நிலா – 21
“பாலா நீ…” என்று அவன் அதிர்வுடன் கேட்டதும் அர்ச்சனா தான் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“நீ வரதுக்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் வந்தா சூர்யா. உன்னையும் பார்த்ததும் நீ சொல்லி வந்தான்னு நினைச்சேன்…”
“நான் வரதை பத்தி யார்ட்டையுமே சொல்லலையே…” என்றவன்,
“வா…” என கை நீட்டி அழைக்க அவள் அசையவே இல்லை.
கேட்ட விஷயங்கள் ஒவ்வொன்றும் தலையில் இடியாக விழுந்திருக்க அதை இன்னும் முழுமையாக நம்பமுடியாமல் விக்கித்து நின்றிருந்தாள்.
“வா பாலா, நாம போகலாம்…” என்று என மீண்டும் சூர்யா அழைக்க,
“அம்மா சொல்லறதை கேளுப்பா. எதுவா இருந்தாலும் பொறுமையா இரு. அதுக்காக வீட்டை விட்டு போகனும்னு முடிவு எல்லாம் எடுக்காத…” என கெஞ்ச,
“ம்மா, இதோட விட்டா ப்ளாட்ல இருப்பேன். வேற ஏதாவது பேசினா அப்பறம்…” என்றவனின் கோபத்தில்,
“இல்லப்பா, இல்ல…” என பதறி அர்ச்சனா தள்ளி நிற்க கோபாலசுவாமியை பார்த்தான்.
“இப்ப கூட பண்ணின தப்பை உங்களால ஒத்துக்க முடியலைல…” என்று ஆத்திரத்துடன் கேட்க,
“நான் இப்பவும் சொல்றேன். உனக்கு நல்லது தான் பண்ணினேன்…” என்றார் நிமிர்ந்து நின்றபடி.
மகன் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னது வலித்தாலும் கொஞ்சமும் அசராது தான் நின்றார். சூர்யா சொன்னதன் முழு அர்த்தமும் அவருக்கு அந்த நேரம் புரியவில்லை.
அவனின் உணர்வுகள் விளங்கவில்லை. எதற்கிந்த பரிதவிப்பு என்று பிரித்தறிய முடியவில்லை அவருக்கு. அவரின் மனதில் தன்னுடைய செயலில் எந்த ஒரு தவறு இருப்பதாகவும் கொஞ்சமும் எண்ணவில்லை.
இப்படி எல்லாம் மனக்கசப்புகள் ஏற்படும், உறவுகளில் விரிசல் உண்டாகும், குடும்பத்தில் நிம்மதி குலையும் என்று எல்லாம் தெரிந்திருந்தாரே. அதனால் இதை எல்லாம் எதிர்பார்த்ததை போல அமைதியாகவே நின்றார்.
காலபோக்கில் இதுவும் சரியாகிவிடும் என்று அத்தனை தைரியமாக இருந்தவரும் விரைவில் உடைந்து மகனின் மன்றாடலில் எத்துனை வேதனையை அடையவிருக்கிறார் என்று அப்போது அவருக்கு புரியவில்லை.
அவர் எதிர்பாராதது மொத்தமாய் குடும்பத்தை விட்டு தனியாக செல்லுவேன் என்றது தான். அதுவும் ஒருவகையில் நல்லதற்கு தான் என்று நினைத்துக்கொண்டவர் பாலாவை திரும்பியும் பார்க்கவில்லை.
அவர் அவளைத்தான் எதிர்கொள்ளமுடியாமல் தன்னை திடமாய் நிலைநிறுத்தி நின்றார். தன்னிடம் அப்பெண் எதுவும் கேட்டுவிட கூடாது என்று உள்ளுக்குள் நினைத்தபடி திண்ணக்கமாக இருக்க சூர்யா பாலாவிடம் வந்தான்.
“இதுவரைக்கும் என் லைப்ல யார்ட்டையும் ஒபீனியன் கேட்டதில்லை பாலா. எந்த முடிவையும் இன்னொருத்தரை எடுக்கவிட்டதில்லை. உனக்கு தெரியும் தானே? பர்ஸ்ட் டைம் உன்கிட்ட யு.எஸ் போறதுக்கு கேட்டேன். இப்போ உன்னோட வாழறதுக்கு கேட்கறேன். உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் நான் ஏத்துப்பேன்…” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க,
“இதுக்கு எனக்கு எந்த தண்டனை வேணும்னாலும் குடு. ஆனா கூடவே இருந்து குடு. அது ஒண்ணுதான் உன்கிட்ட நான் கேட்கறது. ரிக்வெஸ்ட்டாவே கேட்கறேன்…” என்றவன் அவளை நோக்கி கை நீட்ட கண்ணில் இருந்து இறங்கிய கண்ணீரோடு அவனின் கையை பார்த்தவள் விரல்கள் நடுங்கியது.
அந்த சூழ்நிலையை எப்படி அணுகவேண்டும் என்று தெரியாமல் தடுமாறி போனாள் பாலா.
முடிவாம்? எப்படி எடுப்பது? இதில் இன்னும் என்ன இருக்கிறது? திசையறியா காட்டில் வழிதவறிய பிள்ளையென விழிகள் பரிதவிக்க அவனின் முகம் பார்த்து நிற்க தானாகவே அவளின் கை கோர்த்துக்கொண்டான்.
“உனக்கு எதுவும் இல்லை. எதுவும் வரவிடமாட்டேன். வா போகலாம்…” என அவளை தோளோடு அணைவாய் பிடித்துக்கொண்டவன் கொஞ்சமாய் நகர்த்தி கோபாலசுவாமி முன்னால் வந்து அவளை நிறுத்தியவன்,
“இந்த கண்ணீர் உங்களை ஒருநாள் பொசுக்கும். அன்னைக்கு அனுபவிப்பீங்க மத்தவங்களோட கண்ணீரோட வலி என்னன்னு. அன்னைக்கு உங்களை தேத்த கூட ஆள் இல்லாம அனுபவிப்பீங்க…” என்று அவரை எச்சரித்தவன்,
“நீங்களும் ரெண்டு பொண்ணை பெத்தவர் தானே?…” என கேட்கவும்,
“ஐயோ சூர்யா, என்னப்பா இது?…” என்று கதறிவிட்டார் அர்ச்சனா. அவரை வேதனை போங்க அழுத்தமாய் பார்த்தவன்,
“வார்த்தைக்கே இத்தனை கதறலா? அப்போ பாலா?…” என்றான்.
அவனின் உலகம் மொத்தமும் இப்போது பாலா மட்டுமே இருந்தாள். அவளுக்காகவே அவளை வேண்டாம் என்றவன், இப்போது அவளுக்காக மட்டுமே அவள் தான் வேண்டும் என்று ஸ்திரமாய் நின்றான்.
“உங்க பொண்ணுன்னு வாய்வார்த்தைக்கு சொன்னதுக்கே துடிச்சு போறீங்க. இதே மாதிரி அஸ்வியை யாராவது ஏமாத்தி கல்யாணம் செஞ்சா என்ன செய்வீங்க நீங்க? சொல்லுங்க…” என கேட்க கோபாலசுவாமி கண்களை மூடிக்கொண்டார்.
இந்த பேச்சுக்கள் எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை. முகத்தை இறுக்கத்துடன் வைத்துக்கொண்டு அவர் நிற்க,
“இப்படியெல்லாம் நீயே சொல்லாதப்பா. நேத்து தான் உமா அஸ்வினி கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்தா. இப்படி வார்த்தையால நெருப்பை அள்ளி கொட்டாத…” என்று தனது நெஞ்சை பிடித்துக்கொண்டு அர்ச்சனா அழ,
“இத்தனை பேசறீங்க. பாருங்க எப்படி நிக்கறாருன்னு. அப்போ நம்ம வீட்டு பொண்ணுன்னா பத்திரம். இல்லயா?…” என்று எள்ளலாய் கேட்டவன்,
“துணிஞ்சு இப்படி ஒரு காரியத்தை செஞ்சவங்கட்ட நியாயத்தையும், பதிலையும் எதிர்பார்த்து வந்து பேசறேன் பாருங்க. நான் முட்டாள். முட்டாள்…” என்று தனது தலையில் அடித்துக்கொண்டவன்,
“பாவம் பண்ணிருக்கீங்க. இதுக்கு எத்தனை கோவிலுக்கு போனாலும் இதுக்கான விமோச்சனம் உங்களுக்கும் இல்லை. இது என்னை வச்சுன்னு ஆரம்பிச்சதால எனக்கும் இல்லை…” என்றவன் கண்ணில் திரையிட்டிருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவன்,
“பாலா போலாம்…” என அவளை நடத்தி செல்ல பிரம்மை பிடித்ததை போல கூடவே பொம்மை போல சென்றாள் அவள்.
மறுநாள் கல்லூரியில் நிகழ்ச்சி இருப்பதனால் அங்கிருக்கும் உடை ஒன்றை எடுத்து செல்லவே வந்திருந்தாள் பாலா.
வந்த இடத்தில் தனது திருமணத்தின் ரகசியங்கள் வெட்டவெளிச்சமாக, அதிலும் இதனால் தன்னுயிருக்கும் ஏதோ ஆபத்திருப்பதை பேச்சில் அறிந்துகொள்ள நிலைகுலைந்து போனாள் அவள்.
அவளை காரில் ஏற்றியவன் டிரைவரிடம் தனது ப்ளாட் அட்ரஸ்ஸை சொல்லி அங்கே செல்ல பணித்தவன் பாலாவிடம் எதுவும் பேசவில்லை.
வெற்றியின் வீட்டிற்கு செல்வதானால் என்ன ஏதென்று கேட்டு அவர்களுக்கு என்னவென்று பதில் சொல்வான்? அதன்பொருட்டு அங்கே செல்ல விரும்பவில்லை. அவர்களின் முகத்தில் எப்படி விழிக்க? இது இன்னமும் அவனை வதைத்தது.
முதலில் பாலாவை பார்க்க வேண்டும். அவளை இதிலிருந்து மீட்க வேண்டும் என்பதே அவனின் முதல் வேலையாக தெரிந்தது.
சூர்யா பாலாவுடன் கிளம்பிய பின் அங்கேயே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்த அர்ச்சனா,
“இப்ப உங்களுக்கு நிம்மதியா? சந்தோஷமா? என் பையன் மொத்தமா போறேன்னு போய்ட்டான். பார்த்தீங்க தானே? அவனுக்கு பதில் சொல்ல முடிஞ்சதா? கேட்ட கேள்வி ஒன்னொன்னும் ஈட்டி மாதிரி குத்துதே. இனி என் மகனை நான் எப்படி பார்ப்பேன்?…” என்று அழ,
“இதெல்லாம் நடக்கிறது தான் அர்ச்சு. எங்க போய்டுவான். இப்பவும் அவன் பாலாவோட தானே போயிருக்கான். அவங்க சேர்ந்து இருக்கறது தான் நல்லது. இப்படி சில குழப்பங்களும், கஷ்டங்களும் வரத்தான் செய்யும். இதை எல்லாம் தாண்டி தான் சூர்யாவை காப்பாத்த முடியும்…” என்று சொல்ல,
“உங்களுக்கு மனசுன்னு ஒன்னு இருக்கா இல்லையா? அந்த பொண்ணு உயிரில்லாத மாதிரி எப்படி போனா பார்த்தீங்கள்ள. ஒரு வார்த்தை ஆறுதலாவோ இல்லை மன்னிப்போ கேட்டிருக்கலாமே?…”
“அர்ச்சு, என்ன இது? அப்படி மன்னிப்பு கேட்கற அளவுக்கு என்ன தப்பு ஆகிடுச்சு? எப்படியும் அவங்க நல்லா வாழத்தான் போறாங்க. ஒரு இலக்கை அடையனும்னா போற பாதைல சில தடைக்கற்களும் இருக்கத்தான் செய்யும். அதை கடந்து போகத்தான் பார்க்கனும். அது மாதிரி இது குடும்பத்துக்குள்ள சின்ன சலசலப்பு. அவ்வளவு தானே?…”
“அவ்வளவு தானா? அஸ்வியை சொல்லும் போது மட்டும் உங்க முகம் மாறுச்சே. நான் பார்த்தேன். மகன் பேசினதால பதில் சொல்லமுடியாம நின்னீங்க. வேற யாரும் சொல்லியிருந்தா சும்மா விட்டிருப்பீங்களா? யார் சொன்னாலும் உண்மை அதுதானே? பெத்த வயிறு எரியுது. என் புள்ளைங்களுக்கு தீராத பாவத்தை சேர்த்துட்டீங்க…”
“அர்ச்சு என்ன உளறிட்டு இருக்க?…” என கோபாலசுவாமி அதட்ட,
“உளறலா? உண்மை தானே? பாலாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க கண்ணீர் நம்மளை சும்மா விடுமா? அந்த பாவம் ஜென்மத்துக்கும் போகாதே. நம்மளை நம்ம வம்சத்தை வாரிசுகளை தொடருமே…”
“புரியாம பேசாத அர்ச்சு…”
“இப்ப கூட நீங்க செஞ்சதை ஒத்துக்கலை. நம்ம புள்ள உயிர் முக்கியம் தான். அதுக்கு பாலாவை பலி குடுப்பீங்களா? இதுக்கு வேற ஏதாவது பரிகாரம் செஞ்சிருக்கலாம் தானே?…” என்று அழ,
“அப்படி ஒன்னு இருந்திருந்தா நான் ஏன் நமக்கு கொஞ்சமும் சமமில்லாத பொண்ணை கல்யாணம் செஞ்சு வைக்க போறேன்…” என்றார் இறுகிய குரலில்.
“இதுதான் இந்த எண்ணம் தான், இப்பவும் பாலாவை சமமில்லைன்னு நினைக்கிற இந்த புத்தியை தான் உடைச்சுட்டு போயிருக்கான் உங்க புள்ளை. அவ இருந்தா தான் இருப்பேன். இல்லைன்னா நானும் இல்லைன்னு. இந்த வீட்டு மருமகளா அவளை பார்க்கலை இன்னும் நீங்க. உங்க பையன் உயிருக்கான கவசமா தான் பார்க்கறீங்க. அப்படித்தானே?…”
அர்ச்சனா பேச பேச கோபாலசுவாமி தனது நிதானத்தை இழந்துகொண்டு இருந்தார். அங்கிருந்தால் இன்னும் மறைத்திருக்கும் உண்மைகளை தானே சொல்லிவிட கூடும் என்று அங்கிருந்து வேகமாக நகர்ந்துவிட அர்ச்சனா மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தார்.
கெட்டதிலும் ஒரு நல்லதாக உமாவும், அஸ்வினியும் உத்தமனுடன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அதனால் இந்த விஷயம் அவர்களுக்கு தெரியாமலே போனது. கண்ணை துடைத்துவிட்டு உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுத்துவிட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தார் அர்ச்சனா.
தன்னறைக்குள் வந்த கோபாலசுவாமி வெற்றிக்கு அழைத்தார். அவன் முதலில் எடுக்காமல் அடுத்த அழைப்பு இவர் மீண்டும் அழைப்பதற்குள் அவனே கூப்பிட்டுவிட்டான்.
“சொல்லுங்க அங்கிள், உள்ள ரேக்ல பைல் பார்த்துட்டு இருந்தேன். வந்து எடுக்கறதுக்குள்ள கட் ஆகிடுச்சு…” என்று வெற்றி பேச,
“வெற்றி சூர்யாவுக்கு திவ்யா மூலமா எல்லாம் தெரிஞ்சிருச்சு…” என்று சொல்ல வெற்றியிடம் எந்த சத்தமும் இல்லை. அவனுக்கு தான் கேட்டது பொய்யோ என்று தோன்ற,
“அங்கிள்…” என்றவனிடத்தில் நடந்ததை எல்லாம் விளக்கியவர் சூர்யா பாலாவுடன் கிளம்பி சென்றதையும் சொல்ல,
“ஐயோ அங்கிள், மோகனாக்காவும் இன்னைக்கு ஈவ்னிங் வரேன்னு சொல்லிருந்தாங்க. இப்போ அரைமணி நேரத்துக்கு முன்ன தான் கிளம்பறோம்னு போன் பண்ணினாங்க. இப்போ இப்படி சொல்றீங்களே?…” என்று பயந்தான்.
“வெற்றி, நான் சொன்னதை முழுசா கேட்ட தானே? சூர்யா இதுல நான் மட்டும் தான் இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்கான். திவ்யா வேற யாரையும் சொல்லலை. அதனால நீயும் அப்படியே இரு. அவனா பேசும் போது பேசு. நீயா கேட்டுடாத…” என்று சொல்ல,
“அங்கிள், எனக்கு ரொம்ப பயமா இருக்குது. அதுவும் பாலா. நிஜமா சொல்லுங்க பாலாவுக்கு எதுவும் இல்லை தானே?…” என்றான் தவிப்போடு.
அவனின் அன்பை புரிந்தவருக்கும் மனது குறுகுறுக்கத்தான் செய்தது இப்படி வெற்றியையும் ஏமாற்றுகிறோமே என்று. ஆனாலும் அதற்கெல்லாம் அசருபவரா?
“என்ன வெற்றி என் மேல நம்பிக்கை இல்லயா? பாலாவோட ஜாதகத்தோட பலம் தான் சூர்யாவை காப்பாத்த போகுது. அப்படி இருக்க பாலாவுக்கு என்ன ஆகிடும்? அவ நல்லா இருப்பா. நல்ல ராசிக்கார பொண்ணு…” என்று வெற்றியின் மனதில் பாலை வார்த்தார்.