பேசி முடித்தவான் லேப்டாப்புடன் ஹாலில் மெத்தையை எடுத்துபோட்டு அமர்ந்துவிட அங்கேயே பாலாவும் படுத்து தூங்கிவிட்டாள்.
மதிய உணவை வெற்றி கொடுத்தனுப்பியிருக்க சாதம் மட்டுமே வைத்திருந்தாள் பாலா. அதை சாப்பிட்டுவிட்டு இன்னும் இருந்ததை எல்லாம் வேறு சிறிய பாத்திரத்தில் மாற்றிவிட்டு அனைத்தையும் கழுவிவிட்டு வந்தவளுக்கு அதன் பின் பொழுது போகாமல் இருந்தாள்.
சூர்யா இன்னொரு அறையில் ஒரு மேஜை முழுவதுமாக இருந்த வரைபடம் போலிருந்து பேப்பரில் எதையோ எழுதிக்கொண்டு இருந்தான். பாலா வந்து எட்டி பார்ப்பதும், பின் நடப்பதுமாக இருக்க,
“இங்கயும் அங்கயுமா சுத்திட்டு இருக்க? என்ன வேணும் உனக்கு?…” என கேட்டபடி எதையோ வரைந்துகொண்டு குறிப்பை எழுதிக்கொண்டு இருந்தான் சூர்யா.
“ம்ஹூம், எதுவும் இல்லை…” என்று சொல்லி நகர,
“பாலா, இங்க வா…” என அழைக்க உள்ளே ஒரு சுவர் முழுவதும் இருந்த ப்ரஜெக்டர் திரையில் கார் பாகங்கள் ஓடிக்கொண்டிருக்க அதை பார்த்தபடி வந்த அவளிடம் ஒரு பென்சிலையும், நீண்ட ஸ்கேல் ஒன்றையும் தந்தவன்,
“இதை அசையாம பிடிச்சுக்கோ…” என்று அவளுக்கு வேலை சொல்ல முதலில் அவன் சொல்லியவாறு செய்தவள் நேரம் போக போக அதில் ஒன்ற முடியவில்லை.
“ப்ச், என்ன பாலா. இதை மூவ் பண்ணாத…” என அவனின் பார்வை அதிலேயே இருக்க,
“இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தீங்களா? எனக்கு பொழுதே போகலை…” என்று அந்த ஸ்கேலை அப்படியே விட்டுவிட்டு அவனின் மொபைலை வாங்கிக்கொண்டு ஓபன் செய்ய பார்க்க,
“ட்ரம்…” என்றான் இப்போதும் திரையை கவனமாய் பார்த்தபடி.
“சொல்லாதீங்க…”
“சொன்னாதான பாஸ்வேர்ட் தெரியும். வெளில ஹாலுக்கு போ…” என்று அனுப்பினான். கடுப்புடன் வந்தவள் பாஸ்வேர்டை போட அது திறந்ததும் ஜெயஸ்ரீ எண்ணிற்கு அழைத்தாள்.
“உடனே கிளம்பி வாங்க ஜெய், எனக்கு பொழுது போகலை…” என்றாள் பாலா.
“ஹேய் எல்லாரும் தூங்கறாங்க பாலா…” என ஜெய் சொல்ல,
“ஓஹ், சரி…” என சொல்லிவிட்டு போனை வைத்தவள் நிமிர்ந்து பார்க்க சுவற்றில் சாய்ந்துகொண்டு ஷார்ட்ஸ் பாக்கெட்டில் கை நுழைத்தபடி இவளை பார்த்து நின்றான் சூர்யா.
“இல்லை, சும்மா தான். இப்பவே கிளம்பினா நம்மோளோட கூட கொஞ்சம் நேரம் இருப்பாங்களேன்னு தான் கூப்பிட்டேன்…” என்று மெதுவாய் சொல்ல வா என்பதை போல அவன் கை நீட்டியதும் எழுந்து சென்று அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“என்ன நினைக்கிற பாலா? எதுவா இருந்தாலும் சொல்லு…” என தன்மையாய் கேட்க,
“எதுவும் நினைக்கலை. என்ன நினைக்கனும்? நீங்க சொல்லுங்க. என்ன நினைக்கனும்?…” என வேகமாய் அவள் கேட்க முகம் வியர்க்க ஆரம்பித்தது.
“ப்ச், இப்ப எதுக்கு இவ்வளோ ரியாக்ட் ஆகற? ஒன்னும் சொல்ல வேண்டாம்…” என அவளின் தலையை தட்டிகொடுத்தவன்,
“வெளில போய்ட்டு வரலாமா? சும்மா ஒரு ட்ரைவ்…” என கேட்க அவளுக்கும் அங்கிருக்க மூச்சடைப்பதை போல இருந்தது.
“ஹ்ம்ம், போகலாமே. அம்மாப்பா, வெற்றி மாமா எல்லாம் வருவாங்க. வீட்டுல ஸ்நாக்ஸ் எதுவும் இல்லை. அன்னைக்கு போனோமே பக்கத்துல. அங்கயே போவோம்…” என்றவள் உடை மாற்றி வரவும் இருவருமாய் கிளம்பி வெளியே வந்த பின்னர் தான் கார் இல்லை என்பதையே உணர்ந்தனர்.
“ஓஹ், கார் வீட்டுல நிக்குதே?…” என பாலாவை பார்த்தவன்,
“ஓகே, வா ஆட்டோல போகலாம்…” என அழைக்க பாலாவுக்கு கஷ்டமாகி போனது.
அவளறிந்தவரை சூர்யா யாரிடமும் அந்தஸ்து பார்க்காமல் பழகுபவனாக இருந்திருந்தாலும் இதற்கெல்லாம் அவன் பழக்கமில்லை என்று நன்றாகவே தெரியும்.
“என்ன பார்த்துட்டே நிக்கற?…” என்றவன் செக்யூரிட்டியை கூப்பிட்டு ஆட்டோவிற்கு சொல்ல அவன் அதற்கு மேல் அதிர்ந்தான்.
“அய்யா உங்களுக்கா?…” என அதிர்ச்சியான செக்யூரிட்டி,
“என்னன்னு எழுதி தாங்கய்யா, நான் போயி வாங்கிட்டு வரேன்…” என பவ்யமாய் கேட்க,
“போயா…” என கோபமாக சொல்லியவன்,
“நீ வா பாலா…” என்று அவளோடு சென்றான்.
“கார் புக் பண்ணிப்போமே?…” என பாலா சொல்ல,
“இங்க இருந்து ஒன்றரை கிலோமீட்டருக்கு எவனும் புக் பண்ணிக்க மாட்டான். உனக்கு ஓகேனா சொல்லு அப்படியே நடந்துட்டே போய்ட்டு வரலாம். வரும் போதும் ஆட்டோ பிடிச்சுக்கலாம்…” என பேசியபடியே நடக்க பேச்சுக்கள் அப்படியே அந்த சூப்பர்மார்க்கெட் வரை நீண்டது.
பேசிக்கொண்டே இருவரும் நடந்தே அவ்விடம் வந்து சேர்ந்திருக்க அவசர அவசியத்திற்கென்று இல்லாமல் அதிகமாகவே வாங்கிக்கொண்டனர். பில் போடும் நேரம் வெற்றி அழைக்க,
“என்னடா கிளம்பியாச்சா?…” என்றபடி பர்சில் இருந்த கார்டை எடுத்து பாலாவிடம் நீட்டினான் சூர்யா.
“நாங்க ப்ளாட் வாசல்ல தான் நிக்கறோம். கதவை திறடா…”
“என்ன? இப்போவேவா?…” என்று தனது கையில் இருந்ததில் மணியை பார்க்க,
“ஜெய்க்கு கால் பண்ணி உடனே கிளம்பி வான்னு பால சொல்லிருக்கா. அக்காவோட தான் ஜெய் படுத்திருந்தா. போன் சத்தத்துல யாருன்னு கேட்டு அக்கா உடனே கிளம்பின்னாச்சு. அதான் வந்துட்டோம்…” என வெற்றி சொல்ல சூர்யாவின் பார்வை பாலாவினிடத்தில் நிலைத்தது.
‘என்னடி நினைக்கிற பாலா. மனசு பதட்டமாவே இருக்குது. என்னவோ சொல்லுது. இன்னும் எனக்கு என்ன வச்சிருக்க உன் பங்குக்கு?’ என ஆயாசமாய் நினைத்துக்கொண்டவன்,
“சொல்லிருக்கலாம் தானே? நானும் பாலாவும் பக்கத்துல இருக்கற சூப்பர்மார்க்கெட் வரை வந்தோம்…” என்றவன்,
“ஓகே, உன் பிங்கர் பிரிண்ட் இருக்குது தானே? உள்ள போய் உட்கார். வந்திடறோம்…” என்று சொல்லிவிட்டு பாலாவை பார்க்க பில்லை சரிபார்த்துக்கொண்டு இருந்தாள்.
“முடிஞ்சதா?…” என கேட்டு வந்து அவன் நிற்க,
“ஹ்ம்ம், இதோ. ஆச்சு. ஆயில், அப்பளக்கட்டு மட்டும் மிஸ் ஆகிடுச்சு. வாங்கிடுவோம்…” என்றவள் அதையும் எடுத்துக்கொண்டு வந்து அதற்கும் பின் போட்டுவிட்டு வெளியே வர வெற்றி காத்திருந்தான் அவர்களுக்காக.
“வீட்டுல இருக்க சொன்னா நீ ஏன்டா இங்க வந்த?…” என சூர்யா கேட்க,
“செக்யூரிட்டி சொன்னான். அதான் நானே பிக்கப் பண்ண வந்துட்டேன்…” என இறங்கிய குரலில் சொல்ல,
“ப்ச், இதுக்கு நீ ஏன் மூஞ்சியை தூக்கி வச்சுட்டு இருக்க? வா வா…” என அவனின் தோளில் அடித்தபடி சூர்யா சொல்ல,
“என்னடா இங்க…” என்றான் அவனின் கன்னத்தின் இறக்கத்தில் இருந்ததை பார்த்துவிட்டு.
“பாலா இது உள்ள வச்சுட்டு உட்கார்…” என அவளை மறுபக்கம் அனுப்பியவன்,
“இப்ப உனக்கு விளக்கம் சொல்லியே ஆகனுமா?…” என முறைத்தாலும் அதற்குள் அடக்கப்பட்ட ஒரு புன்னகை நெளிய,
“டேய் சூர்யா…” என தோழனை கட்டிக்கொண்டான் வெற்றி.
“டேய் ச்சீ ப்போ…” என தள்ளிவிட்டவன்,
“பாலா பார்க்கறா. எதாச்சும் எக்குத்தப்பா பண்ணாத…” என அவனின் தலையில் லேசாய் குட்ட,
“எனக்கு இப்ப தான்டா நிம்மதியா இருக்குது…” என வெற்றி சிரிக்க,
“அய்ய, கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம். போடா போடா. காரை எடு…” என்று மறுபக்கம் வந்து அமர்ந்துகொண்டான்.
பிளாட்டிற்கு வந்ததும் மோகனா மகளை வாரி அணைத்துக்கொண்டவர் மாறி மாறி முத்தமிட்டு கொஞ்ச சந்திரன் மகளிடம் நலம் விசாரித்தபடி இருந்தார்.
மோகனாவின் அதிகபட்ச இந்த செயலில் வெற்றியிடம் சூர்யா என்னவென பார்வையால் விசாரிக்க,
“பாலாவுக்கு என்னவோன்னு ஏதோ கனவுகண்டு பயந்திருக்காங்க. அதோட இம்பேக்ட் தான். ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. உங்கப்பாக்கிட்ட தான் உங்க ரெண்டுபேருக்கும் இப்போ நேரம் எப்படி இருக்குதுன்னு கேட்கனும்னு சொல்லிட்டிருக்காங்க…” என வெற்றி சொல்ல சூர்யாவின் முகமே இருண்டுவிட்டது.
வெற்றிக்கு ஏன்தான் சொன்னோமோ என்றாகிவிட மௌனமாகிவிட்டான் அவன். வெற்றி சொல்லியதை போலவே தான் மோகனாவும் பேசினார்.
“எனக்கு மனசுக்கு நெருடலாவே இருக்குது சூர்யா. உங்கப்பாக்கிட்ட பேசிட்டு உங்க ரெண்டுபேருக்கும் நேரம் எப்படி இருக்குதுன்னு பார்க்கனும். அடிக்கடி இப்படியே வருது. நேரம் சரியில்லைன்னா கூட ஏதாவது பரிகாரம் பண்ணிடலாம். நீங்க அங்க இருந்தா அங்க வச்சே பேசலாம்னு தான் இருந்தேன்…”
மோகனா சொல்லவும் சூர்யாவிடம் பதிலில்லை. அவனின் அமைதி பாலாவை உலுக்க அவனின் முகத்தையே பார்த்தபடி கலங்கி போய் இருந்தாள்.
மனதிற்குள் ஏகப்பட்ட சஞ்சலம். காலை இருந்த மகிழ்ச்சி, பூரிப்பு என எதுவும் இல்லாமல் சுத்தமாய் வழித்து துடித்ததை போலாகியது இருவரின் முகமும்.
“அக்கா, இப்ப இதை பேசத்தான் வந்தோமா? வந்த இடத்துல என்ன பேசிட்டு இருக்க? பாரு ரெண்டுபேரும் என்னவோன்னு அப்செட் ஆகிட்டாங்க…” என வெற்றிதான் மோகனாவை அதட்டி அந்த நேரத்தை இலகுவாகக முயல,
“ஒரு டூ மினிட்ஸ், இப்ப வந்திடறேன்…” என்று எழுந்து சூர்யா உள்ளே செல்ல,
“பாலா, அம்மா சொன்னதை நினைச்சு பயந்துட்டியா? அதேல்லாம ஒன்னும் இல்லைடாம்மா. கோவிலுக்கு போய் பரிகாரம் ஏதாவது செஞ்சுட்டு வந்தா மனசுக்கு நிறைவா இருக்கும். அதுக்கு சொன்னேன். அம்மாவுக்கு நீதானடா முக்கியம்…” என அவளின் முகம் பார்த்து சொல்ல,
“அக்கா…” என வெற்றியும்,
“அண்ணி…” என ஜெயஸ்ரீயும் முறைக்க,
“சரி சரி. அதை பேசலை…” என்றவர்,
“என்ன இவ்வளவு ஷாப்பிங் பண்ணிட்டு வந்திருக்கீங்க?…” என கேட்க,
“சூர்யாவுக்கு முக்கியமான ப்ராஜெக்ட். அதனால கொஞ்சம் நாள் இங்க தான் ரெண்டு பேரும் இருக்க போறாங்க. அதுக்குத்தான்…” என அதற்கும் வெற்றியே பதில் சொல்ல,
“கொஞ்சநாள் அப்படின்னா?….” என தம்பியை பார்த்த மோகனா,
“ரெண்டு மூணு நாள் சரிதான். அதுக்குன்னு வாரக்கணக்கா, மாசக்கணக்கா இங்க இருக்கறது தப்பு பாலா. சூர்யாக்கிட்ட நீ சொல்லு. இல்லையா வெற்றி பேசுவான். இப்படி இங்க இருக்கறது தனியா இருக்கறது மாதிரி. என்ன இருந்தாலும் குடும்பமா மாமனார், மாமியார், புருஷன்னு இருக்கற வாழ்க்கை தான் நல்லது…” என்று பேச,
“பாலா, சூர்யாவை போய் பாரு…” என அவளை அனுப்பிய ஜெயஸ்ரீ,
“அண்ணி, இதை சொல்லத்தான் வந்தோமா? வந்ததுல இருந்து சந்தோஷமா பேசாம இப்படியே பேசிட்டு இருக்கீங்க?…” என சொல்ல,
“இல்லை ஜெய், கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தான் ஆகுது. இப்படி தனியா இருக்கற மாதிரி இருந்தா நல்லாவா இருக்கும்? அவங்க சொந்தங்கள் ஏற்கனவே அப்படி இப்படின்னு பேசறாங்க. இதையும் பார்த்தா இன்னும் பேசுவாங்களே?…” என்றார் மோகனா.
சூர்யாவை தேடி உள்ளே வர அவன் ஜன்னல் பக்கம் நின்றபடி முகம் வெளிறி நின்றிருக்க அவனை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டாள் பாலா.
“பாலா, எந்த பரிகாரம் பூஜைன்னு எதுவா இருந்தாலும் போகமாட்ட தானே?…” என்று தழுதழுத்த அவனின் குரலில் உடைந்துபோனவள்,
“சத்தியமா போகமாட்டேன். போகமாட்டேன்…” என அவனை முன்னால் வந்து கட்டிக்கொள்ள,
“நானும் யாருக்காகவும் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன் பாலா…” என இறுக்கிக்கொண்டான்.
வந்தது, அவன் பயந்த, பாலா வரவே கூடாதென்று நினைத்த அந்த சூழ்நிலையும் வந்தது.
அந்த சூழ்நிலையில் யார் சொல்லியிருந்தாலும் எதிர்த்திருந்திருப்பான் சூர்யா. ஆனால் மோகனாவின் மேல் தான் வைத்த அன்பின் முன் அனைத்தையும் இழந்த நிராயுதபாணியாக தான் நின்றான் அவன்.
எந்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என மகளுக்கு போதித்த அதே மோகனா தான் உறவுகள் மொத்தத்தையும் அறுத்தெறிந்து, தம்பியை வெறுத்து பெண் போதுமென அனைவரையும் விலக்கி பெண்ணை கூட்டிச்சென்றார்.
“யார் என்ன பேசினாலும் பரவாயில்லை, என் பொண்ணுக்கு கல்யாணமே ஆகலைன்னு நினைச்சுக்கறேன். இது எல்லாம் கனவுன்னே நினைச்சுக்கறேன். அவ என்னோட இருக்கட்டும். உயிரோட இருக்கட்டும்…” என்று அத்தனைபேரின் வாயடைத்துவிட்டு சூர்யாவின் உயிர் துடிக்க துடிக்க பாலாவை அவனிடமிருந்து கூட்டி சென்றார்.