“அது, நான் அழுகையை ரொம்ப கன்ட்ரோல் பண்ணினா ஒரு மாதிரி ஆகும். தலை பாரமாகிடும். அப்போலாம் இப்படித்தான் செய்யும் எனக்கு. தண்ணி சூடா குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்றவளை கூர்ந்து பார்த்தவன்,
“உன்னோட அழுகையை எதுக்காக கட்டி வைக்கிற பாலா? நான்…” என்றவனை பேசவிடாமல் ஒருவிரலை நீட்டி நிறுத்தியவள்,
“எனக்கு அழ வேண்டாம். எதையும் நினைக்க வேண்டாம். கல்யாணம் ஆகிடுச்சு. வாழறதை பார்ப்போம். வேற எதுவும் தெரியவேண்டாம். தெரிஞ்சதே போதும். அதையே தாங்கிக்கற சக்தி இல்லை. இன்னும் இன்னும். வேண்டாம்…” என்றவள் அந்த தண்ணீரை தம்ளரில் ஊற்றி வேகமாய் குடித்தவள்,
“திரும்ப எதையும் நான் நினைக்க வேண்டாம். எனக்கு புடிக்கலை. திரும்ப திரும்ப அங்கயே சுத்தி. அதான் முடிஞ்சு போச்சுல. எங்கயும் போகவும் மாட்டேன் நான். அதுக்கு மேல யோசிச்சா தலை வெடிச்சிடும். இப்ப என்னோட வா…” என அவனையும் இழுத்துக்கொண்டு சென்று படுத்துவிட்டாள்.
“எனக்கு தூங்கனும். ப்ளீஸ்…” என அவனின் கைவளைவில் தலைவைத்துக்கொள்ள,
“என்ன பாலா பன்ற? எனக்கு பதறுது. மனசை திறந்து என்ன நினைக்கறன்னு சொல்லி தொலையேன்டி…” என அவளை பிடித்து உலுக்க,
“தூங்கனும் மெக். ப்ளீஸ்…” என்று கண்ணை மூடியவள் திறக்கவே இல்லை. அவளை அதற்கு மேல் அசைக்க முடியவில்லை அவனால்.
வேறு வழியின்றி சூர்யாவும் அப்படியே படுத்துவிட அவன் மாலை கண் விழிக்கும் போது அவனருகில் அவளில்லை.
எழுந்ததும் வேகமாய் வீட்டை சுற்றி சுற்றி வந்தவன் ஹாலில் இருந்த ஒரு நோட் மீது பேப்பர் பறந்துகொண்டு இருக்க அதை எடுத்து வாசிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.
“மொட்டைமாடில இருக்கேன். எங்கயும் போகலை. தேடவேண்டாம். நானே வரேன்…” என்று எழுதியிருந்தாள் பாலா.
“ராட்சஸி, கொஞ்சம் நேரத்துல கொன்னுட்டா என்னை…” என்று அந்த பேப்பரை சுருட்டி வீசியவன் மனதினுள் பளிச்சென மின்னல் வெட்ட மீண்டும் அதை ஓடி சென்று எடுத்தவன் பிரித்து பார்த்தவனுக்கு மனதில் சொல்லொண்ணா பரவசம்.
சூர்யா பாலா என்று கீழே எழுதியிருந்தவள் அதன் கீழே பெரியதிளிருந்து வரிசையாய் சின்ன சின்ன இதயங்களை வரைந்திருந்தாள்.
சிகப்பு நிற மார்க்கரால் அதனை அழகாய் வரைந்திருக்க மேலே மட்டும் தகவல் அதன் கீழேயும் இடைவெளிகளில் இதயங்களை இட்டு நிரப்பியிருந்தாள்.
“ஹ்ம்ம், இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல. வாயை திறந்து மட்டும் சொல்றது இல்லை…” என்று வாய்விட்டே அவளை சாடிக்கொண்டவன் வெளியே இடி இடிக்கும் சத்தத்தில் அந்த நிலை கலைந்து ஜன்னலை பார்க்க அங்கே மழை பெய்துகொண்டிருந்தது.
தானும் மாடிக்கு செல்ல ஓரமாய் அவள் நிற்பாள் என நினைத்து போக அங்கே மாடி தோட்டங்களின் நடுவே கையை கட்டியபடி மழையில் நனைந்துகொண்டே பாலா நனைந்துகொண்டிருக்கும் அந்த பூக்களை பார்த்துக்கொண்டே நிற்க அவனின் பாதச்சுவட்டின் சத்தத்தில் அவனை திரும்பி பார்த்தாள்.
“என்ன பாலா நனைஞ்சுட்டு இருக்க?…” என வந்ததும் கேட்க,
“நல்லா இருக்கு. வாங்க மெக்…” என இலகுவாய் அவனை நோக்கி பாலா கை நீட்டியதும் பெய்துகொண்டிருந்த மழையை மறந்து மணம் கொண்டவளை நாடி சென்றான் அவன்.
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதடி
அவனின் அணைப்பிற்குள் பதிந்து போனவள் அவனின் பாடல் வரிகளை போல சூர்யாவின் பூமிகொண்ட நெஞ்சிற்குள் தன்னை விரும்பியே சேர்த்துக்கொண்டாள்.
தானும் தனக்குள் அவளை பொத்திக்கொண்டவன் மழை சிதறல்கள் பட்டு தெறிக்கும் இடங்களில் எல்லாம் சின்ன சின்ன முத்தம் பதித்தான். இருண்ட வானில் மின்னல் கீற்று ஒளியை பாய்ச்ச திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன் அவளிடத்தில்,
“பாலா, என்ன இது? நீயும் நனைஞ்சு, என்னையும் நனைச்சு. சொல் பேச்சே கேட்கறதில்லை…” என்று லேசாய் அதட்ட இன்னும் அவனோடு ஒட்டினாள்.
“இந்த ஒன் வீக் என்னை மிஸ் பண்ணுனியா பாலா?…” என கேட்க தன் அணைப்பின் நெருக்கத்தை கூட்டினாள் பெண்.
“என்னை தேடினியா நீ? என்னை பத்தி என்ன யோசிச்ச? என்னோட வந்திருக்கலாம்னு தோணுச்சா? ஆனா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன். இப்படி உன்னை விட்டு இருக்கமுடியாம போவேன்னு நான் நினைக்கவே இல்லை. இனியும் உன்னைவிட்டு எங்கையும் போகவும் மாட்டேன். என்னால இருக்கவும் முடியாது பாலா…”
இப்படி சூர்யா அவளிடம் கேட்பதற்கும், பின் தன் மனதை சொன்னதற்கும் அவளிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால் அவளின் அணைப்பின் வலிமை மட்டும் நொடிக்கு நொடி கூடிக்கொண்டே சென்றது.
“போலாம் பாலா, இன்னும் மழை பெருசா வரும் போல இருக்குது. நல்லா இருட்டிருச்சு பாரு. கீழே போகலாம்…” என்று வலுக்கட்டாயமாய் அவளை கூட்டிக்கொண்டு கீழே வந்தான்.
“போய் ஹாட்வாட்டர்ல குளி. அப்போ தான் சளி புடிக்காது. நானும் குளிச்சுட்டு வரேன்…” என்று அவன் இன்னொரு அறைக்குள் நுழைந்துகொள்ள பாலா குளித்துவிட்டு வரும் பொழுது சூடாய் டீ வைத்திருந்தான்.
“உன் மொபைல், பேக் எல்லாம் அங்கயே வந்திட்டியாமே? அம்மா கால் பண்ணிருந்தாங்க…” என்றவன் அவளுக்கு ஒரு கப்பை ஊற்றி கொடுத்து தானும் வந்தமர்ந்தான் ஹாலில் போடப்பட்டிருந்த மெத்தையில்.
“ஹ்ம்ம், ஆமா. அங்கே கீழே இருந்த ரூம்ல தான் நானும், உமா ஆன்ட்டியும் டிஸைன் பண்ணுவோம். ஆடருக்கான திங்க்ஸ் வாங்கினா அங்க தான் வச்சிருப்போம். அங்க தான் நான் இருந்தப்போ உங்க சத்தம் கேட்டுச்சு. அதோட நான் வந்து எட்டி பார்த்தப்போ கோபமா ப்ளவர்வாசை தூக்கி போட்டு உடைச்சுட்டு இருந்தீங்க…”
“அப்பவே ஏன் வரலை நீ?…”
“அது நீங்க அங்கிளை கோபமா பேசிட்டு இருந்தீங்க. நான் வந்தா சங்கடமா இருக்குமோன்னு தான் வரலை….” என்றவள் சோபாவில் இருந்து இறங்கி வந்து அவனருகே அமர்ந்துகொண்டாள்.
“முடியை உலர்த்தலையா நீ? இன்னும் ஈரமா இருக்குது. போய் ஹேர் ட்ரையர் போடு பாலா…” என்று சொல்ல,
“இல்லை இருக்கட்டும்…” என்றாள் அவனை விட்டு அசையாமல்.
“ஆன்ட்டி என்ன சொன்னாங்க?…” என அவளே மீண்டும் பேச,
“உன்னோட மொபைலை குடுக்கனுமாம். அதான் இப்போ கொண்டுவரவான்னு கேட்டாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். நாளைக்கு வெற்றி வரும் போது வாங்கிட்டு வர சொல்லிக்கலாம். உனக்கு ஓகே வா? இல்ல மொபைல் வேணுமா?…”
“இல்லை வேண்டாம்…” என்றுவிட்ட அதன் பின் சிறு மௌனம் பரவியது அந்த அறையில்.
இருள் நன்றாக கவிழ்ந்திருக்க திறந்திருந்த ஜன்னல் வழியே குளுமையான காற்று அறையெங்கும் குளிரை நிறைத்தது.
எழுந்து ஜன்னலை சாற்றியவன் குடித்த கப்பை எடுத்துக்கொண்டு சிங்கில் போட்டுவிட்டு வர பாலா அப்படியே படுத்துவிட்டிருந்தாள்.
“இப்ப தான சொன்னேன், ஈரத்தலையோட இருக்காதன்னு. அதோட படுக்கற. மழைல வேற நனைஞ்சுட்டு சேட்டையா பன்ற? உடம்புக்கு எதாச்சும் வந்திட போகுது. எழுந்துக்கோ. போய் தலையை உலர்த்திட்டு வா. நைட் டின்னருக்கு என்ன வேணும்னு சொல்லு. எதுவும் செய்ய வேண்டாம்…”
அவளை அவ்விடம் விட்டு கிளப்ப பிரயத்தனப்படவேண்டியதாக இருந்தது சூர்யாவுக்கு. மனதிற்குள் ஏதேதோ உணர்வுகள் பொங்கிக்கொண்டு இருந்தது.
முன்பானால் கூட ஏதோ ஒரு காரணத்தில் விலகி நின்றார்கள். இப்போது நெஞ்சம் முட்டும் பிரியமும், ஆசையும் பொங்கி ததும்பிக்கொண்டு இருக்க சூர்யாவின் பாடு திண்டாட்டமானது.
இன்று நடந்திருப்பதென்ன? தன் மனம் போகும் பாதை என்ன? என்று தன்னை தானே கடிந்துகொள்ள அவனை வெகுவாய் சோதித்தாள் பாலா. இன்னும் அவனை அவள் நெருங்கி வருவதை போலவே தோன்ற தன்னை பலத்த கட்டுப்பாட்டினுள் அடைத்துக்கொண்டான் அவன்.
“எனக்கு சாப்பாடு வேண்டாம்…” என பாலா சொல்ல,
“ஆனா எனக்கு பசிக்கும். சுத்தமா தூக்கமும் இல்லை நான் கிளம்பினதுல இருந்து சாப்பிட்டு தூங்குவோம்…” என்று கறாராய் அவன் சொல்ல அவனை முறைத்துவிட்டு டிவியை போட்டுவிட்டு அவள் அமர்ந்துகொண்டாள்.
அதை கண்டு சிரிப்புடன் தனது மொபைலில் இரவுக்கு இட்லியும், தோசையும் ஆடர் கொடுத்துவிட்டு அவளோடு சேர்ந்து டிவியில் ஆழ்ந்ததை போல காண்பித்துக்கொண்டான்.
மனது அர்ச்சனாவின் அழைப்பில் தான் உழன்றது. அவனுக்கு விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தார் அவர். ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் எடுத்தவன்,
“என்னம்மா வேணும்? எதுக்கு கால் பண்ணிட்டே இருக்கீங்க? வந்து கொஞ்சம் நேரம் ஆகலை. இப்படி பேசி பேசியே…”
“இல்ல, இல்ல சூர்யா. அம்மாட்ட இப்படியெல்லாம் கோவப்படாதப்பா…” என அவர் கெஞ்ச,
“என்னை இப்படி செய்ய வைக்கிறதே நீங்க தான்ம்மா. சரி சொல்லுங்க…” என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில்.
“இல்லை, அம்மா சாப்பாடு குடுத்து விடட்டா?…” என கேட்க,
“ஏன் அவர் சொன்னாரா? வீட்டு சாப்பாடு சாப்பிட்டா தான் ஜாதகபலன் வொர்க் அவுட் ஆகும்ன்னு?…” என்றவனின் நக்கலில்,
“ஏன் சூர்யா இப்படி பேசற? அம்மா என்ன பண்ணுவேன்?…” என்றவர்,
“பாலாவோட பேக், மொபைல் இங்க இருக்குப்பா. மோகனா கூப்பிடுட்டே இருந்தாங்க காலையில. அதான் அதை குடுத்தனுப்பும் போது சாப்பாடும்…”
“மொபைல், பேக் மட்டும் போதும். சாப்பாடு வேண்டாம். திரும்ப என்னை கட்டாயப்படுத்தாதீங்க. போன் வெற்றிட்ட குடுத்துவிடுங்க…” என்று சொல்ல,
“வெற்றிக்கு?…” என்று கேள்வியாய் அவர் நிறுத்த,
“இல்லை, அவனுக்கு தெரியாது. இதுவரைக்கும் எதுவும் சொல்லலை…” என்றவன்,
“இதை தெரிஞ்சுக்க தான் கால் பண்ணிங்களா?…” என,
“ஐயோ இல்லப்பா, அதுக்காக இல்ல. இங்க அஸ்விக்கும், உமாவுக்கும் கூட நீ வந்துட்டு போனதை எதுவும் சொல்லலை…”
“அவர் சொல்லவேண்டாம்னு சொல்லிருப்பாரு…” என்றான் உணர்வற்ற குரலில்.
“இல்லை இல்லை. பாலா வந்ததும் தெரியாது அஸ்விக்கு. திடீர்ன்னு தான் பாலா வந்தா. நீயும் வந்துட்ட. அதுக்கு முன்னாடியே அவங்க காலையிலையே கோவிலுக்கு கிளம்பி போய்ட்டாங்க…” என்றார் விளக்கமாக,
“நான் போனை வைக்கறேன்ம்மா. பாலா போன் வேணும்னா நானே கூப்பிடறேன்…” என்று சொல்லிவிட்டு வைத்திருந்தான். இப்போது அதையே நினைத்துக்கொண்டு இருக்க,
“டிவி பார்க்கறேன்னுட்டு என்ன யோசனை?…” என்று பாலா கேட்க,
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை…” என்றவன் உணவு இன்னுமா வரவில்லை என்று மொபைலை பார்க்க மழை என்பதால் உணவு வர தாமதமாகும் என்றிருந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் உணவும் வந்துவிட உண்டு முடித்தவர்கள் அதனை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு வந்து அமர பாலாவின் கூந்தலுக்குள் கைவிட்டு காய்ந்துவிட்டதா என்று பார்த்தவன் கைகள் அங்கேயே அலைந்துகொண்டிருக்க பாலாவிற்கு கண்கள் சொருகியது.
“ஹ்ம்ம்…” என்றபடி வசதியாய் அவனுக்கு தன் தலையை கொடுத்தபடி சாய்ந்து நன்றாக அமர்ந்துகொண்டாள் அவள்.
‘எதையோ நினைச்சுட்டே இருக்கா. ஆனா சொல்லலை. வெளிப்படையா பேசவும் மாட்டேன்றா’ என்று நினைத்தபடியே அவளின் தலையை வருட அவனின் பார்வையை உணர்ந்தவள் எதுவும் பேசிவிடுவோமோ என்று எண்ணி,
“தூங்கறேன். என்னால உட்கார முடியலை…” என்று சொல்லி எழுந்து அவள் உள்ளே சென்றுவிட சூர்யாவிற்கும் ஒய்வு தேவைப்பட விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு தானும் சென்று படுத்துக்கொண்டான்.
என்றைக்கும் போல தான் அருகருகே உறக்கம். ஆனால் படுத்ததும் அவனுக்கு தூக்கம் எட்டி சென்றதென்னவோ உண்மை. போதாததிற்கு பாலாவும் புரண்டு புரண்டு படுக்க,
“பாலா, என்ன பன்ற? ஒழுங்கா தூங்கு…” என்றவன் கையை பிடித்துக்கொண்டவள் அவனின் கை மேலேயே தலைவைத்து தூங்க முயல அவளின் மூச்சுக்காற்று இவனுக்கு அனலூட்டுவதாய் இருக்க வெந்து தணிந்தான்.
“பாலா தள்ளி போ…”
“நான் ஒன்னும் பண்ணலையே…”
“ஆனா நான் சும்மா இருக்கமாட்டேன். ம்ஹூம் இது சரிப்பட்டு வராது. நான் அந்த ரூம் போறேன். இங்க நீ தூங்கு…” என எழுந்து சென்றவன் அந்த அறையின் கதவு வரை போய்விட்டு பாலாவை திரும்பி பார்த்தவன் ஒரு நொடி அவளையே பார்த்திருந்துவிட்டு,
“முடியல பாலா. இதுக்காக என்னை என்ன வேணா நினைச்சுக்கோ…” என்று சொல்லி மீண்டும் வந்து அவளருகே படுத்தவன் தனக்குள் மொத்தமாய் இழுத்துக்கொண்டான் சூர்யா.
அவனின் அதிரடி அணைப்பும் அதை தொடர்ந்த முத்தங்களும் பாலாவை திணறடிக்க ஒரு நொடி தடுமாறியவள் பின் வேண்டுமென்றே,
“போ, முதல்ல எந்திச்சு அந்த ரூம்க்கு போ. தனியா தூங்கறேன்னு தான சொன்னே. போடா. போடா…” என்று அவனின் முத்தங்களுக்கு பதிலாய் அவன் கன்னங்களில் தனது பற்களை பதித்தாள்.
“ம்ஹூம், உனக்கு இங்க கம்பர்டபிளா இல்லனா சொல்லு. ரெண்டு பேருமே அங்க வேணா போய்டலாம்…” என்று கல்மிஷமாய் அவளிடம் சொல்லியவன் மேலும் முன்னேற,
“நான் வரமாட்டேன். போ…” என்றவளின் இதழ்களுக்கு அவ்வப்போது சில ஆறுதல் பரிசையும் வழங்கிக்கொண்டே,
“முடியலைன்னா சொல்லுடி, தூக்கிட்டே போறேன். கத்தாம கொஞ்சம் நேரம் இரேன். ராட்சஸி…” என்று அவன் சிணுங்க,
“இதுதான் சவுண்ட் ப்ரூப் பிளாட்ன்னு சொன்னீங்க?…” என நமுட்டு சிரிப்புடன் பாலா முணங்க,
“ஓஹ் பாலா…” என்றவன் முகத்தில் லேசாய் வெட்கம் பிறக்க அவளிடமிருந்து அதை மறைக்க அவளையே போர்த்திக்கொண்டான்.
அவனிடம் ஆட்டம் காட்டியபடி அவனின் தவிப்பை பன்மடங்காக்கிக்கொண்டிருந்தாள் அந்த பாலதிரிபுரசுந்தரி.
அவளின் பேச்சுக்களும், ஸ்பரிசங்களும் நஞ்சை போல ஒவ்வொரு அணுவிலும் ஆசை நோயை விதைக்க பரவிய விஷம் அவனின் அடிநெஞ்சில் பெரும்தீயினை பற்ற வைக்க விஷத்தின் வீரியத்துடன் மொத்தமாய் பரவி சூரியனையே எரித்தது.
செல்ல சண்டையிட்டுக்கொண்டிருந்தவளின் சேட்டைகள் எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்தவனுக்கு பாலாவின் சிணுங்கல்ககளுக்கான அவனின் சமாதானங்கள் எல்லாம் அவர்களிடத்தில் தொடங்கி அங்கேயே அடங்கியது.
அந்த சின்ன சின்ன சத்தங்கள் எல்லாம் கூட புது சந்தங்களாய் பரிமாணமேற்று காதல் சங்கீதமாய் ஸ்வரம் மீட்டியது.
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு ஸ்வரம் பாட வேண்டும்
உன்னில் என்னை தேட வேண்டும்