“அதனால தான் அங்கிள் இத்தனை ரிஸ்க் எடுத்து இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். அக்காவுக்கு இன்னும் அந்த பையர் ஆக்ஸிடென்ட் இன்சிடன்ட்ல பாலாவும் இருந்தான்னு தெரியாது. வீட்டுக்கு தெரியாம நான் எடுத்த முதல் முடிவு…” என்றவன் குரல் தழுதழுக்க,
“அதுவும் சூர்யாவுக்காக. அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும் அங்கிள். முடிஞ்சா பாலாவுக்கு இப்போ எப்படி இருக்குதுன்னு பார்த்து சொல்லுங்க. எனக்கு இன்னும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என சொல்ல,
“இப்ப எதுக்கு இத்தனை பதட்டம் வெற்றி?…” என அவனை கேட்க,
“நானே உங்களை வந்து பார்க்கனும்னு தான் நினைச்சுட்டே இருந்தேன். மோகனாக்காவுக்கு சில கெட்ட சொப்பனங்கள் தெரியுதாம். எதுவும் தெளிவில்லாம. அதான் பாலா கூட ஒரு வாரம் இருப்போம், சூர்யாவும் இல்லைலன்னு சொல்லி கிளம்பி வராங்க…”
வெற்றி சொல்லவும் கண்ணை மூடி நின்றார் கோபாலசுவாமி. அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன் உயிரானவர்களுக்கு இப்படி அறிகுறிகளில் அறிவுறுத்துமாம் விதி. ஆரம்பித்துவிட்டதோ? மனதிற்குள் மந்திர உச்சாடனங்களை படித்தபடி அப்படியே அவர் நிற்க,
“அங்கிள் இருக்கீங்களா?…” என வெற்றி கேட்டதும்,
“இருக்கேன் வெற்றி, யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றவர்,
“சூர்யாட்ட நீயா பேசிக்க வேண்டாம். அவன் பேசும் போது கேட்டுக்க. அதுவரைக்கும் நான் சொன்னது எதுவும் அவனுக்கு தெரிய வேண்டாம். அதுமாதிரி அவனை எதுக்கும் வற்புறுத்தாத. அவன் கோபம் தானா தணியட்டும்…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
மகன் வெற்றியிடம் சொல்வது சொல்லாதது எல்லாம் அவருக்கு வேறு. இதையும் தாண்டி வேறு ஒருவருக்கும் இது தெரியாமல் இருக்கவேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டார்.
வெற்றியை பொறுத்தவரை அவருக்கு பலத்த நம்பிக்கை. கழுத்தறுத்தாலும் உண்மை வெளியே வராது என்று கோபாலசுவாமி நினைத்திருக்க அவருக்கும் அப்பன் ஒருவன் ஆண்டவன் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துபோனார் அவர்.
அவர் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் தன் நாடகம் வெட்டவெளிச்சமாக போவதை அவர் எண்ணியிருக்கவில்லை.
போனை கீழே வைத்தவரின் பார்வை அங்கிருந்த பாலாவின் ஜாதகத்தில் நிலைத்தது. வெற்றியின் மூலம் ஒரு நகலை வாங்கி வைத்திருந்தார். அந்த கட்டங்களையே பார்வை வெறிக்க விழிகள் லேசாய் கசிந்தது.
“உனக்கு ஒன்னும் ஆகாதும்மா. நான் இருக்கேன்…” என சொல்லியவர் ஒரு உறுதியுடன் மனதை திடப்படுத்திக்கொண்டு பூஜையில் அமர்ந்தார்.
அவரால் முடிந்தது பாலாவின் ஜாதகத்திற்கு, அவளின் ஆயுள் பலத்திற்கு எத்தனை வலு கூட்டமுடியுமோ அத்தனை கடினமான பூஜைகளையும் அவர் மேற்கொண்டுகொண்டு தான் இருந்தார்.
அதுவும் சூர்யாவின் திருமணம் ஆகிய நாளில் இருந்தே இதை தொடர்ந்துகொண்டு வருகிறார். அதற்கான கோவில்களுக்கு செல்வது என்று அவரின் மொத்த நினைவுகளும் அதில் தான் சுழன்றது.
அதிலும் இன்றும் மகன் சொல்லிய அந்த வார்த்தை மனக்கண்ணில் படமாய் விரிந்தது. அந்த நேரம், அவன் சொல்லிய பொழுது புரியாதவருக்கு மீண்டும் மீண்டும் அதுவே காதில் ஒலிக்க அப்போது தான் முழுமையாய் உணர்ந்தார்.
“பாலாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உங்களுக்கு நானும் இல்லை…” என்று சொல்லியவனின் வார்த்தையில் இருந்த ஸ்திரம் அவனின் மனதை அவருக்கு சொல்லாமல் சொல்லியது. உடல் தூக்கிபோட சலசலவென வியர்வை ஊற்றியது.
ஸ்பஷ்டமாய் அவன் சொன்னது தான் பலிக்கவும் போகிறது என்று அவரின் மூளையின் மூலையில் எங்கோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே தான் இருந்தது.
‘எனக்கு என் மகன் வேணும். சீரும் சிறப்புமா அவன் வாழனும்னா பாலாவும் வேணும். அதுக்கு என்ன வேணாலும் செய்வேன்’ என உறுதிபூண்டவர் பார்வை கடவுள்களின் முன்னால் எரிந்துகொண்டிருந்த ஜோதியில் நிலைத்தது.
——————————————————————-
தனது லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு அந்த ஏர்போர்ட் வாகனத்தை அனுப்பிவிட்டு பாலாவுடன் பிளாட்டிற்குள் நுழைந்தவன் அவளை அமர வைத்துவிட்டு கொண்டு வந்ததை எல்லாம் வேறு அறையில் வைத்துவிட்டு உடை மாற்றி வந்தவன் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்தான்.
“பாலா இதை குடி…” என்று நீட்டவும் வாங்கிக்கொண்டவள் அதை ஒரே மடக்காக குடித்து முடித்தாள்.
அவளெதிரே அமர்ந்து பார்த்தபடி இருந்தவன் அப்படி அவளை பார்க்க விரும்பவில்லை.
“இன்னும் என்ன நினைச்சு இப்படி உட்கார்ந்திருக்க?…” என்று கேட்க அவளிடம் பதில் இல்லை.
“வெற்றி வீட்டுக்கு போவோமா பாலா? உனக்கு இங்க என்னோட இருக்க பிடிக்கலைன்னா சொல்லிடு. அங்கயே போய்டுவோம்…” என்று அவன் சொல்லவும்,
“ம்ஹூம் எங்கயும் வேண்டாம். யாரையும் பார்க்க வேண்டாம்…” என்றவள் நகர்ந்து வந்து அவனின் மடியில் சாய்ந்துகொண்டாள்.
அத்தனை பேச்சுக்களும் மனதிற்குள் மாற்றி மாற்றி அவளை வதைக்க இத்தனை காயத்திலும் பன்னீர் தெளித்தது சூர்யாவின் பேச்சுக்களில் தன் மீது மிளிர்ந்த அந்த நேசம் மட்டுமே. அதை மட்டுமே பற்றுகோலாய் பிடித்துக்கொண்டாள் பாலா.
“பாலா, நீ என்னை நினைக்கிற? முதல்ல பேசு. எனக்கு பயமா இருக்குது…” என்றவனின் கையை எடுத்து தனது கழுத்தோடு கோர்த்துக்கொண்டவள் பின் அவனின் வயிற்று பக்கமாக திரும்பி படுத்தாள்.
“ஒரு ஜாதகத்துல இத்தனை இருக்கா? அப்போ என்னை அனுப்பும்னா அனுப்பிடுவீங்களா?…” என கேட்க,
“ம்ஹூம், நீ இப்படி ஏன் யோசிக்கிற? பாசிட்டிவா நினை. எந்த ஜாதகமும் உன்னை ஒன்னும் பண்ணாது…”
“நீங்க தானே சொன்னீங்க உங்கப்பாட்ட, மால்ல ஆக்ஸிடன்ட் நடந்தது கூட. அதான் அதான் கேட்கறேன்…” குரல் லேசாய் நடுங்கினாலும் அவனை அண்ணார்ந்து பார்த்து கேட்க அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“அத்தனை நெரிசல், கூட்டத்துலயும் நீ என்கிட்டே வந்த தானே? அப்போ ஜாதகம் வேலை செய்யலைன்னு தானே அர்த்தம். அன்னையோட எல்லாம் முடிஞ்சு போச்சுடா. அந்த நெருப்புலையே எல்லாமே பொசுங்கிடுச்சு. இனி அதை நினைக்க வேண்டாம்…” என்று அவளை ஆற்றுப்படுத்த,
“எப்பவும் எதையாவது நினைக்காதன்னு சொல்லிட்டே இருக்கீங்க. ஆனா திரும்ப திரும்ப அதுதான் வருது. இது அம்மாவுக்கு தெரிஞ்சா…” என்றவள் வேகமாய் எழுந்து,
“இது எப்பவும் அம்மாவுக்கோ, வெற்றி மாமாவுக்கோ தெரியவே கூடாது…” என்றவள் வேகமாய் அவனின் கையை எடுத்து தன் உச்சந்தலையில் வைத்தவள்,
“என் மேல சத்தியம்…” என்று சொல்லிவிட அதிர்ந்து போனான்.
“ஏன் பாலா இப்படி பன்ற?…”
“தெரியலை. எனக்கு என்ன பன்றேன்னு தெரியலை. இதுக்கு நான் என்ன பண்ணனும்?…” என அவனிடமே கேட்க தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் அவளை.
“சொல்லலை, சொல்ல மாட்டேன். போதுமா? இனி இப்படி எல்லாம் சத்தியம் வைக்காத. ஏற்கனவே பாதி செத்து…” என்றவனின் வாயில் பட்டென்று வலிக்க அடித்துவிட்டாள்.
“ஸ்ஸ்ஸ், என்னடி இது?…” என்று கையை உதறி காற்றை இதழ்களுக்குள் இழுத்து ஊதிக்கொண்டவன் பற்கள் பட்டு உள்ளே லேசாய் கீறல் விழுந்திருந்தது.
“இப்படி பேசினா அடிப்பேன். ஏன் சாவையே பேசற? எனக்கு சாகவேண்டாம். அதை பேசவும் வேண்டாம். பேசினா என்ன செய்வேன்னே தெரியாது…” என கோபமாய் அவனை மிரட்டியவள் மீண்டும் அவனின் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள சூர்யாவிற்கு நன்றாக புரிந்தது பாலா இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்று.
ஏற்கனவே ஒருமுறை உயிர்பயம் கண்டவள், அந்த எல்லை வரை சென்று திரும்பியிருப்பவள், இன்றைய நிகழ்வுகள் நிச்சயம் புரட்டியிருந்தது அவளை.
“ஓகே, ஓகே, கோவப்படாத. இனி அப்படி பேசலை. வாழறதை பத்தி பேசுவோமா?…” என கேட்க,
“எனக்கு பசிக்குது…” என்றாள் பாலா.
மணியை பார்க்க மதிய உணவிற்கான நேரம் வந்துவிட்டிருக்க உடனே தனது போனை எடுத்து உணவை ஆடர் செய்தவன்,
“நைட்க்கு ஏதாவது சிம்பிளா செஞ்சுப்போம். சரியா?…” என்றதும்,
“ஹ்ம்ம்ம், ட்ரஸ் மாத்திட்டு வரேன்…” என்று எழுந்து உள்ளே சென்றவள் அந்த அறையில் பிரிக்கப்படாமல் இருந்த லக்கேஜை பார்த்துவிட்டு உடை மாற்றி வந்தாள்.
சூர்யா ஜன்னலின் வெளியே தெரிந்த வானத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க உள்ளுக்குள் மனதை பிசைந்தது பாலாவுக்கு.
“சூர்யா…” என அழைக்கவும் திரும்பி பார்த்தான் அவளை.
திருமணம் ஆனா பின்னர் அவள் முதன்முதலில் பெயர் சொல்லி அழைக்கும் தருணம். திருமணம் என்ன? இதுதான் அவனின் பெயரை அவனிடம் அவள் உச்சரித்த தருணமாகவும் இருந்தது.
லேசாய் புன்னகை நெளிய அவளை பார்த்து திரும்பி அமர்ந்தவன் என்னவென்பதை போல தலையை அசைத்தான்.
“லக்கேஜ் எடுத்து அடுக்குவோமே…” என கேட்டதும் மறுக்காமல் எழுந்துகொண்டான்.
இனி அவளின் எந்த ஒன்றையும் தான் மறுப்பதற்கில்லை என்பதை போல இருந்தது அவனின் செய்கைகள்.
முதலில் இதிலிருந்து இருவருமே வெளிவரத்தான் நினைத்தனர். அதை கொண்டு ஒருவரை ஒருவர் தேற்ற முயன்றனர்.
பெட்டிகளை பிரித்து ஒவ்வொன்றாய் எடுத்து அவன் தர பாலா கேட்டு வாங்கி அடுக்கி வைத்தாள். இன்னொரு பெட்டி பிரிக்காமல் அப்படியே இருக்க,
“ஹ்ம்ம், அதையும் எடுங்க. முடிச்சுடுவோம்…” என்று பாலா சொல்ல ஒரு பெருமூச்சுடன் அதை ஓபன் செய்ய அத்தனையும் பாலாவிற்கானதாய் இருந்தது.
“புடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லு பாலா. தோணினதை வாங்கிட்டேன். ஆனா இப்படி ஒரு சூழ்நிலையில குடுப்பேன்னு நினைக்கலை…” என சொல்ல,
“புடிக்கலைன்னு சொல்லவே மாட்டேன். இது எனக்கானதுன்னு வரும் போது ஏன் புடிக்காம போகும்? புடிக்கும்…” என்றவள் அவனிடம் ஒவ்வொன்றாய் கேட்டு கேட்டு அதை வாங்கிய விவரங்களை கேட்டபடி எடுத்து வைக்க அதற்குள் உணவும் வந்துவிட்டது.
சாப்பிட்டு முடித்தவன் வெற்றிக்கு அழைத்தான். இவனின் அழைப்பை பார்த்ததுமே வெற்றிக்கு உதறல் எடுத்தது.
ஒருவேளை பிரச்சனை என்று சொல்லிவிட்டால் அதற்கு தான் எவ்வாறு ரியாக்ட் செய்வது என்று வு யோசித்தவன் நடுக்கத்துடனே போனை எடுக்க,
“என்னடா வேலையா இருக்கியா?…” என சூர்யா கேட்டதும்,
“ஹ்ம்ம், ஆமா. நீ என்ன இந்நேரம் கால் பண்ணிருக்க?…” என்று கேட்க,
“நான் சென்னை வந்துட்டேன். ப்ளாட்ல இருக்கேன்…”
“ஓஹ், அப்படியா? எப்போ வந்த?…” என சாதாரணமாக கேட்க,
“என்னடா ஒரு ஷாக் ரியாக்ஷன் கூட குடுக்கலை. உன்கிட்ட சொல்லாம வந்திருக்கேன். அதுவும் ப்ளாட்ல இருக்கேன்னு சொல்றேன். இவ்வளவு தானான்னு இருக்கே உன்னோட பேச்சு…” என சூர்யா ஆச்சர்யபாவம் கொள்ள,
‘ஐயோ’ என்று தன் தலையில் தட்டிக்கொண்ட வெற்றி,
“இல்லைடா, என்ன சொன்ன? சரியா கவனிக்கலை. என்ன சென்னை வந்துட்டியா? எப்போ? சொல்லவே இல்லை…” என்று வெற்றி உடனே அதிர்ச்சியாவதை போல பேச,
“என்னடா ஆச்சு உனக்கு? இல்லை எனக்குத்தான் வித்தியாசமா தோணுதா?…” என்றான் சூர்யா.
“என்னடா செய்யனும்? இங்க வேலை. எனக்கு, நான். ப்ச், இப்ப என்ன அதான் வந்துட்ட தானே? இதுல நான் ஷாக் ஆகலைன்னு கேள்வி வேற…” என்று வெற்றி பொரிய,
“எதுக்கு இத்தனை டென்ஷன்? நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன்…”
“அப்போ நீயும், பாலாவும் சாப்பிட்டு தூங்குங்க…” என்று சொல்ல,
“என்ன? என்ன சொன்ன? நான் பாலாவோட வந்திருக்கேன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையே. உனக்கு எப்படி தெரியும்?…” என்றான் அடுத்ததாக.
வெற்றிக்கு படபடப்பில் அங்கிருந்தே எங்காவது சென்று குதித்துவிடுவோமா என்று ஆத்திரமாய் வந்தது. இப்படி கேள்வியாய் கேட்டு துளைக்கிறானே என தடுமாறியவன்,
“நீ ப்ளாட்க்கு போறதா இருந்தா கல்யாணத்துக்கு முன்னாடி என்னை கூட்டிட்டு போவ. அதுக்கு பின்னாடி பாலாவோட தான் போவ. அதான் சொன்னேன். கெஸ்ஸிங், கெஸ்ஸிங். அதான்…” என சொல்ல,
“ஓஹ்…” என்றவன்,
“சரி நாளைக்கு பார்க்கலாம்…” என்று சொல்லி போனை வைக்க போக,
“நாளைக்கு ப்ளாட்க்கு வரோம் நானும் அக்காவும்…” என்றான் வெற்றி.
“மோகனாக்கா வந்திருக்காங்களா?…”
“ஆமா, இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு வந்திருவாங்க. ஆன் தி வே. பாலாவோட இருக்கலாமேன்னு தான் கிளம்பினாங்க. நீ திடீர்ன்னு வருவன்னு யாரும் எதிர்பார்க்கலை தானே? ஓகே, பார்த்துக்க…” என்று சொல்லி வெற்றி வைத்துவிட்டான்.
சூர்யாவுக்கு இருந்த மனசோர்வில் இதை எதையுமே அவன் சரியாய் கவனிக்கவில்லை. அதிலும் மோகனா வருகிறார் என்றதுமே மனது செயலிழந்ததை போல ஆனது.
போனை வைத்துவிட்டு பாலாவை பார்க்க தண்ணீரை சுட வைத்துக்கொண்டு இருந்தாள்.
“பாலா, ஹாட் வாட்டர் எதுக்கு?…” என வந்து கேட்க,
“த்ரோட் இன்பெக்ஷன் ஆகற மாதிரி தெரியுது. அதான் வென்னீர் வச்சு குடிக்கலாமேன்னு…”
“ஏன்? என்ன ஆச்சு?…” என்று பதற,