகலப்பாய் பேசிக்கொண்டிருக்க அவளின் பேச்சில் உமாவுமே மனம் விட்டு சிரித்தார். அஸ்வினியும் ஜெயஸ்ரீயிடம் நன்றாகவே பேச வெற்றி கவனித்ததை போல சூர்யாவும் தங்கையை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
“எல்லாம் ரெடி சூர்யா. நீ போய் பாலாவை கூட்டிட்டு வா…” என்ற அர்ச்சனா,
“நீயும் வேஷ்டி மாத்திக்கோ…” என்றும் சொல்ல, கோபாலசுவாமி சென்று பூஜையில் அமர்ந்தார்.
“என்னம்மா இப்ப ஒருக்க பூஜையா?…” என சூர்யா கேட்க,
“ஹ்ம்ம், ஆமாப்பா. நீ போய்ட்டு வா…” என்ற அர்ச்சனா உள்ளே மற்றதை கவனிக்க சூர்யாவும் மாடி ஏறினான்.
தலையை வாரி கிளிப் போட்டவள் பூவை அப்படியே வைக்கமுடியாது சுற்றி கொண்டையில் சுற்றுவதை போல சுற்றி வைக்க கதவை திறந்துகொண்டு வந்தவனின் பார்வையில் சட்டென ஒரு ரசனையான உணர்வு.
‘கொஞ்சம் அநியாயமா தான் இருக்கா பார்க்கறதுக்கு’ என பார்வை பாலாவை வாரி சுருட்டி கண்களுக்குள் ஒளித்துக்கொள்ள பார்த்தது.
“தேங்க் காட். எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே…” என்றாள் அவனை பார்த்ததும்.
“என்ன ஹெல்ப். உன்னை கீழே கூட்டிட்டு வர சொன்னாங்க. நானும் வேஷ்டி மாத்தனும். சீக்கிரம் சொல்லு…” என துரிதப்படுத்தி தன்னுடைய வேஷ்டியை கபோர்டில் இருந்து எடுக்க,
“இந்த சேரியை கீழே ஒன்னு போல எடுத்து விடனும். அம்மாவை கூப்பிட்டா மேல இந்த ரூம்க்கு வரமாட்டேன்னு சொல்றாங்க. அதான் உங்கட்ட சொன்னேன்…” என்றவள் அவனை பார்க்காமலே காதில் ஜிமிக்கியை எடுத்து மாட்டி முடிக்க சூர்யாவிற்கு சுறுசுறுவென வந்தது.
“என்னது நான் உனக்கு புடவை எடுத்துவிடனுமா? கொழுப்புடி…”
“ஆமா கொழுப்புதான். நீங்கலாம் 90’s கிட்ஸ் மாதிரி. பொண்ணா நான் கிடைச்சதே பெருசு. இதுல ஒரு ஹெல்ப் கேட்டா செய்யறதை விட்டுட்டு ஏன் எதுக்குன்னு கேட்டுட்டு இருக்கீங்க? அப்பறம்…” என்று கேலி பேச,
“ஹ்ம்ம், சொல்லு. இன்னும் என்ன சொல்ல வந்த? சொல்லி முடி. வச்சுக்கறேன்…” என கையில் வேஷ்டியுடன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அவன் முறைக்க,
“நான் சொல்லிருவேன். அப்பறம் உங்களுக்கு தான் மனசு தாங்காது…” என்று சிரித்தவளின் புன்னகை மனதை என்னவோ செய்ய அசையாது பார்த்து நின்றான்.
“ஹலோ என்ன பார்வை? கிளம்ப வேண்டாமா?…” என பாலா கேட்க,
“ஹ்ம்ம், பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரியே இருந்தியா, அதான் எத்தனை கோட்டிங்கோன்னு பார்த்தேன்…” என அவனும் நக்கலாய் சொல்ல,
“இது ஒரிஜினல் கலர்…”
“நான் அக்சப்ட் பண்ணிக்க முடியாது. பொங்கல் வைக்கிற முன்னாடி அந்த உருண்டை பானைக்கு இப்படித்தான் வெள்ளையடிச்சு கலர் கலரா போடு வச்சு பூவை சுத்தி அலங்காரம் பண்ணுவாங்க. அது மாதிரியே ஆப்ட்டா இருக்கு…” என்றவனை கோபமாக முறைத்தவள் எவன் எதிர்பாராத நேரம் தலையில் கொட்ட,
“அடிங்…” என்று அவளை துரத்தி போக கதவை திறந்துகொண்டு வெளியே ஓடிய பாலாவை பிடிக்க முடியாமல்,
“ட்ரம்மு நில்லுடி…” என கத்திவிட்டான் சூர்யா.
வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் இவனின் சத்தத்தில் ஏறிட்டு மேலே பார்க்க படியில் இறங்க ஆரம்பித்திருந்த பாலாவும் திரும்பி பார்த்தவளுக்கு அழுகை முட்டியது.
அத்தனை பேரின் முன்னாலும் அவன் அப்படி கூப்பிட்டது என்னவோ போல் ஆக முகமே வாடிவிட,
“ஸாரி பாலா…” என்றான் சூர்யா.
அவன் ட்ரம் என்ற சத்தம் முதலில் மெதுவாய் ஆரம்பித்து ‘நில்லுடி’ என்றது மட்டுமே கீழே அவர்களுக்கு கேட்டிருக்க அது இருவருக்கும் தெரியாதே. ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி சென்றுவிட சூர்யாவும் ஒன்றும் பேசாமல் அறைக்குள் உடை மாற்ற சென்றான்.
கேலியும் கிண்டலும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அது அவர்களுக்கு இருவருக்கு மட்டுமே இருக்க இன்றோ மொத்த வீடும் பார்த்துவிட்டது.