நிலா – 20
பாலாவை கேட்டு போன் மேல் போன் வெற்றிக்கும், சூர்யாவுக்கும் வந்தவண்ணமாக இருந்தது சூர்யாவின் வீட்டில் இருந்து.
மோகனாவும், சந்திரனும் அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டதனால் இவை எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஏற்கனவே வெற்றியிடம் அன்று உமாவுடன் மாலுக்கு செல்லவிருப்பதாக பாலா சொல்லியிருக்க அவனுக்கு தெரிந்திருந்தது.
பாலாவை கை தாங்கலாக கூட்டிக்கொண்டு சாலைக்கு வந்த சூர்யா தனது காரை நோக்கி சென்றான். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்க நின்ற வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தனர் காவல்துறையினர்.
காரை காணாது ட்ரைவருக்கு அழைக்க அவர் சற்று முன்னே உள்ள இடத்தில் திருப்பி நிற்பதாக சொல்லவும் அங்கே சென்றான்.
காரில் இருந்த வாட்டர் பாட்டிலை கொடுத்து பாலாவை தண்ணீர் குடிக்க சொல்லி முகத்தை கழுவும்படி தந்தவன்,
“இப்போ ஓகேவா பாலா?…” என்றான் அவளுக்கு சிறிய ஹேன்ட் டவலை எடுத்து தந்து.
“ஹ்ம்ம்…” என்று மெல்ல தலையசைத்தவள் காரில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்.
இன்னமும் தான் தப்பிவிட்டதை நம்பமுடியவில்லை அவளால். உடலில் அந்த பயம் மிச்சமிருக்க கண்ணீர் பொங்கியது. மூடிய விழிகளுக்குள், சூர்யா, வெற்றி, பெற்றோர் என வரிசையாக வந்துகொண்டு இருந்தனர்.
வெற்றிக்கு கால் செய்த சூர்யா பாலாவை பார்த்துவிட்டதையும், அவளை அழைத்துக்கொண்டு அவனின் வீட்டிற்கு வருவதாகவும் சொல்லிவிட்டவன் அர்ச்சனா ஏனைய முறை அழைத்திருப்பதை கண்டு அவருக்கும் அழைத்தான்.
“சூர்யா, பாலா எங்க? பார்த்துட்டியா நீ? எப்படி இருக்கா?…” என அத்தனை பதட்டத்துடன் கேட்க அவரின் பின்னால் அஸ்வினி, உமாவின் குரல்கள் கேட்டது.
“ம்மா, அவளுக்கு எதுவும் இல்லை. வெளிலயே பார்த்துட்டேன். என்னோட தான் இருக்கா….” என,
“அப்பா அவக்கிட்ட போனை குடு சூர்யா…”
“நோ ம்மா. இப்ப எதுவும் பேசவேண்டாம். அவ பயந்துபோய் இருக்கா…”
“சரி, அப்போ கிளம்பி இங்க வாங்க. முதல்ல பாலாவை பார்த்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்…” என்றதும்,
“இல்லம்மா, நான் வெற்றி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் அவளை. அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்…” என்றதும் அர்ச்சனாவுக்கு பேச்சே எழவில்லை.
“அண்ணா, இங்க கூட்டிட்டு வாங்க அண்ணா. அண்ணியை பார்க்கனும்…” என அஸ்வினி சொல்ல,
“நாளைக்கு கூட்டிட்டு வரேன் அஸ்வி. இன்னைக்கு அவளை விடுங்க…” என்று சொல்லி போனை வைத்துவிட,
“அண்ணி, இப்ப என்ன? நாளைக்கு அவளை பார்த்துப்போம். இப்ப பிள்ளைக்கு ரெஸ்ட் தான் தேவை. இங்க இருந்த உங்க பதட்டமே அவளை இன்னும் பயம் காட்டும்னு தான் சூர்யா அப்படி சொல்லியிருக்கலாம்…” என்ற உமா,
“ஏன் இத்தனை வேர்க்குது உங்களுக்கு? இவ்வளவு பயந்து நான் பார்த்ததே இல்லையே?…” என அர்ச்சனாவின் அசாதரணமான முகத்தை கண்டு கேட்க அவரிடத்தில் பதிலே இல்லை.
ஆனால் பூஜையறையில் இருந்த தெய்வத்தையே பார்த்தபடி இருந்தார் அவர். பார்வை வேறெங்கும் செல்லவில்லை. மனம் முழுக்க இன்னுமே பயம் மேலோங்கியது.
பேசி முடித்து காரில் ஏறியவன் வெற்றி வீட்டிற்கு செல்ல சொல்லி ட்ரைவரிடம் சொல்லிவிட்டு பாலாவை பார்க்க இவன் அருகே அமர்ந்ததும் அப்படியே தன்னை போல அவனின் தோளில் சாய்ந்து கைகளை கோர்த்துக்கொண்டாள்.
அவளின் சிறு செயலில் புன்னகை மின்ன பார்த்தவன் தானும் அணைவாய் அவளின் கையை பிடித்துக்கொண்டு,
“பாலா, சியரப் கேர்ள். இதென்ன இன்னும் நடுங்கிட்டு…” என்று அவளின் கன்னம் தட்ட,
“இருந்த இடம் எல்லாம் புகை. எந்தப்பக்கம் போறேன்னே தெரியாத அளவுக்கு ஆளுங்க தள்ளி வெளியே கொண்டு வந்தாங்க. வெளிப்பக்கம் ஏதுன்னே தெரியாம தீ பக்கம் போயிருந்தா…” என்றவளின் பேச்சை நிறுத்துவதை போல அவளின் இதழ்களை விரலால் தடை செய்தவன்,
“மூச், இதை பத்தி இனி பேச வேண்டாம். மறந்திடு…”என்று சொல்லி அவளை நன்றாக அணைத்துக்கொண்டான்.
அதிலேயே எந்தளவுக்கு அவனும் பயந்து போயிருக்கிறான் என்று பாலாவால் உணர முடிந்தது.
“இப்ப நீங்க தான் ரொம்ப பயந்துட்டீங்க போல. நான் இப்போ ஓகே தான்…”
“ஹ்ம்ம்….” என்றவன் மௌனமாகிவிட அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு பாலாவும் ஒன்றும் பேசவில்லை. அவனின் மார்பில் சாய்ந்தபடி கண்மூடிக்கொண்டாள்.
நேராக வெற்றி வீட்டிற்கு வர அவன் ஜெய்யுடன் வாசலிலேயே இவர்களுக்காக காத்திருந்தான். உள்ளே நுழையும் பொழுதே அவளை கட்டிக்கொண்ட ஜெய் அழ ஆரம்பித்துவிட,
“பாலாம்மா…” என தன் அக்கா மகளின் தலையை வருடினான் வெற்றி.
“உள்ள போகலாம்டா…” என்று சூர்யா உள்ளே சென்று அமர பாலாவும் உள்ளே வர அவளுக்கு திருஷ்டி எடுத்தாள் ஜெய்.
“இந்நேரம் என்ன திருஷ்டி?…” என சூர்யா பார்க்க,
“என்னவோ மனசுக்கு பட்டுச்சு. அதான் எடுத்தேன். இது நூலிழைல உயிர் தப்பின மாதிரி தானே? முதல்ல பாலாவோட ஜாதகத்தை பார்க்கனும். என்னவோ மனசுக்கு பட்டுட்டே இருக்குது…” என ஜெயஸ்ரீ சொல்ல,
“நீயும் ஆரம்பிச்சுட்டியா? இது மால்ல நடந்த கோளாறால ஏற்பட்டது. இதுக்கும் பாலா ஜாதகத்துக்கும் என்ன சம்பந்தம்? அப்பா அங்க இருந்த எல்லாருக்கும் பார்க்கனுமா என்ன?…” என இலகுவாய் கேலி பேசியவன் சிறிது நேரம் அந்த கனத்தில் இருந்து வெளிவருவதற்காக ஏதேதோ பேச வெற்றி மடியில் தலை சாய்ந்திருந்தாள் பாலா.
அவளிடம் எதுவோ முணுமுணுத்துக்கொண்டே இருந்தன வெற்றி. அவன் பேசிவைக்கெல்லாம் பாலாவும் பதில் சொல்லிக்கொண்டிருக்க,
“அவளை விடுடா. பேசி பேசி டயர்ட் ஆக்கிடுவ…” என சூர்யா சொல்ல,
“இல்லைண்ணா, அவர் பேசட்டும். அவருக்கு உயிரே இல்லை. ரொம்ப உடைஞ்சு போய்ட்டாரு. பேசட்டும்…” என லேசான சிரிப்போடு கலங்கியபடி ஜெயஸ்ரீ சொல்ல,
“ஹ்ம்ம், இதுக்குத்தான் அங்க போகாம இங்க கூட்டிட்டு வந்தேன். அழுதுடுவான் போல…” என சூர்யா வெற்றியை கேலி பேச அவனை முறைத்தவன்,
“உனக்கு ப்ளைட் 5 ஹவ்ர்ஸ் லேட். என்ன பன்றது?…” என வெற்றி கேட்க சூர்யாவிடம் பதிலில்லை.
அவன் பதில் சொல்லுவான் என பார்த்து இல்லை என்றதும் வெற்றியின் மடியில் இருந்து எழுந்தமர்ந்த பாலா தன்னறைக்கு எழுந்து சென்றாள்.
“பாலா…” என்றழைத்த வெற்றியை,
“இருங்க அவளே வரட்டும்…” என சொல்லிவிட்டு அனைவருக்கும் குடிக்க டீ வைக்க கிளம்பினாள். அங்கிருந்தே வெற்றியை சைகை காண்பிக்க அவனோ கவனியாமல் சூர்யாவுடன் பேச்சில் இருக்க,
“என்னங்க இங்க வாங்க…” என்று சத்தம் குடுக்கவும் தான் எழுந்து உள்ளே சென்றான்.
“உங்களுக்கு தலையில என்னதான் இருக்குது? அவங்க ரெண்டு பெரும் பேசி முடிவு பண்ணட்டும். நீங்க சூர்யா அண்ணாவோட பேசிட்டே இருந்தா அவங்க எப்படி பாலாக்கிட்ட பேசுவாங்க?…”
“அதுக்கில்லை ஜெய், இது முக்கியமான மீட்டிங். கேன்சல் ஆனா நஷ்டம்ன்றதை விட நம்ம நேம், ப்ரான்ட்க்கு ஒரு ப்ளாக் மார்க் மாதிரி ஆகிடும். இந்த ப்ராஜெக்ட் கிடைக்க அவனவன் என்னலாம் தவம் கிடக்கறான்…”
“பாலாவை அனுப்ப முடியாதா?…”
“ப்ச், முடிஞ்சிருந்தா நானே பேசிருப்பேனே. சடனா முடிவானது. இப்ப என்ன செய்யறதுன்னு தான் யோசிக்கறோம்…” என வெற்றி பேசிக்கொண்டு நிற்க சூர்யா எழுந்து பாலாவை தேடி சென்றான்.
பாத்ரூமில் குளிக்கும் சத்தம் கேட்க அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டவன் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அவளின் பதில் தான் இப்பொழுது வேண்டும் அவனுக்கு.
பாலாவின் மனதும் தெள்ளதெளிவாய் இப்போது விளங்கிவிட மனதிற்கு மழை சிந்தும் சுகம். இதை தானே அவனும் விரும்பினான். கதவு திறக்கும் ஓசை கேட்டும் கண் திறவாமல் அப்படியே இருக்க,
“தூங்கறீங்களா?…” என்றாள் அவனின் முன்னே வந்து நின்று.
“ஹ்ம்ம், இல்லை…” என்றவன் அவளை நோக்கி கை நீட்ட ஒரு நொடி தயங்கினாலும் அவனோடு கரம் கோர்த்து அவனருகே அமர்ந்துகொண்டாள்.
“நீ சொல்லு, நான் என்ன செய்யட்டும்?…” என்றான் அவளை பார்த்து.
“என்கிட்டே கேட்டா? எனக்கு தெரியலை. அதுவும் இது உங்க தொழில் சம்பந்தமானது. ஆனா முக்கியமானதுன்னு மட்டும் தெரியுது…” என்றாள் தன் மனதில் பட்டதை.
குளித்து முடித்து ஒரு லாங் ப்ராக்கில் ஈர தலையுடன் அப்படியே அமர்ந்திருக்க சூர்யாவும் எழுந்தமர்ந்தான்.
“ஜெய்ட்ட வெளில கார்ல ட்ரைவர் இருக்காருன்னு சொல்லி அவருக்கு டீ, ஸ்நாக்ஸ் ஏதாவது குடுக்க சொல்லு. நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்…” என்றதும் பாலாவும் சொல்லிவிட்டு சூர்யாவுக்கும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
“உனக்கு?…” என தனக்கு மட்டும் டீயும், கை முறுக்கும் இருப்பதை பார்த்துவிட்டு கேட்க,
“டீ வேண்டாம். புகைல இருந்தது ஒரு மாதிரி இருக்குது. கொஞ்சம் நேரமாகட்டும்…” என்றுவிட சூர்யா அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
“இந்த மீட்டிங்கை அவாய்ட் பண்ண முடியாது பாலா. இதுல இருந்தே உனக்கு புரிஞ்சிருக்கும் தானே எத்தனை இம்பார்ட்டன்ட் மீட்டிங்னு…” என்று ஒவ்வொரு மிடறாய் குடித்தபடி பேச,
“ஹ்ம்ம், ஆமா. புரியுது. இந்த ப்ளைட் கேன்சல் பண்ணிட்டு அடுத்த ப்ளைட்ல போகலாம்னு நான் நினைக்கறேன். நீ சொல்லு. என்ன செய்யட்டும்?…”
“போறதுன்னு முடிவான பின்னால இந்த ப்ளைட் ஏன் கேன்சல் பண்ணனும்? அதுவும் ப்ளைட் இன்னைக்குன்னு பார்த்து லேட் வேற. ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க கிளம்புங்க…”
“நிஜமாவா?…”
“ஆமா, இதுல பொய் என்ன? உண்மையா தான் சொல்றேன்…” என்றாள் வழக்கமான புன்னகையோடு.
“பாலா…” என அவளின் கன்னம் பற்றியவன் லேசாய் கட்டை விரலால் வருடி,
“ஹ்ம்ம், என்ன சொல்ல? எனக்கே போகனும்னு தோணலை. ஆனா போகனுமே. ப்ச்…” என்று கன்னத்தில் பதிந்த கையின் அழுத்தத்தை கூட்டிக்கொண்டே அவன் பேச பேச லேசாய் நெளிய ஆரம்பித்தாள் பாலா இந்த புது உணர்வில்.
“வெளில மாமாவும், ஜெய்யும் இருக்காங்க…” என சொல்ல,
“அதனால என்ன? டோர் லாக் பண்ணிட்டு வா…” என்றான் சின்ன சிரிப்போடு.
அவனின் பார்வையும் இந்த கிசுகிசுப்பான பேச்சும், அவனின் ஸ்பரிசமும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்க செய்ய ஒருவித அவஸ்தையுடன் அவனின் கையை எடுத்துவிட்டாள்.
“ஏன்?…” என்றான் அவளின் முகத்தில் வந்து போன வர்ணஜாலங்களை கண்டு ரசித்தபடி.
“என்ன ஏன்? ஒன்னுமில்லையே…” என படபடப்புடன் வந்த குரலோடு வியர்க்க தொடங்கிய நெற்றியை புறங்கையால் துடைத்தவள்,
“வெளில போகலாம்…” என்று எழுந்துகொள்ள விடாமல் அவளை பிடித்து அமர்த்தியவன்,
“போகலாம், போகலாம். உட்கார் பாலா…” என்று கையை அழுத்தமாய் பற்றிக்கொள்ள,
“என்ன இதெல்லாம்?…” என உருவிக்கொள்ள பார்த்தாள்.
“இதென்னடி வம்பா இருக்கு? பப்ளிக்கா அத்தனை கூட்டத்துக்கும் மத்தியில கட்டிப்புடிச்சு, முத்தம் குடுத்துட்டு இங்க வச்சு வெட்கப்பட்டு என்ன இதெல்லாம்னு கேட்கற?…” என்று வம்பிழுத்தபடி அவனின் கைகள் மீண்டும் அவளின் கன்னத்தை தொடும் முன் எழுந்து வெளியே ஓடிவிட்டாள் பாலா.
“தவிக்க விடறாளே. கும் பீஸ். இன்னும் பத்துநாள் என்னன்னு நான் அங்க இருக்க போறேன்…” என சிரித்துக்கொண்டே தலையை கோதிக்கொண்டவன் குடித்துமுடித்த அந்த டீ கப்புடன் எழுந்து வெளியே வர ஹாலில் வெற்றி மட்டுமே அமர்ந்திருந்தான்.
“பாலா எங்கடா?…” என கேட்டுக்கொண்டே கிட்சனில் சென்று கப்பை வைத்துவிட்டு வர,
“வீட்டுக்குள்ள ரொம்ப ஹாட்டா இருக்காம். அதான் வெளில ஜெய் கூட இருக்கா. லெமன் எல்லாம் பருத்துருச்சு. அதையும் பறிச்சுட்டு இருக்காங்க ரெண்டு பேரும். பாவம் இன்னும் அந்த புகைல இருந்து பாலா மனசு வெளில வரலை…” என வெற்றி கவலையுடன் சொல்ல,
“மோகனாக்காவும், ஜெய்யும் பாவம்டா…” என்றான் சூர்யா அனமுட்டு சிரிப்போடு…”
“ஏன்? ஏன்?…” என வெற்றி கேட்க,
“இல்ல, ரெண்டு லேடீஸை வெளில வேலை செய்ய விட்டுட்டு இங்க நீ சாவகாசமா உட்கார்ந்திருக்க பாரேன். அதான். இன்னும் நீ வளரனும்னு சொன்னேன். எனக்கு சீனியர்ன்னு வெளில சொல்லிடாத…”
“என்னடா பேசற? புரியலையே…” வெற்றி முழிக்க,
“வா போய் எலுமிச்சை பழம், பறிப்போம்னு சொல்றேன். அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம்…” என சொல்ல,
“அப்போ ட்ரிப் கேன்சலா?…”
“அதெல்லாம் இல்லை. இப்போ தான் பேசி கன்பார்ம் பண்ணினேன். இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பினா சரியா இருக்கும்…” என்று சொல்லி அவன் வெளியே செல்ல வெற்றியும் ஒரு பெருமூச்சோடு சேர்ந்து சென்றான்.
பின் நால்வருமாக பேசியபடி பழங்களை பறித்துக்கொண்டு இருக்க வாசலில் இன்னொரு கார் வந்து நிற்கும் சத்தத்தில் வெற்றி எட்டி பார்க்க கேட்டை திறந்துகொண்டு முதலில் வந்தாள் அஸ்வி.