“கேட்டதுக்கு இதுதான் பதில். போதுமா? இல்லை இன்னும் சொல்லனுமா?…” என அவள் சிரிக்க,
“போதும், போதும். எடுத்து வச்சிட்டு தூங்கு. காலையில காலேஜ் போகனும்…” என்றவன் எழுந்து சென்று மொபைலில் அலாரம் வைத்துவிட்டு வர,
“நீங்க தான் அலார்ம் அடிக்காமலே எழுந்துக்கற ஆளாச்சே. இப்ப என்ன புதுசா?…” என்று கேட்டபடி வாட்ரோபினுள் கட்டிலில் இருந்ததை எல்லாம் இடம் மாற்ற,
“வைக்கனும்னு தோணுச்சு. ஒருவேளை அசந்து தூங்கிட்டா?…”
“இன்னைக்கு மாதிரியா?…” என பாலா விஷமத்துடன் பேசி சிரிக்க,
“தொலைச்சிடுவேன். பேசாம வாயை மூடு…” என்று லேசாய் அதட்டியவன்,
‘இருக்கற மனநிலையில இவ வேற சோதிக்கிறா’ என்று நினைத்தபடி படுத்துவிட்டான்.
பாலாவும் லைட்டை ஆஃப் செய்துவிட்டு வந்து படுத்தவள் வழக்கம் போல அவனின் தோளில் தலை வைக்க,
“பில்லோ எதுக்கு இருக்குது?…” என்று என முறைக்க,
“அதை நேத்தே கேட்டிருக்கனும்…” என்றாள் அவளும்.
சரிக்கு சரி வாதாடுபவளை எந்த கணக்கில் சேர்ப்பது? இன்று மோகனா வந்ததில் இருந்து அவளிருந்த மனநிலை. அதனை கொண்டு தானும் தள்ளி நிற்க இவளானாள் படுத்துகிறாளே?
“பாலா, இப்பவும் நீ என்ன நினைக்கிறன்னு என்னால கண்டுபிடிக்க முடியலை. நீ ஓகே தானே? மோகனாக்கா இருந்தவரைக்கும் உன் முகத்துல எதுவோ குறைஞ்சுட்டே இருந்துச்சு. ஒரு பதட்டம். அதை மறைக்க ரொம்பவே மெனக்கெட்டமாதிரி தெரிஞ்சது. ரொம்ப தவிச்சுட்டே இருந்த…”
“அப்படி எதுவும் இல்லையே. முதல்ல இந்த அக்கா புராணத்தை நிப்பாட்டுங்க. மோகனாக்கா இப்ப இங்கயா இருக்காங்க?…” என அவ அதட்டி அவனின் மனநிலையை மாற்ற அதிகமாய் கிண்டல் பேசினாள் பாலா. ஒருகட்டத்தில் அவளின் வாயை கையால் பொத்தியவன்,
“ப்ச், போதும் பேசினது தூங்க விடு….” என்று கண்ணை மூடிக்கொள்ள அவன் மீது கை போட்டவளிடம்,
“பாலா நோ. தள்ளு. என்னை ரொம்ப டிஸ்டர்ப் பன்ற…” என முணங்கியபடி சூர்யா ஒரு பக்கமாய் திரும்பிக்கொள்ள,
“எஸ்…” என அவனின் முதுகை கட்டிக்கொண்டு முகம் புதைத்தாள்.
“என்ன எஸ்?…”
“எனக்கு இப்படி படுத்தா தான் தூக்கம் வருது. தள்ளுன்னா? அதுக்கு தான் நோ. இதுக்கு எஸ். நான் சொல்றதுக்கு தான் எஸ்…” என முரண்டுபிடிக்க சூர்யாவின் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை. ‘ராட்சஸி’ என்ற சில்லாகிப்புடன் இப்போது வேண்டுமென்றே,
“நோ…” என்றான் மீண்டும்.
“எஸ், எஸ் தான்…” என்று பாலாவும் சொல்ல இருவரும் மாறி மாறி மறுப்பும், விருப்புமாய் வாதாடியபடி இருக்க எக்கணம் சூர்யாவின் அந்த நோ எஸ்ஸாக மாறியதோ? இப்போது பாலா அவனின் ஒவ்வொன்றிக்கும் நோ சொல்லி சொல்லி ஓய்ந்துபோனாள்.
“பேட், வெரி பேட் மெக்…” என அவனுக்கு புகழாரம் சூட்டியபடி விழிமூட மூடிய இமைகளில் அழுத்தமாய் அதரங்களை பொருத்தியவனின் விழிகளும் மெல்ல உறக்கத்திற்கு தாவியது.
வாழ்க்கை இப்படியே கடந்துவிட வேண்டும் என்று இருவுள்ளங்களும் தவிப்பை அடக்கியபடி ஒருவரை ஒருவர் அந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.
மூன்று மாதங்கள் அப்படியே செல்ல எந்தவித அசம்பாவிதங்களும் நேராதளவில் சூர்யாவின் பயம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால் பாலாவின் மனதிலிருந்த எண்ணங்களின் சக்தி அவளின் பயத்தை உண்மையாக்குவதை போலவே அடுத்த நிகழ்வை நிகழ்த்தியது.
அன்று முக்கியமான நாள் என்பதால் வெற்றி கோவிலுக்கு அழைத்திருக்க பாலாவுடன் கிளம்பி காலையே அங்கே விரைந்திருந்தான். அங்கே சென்றதும் தான் அது கோபாலசுவாமி ஏற்பாடு செய்திருந்த பூஜை என்பதையே அவன் புரிந்துகொண்டான். அங்கே வைத்து ஒன்றும் கேட்கவேண்டாம் என நினைத்திருந்தான்.
பார்வை வெற்றியை முறைத்தது. அவனிடத்தில் வீட்டில் மனஸ்தாபம், தனியாக இருக்கிறோம் என்றுமட்டும் ஒருவாறு சொல்லியிருக்க அவனும் மேலே துருவவில்லை என்பதில் மிகுந்த நிம்மதியானான் சூர்யா.
வெற்றியிடமிருந்து மீண்டும் தகப்பனை துளைத்தது அவனின் பார்வை. மூன்று மாதங்கள் ஆகிற்று அவரை அவன் நேருக்கு நேர் பார்த்து. அவர் அவ்வப்போது மகனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார். கவனம் முழுவதும் மகன், மருமகள் மீதல்லவா?
இருவரையும் பார்த்ததுமே முகம் கனிந்தது. முகம் மலர மனதார ஆசிர்வதித்தபடி பார்த்து நிற்க சூர்யாவும் பேசவில்லை. பாலாவும் பேசவில்லை.
சூர்யாவிற்கு கோபம் பேசவில்லை. பாலாவுக்கு அவரை பார்த்ததுமே கடைசியாய் அந்த வீட்டை விட்டு தாங்கள் கிளம்பி வந்தன்று நிகழ்ந்தவை தான் மேலெழும்பி வந்தது. அன்று அத்தனை படபடப்பாய் உணர்ந்தாள்.
காலையில் இருந்தே மனதே சரியில்லை. சூர்யாவிடம் கிளம்புவதற்குள் காலதாமதம் செய்து அத்தனை திட்டுக்களை வாங்கி இருந்தாள். நடந்து வரும் போதே கால் தடுக்க விழாமல் அவளை பிடித்துக்கொண்டவன்,
“இன்னைக்கு என்னாச்சு பாலா? ஏன் இத்தனை ஸ்லிப் ஆகற? காலையில குளிச்சுட்டு வரும் போதும் தான் கீழே விழ இருந்த. ஈரம் வழுக்கிருச்சுன்னு பார்த்தா இங்க சமதரையில என்ன?…” என்று கடிய பாலாவின் உடல் வியர்த்திருந்தது.
“பாலா…” என மீண்டும் அழைக்க கண்ணெல்லாம் சிவந்து முகம் மாறி இருந்தது.
“எனக்கு தெரியலை…” என்றாள் அவனிடம் பாவமாக.
“ப்ச், ஓகே ஓகே. இன்னைக்கு ரொம்ப திட்டிட்டேனா?…” என கனிவாய் கேட்டவன்,
“பார்த்து வரனும். கால் பேலன்ஸ் மிஸ் ஆகிட்டா. அதான் சொன்னேன்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றவள் மோகனாவை நோக்கி போனாள்.
“என்னம்மா இவ்வளவு நேரம்?…” என சந்திரன் கேட்க,
“சரி விடுங்க, வந்தாச்சுல. இன்னும் நேரமிருக்கு…” என்று சொல்லி கோபாலசுவாமி பூஜைக்கு அழைத்து செல்ல அது சிறிய கல்மண்டபம்.
அனைவரும் அங்கே இருக்க ஹரிணி, வருணும் கூட வந்திருந்தனர். உமா, உத்தமன் என மொத்த குடும்பமும் சேர்ந்திருந்தனர்.
சூர்யா வெற்றி வருணோடு சேர்ந்து நிற்க பாலாவை பார்த்தபடி தான் அவன் பேசிக்கொண்டிருந்தான். அவளின் முகமே சரியில்லாததை போல இருக்க அருகே சென்றவன்,
“என்ன பண்ணுது பாலா? ஏன் தலையை பிடிச்சுட்டே இருக்க?…” என கேட்க,
“தெரியலை. தொண்டை வரட்டுது. தலை சுத்தற மாதிரி இருக்குது…” என்று சொல்ல,
“சரி இரு வெளில குடிக்க சோடா, ஜுஸ் ஏதாவது வாங்கிட்டு வரேன்…” என்றான்.
“நானும் வரேனே…” என அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வரேன்…” என சந்திரன் எழுந்து செல்ல போக பாலாவின் முகம் பார்த்தவன்,
“இல்லை மாமா, நானே கூட்டிட்டு போய்ட்டு வரேன். வாசல்ல தானே?…” என கேட்டு கூட்டிக்கொண்டு செல்லும் போதே அவளுடன் அத்தனை கேள்விகள்.
வேறு எதுவும் செய்கிறதா என்ன ஏதேன கேட்டுக்கொண்டே அவன் வர பாலாவிற்கு நெஞ்சை பிசைந்தது. பேசமுடியாமல் தொண்டை அடைப்பதை போலவே இருந்தது. என்னவகை உணர்வென்று பிரித்தரியமுடியாமல் அதில் இன்னமும் உழன்றாள்.
“சர்பத் குடிக்கிறியா?…” என கேட்டு அங்கே சற்று தள்ளி இருந்த சர்பத் கடையில் அவளுக்கு வாங்கி குடிக்க தர வேகமாய் அருந்தியவளுக்கு புரையேறி முகம் சிவந்து போனது.
“மெல்ல, என்ன பாலா நீ? மெதுவா குடி…” என தலையை தட்டியவன் திரும்பி குடித்து முடித்ததும் அந்த க்ளாஸை வாங்கி வைத்துவிட்டு அவளை கூட்டிக்கொண்டு சென்றவன் பின்னால் கேட்ட சலசலப்பில் பார்ப்பதற்குள் அந்த அசம்பாவிதம்.
பாலாவையும், சூர்யாவையும் அழைத்துவர சொல்லி கோபாலசுவாமி அனுப்பியிருக்க வெற்றியும், வருணும் கோவிலின் வாசலுக்கு வரும் பொழுதே அவர்கள் பின்னால் வரும் காரை கவனித்து,
“பாலா, சூர்யா…” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தனர்.
கட்டுப்பாடின்றி வந்த கார் ஒடித்து திருப்பி இவர்கள் எதிர்பாராத நேரம் அடித்து செல்ல பார்க்க அதை பார்த்த நொடி சூர்யாவை இழுத்தவள் தானும் ஒதுங்குவதற்குள் அவளை இடித்துவிட்டே தறிகெட்டு செல்ல கீழே விழுந்த சூர்யா திரும்பி பார்ப்பதற்குள் பாலா விழுந்திருந்தாள்.
விழுந்த இடத்தில் இருந்த கல்மேடையில் தலை மோதி குருதி பாய காலிலும் அடிபட்டு வேகமாய் வீக்கம் பொங்க ஆரம்பித்தது.
“பாலா…” என்ற அலறலுடன் அவளை தாங்கிக்கொண்டவன் அலற வருணும் வெற்றியும் ஓடிவந்தனர். வருண் உடனே கோவிலுக்கு சென்று விஷயத்தை சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு வர மொத்த குடும்பமும் பதறிக்கொண்டு வந்தது.
ஐந்து நிமிடத்தில் அருகே இருந்த மருத்துவமனையில் அவசரத்திற்கு அனுமதித்திருக்க சூர்யாவின் உடை எல்லாம் பாலாவின் ரத்தம். அத்தனை ரத்தப்போக்கு.
இன்னும் உயிரின்றி தனது கையில் துவண்டிருந்த பாலாவின் முகமே அவனை அணு அணுவாய் சித்தரவதை செய்தது.
அவசரசிகிச்சை பிரிவின் முன்னால் அனைவருமே நின்றிருக்க ஒருவரும் ஒருவரின் முகத்தை பார்க்கவில்லை. ஆனால் வெற்றியின் பார்வை கோபாலசுவாமியிடமே இருக்க அவரின் முகம் வெளிறி போய் இருந்தது.
கண்ணை மூடியபடி எதையோ முணுமுணுத்துக்கொண்டு அமர்ந்திருந்தவர் கைவிரல் நடுங்கியபடி இருக்க வெற்றியின் மனம் இங்கே கதறிக்கொண்டு இருந்தது.
மோகனாவை தோளில் தாங்கிக்கொண்டு ஜெயஸ்ரீ தைரியம் சொல்லிக்கொண்டு இருக்க அவளுடன் உமாவும் இருந்தார். அஸ்வினி, ஹரிணியும் அர்ச்சனாவிடம் ஆறுதலாய் இருந்தனர். சந்திரனிடம் உத்தமனும், வருணும் அமர்ந்திருக்க அந்த கதவு திறக்கப்பட்டது.
வெளியே வந்த மருத்துவர் அவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு மிகுந்த வருத்தமான முகத்துடன் பேச ஆரம்பிக்கும் முன்,
“டாக்டர் எங்க பொண்ணு? எங்க பொண்ணு இப்போ எப்படி இருக்கா?…” என அர்ச்சனா தான் வேகமாய் வந்தார்.
“நாங்க எவ்வளவு முயற்சி பண்ணினோம். ஆனா தலையில பலமா அடிபட்டதால பயங்கர ப்ளட் லாஸ். எங்களால காப்பாத்த முடியலை. ஐம் ஸாரி…” என்று சொல்லிவிட்டு சென்ற நொடி,
“ஐயோ…” என்று மோகனா நெஞ்சை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றுவிட கேட்டவர்களுக்கு ஒருநொடி உலகமே நின்றதை போலானது.
“டாக்டர்…” என்ற அர்ச்சனா அதிர்ந்து கோபாலசுவாமியை பார்த்துவிட்டு மகனை பார்க்க அவன் ஆணியடித்ததை போல மூச்சின்றி அமர்ந்திருந்தான். எந்த அசைவுமில்லை அவனிடத்தில்.
மோகனா நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க சந்திரனை தாங்கிப்பிடித்த உத்தமன் அந்த நிலையை சமாளிக்க பார்க்க அர்ச்சனா கோபாலசுவாமியிடம் நெருங்கி,
“போதுமா? இது போதுமா உங்களுக்கு? ஒன்னும் தெரியாத பொண்ணை ஜாதகம் ஜாதகம்ன்னு சொல்லி கட்டிவச்சு இன்னைக்கு அவளை இல்லாம பண்ணிட்டீங்களே? நம்ம பெத்த பையனோட உயிருக்கு அந்த பொண்ணை காவலா கட்டிவச்சு இப்ப அவளே இல்லாம போய்ட்டாளே?…” என அழுதபடி,
“கேட்டேனே, சூர்யா ஜாதகத்தால பாலாவுக்கு ஆபத்து வருமான்னு. இல்லைன்னு சாதிச்சீங்க. இப்ப என் மகனை பாருங்க…” என அர்ச்சனா அழ அதை கேட்ட வெற்றி புயலை போல பாய்ந்து அவரின் சட்டையை பிடித்திருந்தான்.
“எங்க பாலாவுக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்லித்தான அவங்க நல்லா வாழ்வாங்கன்னு சொல்லித்தான பாலாவை கல்யாணம் பண்ணி குடுக்க கேட்டீங்க. நம்பித்தான நானும் சம்மதிச்சேன். இப்ப இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இப்படி பழி வாங்கின மாதிரி பண்ணிட்டீங்களே? நானும் தெரிஞ்சே எங்க பொண்ணை பலியாக்கிட்டேன். நான் பாவி…”
அவரை விட்டுவிட்டு அவனின் முகத்தில் அடித்துக்கொண்டு அழ அழுதுகொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க சூர்யா வெற்றியை பார்த்த பார்வை அவன் ஜென்மத்திற்கும் மறக்கமுடியாதது.
“என்ன இங்க சத்தம்? எதுக்கு கூச்சல்?…” என நர்ஸ் வந்து கேட்க,
“எங்க பொண்ணு…” என ஜெயஸ்ரீ அழுகையுடன் சொல்ல,
“ஐயோ அந்த டாக்டர்க்கு இதே வேலையா போச்சு. உங்க பொண்ணுக்கு எதுவும் இல்லைம்மா. தலையில அடி தான். ஆனா பெருசா இல்லை. ரத்தம் நிறைய போயிருக்கு. ட்ரீட்மென்ட் முடிச்சாச்சு. இப்ப மயக்கத்துல இருக்காங்க…” என்று சொல்ல இன்னும் நம்பாமல் அனைவரும் பார்க்க,
“நீங்க வரதுக்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ஒரு மாமியார், மருமக சண்டையில புருஷன் அம்மாவுக்காக ஏந்துக்கிட்டு பொண்டாட்டியை அடிச்சுட்டான். அந்த பொண்ணை கொண்டுவந்து அட்மிட் பண்ணினதுங்க ஓடிட்டாங்க. வெளில நீங்க நின்னதும் அவங்க பேமிலின்னு நினைச்சு உங்ககிட்ட சொல்லிட்டார்…”
“என்ன இது இவ்வளவு ஈஸியா சொல்றீங்க? என்ன ஒரு கவனமில்லாத்தனம்?…” என வருண் எகிற,
“ஸாரி சார். நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம். அவர் சில நேரம் கவனிக்காம இப்படி சொல்லிடுவார். மத்தபடி ட்ரீட்மென்ட்ல எந்த குறையும் இருக்காது. நீங்க அட்மிட் பண்ணின பொண்ணு பர்பெக்ட்லி ஆல்ரைட். ஒருமணி நேரம் கழிச்சு போய் பார்க்கலாம்…” என்று சொல்லிவிட்டு அப்பெண் நகர்ந்துவிட சூர்யா எழுந்து வந்தவன் வெற்றியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.
“ப்ரெண்டா இருந்துட்டு இப்படி பண்ணிட்டியேடா வெற்றி? உன் மேல எத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன். அப்போ உனக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்குது இல்ல? என்ன மனுஷங்க நீங்க எல்லாரும்? அத்தனை விளையாட்டா போச்சா எங்க வாழ்க்கை? எங்க வாழ்க்கையை தீர்மானிக்க நீங்க யாருடா?…”என கேட்டு மீண்டும் அடிக்க வெற்றி அமைதியாக வாங்கிக்கொண்டான்.
என்ன நடக்கிறது என்று கொஞ்சமும் உணரமுடியாமல் மோகனாவும், சந்திரனும் பரிதாபமாய் பார்த்தபடி அதிர்ச்சியுடன் நின்றனர்.
மகள் உயிரோடிருக்கிறாள் என்று சந்தோஷப்பட முடியாமல் என்ன ஜாதகம்? என்ன கோளாறு, சூர்யாவால் மகளின் உயிருக்கு ஆபத்தா? என்று உள்ளம் பதறியபடி பார்த்து நின்றார்.