நிலா – 19
அந்த ஒருமாதமும் மிக சுவாரசியமாகவே நகர்ந்தது. ஹரிணியின் புகுந்த வீட்டில் ஓரளவு இறங்கி வந்து தன் பையன் மற்றும் மருமகப்பெண்ணை அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
ஆனாலும் அவர்கள் குடும்பத்தில் ஹரிணியின் மாமியார், மாமனார் மட்டும் வரவில்லை என சொல்லிவிட வற்புறுத்த முடியவில்லை.
மற்ற சடங்குகள் எல்லாம் உறவினர்களை வைத்து செய்துகொள்ள ஓரளவு சுமூகமாகவே முடிவு செய்தனர் இருதரப்பினரும் சேர்ந்து.
இன்னும் இரண்டு நாளில் ஹரிணியை அழைத்து வரலாம் என்றிருக்க அந்த நேரம் பிரச்சனையை கிளப்பினார் ஹரிணியின் மாமியார்.
தாங்கள் சேர்ந்து வருவதாக சொல்லி, தாங்களும் வரவேண்டும் என்றால் பாலா அங்கே இருக்க கூடாதென வறட்டு பிடிவாதத்தில் பேச இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
அவர் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் இருக்க சமாதானம் பேச போன உமா, உத்தமன், அர்ச்சனாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து போனார்கள்.
“என்னதான்மா சொல்றாங்க ஹரிக்கா வீட்டுல? இன்னைக்கு பேச போனீங்களே?…” என அஸ்வி கேட்க உமா தான் பதில் கூறினார்.
“அதை ஏன் கேட்கற? அந்தம்மா ஆட்டமா ஆடிருச்சு. ஹரிணியோடு இங்க எல்லாரும் வரும் போது பாலா இங்க இருக்க கூடாதுன்னு சொல்லுது. எங்களுக்கு என்ன பதில் சொல்லன்னே தெரியலை…” என சொல்ல,
“என்ன அத்தை இது? அதுக்காக பாலாண்ணியை இங்க இருந்து அனுப்ப முடியுமா? அண்ணனுக்கு தெரிஞ்சா இதுக்கு மேல ஆடிருவாங்க…” என அஸ்வினி அர்ச்சனாவின் பயத்தை இன்னும் கூட்டினாள்.
“நான் இதை எப்படி சொல்றது அஸ்வி. என் பொண்ணும் முக்கியம், என் பையனும், மருமகளும் முக்கியம். யாரையும் விட முடியாதே? என்ன செய்ய போறேன்?…” என்று அழுதுவிட அவரை தேற்ற முடியாமல் உமாவும், அஸ்வினியும் அமர்ந்திருந்தனர்.
“இது ஒரு விஷயமா ஆன்ட்டி? அன்னைக்கு நான் வெற்றி மாமா வீட்டுக்கு போறேன். ஒரு நாள் தானே?…” என்றபடி பாலா வந்துவிட அதிர்ந்து போய் எழுந்தனர் அவர்கள்.
“நீங்க வந்ததும் மேல இருந்து பார்த்தேன். நேரா இங்க வந்துட்டீங்களா அதான் உமா ஆன்ட்டியை வெளில போகலாமேன்னு வராங்களான்னு கேட்க வந்தேன்…” என்றாள் பாலா.
“இல்லைடாம்மா, நீ அப்படி செய்ய கூடாது. சூர்யாவுக்கு தெரிஞ்சா இதுக்கு சம்மதிக்க மாட்டான்…” என உமா பேசினார்.
இந்த இடைப்பட்ட நாளில் உமாவுக்கும், பாலாவுக்கும் நல்ல இணைப்பு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உமாவை வைத்து டிஸைன் செய்வதும், அவரிடம் உதவி என்ற பெயரில் அவரை மனசோர்வில் இருந்து வெளிக்கொண்டுவந்து பாலா அவரின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தாள்.
“இந்த டிஸைன் கலர் ஓகேவா ஆன்ட்டி? இதுக்கு இதை கான்ட்ராஸ்ட்டா போடலாமா? எந்த க்ளாத் சரியா இருக்கும்?…” என அவரின் ஆர்வத்தில் அவரை தன்னுடைய உலகத்தில் இயல்பாய் இழுத்திருந்தாள் அவள்.
அதனை கொண்டு ஒரு தனி வட்டம் அவர்களுக்கிடையே உருவானது. அவ்வப்போது அஸ்வினி எட்டிப்பார்க்க முயன்றாலும் பாலா பெரிதாய் கண்டுகொள்வதில்லை.
உடைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க உமாவை அழைத்து செல்லவும் ஆரம்பித்திருந்தாள் பாலா. இந்தளவிற்கு உமா அவளுடன் நெருங்கி இருப்பது கோபாலசுவாமி குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதி தான்.
இப்போதும் ஹரிணி வீட்டில் பாலாவிற்கென அர்ச்சனா பேசமுடியாமல் வாயடைத்து இருக்கும் பொழுது உமா தான் பேசினார். மகளின் எண்ணங்களில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருந்தார்.
“நோ ப்ராப்ளம் ஆன்ட்டி, அவங்களை சமாளிச்சுக்கலாம். ஏதாவது சொல்லிக்கலாம். காரணமா இல்லை…” என தேற்ற அர்ச்சனா மனம் குமுறினார்.
‘திருமணமாகி ஒரு மாதம் தான் கடந்திருக்கிறது. அதற்குள் இப்படி எத்தனை விஷயத்திற்கு தான் இந்த பெண்ணை நோகடிப்பார்கள்’ என்று கண்ணீர் விட,
“அச்சோ, இதென்ன இப்படி ஒரு அழுகை?…” என அர்ச்சனாவை அணைத்துக்கொள்ள,
“எனக்கு அங்க என்ன பேசறதுன்னே தெரியலை பாலா. உன்னை பேசும் போது கேட்கவும் முடியலை. பேசறாங்கன்னு அதை தாங்கிக்கவும் முடியலை. நீயும் இருக்கனும், ஹரிணியும் வரனும். வீட்டு மருமக நீ இல்லாம எப்படிம்மா?…” என கேட்க,
“சப்போஸ் அன்னைக்கு எனக்கு முக்கியமான எக்ஸாம்ன்னு நினைச்சுக்கோங்க. இல்லைன்னா அந்த மூணு நாட்கள்ன்னு நினைச்சுக்கோங்க…” என்றாள் இலகுவாக.
முதல் வாரம் தான் சூர்யா அந்த நேரத்தில் பாலாவை கூட்டிக்கொண்டு பிளாட்டிற்கு சென்று அங்கே இருந்துவிட்டு வந்தான்.
அர்ச்சனா எத்தனையோ சொல்லியும் சூர்யா கேட்கவில்லை. இதுபோன்ற நேரங்களில் எல்லாம் வீட்டு பெண்கள் இன்னும் அங்கே தள்ளி இருந்து ஒரு அறையில் தான் முடங்கி இருப்பார்கள்.
பாலாவால் அப்படி இருக்க முடியாதென அறிந்தவன் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அதற்கே தங்களை கடிந்தவன், இதை அறிந்தால் அவ்வளவு தான் என நினைத்து அர்ச்சனா பயந்துகொண்டே இருந்தார்.
பயந்ததை போலவே சூர்யாவும் ஆடிவிட்டான். இந்த முறை கோபம் பாலாவின் மீது தான்.
முதல்நாள் வரை அவனுக்கு யாரும் எதையும் சொல்லியிருக்கவில்லை. பாலாவின் பேச்சை கேட்டு அதை பற்றி மூச்சும் விடாமல் இருக்க, விசேஷத்தின் முதல் நாள் இரவு ஜெய்யிடமிருந்து போன் வர பாலாவுடன் அங்கே கிளம்பிவிட்டான்.
ஜெயஸ்ரீக்கு முடியவில்லை என்று சொல்ல சொல்லி பாலா அழைக்க சொல்ல அப்படியே அவளும் சொல்ல நம்பிவிட்ட சூர்யாவும் அவளை கொண்டுசென்று விட்டுவந்து இங்கே வீட்டில் வைபவத்தில் கலந்துகொண்டான்.
ஹரிணி கணவனின் குடும்பத்தாரும் வந்து கலந்துகொண்டு சாப்பிட்டு முடித்து கிளம்பும் முன் ஹரிணியின் மாமியார் அர்ச்சனாவிடத்தில்,
“இது மாதிரியே எப்பவும் இருங்க. நாங்க என்னைக்கு அந்த பொண்ணை கண்ணுல பாக்க கூடாது. உங்க பொண்ணையும் நாங்க நல்ல பார்த்துக்குவோம். அதை விட்டுட்டு எதாச்சும் பண்ணினா உங்க பொண்ணை மறந்திருங்க. அவளும் இந்த வீட்டை, சொந்தத்தை மறக்க வேண்டியது தான்…” என்று பூடகமாக சொல்ல அவரின் பின்னே வந்த சூர்யா அதை கேட்டுவிட அர்ச்சனா அரண்டு போனார்.
‘எதுவும் பேசிவிடாதே’ என பார்வையால் கெஞ்ச பல்லை கடித்துக்கொண்டு அமைதியாய் இருந்தவன் அவர்கள் கிளம்பி சென்றதும் அஸ்வினியை தான் தனியே அழைத்தான்.
“அவங்க என்ன பேசறாங்க?…” என கேட்டதும் பயத்தில் அஸ்வினி அத்தனையையும் சொல்லிவிட,
“அப்போ இந்த வீட்டுல நான் யாரும்மா?…” என நேராக வந்து தாயிடம் கேட்டவன் கோபாலசுவாமியிடம்,
“நீங்களும் எப்படிப்பா விட்டீங்க? அப்போ ஹரிணி வீட்டுல இருந்து யார் வந்தாலும் இனி பாலா இங்க இருக்க கூடாதுன்னா நான் மட்டும் ஏன்? அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும் என் பையன் தான் முக்கியம்னு எல்லாரையும் எதிர்த்து நின்னு பாலாவை கல்யாணம் பண்ணி வச்சீங்க….”
“இன்னைக்கு அதே பாலாவுக்காக, எனக்காக ஏன் பேசலை நீங்க? இதை அவளும் என்கிட்டே சொல்லலை. இன்னும் அவளுக்கு என்னலாம் இருக்குது இந்த வீட்டுல?…” என ஆதங்கத்துடன் தந்தையிடம் பேசியவன் கிளம்பி வெற்றி வீட்டுக்கு வர பாலாவும் ஜெயஸ்ரீயும் சேர்ந்து கார்ட்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
பார்த்தவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. கோபமாய் வந்து பாலாவின் கையில் இருந்த கார்ட்ஸை பிடிங்கி வீடெங்கும் விசிறியடித்தான் சூர்யா.
அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத பாலா திடுக்கிட்டு எழுந்து நின்று பார்க்க வேஷ்டியை மடித்து கட்டியபடி அவளை உறுத்துவிழித்துக்கொண்டு நின்றான்.
விசேஷமென மெரூன் நிற சட்டையும், ஹாஃப் வொய்ட்டில் வேஷ்டியும் கட்டியிருக்க நெற்றியில் சந்தனக்கீற்று சகிதமாய் ஆத்திரங்கள் புடைசூழ அவன் நிற்பதென்னவோ அய்யனார் மாதிரியே இருந்தது பாலாவுக்கு.
“போச்சு, பக்கா வில்லன் கெட்டப்…” என ஜெயஸ்ரீயிடம் முணுமுணுத்த பாலா,
“இங்க இந்நேரம் என்ன பன்றீங்க?…” என்று கேட்க,
“ஜெய் நீ உள்ள போ…” என்றான் ஜெயஸ்ரீயை பார்த்து.
“ஆல் தி பெஸ்ட் பாலா…” என்று சிரிப்புடன் அவள் சொல்லி செல்ல,
“வந்து பேசிக்கறேன் உங்களை…” என்று முறைத்தவள் கணவனை பார்த்தாள்.
“சும்மா பொழுது போகனுமேன்னு தான் கார்ட்ஸ் விளையாடிட்டு இருந்தோம். வாங்களேன் சேர்ந்து விளையாடலாம்…” என அவனை அமர சொல்ல சோபாவில் இருந்த மொத்த கார்ட்சையும் தூக்கி விசிறிவிட்டான் அவன்.
“கோவமா இருக்கீங்களா?…” என கேட்டு அவனை பார்த்தவள் ஒடி சென்று தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து தந்தாள்.
“முதல்ல சில் ஆகுங்க…” என நீட்ட,
“பாலா, நான் என்ன கேட்க வந்திருக்கேன்னு தெரிஞ்சும் டைவர்ட் பன்ற நீ…” என்று அவன் பல்லை கடிக்க,
“நான் டைவர்ட் பண்ணினாலும் நீங்க கேட்காம, திட்டாம, சண்டை போடாமலா விட போறீங்க? அதுக்கு தண்ணியை குடிச்சுட்டு பேசலாமேன்னு தான்…” என்று நீட்டியபடியே இருக்க வேறு வழியின்றி வாங்கி குடித்தவன் இருக்கையில் அமர்ந்து தலையை பின்னால் சாய்த்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டான்.
அவனருகே அமர்ந்த பாலாவிற்கு அவனின் கோபம் புரியத்தான் செய்தது. ஆனாலும் இதில் அவள் சொல்வதற்கோ, செய்வதற்கோ ஒன்றுமில்லை என்றுதான் நினைத்தாள்.
“ஏன் இப்படி பன்ற பாலா? என்கிட்டே சொல்லாம செய்யனும்னு ஏன் நினைக்கிற? என்னை நீ கொஞ்சம் கூட கன்ஸிடர் பன்றதே இல்லை…” என்றான் அப்படியே இருந்தவாக்கில்.
“ஹரிணி வீட்டுல எல்லாரும் வந்துட்டு போயாச்சா?…” என அவள் அமைதியாய் கேட்க,
“ப்ச், அவங்க கிளம்பின பின்னால தான் எனக்கே தெரியும். காலையிலையே உன் தகிடுதத்தம் தெரிஞ்சிருந்தா வந்து கூட்டிட்டே போயிருப்பேன்…”
“கூட்டிட்டு போயி?…” என்று அழுத்தமாய் அவள் கேட்கவும் கண்ணை திறந்து பார்த்தவன்,
“அது நம்ம வீடு. நீ அங்க இருக்க உரிமைப்பட்டவ. புரியுதா இல்லையா?…” என்றான் கடுமையாக.
“புரிஞ்சதால தான் நானே கிளம்பிடனும்னு நினைச்சேன்…”
“இது ரப்பிஷ். ஸ்மார்ட்நெஸ் இல்லை…”
“இருந்துட்டு போகட்டும். இது எந்தவிதத்திலும் என்னை அசிங்கப்படுத்தாது. நானே முடிவெடுத்து நானே இங்க வந்தேன். யாரும் பொண்ணு சொல்லுறதுக்கு முன்னாடி, யாரும் என்னை வச்சு ட்ராமா பன்றதுக்கு முன்னாடி. இந்த முடிவு என்னோடது. இதுக்கான மொத்த க்ரெடிட்டும் என்னை சேர்ந்தது….”
“வாட் யூ மீன்?…”
“இப்ப நான் இங்க வராம இருந்திருந்தா ஹரிணி மாமியார் என்னை வச்சு இன்னும் பெரிய ட்ராமா போட்டிருப்பாங்க. இதனால ஹரிணிக்கு கஷ்டம். எனக்கு அசிங்கம். என்னை போக சொல்லுங்கன்னு சொல்ல அவங்க யாரு? இதே வேற வழியில்லாம என்கிட்டே வந்து ஆன்ட்டியோ அங்கிளோ? ஏன் ஹரிணியோ பேசிட்டா?…”
“எனக்கு அது வேண்டாம். அந்த நிமிஷம், நான் வெறுத்து போய்டுவேன். ஏனா இந்த விஷயம் கடைசில இதுல தான் வந்து முடியும். அதான் நானே முடிவு பண்ணிக்கிட்டேன். இந்த முடிவால யாரையும் நான் ப்ளேம் பண்ண அவசியமில்லையே…”
“அப்படித்தான் இருப்பேன்னு என்னால இருந்திருக்க முடியும். அத வச்சு இன்னும் பெருசா க்ரியேட் பண்ண தான் பார்ப்பாங்க. இல்லையா அவங்களே வந்துட்டாலும் என்னை பார்த்து ஏதாவது ஒண்ணை சாக்கு வச்சு பேசி பிரச்சனை செய்ய பார்ப்பாங்க. எனக்கு அவங்க எல்லாம் வரப்போ, இப்படி செய்யறப்போ அன்கம்பர்டபிளா இருக்கும்னு பீல் ஆகும்…”
“அதனால எனக்கு இருக்க வேண்டாம்னு தோணுச்சு. இங்க நான் ஹேப்பியா தான் இருந்தேன். நைட் எல்லாம் நாங்க டிவி பார்த்துட்டு கதை பேசிட்டு, சொல்ல மறந்துட்டேன் நேத்து நைட் நான் மட்டன் பிரியாணி சாப்பிட்டேன்…” என்று சொல்லி கண் சிமிட்ட அவள் பேசியதில் இருந்து சூர்யா வெளிவரவே இல்லை.