நிலா – 23
அறைக்குள் தாங்கள் இருவரும் வந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டதை உணர்ந்த சூர்யா,
“ஓகே, பாலா. முகத்தை இப்படி வச்சுக்காத. எதுவா இருந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம். ஓகே…” என்று தனது இரு கைகளை கொண்டு அவளின் முகம் தாங்கி கேட்க,
“ஹ்ம்ம்…” என்றாள் அரைமனதாக.
“நல்லாத்தான் சொல்லேன். மூஞ்சிய பாரு. உம்முன்னு. அப்படியே கடிச்சு வச்சிடுவேன்…” என மூக்கை பிடித்து நிமிண்டியவன் நெற்றியில் முத்தமிட்டு,
“போ, வெளில தேடுவாங்க…” என்று கன்னம் தட்டி அனுப்ப அவனின் டிஷர்ட்டை இழுத்து தனது முகத்தை துடைத்துக்கொண்டவள்,
“நீங்களும் வாங்க. தனியா நீங்க இங்க நிக்கறது என்னனோன்னு இருக்குது…” என்று சொல்லிவிட்டு செல்ல ஒரு பெருமூச்சுடன் சூர்யாவும் அவளின் பின்னே வந்தான்.
ஹாலில் யாருமில்லாமல் இருக்க கிட்சனில் சத்தம் கேட்டு அங்கே சென்றனர் இருவரும்.
அங்கே மோகனாவும், ஜெயஸ்ரீயும் பாலா வாங்கி வந்திருந்த பொருட்களை பிரித்து பார்த்து எடுத்து வைத்துக்கொண்டு இருக்க வெற்றி அவர்களுக்கு உதவிக்கொண்டு இருந்தான். சந்திரனை எதுவும் செய்யவிடவில்லை. ஒரு ஸ்டூலை போட்டு அவரை அங்கே அமரவைத்திருந்தனர்.
“என்ன பண்ணிட்டிருக்கீங்க எல்லாரும்?…” என வந்த பாலா வேகமாய் ஜெயஸ்ரீ கையில் இருந்ததை வாங்கிக்கொண்டு,
“நான் பண்ணிக்க மாட்டேனா?…” என்று கடிந்துகொண்டவள் அவளுக்கும் ஒரு இருக்கையை கொண்டு வந்து போட்டுவிட்டு தானே பிரித்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
“அண்ணி, பாலாகிட்ட விடுங்க. அவளுக்கு எப்படி வச்சா எடுத்து சமைக்க வசதியா இருக்குமோ அப்படி வச்சுக்கட்டும். ஹெல்ப் பண்ணுங்க போதும்…” என ஜெயஸ்ரீ சொல்ல,
“ஹ்ம்ம், ஆமா, நான் பன்றேன்ம்மா. நீ உட்கார்…” என பாலா சொல்ல,
“இருக்கட்டும்டா. எடுத்து வச்சுட்டு சொல்லிட்டு போறேன். நீ பார்த்துக்கோ…” என மோகனாவும் விடவில்லை.
“அட, இப்ப என்ன? எல்லாரும் சேர்ந்தே எடுத்து போடுவோம். பாலா நீ என்னென்ன வேணும்னு கேளு. சூர்யா போய் ஹெல்ப் பண்ணுடா…” என்ற வெற்றி எடுத்து தர தர எடுக்க ஈஸியாய், வசதியாய் பார்த்து வைத்து முடித்து வந்து அமர வெற்றிக்கு போன் வந்துவிட்டது.
“அர்ச்சும்மா…” என வெற்றி எடுக்க சூர்யா அவனை பார்த்ததும் தான் அம்மாவை வர சொல்லிய ஞாபகமே வந்தது.
“வெற்றி எப்போ கிளம்பற? நாங்க ரெடியா இருக்கோம். நீ இன்னும் வரலையே…” என கேட்க,
“அச்சோ, ஸாரி அர்ச்சும்மா, நாங்க சூர்யா வீட்டுல இருக்கோம். பாலா உடனே வாங்கன்னு கால் பண்ணதும் கிளம்பிட்டோம். மறந்தே போய்ட்டேன் நான்…” என்று வெற்றி சொல்லவுமே அர்ச்சனாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட,
“சரிப்பா, வச்சிடறேன்…” என்று வைத்துவிட்டார்.
தனக்கு யாரிடமும் முக்கியத்துவம் இல்லாததை போல உணர்ந்தது அவரின் மனது. நடப்பவை, நடந்தவை என்று அவரை ஒவ்வொன்றும் பாதித்தது. அவரின் பக்கமென்று யாரும் யோசிக்கவில்லை. ஆனால் அவர் எல்லாவற்றையுமே யோசிக்க வேண்டுமே.
அப்படியே அமர்ந்திருந்தவர் அஸ்வினியின் குரலில் திரும்பி பார்க்க அவள் தயாராகி வந்து நின்றாள்.
“என்னம்மா, கிளம்பியாச்சு, இன்னும் வெற்றிண்ணா வரலையே…” என கேட்க அர்ச்சனா பதில் சொல்லும் முன் சூர்யா அழைத்துவிட்டான்.
“ம்மா, கிளம்பி வாங்க. நான் சொல்லனும்னு இருந்தேன். ஆனா இங்க சூழ்நிலை சரியில்லை. அதான். வாங்க, ஆனா எப்பவும் போல இருங்க…” என்று மட்டும் சொல்லி வைத்துவிட அதன் பின்பும் செல்லவே மனதில்லை.
ஆனாலும் மகன், மருமகளுக்காக கிளம்பினார் அர்ச்சனா. கோபாலசுவாமியிடம் கிளம்புவதை மட்டும் சொல்ல அவரும் ஒன்றும் பேசவில்லை. தலையசைத்து சம்மதித்தவர்,
“சூர்யாவோட காரை எடுத்துட்டு போ. அங்க அவனுக்கு தேவைப்படும். அங்க இருந்து நீ கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணு. நம்ம காரை அனுப்பி வைக்கறேன்…” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
செக்யூரிட்டி அழைத்து ஆட்டோ பிடித்துவர சொல்லி மகன் சொல்லியதாய் தகவல் தந்ததில் இருந்தே தளர்ந்து போய் அமர்ந்துவிட்டார் கோபாலசுவாமி. அவனாக வந்து எடுத்து செல்வானா என்று கூட யோசிக்கமுடியவில்லை அவரால்.
அர்ச்சனா வந்து கிளம்புவதாக சொல்லவுமே நல்லாதாகிற்று என்று அதில் அனுப்ப முடிவு செய்துவிட்டார்.
இதோ கிளம்பி அர்ச்சனாவும், அஸ்வினியும் வந்துவிட உள்ளே வந்த அர்ச்சனா பாலாவின் முகத்தை தான் பார்த்து பார்த்து நின்றார்.
ஒவ்வொன்றிற்கும் அவளிடம் எதையாவது கேட்டு, பதில் வாங்கிக்கொண்டே இருந்தார். வந்ததும் வாங்க ஆன்ட்டி என்றதோடு பாலா அமைதியாகிவிட அவளிடம் பேச்சை வளர்த்து அர்ச்சனா தனது பரிதவிப்பை மறைக்க மோகனா தான் பாலாவை திட்டினார்.
“என்ன பாலா, ஒன்னொண்ணுக்கும் ஒரு வார்த்தையில பதில் சொல்ற? ஒழுங்கா பேசு…” என்று தனியே அழைத்து மகளை கடிந்துகொண்டவர்,
“தலை எதுவும் வலிக்குதா? ஏன் முகமே டல்லா இருக்குது?…” என போட்டு வாட்ட,
“ம்மா, எனக்கு முடியலை. டயர்டா இருக்குது. அதோட வெளில போய்ட்டு வந்து இப்ப இத்தனையும் எடுத்துவச்சு கிளீன் பண்ணி, விட்டிருந்தா நானே மெதுவா பொறுமையா எல்லாம் அடுக்கியிருப்பேன். உடனே செய்ன்னு வந்து நின்னு எனக்கு முடியலை. அதான்…” என சோர்வுடன் அவள் சொல்ல மோகனாவிற்கு புன்னகை.
“முதல்ல அப்படித்தான் இருக்கும். சரி நீ கொஞ்சம் நேரம் அவங்களோட பேசிட்டு இரு. அதுக்கப்பறம் ரெஸ்ட் எடு. அவங்க முகமே ஒரு மாதிரி இருக்குது. வருத்தப்படுவாங்க தானே?…” என மகளிடம் தன்மையாக சொல்லியவருக்கும் புரிந்தது.
இன்று தான் மகள் தாம்பத்தியத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். அதனோடு இந்த பொறுப்புகள். இவை எல்லாம் புதிது தானே என நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டார்.
பின் பாலாவை அமர வைத்துவிட்டு அர்ச்சனாவும், மோகனாவும் சமைக்க பெண்கள் அங்கே சென்று நின்றுகொள்ள வெற்றியிடம் தனது பயணம் குறித்த பேச்சை பேசியபடி இருக்க அமைதியா எங்கேயும் சேராமல் சந்திரன் அங்குமிங்கும் பார்த்தபடி இருந்தார்.
சிறிது நேரத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு முடித்து கிளம்ப மனதே இல்லாமல் கிளம்பினார்கள். அர்ச்சனா மோகனா இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்க அங்கிருந்து கிளம்ப வைக்க ஜெயஸ்ரீ தான் படாதபாடுபட்டாள்.
கிளம்பும் பொழுது தான் அர்ச்சனா மகனிடமே வந்தார். வந்ததில் இருந்தே சூர்யா வரவேற்றதோடு ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை.
அஸ்வினியிடம் மறுநாள் தனக்கு தேவையானதை எடுத்துவரும் படி அவளிடம் சொல்ல ஏன் எதற்கு என்று கேட்டு பழக்கமில்லாத அஸ்வினியும் அவனிடம் தலையை மட்டும் ஆட்டினாள்.
“அண்ணி எப்போ வீட்டுக்கு வருவீங்க? உமா அத்தை உங்களை கேட்டுட்டு வர சொன்னாங்க. இங்க எத்தனை நாள் இருப்பீங்க? அண்ணா ஊருக்கு போகும் முன்னாடி தான வந்தீங்க. திரும்பவுமா?…” என்று கேட்டு துளைக்க,
“அஸ்வி, அவங்க வருவாங்க. சும்மா தொணதொணக்காத…” என்ற அர்ச்சனா மகனிடம்,
“உன்னோட கார்ல தான் வந்தோம் சூர்யா. இப்ப அப்பா கார் அனுப்பிட்டார். கீயை ஸ்டாண்ட்ல மாட்டிட்டேன்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே…” என்றுமட்டும் சொல்லவும் மகனின் முகத்தையே வருத்தத்துடன் பார்த்தார்.
“சூர்யா…”
“அம்மா ப்ளீஸ். நீங்க கிளம்புங்க. இப்ப எதையும், பேசவோ கேட்கவோ எனக்கு தெம்பில்லை. பார்த்தீங்க தானே பாலா வீட்டுல எப்படி இருக்காங்கன்னு. அதுவும் எவ்வளவு சந்தோஷமா. அவங்களோட முழுமனசா பேசமுடியாம அவ அல்லாடினதையும் பார்த்தீங்க தானே?…”
“எனக்கும் புரியுதுப்பா…”
“புரிஞ்சவரைக்கும் சந்தோஷம். அவ்வளவு குற்றவுணர்ச்சியா இருக்குது எனக்கு. நீங்க கிளம்புங்க. இங்க தான் பார்த்துட்டு இருக்காங்க…” என சூர்யா சுட்டிக்காட்ட அங்கிருந்தே அஸ்வினி என்னவென்று தாயிடம் கேட்டாள்.
“ஹ்ம்ம், சரிப்பா…” என்றவருக்கு செல்லவே மனதில்லை.
அங்கே மோகனா வேறு பாலாவிடம் இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் பிளாட்டில் இருந்துவிட்டு சூர்யாவுடன் வீட்டிற்கு சென்றுவிடவேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டு இருந்தார்.
ஒருவழியாக அவர்களின் பேச்சுக்கள் ஓய்ந்து அனைவரும் கிளம்பி சென்றதும் தான் அலையடித்து ஓய்ந்ததை போல இருந்தது.
செல்லும் முன் கிட்சனை எல்லாம் கழுவி, ஒழுங்குபடுத்திவிட்டே தான் சென்றிருந்தார் மோகனா. வெளியில் வாங்காமல் என்ன செய்யேவண்டும் என்று போன் செய்து கேள், சொல்கிறேன் என்று அதையும் சொல்லி தான் சென்றிருந்தார்.
அப்போதுதான் அர்ச்சனா கொண்டு வந்த பேக்கை பார்த்தவன் அதை எடுத்துக்கொண்டு பாலாவிடம் வந்தான். முகத்தை அலம்பிவிட்டு வந்தவளிடம்,
“இந்நேரம் என்ன முகம் கழுவிட்டு இருக்க? என்னாச்சு?…” என கேட்க,
“ரொம்ப டஸ்ட்டா பீல் ஆச்சு. அதான். வாஷ் பண்ணேன்…” என்று சொல்லி,
“என்ன இது?…” என கேட்க.
“உன் பேக் தான் அம்மா கொண்டு வந்தாங்க. மொபைலை எடுத்து சார்ஜ்ல போடு. ஆஃப் ஆகியிருக்கும் தானே?…” என்று சொல்லிவிட்டு தன்னதையும் டேபிளில் வைத்துவிட்டு வந்து படுக்க ஒவ்வொன்றாய் எடுத்து வெளியே வைத்தாள்.
“ட்ரெஸ் வேற எடுத்துட்டு வந்திருக்காங்களா?…” என அவளிடம் அவன் கேட்க,
“இன்னைக்கு காலேஜ்ல ஒரு ப்ரோக்ராம். அதுக்காக தான் ட்ரெஸ் எடுக்க வீட்டுக்கு போயிருந்தேன்…” என சாதாரணமாக சொல்ல,
“அடிப்பாவி இதை பத்தி என்கிட்டே சொல்லவே இல்லை…”
“தோணலை…”
“அட்லீஸ்ட் காலையிலையாச்சும் சொல்லிருக்கலாம்ல. போய்ட்டு வந்திருக்கலாம்…”
“அதுக்குத்தான் சொல்லலை. போதுமா? இப்ப என்ன காலேஜ் போகனுமா? போறேன். இந்த மந்த் முடிஞ்சுரும். அப்பறம் எக்ஸாம் மட்டும் தான். அதுக்கப்பறம் என்னை எங்க அனுப்புவீங்களாம்?…” என எரிச்சலுடன் கேட்க,
“சண்டை போடனும்னா கோபம் வந்தா என்னவேணாலும் பேசுவியா நீ? உன்கிட்ட மனுஷன் பேசுவானா?…” என்று அவனும் பில்லோவை தூக்கி அவள் மேல் எரிய,
“அப்ப நீங்க மனுஷன் இல்லைன்னு ஒத்துக்கறீங்களா?…” என்றாள் அசால்ட்டாய்.
“நான் மனுஷன் இல்லைன்னா நீ யாராம்?…” என கேட்க,
“அதையும் நீங்க தான் சொல்லனும்…”
“ட்ரம், ட்ரம்…” என்று அவன் திட்ட அவன் எரிந்த பில்லோவை மீண்டும் அவனுக்கே தூக்கி போட,
“ப்ச், முதல்ல பெட்ல பரத்தினதை எல்லாம் எடுத்து வை பாலா. இப்படியே எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கறதா உத்தேசம்?. நான் நாளைக்கு பேக்டரிக்கு போகனும்…” என்றதும் பாலா மௌனமாகிவிட,
“போரடிக்குமேன்னு தோணுதா?…”
“ம்ஹூம், அதெல்லாம் இல்லை. அங்க வீட்டுலையும் பெரும்பாலும் ரூம்ல இருப்பேன். இல்லைன்னா உமா ஆன்ட்டியோட இருப்பேன். காலேஜ் போய்ட்டா ஒன்னும் தெரியாது…” என சமாளிக்க,
“இன்னும் ஏன் ஆன்ட்டின்னு கூப்பிட்டுட்டே இருக்க? சித்தின்னு கூப்பிடலாம். இல்லை பெரியம்மான்னு கூப்பிடலாம்…” என்றவன்,
“அம்மாவை கூட இன்னும் ஆன்ட்டின்னு தானே கூப்பிடற?…” என கேட்க,
“ஹ்ம்ம் ஆமா…”
“என்ன ஆமா? கேள்வி கேட்டா பதில் சொல்லு…”
“ப்ச், தோணலை கூப்பிடலை…” என்றாள் சாதாரணமாக.
அவளை சூர்யா பதிலின்றி அழுத்தமாய் பார்க்க சில நொடிகள் மௌனமாக இருந்தவள்,
“இந்த உறவு ஆரம்பமே கலவரம் தான். அப்போ எனக்கு கூப்பிட தோணலை. இயல்பா சுமூகமா பிடிச்சு ஆரம்பிச்சிருந்தா எனக்கும் தானாவே கூப்பிட தோணிருக்கும். ஆனா அப்படி இல்லை தானே?…”
“சோ?…”
“என்ன சோ? முதல்லையே ரெண்டு ஆன்ட்டிக்கு, அஸ்விக்குன்னு யாருக்குமே விருப்பம் இல்லாம நான் அங்க வந்தேன். ஓகே இப்போ எல்லாம் ஓகே தான்னாலும் அவங்களும் அதை சரி செய்யலை. உரிமையா கூப்பிடுன்னு எனக்கு அதை உணர்த்தலை. எனக்கும் தோணலை…”
அத்தனை ஈஸியாய் அவள் சொல்லிவிட அதற்குள் இருந்த சூட்சமத்தில் வியப்புடன் தான் அவளை பார்த்தான். இவளா சிறு பெண்? என.
இயல்பாக ஆரம்பிக்கும் உறவானால் தானாகவே வந்துவிடும் உரிமை இதில் இல்லை, விருப்பமின்றி ஏற்றவர்களும் பின் உணர்த்தவில்லை. தானும் அழைக்கவில்லை என பளிச்சென்று சொல்லிவிட சூர்யாதான் அமைதியானான்.
உண்மை தானே? பாலா மருமகளாகியதில் வீட்டினர் முதலில் முகம் தூக்கி வைத்திருக்க அவளாகவே அழைக்க நினைத்திருந்தாலும் அழைத்திருக்க முடியாது. அதன் பின்னும் உறவு வலியுறுத்த அவர்களும் முன்வரவில்லை.