நிலா – 22
வெகுநேரமாக மொபைல் சிணுங்கிக்கொண்டே இருக்க கண்ணை திறக்கமுடியாமல் சோம்பல் முறித்தபடி மெதுவாய் திரும்பி கட்டிலின் அருகே இருந்த டேபிளின் மீது வைத்திருந்த தனது மொபைலை எடுத்து பார்த்தான்.
வெற்றி தான் அழைத்துக்கொண்டு இருந்தது. மீண்டும் கண்ணை கசக்கிவிட்டு நன்றாக பார்த்தவன் அட்டன் செய்யும் முன் அழைப்பு நின்றுவிட கலையாத உறக்கத்துடன் அவனுக்கு அழைப்பதா என்ற யோசனையுடன் இருந்தான் சூர்யா. வெற்றியே மீண்டும் கூப்பிட்டுவிட்டான்.
“ஹ்ம்ம், என்னடா?…” என்று கண்களை மூடியபடி மெதுவாய் கேட்க,
“எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?…” என்றன வெற்றி.
“தலையில அடிகிடி பட்டிருச்சா? தூங்கிட்டு இருக்கறவனை எழுப்பி கேட்கிற கேள்வியை பாரு. என்னடா உனக்கு?…” என எரிச்சலுடன் கேட்க,
“எல்லாம் காரணமா தான். பதில் சொல்லாம திட்டுவியா நீ?…”
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. கேள்வி கேட்டவனுக்கு பதில் தெரியும் தானே?…” என்றவன் கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.
“எட்டே கால். மணி எட்டேகால் ஆச்சுடா. அதை சொல்லத்தான் உன்கிட்ட நாசூக்கா கேட்டேன்…” என்றதும்,
“ஓஹ், அவ்வளவு நேரமாச்சா? அதுக்கென்ன இப்போ?…”
“டேய் சூர்யா, நீயாடா இது? விடிஞ்சும் விடியாம குளிச்சுட்டு ஜாக்கிங் போகற அந்த நல்லவன் எங்கடா போனான்?…” என வெற்றி ஆச்சர்யமாய் கேட்க,
“இப்ப என்ன உனக்கு? ட்ராவல் பண்ணி வந்தது வேற டயர்ட். தூங்கிட்டேன். இதை கேட்கத்தான் கால் பண்ணுனியா?…” என முணங்க,
“அதுக்கெதுக்கு? அக்கா தான் பேச சொன்னாங்க. இன்னும் எந்திக்கலைன்னா நல்லது தான். நாங்க ப்ரேக்பாஸ்ட் செஞ்சு கொண்டு வந்திடறோம். லஞ்ச்க்கு தான் குழம்பு, பொரியல்ன்னு எல்லாம் செஞ்சிருந்தாங்க. அங்க வந்து ரைஸ் வச்சுக்கலாம்னு…”
“ஓஹ், சரி ஏதாவது பண்ணுங்க…” என்றவன்,
“கிளம்பும் போது ஒரு கால் பண்ணுடா. வர வழில வீட்டுக்கு போய் அங்க இருந்து பாலாவோட மொபைலும், பேக்கும் இருக்கு அதையும் வாங்கிட்டு வரனும். மறக்காம கிளம்பறப்போ கால் பண்ணிடு…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் பாலாவை திரும்பி பார்த்தான்.
கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்தவள் நன்கு அசந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் கீழே விழுந்துவிடுவதை போலிருக்க அவளின் இடையோடு கைகொடுத்து தூக்கிய வேகத்தில் தனது மறுபக்கம் படுக்கவைத்தான்.
“ச்சோ, தூங்கும் போது…” என அவனின் முகத்தில் கை வைத்து தள்ளியவள் கண்களை திறக்காமல் இருக்க,
“பாலா, வெரி ஸ்வீட் மார்னிங்…” என்றபடி அவளின் கன்னத்தில் இதழோற்ற,
“ஹ்ம்ம், ஹ்ம்ம். மார்னிங். மார்னிங்…” என்றவள்,
“ஃபூட் எதாச்சும் ஆடர் பண்ணுங்க, பசிக்குது. ஒரு ஸ்வீட் வேணும்…” என சொல்லிவிட்டு அவனின் முகத்தை பார்த்தவள் சிரிக்க,
“என்ன என் மூஞ்சில என்ன இருக்காம்? பார்த்து இப்படி சிரிக்கிற?…”
“கண்ணாடியை பாருங்க, தெரியும்…” என்றவள் தலைவரை ப்ளாங்கெட்டை இழுத்து போர்த்த,
“ப்ச், எழுந்துக்கோ பாலா. வெற்றி, மோகனாக்கா எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரத்துல வராங்க…” என அவளை எழுப்ப படக்கென்று எழுந்தமர்ந்தவளை பார்த்தவன்,
“ஓஹ்ம், பாலா எதுக்கு இவ்வளோ ஷாக்? சந்தோஷமாவன்னு பார்த்தா…”
“என்ன சந்தோஷம்? உங்க மூஞ்சியை பாருங்க. முதல்ல போன் பண்ணி இஇப்ப வேண்டாம்னு சொல்லுங்க. சொல்லுங்க…” என்று அவனை போட்டு அனத்த சூர்யா வயிற்றை பிடித்துக்கொண்டு அப்படி வெடித்து சிரித்தான் பாலாவின் பதட்டத்தில்.
“சொல்லிட்டே இருக்கேன். கேட்காம அப்படி என்ன சிரிப்பு?…” என அவள் முறைக்க,
“இப்ப என்ன? மோகனாக்கா வந்து என்னை பார்த்து கன்னத்தில் என்னடா காயம்னு கேட்கட்டும். நானும் உங்க செல்ல பொண்ணு செய்த மாயம்னு பாடறேன். நீ வேணா ஆடேன். இப்ப ஆடற மாதிரி…” என்று கேலி பேச பில்லோவை வைத்து மொத்தி எடுத்தாள் அவனை.
சில அடிகளை வாங்கிக்கொண்டவன் அவளை சுருட்டி தன் மடியில் அமர்த்தி கட்டிக்கொண்டவன்,
“அப்படி என்ன பயம் உங்கம்மா மேல? இதெல்லாம் அவங்க தப்பா நினைக்க மாட்டாங்க. கேட்டா சொல்ல பதிலா இல்லை?…” என்று கேட்டவனின் பிந்தைய பேச்சுக்கள் எதுவும் அவள் காதில் ஏறவே இல்லை.
“ஹ்ம்ம், பயம் தான். ரொம்ப பயம் தான் அம்மா மேல…” என்று பாலா முணுமுணுக்க,
“சத்தமா சொல்லு பாலா கேட்கலை…” என அவளின் இதழருகே தனஹு காதை கொண்டு செல்ல,
“நேத்து என்னடான்னா கத்தாத மெதுவா சொல்லுன்னு ஆடர் போடறீங்க. இன்னைக்கு சத்தமா சொல்லுன்னு ஆடர் போடறீங்க. ஒரே மாதிரி இருங்க மிஸ்டர் மெக்…” என்று அவனின் முடியை பிடித்து ஆட்டிவைத்தவள்,
“ப்ளீஸ், எனக்காக ப்ளீஸ். ஈவ்னிங் வர சொல்லுங்களேன். எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கனும்…” என அவனின் கன்னம் பிடித்து கேட்க,
“ஹ்ம்ம்…” என ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டவன்,
“கலாய்ப்பான் உன் மாமன். என்னன்னு கேட்டு உயிரை வாங்குவான்…” என்ற புலம்பலுடன் வெற்றிக்கு அழைத்தான்.
“இதோ இன்னும் பத்து நிமிஷம்டா சூர்யா…” என எடுத்ததுமே அவன் சொல்ல,
“இல்லை, இல்லை. அவசரமே இல்லை. மெதுவா ஈவ்னிங் வாங்க எல்லாரும்…”
“ஓஹ், அப்ப சரி…” என்ற வெற்றி,
“டேய் என்ன சொன்ன? ஈவ்னிங்கா?…” என்று கத்த,
“ஆமா, காதுல விழலையா? ஈவ்னிங் வாங்க…”
“ஏன்டா எங்கியாச்சும் வெளில போறீங்களா? நாங்க வந்துட்டு வேணா உடனே கிளம்பிடறோம்…” என்றான் வெற்றி.
மோகனா முதல்நாளில் இருந்தே படுத்திக்கொண்டு இருந்தார் அவனை. மகளை பார்க்கவேண்டும் என்று சொல்லிகொண்டே இருக்க அன்றுதான் சூர்யா வந்திருப்பதனால் அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று சொல்லி சமாளித்திருந்தான்.
“ஏன் வெளில போறதா இருந்தா தான் ஈவ்னிங் வர ஓகே சொல்லுவியா? அதெல்லாம் எங்கயும் போகல. வீட்ல தான் இருக்கோம்….” என சூர்யா கத்த, ‘குழப்பறானே’ என குழம்பிப்போனான் வெற்றி.
“இங்க பாரு சூர்யா, தெளிவா சொல்லு. வீட்டுல தான இருக்க? எந்த ப்ரோக்ராமும் இல்லைல்ல. அப்பறம் என்னடா?…” விடாமல் வெற்றி பேச,
“இங்க குடுங்க…” என ஜெய் லைனில் வந்தாள்.
அவளிடம் பேச சட்டென ஒரு சங்கடம் பிறக்க உடனே மொபலை பாலாவிடம் தந்துவிட்டான் சூர்யா.
“என்ன என்கிட்டே?…” என அவள் கேட்க,
“ஜெய் லைன்ல. நீயே சமாளி. நான் பேசமுடியாது…” என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டான் அவன்.
“பாலா, இருக்கியா?…” என்ற ஜெயின் குரலில்,
“ஹாங், இருக்கேன். லைன்ல தான்…” என தடுமாற,
“என்னவாம்? இங்க உங்க மாமா நாட்டியமாடிட்டு இருக்காரு ரூம்க்குள்ள…” என ஜெய் பாலாவிடம் கேட்க, அவளருகே இருந்த வெற்றி,
“என்னை பார்த்தா உனக்கு டான்ஸ் ஆடர மாதிரியா தெரியுது? அவன் என்னடான்னா ஈவ்னிங் வான்னு சொல்லுறான். அக்கா இப்பவே போகனும்னு கிளம்பி இருக்காங்க. இத்தனைக்கும் வெளில எங்கயும் போகலையாம். வீட்டுல தானே இருக்காங்க…” என்று வெற்றி குதிக்க ஜெயஸ்ரீ பாலாவின் மௌனத்தில்,
“பாலா, எல்லாம் ஓகே தானே?…” என்றாள் எதிர்பார்ப்புடன்.
“ஹ்ம்ம், ஓகே தான். அம்மாக்கிட்ட நான் என்ன சொல்றது?…” என பலாவின் குரலில் புதிதாய் தெரிந்த வித்தியாசத்தில்,
“ஒன்னும் பிரச்சனை இல்லை. நாங்க ஈவ்னிங்கே வரோம். இப்போ ஓகே வா. அதை சொல்லு….” என ஜெயஸ்ரீ சிரிக்க,
“ஹைய்யோ ஜெய், நான் போனை கட் பன்றேன்…” என்றவள் போனை வைத்ததும்,
“என்ன என்ன சொன்னா? அவளும் அதான் சொல்றாளா? அவன் கூட சேர்ந்து இவளுக்கும் சேட்டை கூடிருச்சு. வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்ற அளவுக்கு பெரியமனுஷி ஆகிட்டாளா?…” என வெற்றி குதிக்க,
“நிஜமாவே பெரியமனுஷி தான். இது கூட புரியலை தத்தி நீங்க. ஈவ்னிங் போய்ப்போம்…”
“அப்ப அக்காட்ட நீயே சொல்லிக்க. நான் கிளம்பறேன்….” என்று நழுவ போனவன்,
“ஆமா, என்ன உன் மூஞ்சில பல்ப் எரியுது?…” என்றான் ஜெயஸ்ரீயின் சந்தோஷமான முகத்தை பார்த்து.
“இப்ப நீங்க வாங்கின பல்ப் தான். எக்கச்சக்க வாட்ஸ். நல்லா எரியுதுல…” என்று கிண்டல் செய்தவள் மோகனாவை தேடி சென்றாள்.
அங்கே ஜெயஸ்ரீ கையை பிடித்தபடி மோகனா பேசிக்கொண்டிருக்க அவர்களின் மலர்ந்து சந்தோஷம் நிரம்பிய முகத்தை பார்த்தவன்,
“இந்தியாவுக்கு இன்னைக்கு ரெண்டாவதா சுதந்திரம் குடுக்க போறாங்களா? என்ன ஒரு சிரிப்பு?…” என்றபடி வீட்டில் சொல்லிக்கொண்டு பேக்டரிக்கு கிளம்பினான்.
இங்கே பாலா ஜெய்யிடம் பேசிவிட்டு போனை வைத்ததும் சூர்யாவை முறைக்க அவன் இன்னும் சிரித்தான்.
“ரெண்டு வார்த்தை பேச உனக்கே தந்தியடிக்குதா? என்னை சொன்ன?…” என்று கேலி பேச,
“ஹ்ம்ம், திடீர்ன்னு போன் குடுத்தா நான் என்ன செய்ய? என்ன நினைச்சாங்களோ? ஜெய்யே ஓகே சொல்லிட்டாங்க….” என சொல்லிவிட்டு எழுந்து குளிக்க செல்ல சூர்யாவின் அந்த காலை பொழுது அத்தனை பாரங்களையும் மறந்து இதமாக மாற்றியது.
எதையும் நினைக்காமல் அவர்களின் மன இணக்கத்தை மற்றுமே மனதார சுகித்தவன் இதழ்களில் நெளிந்த ரகசிய புன்னகையுடனே எழுந்தான்.
பாலா வரும் முன்பே பட்டர் தடவி ப்ரெட் டோஸ்ட் அதில் சீஸ் வைத்து சான்விட்ச் செய்து பாலாவிடம் நீட்டினான்.
“வெளில ஆடர் பன்றதா சொல்லிட்டு நீங்களே செஞ்சாச்சா?…” என கேட்டவளை அப்படியே தூக்கி மேடையில் அமர வைத்தவன்,
“சாப்பாடு வர வரைக்கும் பொறுமை இல்லை. செம்ம பசி. அதான் நானே குளிச்சுட்டு வந்து டக்குன்னு இதை செஞ்சாச்சு. அவசரத்துக்கு இங்க நான் செய்யறது தான்…” என்று சொல்லிவிட்டு காபிக்கு பாத்திரம் வைத்தான்.
“ட்ரம்க்கு இது ஓகே தானே?…” என கேட்டு தனக்கு எடுத்து சாப்பிட்டவன்,
“சூடா இல்லைன்னா நீ சூடாகிடுவியே. அதான்…” என்று கேலி பேச,
“அதெல்லாம் இப்ப பரவாயில்லை. கொஞ்சம் சூடா இல்லைனளும் சாப்பிட்டுக்குவேன்…” என்ற பாலா இன்னும் அவன் மீதான ஆச்சர்யத்தில் இருந்து மீளாதவளாக,
“உங்கக்கிட்ட இப்படி ஒரு கேரிங் பெர்சனாலிட்டி இருக்கும்னு நான் நினைச்சு பார்த்ததே இல்லை. உங்களை ஃபுல் & ஃபுல் மெக் மேக்ன்னு தான் நினைச்சேன்…” என்றாள் சிரிப்புடன்.
“ஹ்ம்ம் இருக்கலாம். நானுமே இத்தனை வருஷம் பொண்ணுங்களை பசங்க தாங்கறதை பார்த்துட்டு என்னடா இது கேர்லி திங்கிங்ன்னு தான் நினைச்சுப்பேன். நிறையபேரை கலாய்ச்செல்லாம் விட்டிருக்கேன். விரும்பார பொண்ணுக்கு இதென்ன இத்தனை வேலை செய்யறான்னு…” என தலையை கோதிக்கொண்டவன்,
“பசங்கலாம் எப்பவும் கெத்தா இருக்கனும்னு. சும்மா எமோஷனல் ஆகாம, எதையும் திமிரா பேஸ் பண்ணனும். அதுதான் ஆண்களுக்கு அழகுன்னு நினைச்சுட்டு இருந்தேன்…” என்றவன் அடுப்பை குறைத்துவிட்டு பாலாவின் கையை பற்றிக்கொண்டவன்,
“ஆனா இப்போ புரியுது பாலா. அது கேர்லி திங்கிங் இல்லை. கேரிங் திங்கிங்ன்னு. அதுவும் உன்கிட்ட…” என்று குழைவுடன் அவளின் கன்னத்தை பற்றியபடி சொல்ல,
“அப்படியெல்லாம் இல்லை. அத்தனை பேரோட சாபம். அதான் இப்படி ஆகிட்டீங்க. எப்படி இருந்தனான் இப்படி ஆகிட்டேன். யாருக்கு சூட் ஆகுதோ இல்லையோ உங்களுக்கு ஆஃப்ட்டா இருக்கும். மெக்காம், கெத்தாம்…” என சொல்லி சொல்லி சிரிக்க,
“வாலு, வாலு…” என்று அவளின் நெற்றியோடு முட்டியவன்,
“ஐயோ பால்…” என்று பாலை ஆஃப் செய்துவிட்டு இருவருக்கும் காபியை கலந்தான்.
சரியாக அர்ச்சனாவும் அழைத்துவிட்டார் அவனுக்கு. எழுந்தாகிவிட்டதா, சாப்பிட்டாயா என எடுத்ததுமே கேட்க,
“எல்லாம் ஆச்சும்மா, இப்போ எதுக்கு கூப்பிட்டீங்க?…” என்றான் அவனும்.
“பாலா எப்படி இருக்கா சூர்யா?…”
“ஹ்ம்ம், நல்லா இருக்கா. தூங்கறா…” என்று சொல்ல,
“இப்போவா? அப்போ எப்ப சாப்பிட்டீங்க? இல்லை இன்னும் எழுந்துக்கலையா?…” என கேட்டுவிட,
“இப்ப எதுக்கு இந்த விசாரணை கமிஷன்? சாப்பிட்டு நான் தான் தூங்க சொன்னேன். வேற என்ன செய்ய சொல்றீங்க?…” என கேட்டவனிடம் பதில் பேச ஒரு நொடி தயங்கினாலும்,
“சூர்யா, அம்மா பார்க்கனும்ப்பா. அஸ்வியை கூட்டிட்டு நான் வரேனே…” என அவர் கேட்டு,
“வெற்றி வரும் போது வரேன். அவங்களோட வரேனே…”
“உங்களுக்கு வெற்றி வரான்னு யார் சொன்னா?…”
“நான் மோகனாட்ட பேசினேன். அப்ப தான் அவங்க சொன்னாங்க. சும்மா பாலாவுக்கு கூப்பிட்டுட்டே இருக்காங்களேன்னு தான் பேசலாம்ன்னு கூப்பிட்டேன்…” என்று அவசரமாய் சொல்ல நேற்றைய கசப்புகள் கொஞ்சமே மட்டுப்படிருக்க,
“ஹ்ம்ம், வாங்க…” என்று சொல்லி வைத்துவிட்டான்.