கீழிருந்த அனைவருக்கும் அவர்களின் இந்த விளையாட்டில் புன்னகை தோன்றியிருக்க மகளை பார்த்த மோகனா,
“என்ன பாலா இது?…” என்று கேட்டு கீழே இருந்த அறைக்கு அழைத்து சென்று ஒன்று போல புடவையை நீவி கட்டிவிட்டார். எதையும் கவனிக்கும் நிலையில் பாலாவும் இல்லை.
பூஜை நல்லபடியாக முடிந்து நல்ல நேரத்தில் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடைபெற அஸ்வினி அதை லைவாக ஹரிணிக்கு காட்டிக்கொண்டு இருந்தாள்.
ஹரிணிக்கு பாலா அண்ணியாக வந்ததில் எந்த ஒரு வருத்தமும் இல்லை. பாலாவை முன்பே பிடிக்கும். அஸ்வினியை போல எல்லாம் எந்த எண்ணமும் இல்லை. அதனால் ஏற்றுக்கொள்ள எந்த தயக்கமும் காட்டவில்லை ஹரிணி.
ஹரிணியே பாலாவிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசியிருக்க அஸ்வினிக்கும் பேசும் ஆசை வந்தது. ஆனால் பாலாவிடம் சென்று தானே பேச அத்தனை தயக்கமாக இருக்க அப்படியே இருந்துகொண்டாள்.
“அஸ்வி, அண்ணி இந்த சேரில க்யூட்டா இருக்காங்கல்ல…” என்று ஹரிணி புகழ்ந்து தள்ள அஸ்வினிக்கும் அதே எண்ணம் தான்.
சடங்கு முடிந்ததுமே அர்ச்சனாவிடம் போனை கொடுத்து ஹரிணி பேசுவதாக சொல்லி அஸ்வினி தர பாலாவிடம் கை மாறியது அந்த போன்.
அதன் பின் பத்து நிமிடங்களுக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்த ஹரிணி தன் கணவனிடமும் தர அவனும் இன்முகமாகவே பேசி அடுத்து சூர்யாவிடம் கொடுக்க சொல்ல ஒரு வார்த்தையும் பேசாமல் அவனிடத்தில் நீட்டிவிட்டு வந்துவிட்டாள்.
அவளின் பாராமுகமும், ஒதுக்கமும் சூர்யாவை கவலைக்குள்ளாக்கியது. ஆனாலும் வீட்டினரின் முன் எதுவும் பேசமுடியாமல் அவன் அமைதியாக இருந்துவிட்டான்.
மதிய உணவை முடித்துவிட்டு மோகனா குடும்பத்துடன் கிளம்பிவிட உமாவும் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கிறேன் என சென்றுவிட வீட்டினர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
“நீங்களும் போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்கம்மா…” என பெண்களை அர்ச்சனா அனுப்ப அஸ்வினி இடத்தை விட்டு அகல போன நேரம்,
“அஸ்வி நில்லு…” என்றான் சூர்யா.
“சொல்லுங்க அண்ணா…” என அண்ணனின் பக்கம் பார்த்து நிற்க கோபாலசுவாமி என்னவென்பதை போல பார்த்தார்.
“நீ ஏன் பாலாட்ட பேசறதில்லை?…” என்று கேட்க அர்ச்சனாவும், பாலாவும் ‘எதற்கு இப்போதிது?’ என்று பார்த்தனர்.
“ஹ்ம்ம், சொல்லு. இன்னைக்கு வெற்றி வீட்டுல கூட நீ சரியா பேசலை. வெற்றிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை. என்ன நினைச்சுட்டு இருக்க நீ? சொல்லு இப்போ…” என்றான் கடுமையாக.
கோபாலசுவாமி மகனின் பேச்சு எதிலும் தலையிடவில்லை. அவன் கேட்பதும் தவறாக தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டார்.
“சூர்யா ஜெய்க்கிட்ட கூட நல்லா தான் பேசினாப்பா…” என அர்ச்சனா மகளுக்காக வர,
“ம்மா, உங்களுக்கு தெரியாது. ஜெய் இவக்கிட்ட பேசினா. இவ பதில் தான் சொன்னா. நான் கவனிச்சுட்டு தான் இருந்தேன்…” என அவன் காட்டமாய் சொல்ல வாயை மூடிக்கொண்டார் அர்ச்சனா.
“கேட்கறேன்ல. பதில் பேசு அஸ்வி. உனக்கு நல்லா தெரியும் வெற்றியும், மோகனாக்காவும் எனக்கு எத்தனை முக்கியம்ன்னு. நம்ம குடும்பத்து அளவுக்கு நான் ப்ரியம் வச்சிருக்கற இன்னொரு குடும்பம் அவங்களோடது. நீ என்ன பண்ணிட்டிருக்க?…” என கேட்க அஸ்வினி அழுதுவிட்டாள்.
“பாலா இப்போ என்னோட வைய்ப். நானும் பார்த்திட்டு தான் இருக்கேன். பேச நேரம் இல்லைன்னு தான் நானும் இருந்தேன். இல்லைன்னா என்னைக்கோ பேசிருப்பேன். ஆனா இன்னைக்கு நீ பண்ணினது டூ மச். அப்படி என்ன வீட்டுக்கு வந்தவங்களை மதிக்காம முகத்தை காட்டறது?…”
சூர்யா பேச ஆரம்பித்து அத்தனை எகிறு எகிற மகளுக்காக அர்ச்சனா கலங்கி நிற்க கோபாலசுவாமி பேசட்டும் அப்போதாவது சரியாகட்டும் என்று தான் இருந்தார்.
தானே அத்தனையையும் தள்ளி அவர்களை குடும்பமாக ஒன்றிணைத்த பின்பு இதென்ன பழக்கம் என்ற கோபம் அவருக்கு.
அவருக்கடுத்து இந்த குடும்பத்தை ஆள போகிறவன் மகன். அவன் பேசுவது தான் நல்லது என்று நினைத்தார். ஒருவகையில் பெருமையாகவும் இருந்தது மகன் உறவுகள் அருமையுடன் பேசுவது.
“சொல்லு அஸ்வி. இத்தனை கேட்கறேன், அழுதுட்டே இருக்க?…” என சத்தமிட அஸ்வினி மெதுவாக பாலாவின் பக்கம் வந்தவள்,
“பாலா…” என வாய் தவறி சொல்ல,
“அஸ்வி…” என அதற்கும் அவன் இரைய,
“போதும்ங்க. எந்த ஒரு உறவையும் கட்டாயப்படுத்தி ஏத்துக்க வைக்க முடியாது. அவங்களுக்கு நான் அண்ணியா இருக்கறது கஷ்டம்னா அதை மாத்த முடியாது. அவங்களால முடிஞ்சது என்னோட பேசாம இருக்கறது. அதையாவது செய்யனும்னு நினைக்கறாங்க. செய்யட்டும்…”
“இல்ல அண்ணி…” என அஸ்வினி அழைக்க அவளை தீர்க்கமாக பார்த்த பாலா,
“உங்களோட பேசமாட்டேன்னு நான் என்னைக்குமே சொன்னதில்லை. அப்படி நடந்துக்கிட்டதும் இல்லை. இப்போ நீங்க வந்து பேசினாலும் நான் கண்டிப்பா பதில் பேசுவேன் தான். ஆனா அது வெறும் வார்த்தையா மட்டுமே தான் இருக்கும். மனசுல இருந்து இருக்குமான்னு தெரியலை…”
“கொஞ்ச நாள் ஆகவும் இதுவும் சரியா போகும். அப்போ பார்த்துக்கலாம். அதுக்குன்னு உங்க அண்ணன் சொன்னார்ன்னு வந்து பேசறது எனக்கே ஏத்துக்க முடியாது. அதனால உங்க விருப்பப்படி இருங்க…” என்று சொல்லிவிட,
“இல்லை அப்படி இல்லை…” என அஸ்வினி மறுத்து பேச,
“கல்யாணம் முடிஞ்சு இங்க வந்ததும் என்னோட அம்மா எல்லாரும் விட்டுட்டு போன பின்னால நான் கொஞ்சம் தைரியமா இருந்தேன்னா அதுக்கு கண்டிப்பா அர்ச்சனா ஆன்ட்டியும், நீங்களும் தான். ஆனா அன்னைக்கு சாப்பாடு தரேன்னு எறிஞ்சுட்டு போன மாதிரி நீங்க போனது இன்னும் என்னால மறக்க முடியலை…”
பாலா சொல்லவும் அதிர்ந்துவிட்டனர் குடும்பத்தினர். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. பாலாவும் பேச்சின் தீவிரத்தில் உளறிவிட அஸ்வினி நடுங்கி போனாள்.
“நீங்க அன்னைக்கு பேசாம இருந்திருந்தா நானே கூட உங்களை பார்த்து பேசிருந்திருப்பேன். ஆனா நீங்க செஞ்சது என்னை ரொம்ப காயப்படுத்திருச்சு. உங்களை புரிஞ்சுக்கவும் முடியுது. இதை இப்படியே விடுங்க. சரி ஆகும் போது ஆகட்டும்…” என்றவள் சூர்யாவை பார்த்து,
“கட்டாயத்தால ஏதுக்க சொல்லி பேசினா வெறுப்பு தான் மிஞ்சும். இப்படி செஞ்சு அவங்க இன்னும் என்னை வெறுக்கற மாதிரி செய்ய வேண்டாம். ப்ளீஸ்…” என்றவள் அங்கிருந்து சென்றுவிட அதன் பின் சூர்யா அஸ்வினியை ஒரு வாட்டு வாட்டி எடுத்துவிட்டான்.
அர்ச்சனாவுக்கும் அதில் ஏகப்பட்ட பேச்சுக்கள். இதை கவனிக்கவில்லையா என்று கேட்டு அவரை ஒரு பிடி பிடிக்க இவை அனைத்தையும் அடக்கப்பட்ட புன்னகையுடன் மெச்சுதலாய் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கோபாலசுவாமி.
“இதுதான் இவளுக்கு லாஸ்ட். மனுஷங்களுக்கு முதல்ல மரியாதை கொடுத்து பழக்குங்க. வீட்டுல இத்தனை பிரச்சனையை வச்சுட்டு புதுசா வந்த பொண்ணை குடும்ப வழக்கத்துக்கு பழக்கறாங்கலாம்…” என கோபமாய் சொல்லியவன் அவசர வேலையாய் கிளம்பி சென்றான் பேக்டரிக்கு.
“இப்பலாம் அண்ணன் அப்பா இருக்கும் போதே ரொம்ப பேசறாங்க. என்னை அழ வச்சுட்டாங்க…” என்று அஸ்வினி தாயிடம் குறைபாட,
“எங்க காலத்துக்கு பின்னால உன்னையும், ஹரிணியையும் கடைசி வரைக்கும் பார்த்துக்க போறது சூர்யா தான். அவன் பொண்டாட்டிக்கும், அவங்க சேர்ந்தவங்களுக்கும் மரியாதை இல்லைன்னா கேட்க தான் செய்வான். அவன் இப்படி இருக்கனும்னு தான் எனக்கும் ஆசை. புரிஞ்சு நடந்துக்கோ…”
கோபாலசுவாமியும் மகளை சொல்லியவராக அர்ச்சனாவை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட அர்ச்சனா தான் அஸ்வினியை சமாதானம் செய்து அவளின் தவறை மெதுவாய் சுட்டி காட்ட,
“எனக்கும் இப்ப பேசனும்னு ஆசைதான்ம்மா. ஆனா நான் பார்த்தா கூட அவங்க பார்க்கறதில்லை…” அண்ணன் விட்ட அதட்டலில் பாலாவிற்கான மரியாதை தானாகவே வந்தமர்ந்தது அஸ்வினியின் பேச்சில்.
“சரியாகிடும், சரியாகிடும்…” என சமாதானம் செய்தார் அர்ச்சனா.
அன்றைய வேலை இழுபறியில் அர்த்த ராத்திரியில் தான் வீடு வந்து சேர்ந்தான் சூர்யா. வரும் பொழுதே பாலா உறங்கி இருக்க அவளிடம் எதுவும் பேச முடியாமல் தானும் படுத்துவிட்டான்.
மறுநாள் கோவிலில் வைத்தும் அவள் கொஞ்சமும் மசியாமல் தண்ணி காட்ட பேசாமல் முகம் திருப்புவளை விட்டு பார்வையை நகற்ற முடியவில்லை அவனால்.
அன்று மோகனாவும், சந்திரனும் தங்கள் ஊருக்கு செல்லவிருப்பதால் கோவிலில் இருந்து வெகுநேரம் கழித்து தான் வீட்டிற்கே வந்தனர். மகளை பேசவே விடாது மோகனா மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இருக்க,
“சத்தியமா உங்கக்கா வாயை பெபிகால் போட்டு ஒட்டறேன் ஒரு நாள்…” என ஜெயஸ்ரீ முறைக்கும் வண்ணம் இருந்தது மோகனாவின் புலம்பல்களும் அறிவுரைகளும்.
அவளுடன் சேர்ந்து அஸ்வினியும், அர்ச்சனாவும் சிரிக்க ஹரிணி அர்ச்சனாவிடம் வம்பிழுத்துக்கொண்டு இருந்தாள் ‘தனக்கு இப்படி எல்லாம் ஏதாவது சொன்னீர்களா?’ என்று.
கோவிலுக்கு செல்வதை போல ஹரிணி தன் கணவனுடன் வந்துவிட்டிருந்தாள் இந்த பூஜையில் கலந்துகொள்ள. வந்ததில் இருந்து அப்படி ஒரு கலகலப்பு பாலாவிடம்.
இடையிடையே அஸ்வினியும் பேச முயற்சி செய்ய பாலாவும் லேசாய் புன்னகைத்தாள்.
கோவிலில் இருந்து கிளம்பி அவரவர் வீட்டிற்கு செல்ல வெற்றி பேக்டரிக்கு செல்ல முடியாதென்பதால் சூர்யா கிளம்பினான். செல்லும் முன்பே,
“ஆட்டமா காட்டற? இன்னைக்கு நான் வர எவ்வளவு லேட்டானாலும் தூங்க கூடாது நீ. தூங்கின அவ்வளோ தான்…” என்று அப்பட்டமாய் மிரட்டிவிட்டு செல்ல பாலாவின் இதழ்களில் புன்னகை ஒளிந்துகொண்டது.
அதற்கும் பதில் சொல்லாமல் அவள் தோளை குலுக்க முறைத்துவிட்டு சென்றான் சூர்யா.
சொல்லியது போலவே வர பத்துமணி ஆக பாலாவும் படுத்துவிட்டாள். வந்தவன் அவள் நிஜமாக உறங்குகிறாள் என நினைத்து கோபத்துடன் சென்று குளித்துவிட்டு வந்தவன்,
“பாலா…” என எழுப்ப அவள் கன் திறக்கவே இல்லை.
கோபமாக பேச போகிறான் என்று நினைத்து அவள் இருக்க அவனின் குரலோ அத்தனை குழைவாய் இருந்தது.
“சத்தியமா அங்க எல்லார் முன்னாடியும் சொல்லனும்னு நினைக்கலை பாலா. சட்டுன்னு வந்திருச்சு. இனிமே அப்படி சொல்ல மாட்டேன். நிஜமா…” என அவளின் கையை பிடித்தபடி பேச அவனின் கையை உதறிக்கொண்டு எழுந்தமர்ந்தவள்,
“அத்தனை பேர் முன்னாடி ட்ரம்முன்னு சொல்றீங்க. நாளைக்கு கேலி பேசி சிரிக்க மாட்டாங்களா? எனக்கு அசிங்கமா போச்சு…” என்று என்று முகம் சுருக்க,
“இதுல என்ன அசிங்கம்? ட்ரம்னாலும் அம்சமான ட்ரம் தான்…” என்று தாடையை பிடித்து சொல்லி சிரிக்க,
“ஒன்னும் கொஞ்ச வேண்டாம். தனியா சொல்லிருந்தா கூட ஒண்ணுமில்லை. எல்லார் முன்னாடியும் சொல்லி…” என்று உர்ரென அமர்ந்திருக்க,
“அப்போ தனியா சொல்லலாம்னா சொல்ற?…” என்றான் இலகுவான குரலில் அவள் மலையிறங்கிவிட்டதை கண்டுகொண்டு.
“என்னை பார்த்தா ட்ரம் மாதிரியா தெரியுது? அவ்வளோ குண்டாவா இருக்கேன்?…” என்று அடுத்து கேட்க,
“குண்டுன்னு ஏன் மீன் பண்ணிக்கற? பப்ளியா, கொழுக்மொழுக்ன்னு, பஞ்சுமெத்தை மாதிரி பொசுபொசுன்னு, மயிலிறகு மாதிரி சாஃப்ட்டா எல்லாம் சேர்ந்து கும்பீஸ்டி நீ. அப்படி காம்ப்ளிமென்ட்டா எடுத்துக்கோ…” என்று சொல்ல,
“என்னது கும்பீஸா? அதுவும் எத்தனை எக்ஸாம்பிள்ஸ்?…” என்றவள் பில்லோவை எடுத்து அவனை மொத்த அவனும் இதமாய் அவளுக்கு திரும்பி திரும்பி முதுகை காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அடுத்த ஒருமாதமும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி நன்றாகவே செல்ல கோபாலசுவாமியின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்த நாளும் விடிந்தது.
“ஒரு ஜாதகம் தான் எங்களோட வாழ்க்கையை தீர்மானிக்குதாப்பா? எங்க அடுத்து நான் எடுக்க போற முடிவு என்னன்னு உங்க ஜாதகத்துல சொல்லுச்சான்னு சோழி போட்டு பாருங்களேன்…” என அவரை நிற்கவைத்து கேள்வி கேட்டவன்,
“ம்மா, இனி இந்த வீட்டுல பாலாவும் நானும் இருக்க மாட்டோம்…” என்று சொல்லியதோடு பாலாவின் அதிர்ந்த முகத்தை கூட பொருட்படுத்தாமல் பொம்மை போல அவளை நகர்த்திக்கொண்டு பிளாட்டிற்கு சென்றான் சூர்யா.