“அந்த உறவே என் பொண்ணுக்கு வேண்டாம். அவளுக்கு கல்யாணமே ஆகலைன்னு நினைச்சுக்கறேன். யார் என்ன சொன்னாலும் சரி. இனி என் பொண்ணு என்னோட தான் இருப்பா…”
“அவசரப்படாதீங்க மோகனா…” என அர்ச்சனா வர,
“பேசவேண்டாம். எதுவும் பேசவேண்டாம். இந்த நாலுமாசம் நடந்தது எல்லாமே ஒரு கனவா நினைச்சு மறந்துடுவோம். என் பொண்ணையும் நான் மறக்க வச்சிடுவேன். தயவு செய்து இனி எங்க வாழ்க்கையில குறுக்கிடாதீங்க. போய்ருங்க…” என்றவர்,
“இங்க பாருப்பா சூர்யா, உண்மையில என் பொண்ணு உயிரோட இருக்கனும்னு நினைச்சா போய்டு. அவ்வளோ தான். இல்லைன்னா என் பொண்ணுக்கு முன்னாடி நாங்க போய் சேர்ந்திடறோம். அதுக்கப்பறம் நீ அவளை கூட்டிட்டு போய்க்கோ….” என்று இரக்கமே இல்லாது சூர்யாவின் மனதை குத்தி குதறினார் மோகனா.
நிற்கமுடியாமல் தள்ளாடியபடி நகர்ந்து அவர்களை விட்டு தள்ளி வந்து நின்றவனின் கண்களில் கண்ணீர் வழிய துவங்க நெஞ்சடைத்தது.
அங்கிருந்து நகரமுடியாமல் பாதம் பதிந்து நின்றவன் மீண்டும் மோகனாவை திரும்பி பார்த்து ஒரு இறைஞ்சும் பார்வையுடன் கை கூப்பினான்.
“அக்கா, ஒரே ஒருதடவை பாலாவை ஒருதடவை தான். பார்த்துட்டு போயிடறேன்…” என்று அவன் கேட்ட கோலம் கோபாலசுவாமியை உடைத்து போட்டது.
“அய்யா, சூர்யா…” என அவனின் கையை பிடித்துக்கொண்டவரின் முகம் பார்த்தவன்,
“சொல்லுங்கப்பா, ஒருதடவை பார்த்துக்கறேனே. அப்போ என்னை பார்த்தா கூட பாலாவுக்கு ஆகாதோ? சொல்லுங்கப்பா. நீங்க தான் பெரிய ஜோதிடராச்சே? சொல்லுங்கப்பா…” என்று அவரின் கையை பிடித்துக்கொண்டு பொது இடமென்றும் பார்க்காமல் கதற,
“இல்லைய்யா, இல்லைய்யா…” என்ற கோபாலசுவாமி,
“அம்மாடி, என் மேல தான் எல்லா தப்பு. பாலாவோட ஜாதகம் பார்த்து நான் தான் எல்லாமே பண்ணினேன். என் பையனை தண்டிச்சிடாதம்மா. ஆண்டவன் பொதுவா சொல்லறேன். என் மருமகளுக்கு எதுவும் ஆகாது. எதுவும் ஆகாதும்மா. நம்பும்மா…” என மன்றாடும் குரலில் பேச,
“நீங்க பேசற அருகதையை எப்பவோ இழந்துட்டீங்க ஸார்…” என்று சொல்லியதோடு முகத்தை பிடிவாதமாய் திருப்பிக்கொண்டார்.
இயலாமையுடன் மகனின் தோளை தட்டிக்கொடுத்தவர் உயிர் பரிதவித்தது. எதுவும் செய்ய இயலாத கையாலாகாத நிலையில் தற்போது தான் நிற்பதை உணர்ந்து மகனை குற்றவுனர்ச்சியுடன் பார்த்தார்.
அவரின் உள்ளமோ, ‘பாலா இல்லைன்னா உங்களுக்கு நானும் இல்லை’ என உறுதியுடன் சொல்லிய மகனை பார்த்து பார்த்து துடித்தார்.
“என்னால அவ ப்யூச்சர் பாழாகுமோன்னு பயந்து தான் அவளை வேண்டாம்னு சொன்னேன். இப்ப என்னால அவ உயிருக்கு ஆபத்துன்னு பேசறாங்க. இன்னும் எத்தனை இருக்குது? இப்ப என்னை தள்ளி போய் இருந்துக்கோ. அவளை விட்டுடுன்னு போகனாக்கா சொல்றாங்க. முடியலைப்பா…” என்றவன்,
“அவளை விட்டு இருக்க முடியாதுன்ற பைத்தியக்காரனா நான் மாறி ரொம்ப நாள் ஆச்சே. அவளா, அவ உயிரான்னு என்னை கேட்கறாங்க. என்ன பதில் சொல்ல? நீங்க பதில் சொல்லுங்க. சொல்லுங்கப்பா…” என கோபத்துடன் அவரிடம் கேட்க பதிலின்றி மௌனமாய் கண்ணீர் வடித்தார் அவர்.
ஆம், கோபாலசுவாமி அழுதுகொண்டு இருந்தார். மகன் அத்தனை ஆக்ரோஷமாய் பேசிவிட்டு வீட்டை விட்டு கிளம்பிய அன்று இருந்த இறுமாப்பு எல்லாம் இன்று மகனின் தவிப்பிலு, துடிப்பிலும் பொடிப்பொடியாய் தகர்ந்தது.
“நீங்க என்ன நினைச்சு பாலாவை எனக்கு கட்டிவச்சீங்கன்னு இப்ப வரைக்கும் முழுசா தெரியலை. ஆனா அவ இல்லைன்னா நான் இல்லைன்ற இடத்துல இப்ப நான் இருக்கேன்…”
சில கட்டங்கள் காலதேவனின் கையால் திட்டமிட்டே நகர்த்தப்பட்டிருக்க இதுவும் அப்படியே. இங்கே எல்லாம் தான் தான் என்னும் அகங்காரத்துக்கும், எதுவும் தன்னால் முடியும் என்றிருந்த கோபாலசுவாமியின் அகம்பாவத்துக்கு பெருத்த அடி.
“மேடம், அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சு. பார்க்க வரலாம்…” என்ற நர்ஸ் மீண்டும் உள்ளே சென்றுவிட ஒருவராலும் மோகனாவை மீறி செல்ல முடியவில்லை.
அதைவிட அவரை மீறி செல்ல துணிவில்லை என்பதே உண்மை. அப்படி ஒரு காளியவதாரத்தில் தான் நின்றிருந்தார் அவர்.
“இங்க இருக்கற யார் முகத்துலையும் முழிக்க விருப்பமில்லை. இப்ப நீங்க போனீங்கன்னா நல்லது. இனியாவது நாங்க நிம்மதியா இருக்கனும்னு நினைச்சா போங்க. போயிருங்க…” என்றவர்,
“சூர்யா இனி என் பொண்ணை பார்க்கனும்னு நினைக்காத. என் மேல ஆணை…” என்று சொல்லியவரை வலியுடன் பார்த்தவன் அவரின் பேச்சிற்கு ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்திவிட்டு வேகமாய் அவ்விடம் விட்டு கிளம்பிவிட்டான் சூர்யா.
“சூர்யா டேய்…” என பின்னே வந்த வெற்றியையும் அவனின் பின்னே வந்த வருணையும் தன்னை நெருங்கும் முன் திரும்பி பார்த்தவன்,
“போயிருங்க. செத்துட மாட்டேன். அவளை பார்க்காம என் உயிர் போகாது. யாராவது வந்தீங்க மனுஷனா இருக்கமாட்டேன்…” என்றவன்,
“நீ நீ என் கூட பேசவே செய்யாதடா…” என வெற்றியிடம் ஸ்திரமாய் விரல் நீட்டி எச்சரிக்கையாய் சொல்லிவிட்டு செல்ல இருவருமே விக்கித்து நின்றனர்.
முடிந்தது. அங்கே வேறு எவராலும் எதுவும் பேசமுடியவில்லை. கோபாலசுவாமி தளர்ந்து போக அவரை கை தாங்கலாக பிடித்தபடி அர்ச்சனா கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
அவர்களுடன் ஹரிணி, வருண், அஸ்வினி, உமா, உத்தமன் அனைவரும் கிளம்பிவிட்டனர். அந்தளவுக்கு மோகனா பேசிவிட்டார். அங்கிருந்தால் நடப்பதே வேறு என்னும் அளவில் பேசிவிட இருக்கவே முடியாமல் கிளம்பிவிட்டனர்.
வெற்றியும், ஜெயஸ்ரீயும் மட்டும் இருக்க ஜெயஸ்ரீ எத்தனையோ சமாதானம் செய்ய பார்க்க மோகனா அனுமதிக்கவே இல்லை. அவர் சந்திரனை கூட்டிக்கொண்டு மகளை பார்க்க உள்ளே செல்ல பாலா விழித்துக்கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.
கன்னமெல்லாம் கண்ணீர் வழிந்துகொண்டு இருக்க அவள் அனைத்தையும் கேட்டிருக்கிறாள் என்று புரிந்துபோனது மோகனாவிற்கு. எதுவும் மகளிடத்தில் அவர் பேசவில்லை.
தன்னுடன் பேசும் பொழுதெல்லாம் எதையோ பாலா மறைப்பதை போலவும், பதட்டமாக இருப்பதை போலவும், பயந்ததை போலவும் நிறைய முறை உணர்ந்திருக்கிறார் அவர். ஆனால் அதற்கு இதுதான் காரணமென புரியாமல் இருக்க இன்று புரிந்தது.
மகளுக்கு ஏற்கனவே தெரிந்தும் தன்னிடம் சொல்லாமல் மறைத்திருந்திருக்கிறாள் என்பதே பாலாவின் மீதும் கோபத்தை எழ செய்ய அவளிடம் எதுவும் பேசாமல் இன்னொரு ட்யூட்டி டாக்டரிடம் பேசினார் அவளின் முன்னரே.
“இப்ப என் பொண்ணுக்கு எப்படி இருக்குது டாக்டர்?…” என கேட்க,
“தலையில ஆழமான காயம். ஆனா சீக்கிரம் ஆறிடும். நிறைய ரத்தம் போயிருக்கு. அதனால நல்லா சத்தான ஆகாரமா குடுங்க. டேப்லேட்ஸ் மறக்காம குடுங்க….”
“கால் ரொம்ப வீக்கமா இருக்கே டாக்டர்?…”
“கீழே விழுந்ததுல லேசா பிசக்கிருக்கு. அதோட அடிபட்டிருக்கு. அதுக்கு ஆயின்மென்ட் தரோம். அதை டெய்லி ரெண்டு தடவை அப்லே பண்ணுங்க. நாலு நாள்ல வீக்கம் வத்திடும். வேற ஒண்ணுமில்லை. இன்னைக்கு மட்டும் இருக்கட்டும். நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடலாம்…”
“இப்ப சாப்பாடு?…”
“அவங்களுக்கு என்ன வேணுமோ கேட்டு குடுங்க. என்ன வேணாலும் சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் நேரத்துல ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவோம். அங்க வச்சு பாருங்க…”
டாக்டர் சொல்லிவிட்டு செல்ல மோகனா அங்கேயே சந்திரனிடம் இருந்து மொபைலை வாங்கியவர் தங்கள் ட்ராவல்ஸ் எண்ணிற்கு அழைத்து அன்று இரவே தங்களின் காரை எடுத்துக்கொண்டு இன்னொரு ட்ரைவரையும் அழைத்துக்கொண்டு வர சொல்லி சொல்லிவிட்டு பாலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே வந்து அமர்ந்துவிட்டார்.
சந்திரன் மகளின் கையை பிடித்துக்கொண்டு வேதனையுடன் பார்க்க அவரின் முகத்தையே அரைநொடி பார்த்தவளுக்கு அழுகை வெடித்து பொங்க பார்க்க உதட்டை கடித்து அடக்கினாள்.
‘சூர்யா, சூர்யா’ என்று மனது முழுவதும் அவனின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்க ஒன்றும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டாள்.
அவளுக்கு தெரியும் மோகனாவின் மீதான அன்பும், மரியாதையுமே அவனை இவ்விடவிட்டு அகலச்செய்ததென்று.
‘உன் அக்கா போன்னு சொன்னா போய்டுவியாடா நீ?’ என்று அவனிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் மனதிற்குள். எல்லாம் மனதிற்குள். இனி எல்லாம் மனதிற்குள் தான்.
வெளியே வெற்றி அக்காவின் முகம் பார்த்து நிற்க அவரோ அப்படி ஒருவன் இருப்பதாகவே கண்டுகொள்ளவில்லை. உள்ளே அப்படி பற்றி எரிந்துகொண்டிருந்தது மோகனாவிற்கு. ரத்தம் கொதிக்க கொதிக்க நடந்ததை ஜீரணிக்கமுடியாது அமர்ந்திருந்தார்.
எத்தனை தான் மோகனா பேசவில்லை என்றாலும் ஜெயஸ்ரீ விடவில்லை மீண்டும் மீண்டும் அவரிடம் பேச பார்க்க மோகனா அசையவில்லை. பாலாவை அறைக்கு மாற்றும் பொழுது பாலா பாலா என வெற்றி ஓடி வர பாலாவும் அவனை பார்க்கவில்லை.
மனம் முழுவதும் சூர்யாவை தேடியது. அவனை கண்டபின் தான் யாராக இருந்தாலும் என்பதை போல கண்ணீர் வழிய வழிய கண்ணை மூடிக்கொண்டாள்.
அன்றிரவே பாலாவை ஹாஸ்பிட்டலில் சொல்லி பேசி அங்கிருந்து கிளப்பிக்கொண்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். செல்லும் முன் வெற்றியிடம்,
“இப்படியே விட்டா கூட பொறந்தவன்னு ஒருத்தி அவ குடும்பத்தோட எங்கையாவது உயிரோட இருப்பா. மாறி மாறி எங்களை தொந்தரவு பண்ணினா என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது…” என்று கதறலுடன் கோபமாய் சொல்லி செல்ல அவன் பாலாவிடம் விரைந்தான்.
காரில் உள்ள அமர்ந்திருந்தவள் ஜன்னலில் சாய்ந்து திக்கற்ற பார்வையுடன் இருக்க வெற்றியின் குரலில் கண்ணை மூடிக்கொண்டாள்.
“பாலா, டேய் மாமாடா. என்னை பாருடா. பாலா. மாமா மேல கோபம்னா அடிச்சுடுடா. பாலாம்மா. டேய். என் பொண்ணுல்ல. பாருடா…” என அவளின் கையை பிடித்துகொண்டு அவள் அழ அவனுடன் ஜெயஸ்ரீயும் அழுதுகொண்டே நிற்க,
“சூர்யா ஏன் போனாங்க மாமா? என்னை ஏன் விட்டுட்டு போனாங்க? அம்மா வேண்டாம்னு சொன்னா போய்டுவாங்களா?…” என்று மட்டுமே அவள் கேட்டிருக்க,
“பாலா…” என கத்தினார் மோகனா.
“இனி நமக்கு எந்த உறவும் இல்லை. பேசாம இருக்க மாட்ட?…” என்று சொல்லி காரில் ஏறியவர் உடன் வந்திருந்த இன்னொரு ட்ரைவரிடம் சாவியை நீட்டி,
“நம்ம கார் பார்க்கிங்ல நிக்குது. எடுத்துட்டு ஊருக்கு வாங்க…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
கார் செல்லும் திசையை பார்த்தபடி வெற்றி உடைந்துபோய் நிற்க அவனை தாங்கிக்கொண்ட ஜெய் கொஞ்சம் கொஞ்சமாய் பேசி வீட்டிற்கு அழைத்து சென்றாள்.
ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பிய சூர்யா நேராக பிளாட்டிற்கு வந்து சேர்ந்தான். வேறு எங்கும் அவனுக்கு செல்ல தோன்றவில்லை. தாயை தேடும் பிள்ளையாய் பாலாவின் அருகாமைக்கு உள்ளம் ஏங்கியது.
அவளின் இருப்பை உணர்த்திக்கொண்டிருந்தது அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து விம்மியவனின் நெஞ்சம் பாலாவிற்காய் தவித்தது.
அன்று காலை தலையை துவட்டிய டவல் அப்படியே படுக்கையில் கிடக்க அதன் ஈரம் கூட இன்னமும் மிச்சமிருந்தது.
“ஒரு டவலை கூட காயபோட மாட்டியா நீ?…” என்றவனின் அதட்டலுக்கு,
“அப்பறம் புருஷன்னு நீங்க எதுக்கு?…” என விளையாட்டாய் பேசியவளின் வாசனையை அதில் தேடினான்.
‘நான் இல்லாம இருக்கமாட்டாளே. ஏன்டா போனான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவேன்?’ என்று அந்த துவாலையில் முகம் புதைத்தவனின் உள்ளமோ கதறி கண்ணீர் பொழிந்தது.
வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்