நிலா – 25
காலையில் வெகுநேரம் கழித்து தாமதமாக தான் எழுந்தே வந்தார் மோகனா. முதல்நாள் இரவு வரை அப்படி ஒரு பேச்சு பாலாவிடம். பேச்சுக்கு பேச்சு எதிர்வாதம் புரிந்தவளிடம் தோற்றுத்தான் போனார்.
மகள் உறங்க சென்ற பின்னரும் மோகனாவின் மனமோ அவளின் பேச்சுக்களிலேயே சுத்திக்கொண்டு இருக்க சந்திரனிடமும் சில ஆலோசனைகளில் இருந்தவர் விடியும் தருவாயில் தான் உறங்கவே சென்றார்.
காலை எழுந்ததும் முகம் கழுவிவிட்டு மணியை பார்த்தவருக்கு தூக்கிவாரி போட்டது. இவ்வளவு நேரம் ஆகிற்றே என்று நினைத்தபடி வாசலில் கதவை திறந்து அன்றைய தினசரி நாளிதழையும், பால் பாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவர் அதிர்வுடன் பார்த்தார் அவர்களை.
அங்கே அவர்கள் வாசலில் கோபாலசுவாமியும், அர்ச்சனாவும் காருக்குள் அமர்ந்தபடி இருக்க இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை மோகனா. மோகனா பார்த்ததை கண்டதும் காரில் இருந்து இறங்கி வாசலுக்கு வந்த கோபாலசுவாமி,
“உள்ள வரலாமாம்மா?…” என்றார் சோர்ந்த குரலில்.
ஹாஸ்பிட்டலில் பார்த்தது. அன்றிருந்ததை விட வெகுவாய் தளர்ந்து முகம் ஒளியிழந்து இருந்தார். அர்ச்சனாவும் இறைஞ்சும் விதமாய் பார்க்க மோகனாவிற்குள் இருந்த பண்பு அந்த நேரத்திலும் மாறவில்லை.
“வாங்க…” என்று சொல்லி உள்ளே சென்றவர் சத்தம் கேட்டு வெளியே வந்த சந்திரனை பார்த்தார்.
“வணக்கம் சம்பந்தி…” என சந்திரனை பார்த்ததும் கோபாலசுவாமி கைகுவிக்க அவருக்கும் பதிலுக்கு கை குவித்துவிட்டு பாலா உறங்கும் அறையை பார்த்துவிட்டு,
“உட்காருங்க…” என்று சொல்லவும் தான் வந்தவர்கள் அமர்ந்தனர்.
அங்கிருக்கவே அத்தனை சங்கடமாய் இருந்தது அவர்களுக்கு. அமர்ந்த பின்னர் மோகனா பேசவே இல்லை.
“டீ போட்டு எடுத்துட்டு வரேன்…” என பொதுவாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர் முதலில் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டு அத்தனை குறுகுறுப்பாய் பார்த்து நின்றார் மோகனா.
அர்ச்சனாவை பற்றி ஒன்றுமில்லை அவருக்கு. வெற்றி வீட்டிற்கு வரும் பொழுதே சாப்பிடுவதில் எல்லாம் ஒதுக்கம் காட்ட மாட்டார். ஆனால் கோபாலசுவாமியை அறிந்திருந்தாரே.
திருமணம் ஆன பின்னர் ஒருமுறை கூட வீட்டிற்கு வந்ததில்லை. அதே போல வலிந்து பேசியதும் இல்லை பாலாவை திருமணம் செய்துதர சொல்லி கேட்டதன் பின்பு.
மோகனாவின் எண்ணத்தை உணர்ந்தாரோ? பேச வந்ததன் விஷயத்தினால் தொண்டை உலர்ந்ததோ? தண்ணீரை எடுத்து குடித்துவிட்டார். கண்கள் சிவந்து போய் இருக்க இரவெல்லாம் உறக்கமின்றி இருந்திருப்பார் போலும்.
“உட்காரும்மா, பேசனும்…” என்று அவர் சொல்ல,
“இங்க பாருங்க, நாங்க எதையும் கேட்க தயாரா இல்லை. ஏற்கனவே பொண்ணை எங்க சொந்தத்துல கலக்காம கல்யாணம் பண்ணி குடுத்ததுல இப்ப சொந்தங்களும் இல்லாம நிக்கறோம். பொண்ணாவது இருக்கட்டுமேன்னு நினைக்கறோம். பேசி பேசி இன்னும் மனக்கசப்பு தான்…” என்று சந்திரன் சொல்லிவிட,
“நீங்க கொஞ்சம் இருங்க. நான் டீ எடுத்துட்டு வரேன்…” என சந்திரனை சொல்லிவிட்டு உள்ளே சென்றவர் சில நொடிகளில் வந்து,
“எடுத்துக்கோங்க…” என்று அவர்களுக்கு தர அவர்கள் எடுத்துக்கொண்டதும் தங்களுக்கும் எடுத்துக்கொண்டு சந்திரனின் அருகே அமர்ந்தார்.
“பாலா…” என அர்ச்சனா கேட்க,
“தூங்கறா…” என்று மட்டும் மோகனா சொல்ல,
“பாலா இப்போ உண்டாகியிருக்கறத கேள்விப்பட்டோம்…” என தயங்கி தயங்கி அர்ச்சனா சொல்ல மோகனாவிடம் பதிலில்லை.
“அவளை பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தோம்…” என்றதும் மூடிய கதவை திரும்பி பார்த்துக்கொண்டவர்,
“இங்க பாருங்க, வீடு தேடி வந்த மரியாதைக்காகவும், இங்க அக்கம்பக்கத்துல தேவையில்லாம யாரோட கவனத்தையும் திருப்ப வேண்டாமேன்னும் தான் உள்ள வாங்கன்னு கூப்பிட்டேன். தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க…” என்று மோகனா அமைதியாய் சொல்ல,
“இங்க பாரும்மா ஆண்டவன் மேல ஆணையா சொல்றேன். குழந்தை ஜனிச்ச நேரம் கண்டிப்பா பாலாவுக்கு எதுவும் ஆகாதும்மா. நம்பும்மா. என்னை வேணா நம்ப வேண்டாம். உனக்கு நம்பிக்கையானவங்கட்ட யார்க்கிட்ட வேணும்னாலும் கேளு. இதை தான் சொல்லுவாங்க…”
கோபாலசுவாமி இறங்கிய குரலில் அப்படி மன்றாட அர்ச்சனாவிற்கு அழுகை பொங்கியது. மகனுக்காக இத்தனை இறங்கி பேசுகிறாரே என்று தாளமுடியவில்லை அவருக்கு.
‘இத்தனை வருடங்கள் இந்த துன்பத்தை சுமந்தபடி வாழ்ந்தவருக்கு இன்னும் நிம்மதி கிட்டவில்லையே’ என எண்ணி எண்ணி குமைந்தார்.
“நம்பிக்கையா? இனி யாரையுமே நம்பறதா இல்லை. ஏன் நம்பனும்? என் கூட பிறந்தவன் கூட என்னை ஏமாத்திட்டான். நீங்க எல்லாம் யாரோ தானே? நம்பமாட்டேன். எந்த காலத்துலயும் நம்ப மாட்டேன்…”
“இல்லம்மா, சொல்றதை கேளு. புரிஞ்சுக்கோ. வெற்றிக்குமே முழுசா எதுவும் தெரியாது. அவன் பாவம். நல்லது செய்யனும்னு தான் நினைச்சான். அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையை குடுத்ததும் நான் தான்…” என்று தன்னிலை விளக்கம் போல சொல்லிக்கொண்டு இருக்க,
“நீங்க எத்தனை சொன்னாலும் எங்களால ஏத்துக்க முடியலை…” என்றார் மோகனா.
அவர் பேசியதிலிருந்து ஒன்றை நன்றாக கவனித்தார் அர்ச்சனா. இந்த மோகனாவின் பேச்சுக்கள் அன்று போல வலுவுடன் இல்லை. அன்றைக்கு இருந்த ஆக்ரோஷம், வெறுப்பு என்று எல்லாமே குறைந்ததை போல உணர்ந்தார்.
அதுவும் நிதானமாக பேசியது அர்ச்சனாவிற்கு ஆச்சர்யமூட்டியது. எதையோ தீவிரமாக யோசித்து பேசுவதை போல தோன்ற மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொல்லியபடி இருந்தார்.
இந்தளவுக்கு இருந்தாலே போதுமே, பேசி புரியவைத்து எப்படியாகினும் பாலாவை சூர்யாவிடம் கொண்டு சேர்ப்பித்துவிடவேண்டும் என்பதில் அர்ச்சனா இப்போது இன்னும் முனைப்பானார்.
“அண்ணே…” என வெளியில் இருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்க இவர்களின் பேச்சுக்கள் நின்று சந்திரன் எழுந்து வாசலை எட்டிப்பார்த்தார்.
“உள்ள வா பழனி…” என அவனை வீட்டின் உள் அழைத்தவர்,
“என்ன பழனி காலையிலையே? லீவ் வேணுமா?…” என்று சந்திரன் கேட்க,
“அதெல்லாம் இல்லண்ணே…” என்று தலையை சொரிந்துகொண்டார் அந்த பழனி. அவர் சந்திரனின் ட்ராவல்ஸில் தான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
“இல்லைன்னா இந்நேரம் என்னப்பா? வேற ஏதாவது பேசனுமா?…” என கேட்க,
“நம்ம பாலா பாப்பாவை அதோட வீட்டுக்காரர் வீட்டுல கொண்டு விட்டுட்டு வந்துட்டேண்ணா…” என சொல்லவும்,
“என்னடா சொல்லற?…” என சந்திரன் பழனியிடம் கேட்க,
“பழனி என்ன சொல்ற?…” என்ற மோகனா வேகமாய் பாலா இருந்த அறையை திறந்து பார்க்க அங்கே அவள் இல்லை. அறை காலியாக இருக்க,
“பாலா இல்லைங்க…” என்ற மோகனா,
“யாரை கேட்டு என் பொண்ணை அங்க கொண்டு போய் விட்ட?…” என பழனியிடம் கோபமாய் கேட்க,
“சவாரி முடிச்சுட்டு கார்ல திரும்பிட்டு இருந்தேன். அப்பத்தான் மெயின் ரோட்டுல பாப்பா நடந்து போய்ட்டிருந்துச்சு. என்னன்னு கேட்டதுக்கு அவசரமா புருஷனை பார்க்கனும். உடனே போகனும்னு சொல்லவும் நானும் வண்டியை எடுத்துட்டேன். போறப்ப தான் வீட்டுக்கு சொன்னியான்னு கேட்டா என்னை மிரட்டிருச்சு…”
“அவ சொன்னா? அந்நேரம் நீ கூட்டிட்டு போவியா? எங்களுக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம்ல…” என மோகனா பேச விஷயம் அறிந்து அர்ச்சனாவும் கோபாலசுவாமியும் எழுந்து வந்தனர்.
“பாலாவை வச்சுட்டு பேச முடியலை. ஆனாலும் இடையில அதுக்கு தெரியாம போட்டேன். உங்க போனு அடிச்சுட்டே தான் இருந்துச்சு…” என்று சொல்ல,
“இல்லையே கேட்கவே இல்லையே…” என்றவர் போனை தேட அது அறையில் இல்லை.
பாலாவின் அறைக்கு வந்து மீண்டும் தேட இருவரின் போனையும் சைலன்ட்டில் போட்டுவிட்டு தலையணைக்குள் ஒளித்துவைத்துவிட்டே சென்றிருந்தாள்.
“என்னங்க இப்படி பண்ணிட்டா?…” என மோகனா கேட்க,
“நேத்து அவ பேசினதை வச்சு நம்மளே புரிஞ்சிருந்திருக்கனும் மோகனா…” என சந்திரன் சொல்ல,
“எப்போ போனாப்பா?…” என அர்ச்சனா பழனியிடம் கேட்க,
“பழனி நீ கிளம்பு…” என்று அவனை அதட்டி அனுப்பிய மோகனா,
“அப்ப எல்லாம் தெரிஞ்சுதான் வந்திருக்கீங்களா? சொல்லுங்க இதுவும் உங்க திட்டம் தானா?…” என அத்தனை ஆக்ரோஷமாய் கேட்க கோபாலசுவாமி, அர்ச்சனா இருவருமே பரிதாபமாய் பார்த்தனர்.
“சத்தியமா இல்லம்மா. எங்களுக்கே தெரியாது. நாங்களே ரொம்ப யோசிச்சு அதுக்கு அப்பறம் தான் வந்தோம். நம்பும்மா…” என சொல்லியவர்,
“எங்க மேல உள்ள கோவத்துல அதுங்க ரெண்டையும் பிரிச்சுடாதம்மா. ஒண்ணுக்கொண்ணு அவ்வளவு உயிரா இருக்காங்க. என் பையன் வீட்டை விட்டு போகும் போது ஒன்னு சொன்னான். பாலா இல்லைன்னா எங்களுக்கு அவனும் இல்லைன்னு….”
“அப்படி சொல்லிட்டு பாலாவை கூட்டிட்டு போனவன் இன்னைக்கு உங்கள்ட்ட அவளை விட்டுட்டு இத்தனை நாள் தனியா நாங்களும் வேண்டாம்னு இருக்கான்னா அது உன் மேல வச்ச பாசம், மரியாதை. புரிஞ்சுக்கம்மா. ஒருத்தரை பிரிஞ்சு ஒருத்தர் கண்டிப்பா இருக்கமாட்டாங்க…”
கோபாலசுவாமி கெஞ்சல் குரலில் கையெடுத்து கும்பிட்டு மன்றாட கண்ணீருடன் அழுதுகொண்டே நின்றார் மோகனா.
“இந்த கண்டம் எல்லாமே முடிஞ்சு போச்சு. இனி பாலாவுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும். அதுவும் குழந்தை ஜனிச்சிருக்கற இந்த நேரமும் அவங்களுக்கு சுபவாழ்வு தான். நம்பும்மா…” என்று சொல்ல சொல்ல மோகனா உடைந்து அழுதார்.
“எனக்கு தெரியலையே. என்னால நம்ப முடியலை. எதுவும் நம்ப முடியலை. யாரை நம்பறதுன்னு கூட தெரியாதளவுக்கு என்னை எல்லாரும் ஆளாக்கிட்டாங்களே…” என்று வெடித்து அழுதவரை அர்ச்சனா தாங்கிக்கொள்ள,
“இனி ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து பிழைக்கனுமா நான்? என் பொண்ணு எப்படி இருக்கான்னு நினைச்சு நினைச்சு வருந்தனுமா?…” என்று சொல்ல,
“ஒன்னும் இல்லை. எதுவுமே ஆகாது. நம்புங்க. கடவுள் நம்மளை கைவிடமாட்டார். வாங்க நேர்ல போய் பார்ப்போம். கிளம்புங்க மோகனா…” என்று அவரை தேற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.
முன் இருக்கையில் ட்ரைவருடன் கோபாலசுவாமி அமர்ந்துகொள்ள பின்னால் அர்ச்சனா, மோகனா, சந்திரன் என்று அமர்ந்துகொண்டனர்.
——————————————
சூர்யாவின் அணைப்பில் அடங்கி இருந்த பாலா சிறிது நேரமே அமைதியாக இருந்தாள். பின் அவன் தன்னை போக சொன்ன கோபத்தில் மீண்டும் தள்ளி விட்டவள்,
“ஆளை பாரு. ஒன்னும் தேவை இல்லை. கூட்டிட்டு போன்னு சொன்னா கல்லு மாதிரி நின்னுட்டு இன்னைக்கு நானா வரவும் கட்டிப்பிடிக்கற. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்று பாலா திட்ட சூர்யாவின் காதில் தேன் பாய்ந்ததை போல தான் இருந்தது.
“உன் மரியாதை, பாசம் எல்லாம் அக்காவுக்கு மட்டும் தான். எனக்கு இல்லை. அப்பறம் உனக்கு எதுக்கு கல்யாணம்? பொண்டாட்டி? உன்னை தேடி வந்தது உனக்காக ஒன்னும் இல்லை. எனக்காக. அதனால ஒழுங்கா தள்ளியே இரு…” என்று கத்த ரசித்தபடியே நின்றான்.
“மெக்காம் கெத்தாம். இன்னொருவாட்டி மெக் கெத்துன்னு சொல்லு வாயிலை ஒரு குத்து. அப்பறம் பேசவே முடியாது…”
“சரி அடிச்சுக்கோ. எதுவேணாலும் பண்ணிக்கோ. பட், தள்ளி நின்னு இல்லை. இங்க இப்படி பக்கத்துல வந்து…” என அவளை மீண்டும் தன் அணைப்பினுள் நிறுத்தியவன் அவளின் கையை எடுத்து தனது கன்னத்தில் தானே அடித்துக்கொள்ள பாலாவின் விழிகளில் மீண்டும் உடைப்பெடுத்தது.