“வெற்றிண்ணா…” என அவனை பார்த்ததுமே சத்தமிட்டுக்கொண்டே வர அவளின் பின்னே அர்ச்சனா, உமா வந்திருந்தனர்.
“வாம்மா அஸ்வினி…” என அவன் முழு பெயரை சொல்லி அழைக்கவும் அஸ்வினியின் முகம் சுருங்கிவிட்ட,
“அஸ்வி சொல்லுங்கண்ணா. நீங்க கூப்பிடறதே இல்லை அப்படி…” என்று அவள் பேசிக்கொண்டிருக்க,
“வெற்றி பாலா எங்க?…” என வந்தார் அர்ச்சனா.
இவர்களை பார்த்துவிட்டு பாலாவும் வந்துவிட அதன்பின் அவளை கையை, தலையை, முதுகை என தடவி தடவி பார்த்து கண் கலங்கினார் அர்ச்சனா.
“என்ன ஆன்ட்டி இதுக்கு போய் அழுதுட்டு? நான் நல்லா இருக்கேன் தானே? உள்ள வாங்க…” என்றவள் உமாவை, அஸ்வினியை வரவேற்று பேசிக்கொண்டிருக்க சூர்யா எதுவும் பேசவில்லை.
உள்ளே அமர்ந்ததும் அவளிடம் நடந்ததை கேட்க ஆரம்பிக்க பாலா சொல்ல சொல்ல அவளின் முகம் மீண்டும் அங்கிருந்து வரும் போது இருந்ததை போலவே மாறிவிட்டது.
அந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருக்க அங்கே இருந்ததை உணர்ந்துகொண்டே அவள் பேச,
“ம்மா, திரும்ப அதையே ஏன் கேட்டுட்டு இருக்கீங்க? வேற பேசுங்க…” என்று சூர்யா சொல்லவும் தான் அந்த பேச்சை விட்டார் அர்ச்சனா.
“சரி சூர்யா, நீயும் கிளம்பு வீட்டுக்கு போவோம்…” என அர்ச்சனா சொல்ல
“இல்லம்மா, நான் இன்னு கொஞ்சம் நேரத்துல கிளம்பிடுவேன். ப்ரோக்ராம் கேன்சல் பண்ணலை. இது போயே ஆகனும்…”
“அப்போ பாலாவை கூட்டிட்டு போறோம்…” என அர்ச்சனா விடாமல் பேச,
“ம்மா, நான் அங்க போய்ட்டா இங்க பேக்டரி, கம்பெனி ரெண்டையும் வெற்றி தனியா பார்த்துக்கனும். சம்டைம்ஸ் லேட்நைட் அவன் அங்க இருக்கனும். ஜெய்க்கு துணையா பாலா இங்க இருக்கட்டும்னு தான் நான் இங்க இருக்கட்டும்னு சொல்றேன்…”
கோபத்தை அடக்கிய குரலில் அவன் பேச அர்ச்சனாவுக்கு முகம் மாறிவிட்டது. அவருக்கு புரிந்தது தன்னுடைய அதிகபட்ச கேள்வியால் அவன் கோபமாகிவிட்டான் என்று.
போதாததற்கு முதல்நாள் நடந்த நிகழ்வுகள், அவன் சொல்லியும் மீண்டும் வற்புறுத்துவதை போல தன்னுடைய பேச்சுக்கள் எல்லாம் மகனின் பொறுமையை சீண்டிவிட்டது என்று நினைத்தவர்,
“சரிப்பா, நீ சொல்றதும் சரிதான். இங்க இருக்கட்டும்…” என்று சொல்லவும் அதன் பின்னர் மற்ற விஷயங்களை பேசிக்கொண்டிருக்க அர்ச்சனா பாலாவை விட்டு நகரவே இல்லை.
அவளின் கையை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டே இருக்க சூர்யா கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. பாலாவிடம் தனியே பேசலாம் என பார்த்து நின்றான். பாலாவும் நேரமாவதை உணர்ந்து சூர்யாவை பார்ப்பதும் அர்ச்சனாவிற்கு பதில் சொல்லுவதுமாக இருந்தாள்.
அவள் வருவதை போல தெரியாததால் உச்சக்கட்ட கோபத்திலும், தவிப்பிலும் இருந்தவன் ட்ரைவர் வந்து அழைத்ததும் தன்னுடைய வாட்ச், மற்றும் பர்ஸ் இரண்டும் உள்ளே இருந்ததால் எடுக்க சென்றான் பாலாவின் அறைக்குள்.
“பாலா, உன்னோட பழைய டிஸைன் புக் தரேன்னு சொன்னியே. வீட்டுக்கு போறப்போ எடுத்துட்டு வந்து காமிக்கறேன்னு. இப்ப எடுத்துட்டு வாயேன். நானும் கிளம்பும் போது மறந்துடுவேன். கொண்டுவா. எனக்கும் நீ அங்க இல்லாத நேரம் பொழுது போகும். ஏதாவது வரைஞ்சு பார்க்க ட்ரை பண்ணுவேன்…”
உமா சமயோசிதமாக இருவரின் பார்வைகளை கண்டுகொண்டு நாசூக்காய் பேசி பாலாவை உள்ளே அனுப்ப பார்க்க,
“போகும் போது நான் ஞாபகப்படுத்தறேன் உமா. அவ இருக்கட்டும்…” என்றார் அர்ச்சனா.
நடந்த விபத்தில் முற்றிலும் அமைதியை இழந்திருந்தார் அவர். அதுவும் கோபாலசுவாமி வரவும் அவரிடம் கேட்க ஏகப்பட்ட விஷயங்கள் வேறு இருக்க இன்னும் அந்த பதட்டத்தில் இருந்து மீளவில்லை அவர்.
“அண்ணி, நான் சொல்றேன்ல. நீங்க பேசாம இருங்க…” என்ற உமா அர்ச்சனா பிடித்திருந்த கையை பிடித்து பாலாவை விடுவித்து,
“நீ என்ன பார்த்துட்டே? போ பாலா…” என்று சொல்லவும் அவளும் எழுந்து வேகமாய் உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவள் எதிரே வந்த சூர்யாவின் மீது மோதி நிற்க அவளை எதிர்பார்த்ததை போல உள்ளிழுத்து கதவை லேசாய் சாற்றியவன் அவளின் பேச்சுக்கள் எதற்கும் அனுமதிக்காமல் அவசரமாய் முத்தம் பதித்தான்.
நொடி பொழுதானாலும் ஆழ்ந்த முத்தம். இருவருமே அதில் லயித்து மயங்க மெல்ல அவளை விடுவித்தவன்,
“ஏர்போர்ட் போய்ட்டு கால் பன்றேன் பாலா. பை…” என்றுவிட்டு மீண்டும் லேசாய் இதழோற்றி அவளை அணைத்துக்கொள்ள இன்னும் கண்களை மூடியபடி நின்றவளை பிரியமுடியாது,
“சீக்கிரம் பை சொல்லு பாலா. நான் கிளம்பனும்…” என்று சொல்ல,
“ம்ஹூம், சொல்ல முடியலை…” என்றாள் மெல்லிய குரலில்.
“பாலா…” என சூர்யா மேலும் பேசும் முன் அவனின் போன் அதிர்ந்தது. வெற்றி தான் அழைத்திருந்தான்.
“சூர்யா, ட்ராபிக் ஆகிடும்டா…” என்று மட்டும் சொல்லி வைத்துவிட மீண்டும் போனை தனது பாக்கெட்டினுள் திணித்தவன்,
“இங்க பாரு பாலா…” என அவளின் முகத்தை இரு கைகள் கொண்டு நிமிர்த்தி,
“பத்தே நாள். வந்திருவேன். சொல்லு பை சொல்லு…” என்று கேட்டு நிற்க,
“ஓகே, பை. பத்திரமா போய்ட்டு சீக்கிரம் வந்திருங்க…” என்று புன்னகையுடன் அவள் சொல்ல,
“தட்ஸ் மை கேர்ள்…” என்றவன் லேசாய் அவளின் மூக்கின் நுனியை கடித்துவிட்டு,
“வா…” என அவளுடன் சேர்ந்தே வெளியே வந்தான்.
“டைம் ஆச்சு, கிளம்பறேன்…” என எல்லோரிடமும் பொதுவாய் சொல்லியவன் பாலாவை பார்த்து தலையசைத்தான்.
சூர்யா கிளம்பி சென்ற பின் இரவு இருந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு தான் அர்ச்சனா மற்றவர்களுடன் கிளம்பினார்.
யு.எஸ் சென்றவனுக்கு நினைவுகள் இங்கே இருந்தாலும் அங்கே வேலைகளும் இழுக்க கிடைக்கும் சொற்ப நேரங்களில் எல்லாம் பாலாவிடம் பேசிக்கொண்டு தான் இருந்தான்.
தான் நினைத்தை போலவெல்லாம் பத்து நாட்கள் எல்லாம் ஆகவில்லை. ஒரு வாரத்த்தில் வந்த வேலை வெற்றிகரமாய் முடிய உற்சாகத்துடன் கிளம்பியவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது யு.எஸ் ஏர்போர்ட்டில்.
அன்று அவன் அதை அறியவேண்டியது தான விதியோ? இது அவனின் விதியோ? இல்லை கோபாலசுவாமியின் விதியோ? பாலாவின் விதியோ?
ஆனால் அத்திருமணத்தின் ஆரம்பப்புள்ளி எதுவென அறிந்துகொள்வது தான் அவன் சந்திக்கவிருக்கும் அடுத்த சோதனைக்கான எச்சரிக்கை என்று விதி உணர்த்த வந்ததோ?
திவ்யாவை பார்த்துவிட்டான். அவனின் கண்ணில் அகப்பட்டவளிடமிருந்து தனது கோபத்தில் அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்டவனுக்கு அதை ஜீரணிக்கவே நேரம் பிடித்தது.
“பிடிக்கலைன்னா சொல்லிருந்தா நானே பேசி இந்த கல்யாணத்தை நிறுத்திருப்பேன். நீயெல்லாம்…” என்று இருக்குமிடம் உணராமல் கோபத்தில் ஆக்ரோஷமாக வார்த்தையை விட,
“இங்க பாருங்க மிஸ்டர் சூர்யா. உங்கப்பா சொல்லி தான் இந்த பிளானே. அவருக்கு பாலாவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். அதுக்காக எங்களை யூஸ் பண்ணிக்கிட்டார். சும்மா திவ்யாவை குறை சொல்லிட்டு இருக்கீங்க? போய் எதுவானாலும் உங்கப்பாட்ட கேளுங்க…” என ராகுல் கோபமாய் பேசிவிட்டான்.
“வாட்? எங்கப்பாவா? வாட் நான்சென்ஸ்?…” என்றவனின் கோபத்தில் நடுக்கத்துடன் திவ்யா நடந்ததையும், ஜாதக விஷயத்தையும் அவனிடம் சொல்ல சொல்ல நம்பமுடியாமல் நின்றான்.
அஸ்திவாரமே நகர்ந்துவிடும் போல இருந்தது அவனுக்கு. நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அப்போதுதான் நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் வரிசைப்படுத்தி பார்க்க அனைத்துமே ஒத்துபோனது.
இதில் திவ்யா செய்த ஒரே விஷயம் கோபாலசுவாமியை மட்டுமே அவள் சொல்லியிருந்தாள் அவர் கேட்டுக்கொண்டதன்படி.
“ஓகே, இதை நான் பார்த்துக்கறேன்….” என்றவன் வேறெதுவும் பேசாமல் நகர போக,
“மாமா மேல கோவப்படாதீங்க ப்ளீஸ். என்னோட சூழ்நிலை…” என்றவள் அவனின் உக்கிரமான முகத்தை கண்டு பேச்சை நிறுத்த,
“ஆளாளுக்கு அவங்கவங்க சூழ்நிலை. மத்தவங்க எப்படி போனா என்ன? அதானே? அதான் நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைச்சுடுச்சே. மத்தவங்களுக்கு, பாலாவுக்கு இப்படி எந்த ஆசையும் இருக்க கூடாதா?…” என்றவன்,
“இதுக்கு மேல பேச எனக்கு இஷ்டம் இல்லை. எனிவே கங்க்ராட்ஸ். இப்போவாவது உண்மையை சொன்னதுக்கு தேங்க்ஸ்…” என சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.
ஏன் வந்தான், எதற்கு வந்தான் எதுவும் தெரியாத திவ்யா அவன் அன்று கிளம்புகிறானா என்றும் கூட அறியாமல் உடனே கோபாலசுவாமிக்கு அழைத்துவிட்டாள்.
மகனுக்கு விஷயம் தெரிந்துவிட்டதில் அதிர்ச்சியாக இருந்தாலும் எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என திண்ணக்கமாக இருந்தார்.
“நீ எங்கம்மா வச்சு பார்த்த?…”
“ராகுல் ப்ரெண்ட்ஸ் எல்லாம் பேமிலியா யு.எஸ் வந்தோம் மாமா. அப்போ தான் பார்த்தேன்…” என மொட்டையாக சொல்லிவைத்தாள் பதட்டத்தில்.
எங்கு வைத்து பார்த்தேன் என்று கூட சொல்ல தோன்றாமல் பயத்துடன் அவள் சொல்ல தான் பேசிக்கொள்வதாக சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
எப்படியும் சூர்யா வர இன்னும் மூன்று நாட்களுக்கு மேல் ஆகுமே என்று கோபாலசுவாமி அசட்டையாக இருக்க யாருக்கும் தெரிவிக்காமல் அடுத்த ஒரு நாளில் வந்து இறங்கிவிட்டான் சூர்யா.
நேராக வீட்டிற்கு வந்தவன் பூஜை அறையில் இருந்த கோபாலசுவாமியை பார்க்க பார்க்க இன்னும் கோபம் மேலேறியது.
“அப்பா, வெளில வாங்க…” என்றான் ஆத்திரம் மிகுந்த குரலில்.
“நீங்க சாமி கும்பிட்டதும் போதும். உங்க நாடகமும் போதும் எந்திச்சு வாங்க…” என்றவன் டீப்பாயில் இருந்த பூ ஜாடியை தூக்கி விசிறியடிக்க கிட்சனில் இருந்த அர்ச்சனா பதட்டத்துடன் வந்தார்.
“சூர்யா, என்னப்பா, எப்போ வந்த?…” என கேட்டவர் சிதறிக்கிடந்த அந்த கண்ணாடி சில்களை பார்த்துவிட்டு,
“என்னாச்சு சூர்யா?…” என்றதும்,
“என்ன பண்ணி வச்சிருக்கார்ன்னு உங்க புருஷன்ட்டையே கேளுங்க. பெரிய ஜோஸியர் மகனோட வாழ்க்கையில எப்படியெல்லாம் தகிடுதத்தம் பண்ணியிருக்கார்ன்னு கேளுங்க…” என்றான் அர்ச்சனாவிடம்.
அமைதியாக எழுந்து வெளியே வந்த கோபாலசுவாமி தோளில் கிடந்த பெரிய சால்வையி இருபுறமும் போட்டபடி வந்தவர்,
“எல்லாம் உன் நல்லதுக்குத்தான் செஞ்சேன் சூர்யா…” என்றார் அமர்த்தலாக.
முகத்தில் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை, எந்த சலனமும் இல்லை. தான் செய்தது தவறில்லை என்பதை போல அத்தனை திடமாக நின்றார்.
“எது நல்லது? யாருக்கு நல்லது?…”
“உனக்கு தான் சூர்யா. என் மகனுக்கு தான்…”
“அப்போ பாலா…” என மகன் கேட்டதும் ஒருநொடி தடுமாறி நின்றார் அவர்.
ஏற்கனவே பாலாவிற்கு ஏற்படவிருந்த விபத்தை பற்றி அர்ச்சனா சொல்லி கேட்டவருக்கும் ஒருநிமிடம் ஆடித்தான் போனது. ஆனால் இப்படி நடக்கும் என்று அவருக்குத்தான் அப்பட்டமாய் தெரியுமே. அப்போதும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.
ஒரு உயிர் ஜனித்துவிட்டால் இந்த கண்டத்தின் வீரியம் குறைய வாய்ப்புள்ளது. அப்போதும் கண்டத்தின் வீரியம் குறையத்தான் வாய்ப்புள்ளது. முழுதாய் நீங்க இன்னும் முட்பாதைகளை கடக்க நேரிடும் என்று அவருக்கு தெரியும்.