நிலா – 3
அன்று பேக்டரியில் முக்கியமான மீட்டிங் இருக்க அதன் பொறுப்பை வெற்றி ஏற்றிருந்தான். ஏற்க வைக்கப்பட்டிருந்தான் சூர்யாவால்.
“இதை நீயே செய்ன்னா ஏன்டா உனக்கு புரியறதில்லை?…” என கடுகடுத்துக்கொண்டே அவன் பாய்ண்ட்ஸ் எல்லாம் நோட் செய்துகொண்டிருக்க அவனுக்கு எந்த பதிலும் கொடுக்காமல் சூர்யா வேறு வேலையில் இருந்தான்.
அவன் வெற்றியை வேண்டுமென்றே தான் இப்படி இழுத்துவிடுவது. அவ்வப்போது சூர்யா இதை செய்துகொண்டே தான் இருந்தான்.
எத்தனைதான் இருவருமே இந்த தொழிலின் பங்குதாரர்கள் என்றாலும் வெற்றியிடம் ஒரு ஒதுக்கம் இருந்துகொண்டே தான் இருந்தது கம்பெனி உரிமை விஷயத்தில்.
இத்தனை வருடம் ஆகிவிட்டது. அவனாக துணிந்து எந்த முடிவையும் தன்னிச்சையாக இப்படித்தான் என எடுக்கமாட்டான். சூர்யாவிடம் தான் இறுதிமுடிவை விடுவது.
அதில் எரிச்சலாகும் சூர்யா அவனை திட்டி தீர்த்தாலும் வெற்றிக்கு என்னவும் செய்துகொள் என்னும் பாவனை தான்.
“எருமைமாட்டு மேல மழை பெய்ஞ்சா மாதிரி இருக்கறடா நீ…” என்று வாய் ஓயாமல் அவனை பேச அதுவும் விழலுக்கு ஊற்றிய நீர் தான்.
அதற்கென்றே வம்படியாக வெற்றியையும் முன்னிறுத்த அதை தவிர்க்கமுடியாமல் போனது வெற்றிக்கு.
இன்றும் அப்படி ஒரு முக்கியமான மீட்டிங்கை அவனிடம் ஒப்படைத்துவிட்டு சூர்யா தன்னை விடுவித்துக்கொண்டு அமர்ந்திருக்க அவனுக்குத்தான் அவஸ்தையாக போனது.
வெற்றியின் திறமை பற்றி சூர்யவர்தனின் குடும்பத்தினருக்கு புரிந்ததனால் அவனை மனமுவந்து ஒப்புக்கொள்ள உமாவின் வீட்டில் அவருக்கு அதில் சிறு மனத்தாங்கல் தான்.
“என்ன இருந்தாலும் நமக்கு சமதையா இல்லாதவங்களை இப்படி நாமலே தூக்கி உட்கார வைக்கலாமா அண்ணி?…” என ஒருநாள் பேச்சுவாக்கில் அர்ச்சனாவிடம் பேசிட,
“உமா நீ இப்படியெல்லாம் கூட யோசிப்பியா? எந்த காலத்துல இருக்க நீ? வெற்றி நல்ல பையன். அதோட அவனோட பேமிலியுமே தான். உன் அண்ணனே முழுமனசா வெற்றியை தொழில்ல சேர்த்துக்க எந்த அப்ஜெக்ஷனும் சொல்லலை. தெரியும் தானே?…”
“தெரியும் அண்ணி. இருந்தாலும் ஒரு ஒண்ணுக்குமத்த…”
“போதும் உமா, உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை நான். உன்னால இப்படி யோசிக்க முடியும்ன்றதே இன்னைக்குத்தான் எனக்கே தெரிஞ்சது. எதுவாவும் இருக்கட்டும் எல்லாத்துக்கும் மேல அவன் சூர்யாவோட ப்ரென்ட். உன்னால முடிஞ்சா இதை அவன்கிட்டயே பேசிக்கோ…” என்று சொல்லிவிட்டார் அர்ச்சனா.
“இல்லை, அண்ணி சும்மா அதான். ஏதோ பேச்சுவாக்குல சொல்லிட்டேன்…” என சமாளித்தார் உமா.
அதன் பின்னர் அதை பற்றி பேசவில்லை என்றாலும் வெற்றியை பார்க்கும் போது லேசாகவேணும் முகத்தில் அந்த பிடித்தமின்மையை காண்பித்துவிடுவார்.
ஆனால் வீட்டில் மற்றவர்களுக்கு ஏன் உத்தமனுக்கு கூட வெற்றி என்றால் அத்தனை மரியாதை.
ஹரிணியும், அஷ்வினியும் வெற்றி வெற்றி என அவனின் மேல் கொள்ளை பிரியம் தான். திவ்யாவுக்குமே வெற்றிமேல் தனி அபிப்ராயம் உண்டு.
அவன் வீட்டிற்கு வந்துவிட்டால் சூர்யா கூட அருகில் செல்லமுடியாது. அப்படி சுற்றிக்கொள்வார்கள். முதலில் எல்லாம் அது சங்கோஜமாக இருக்க அதன் பின் அவர்களின் அன்பில் வெற்றியும் இலகுவாக பழகினான்.
குடும்பத்தில் ஒன்றானவன் போல இருந்தாலும் தொழில் என்று வரும் பொழுது இன்னுமே அதன் ஒதுக்கம் அவனை விட்டு அகலவில்லை.
“என்னடா நோட்ஸ் எடுக்க சொன்னா என்ன யோசனை?…” என கையில் இருந்த பென்னை அவனை நோக்கி வீச,
“ப்ச், எல்லாம் மலரும் நினைவுகள் தான்…”
“இப்ப இது அவசியாமா? வேலையை பாரு…” என்றவன் வெற்றியின் போன் சத்தத்தில் அதை பார்க்க அதில் தேர்ந்த பெயரில் சூர்யாவின் முகம் கடுகடுத்தது.
“என்னடா யார் அது?…” என வெற்றி கேட்க,
“ஆக மொத்தம் உன்னோட கவனம் மீட்டிங்க்ல இல்லை. அப்படிதானே?…” என சூர்யா முறைக்க,
“இவன் வேற…” என்றவன் அந்த பைலை எடுத்துக்கொண்டு எழுந்து,
“ஜெயஸ்ரீ உனக்கு கால் பண்ணினா சொல்லிடு. மெசேஜ் அனுப்பிட்டேன் உன்னை கான்டேக்ட் பண்ண சொல்லி. பாலா கூப்பிடுவா. நான் வர லேட்டாகும்னு…”
“உன் வொய்ப்க்கு வேணும்னா சொல்லுவேன். அவளுக்கு எல்லாம் ஏன்டா சொல்லனும்?…” என்றவன்,
“எனக்கு ஏன் அவளையும் கூப்பிட சொன்ன? அடங்கவே மாட்டியா?…” என்றுவேறு கத்தினான்.
“அடடா, அவ இன்னைக்கு மால்ல இருக்கற பொட்டிக்கு போகனும்னா. கூட போகனும். போன் பன்றப்போ அட்டன் பண்ணலைனா செம்ம டென்ஷன் ஆகிடுவா…” என்று சொல்ல வெற்றி சொல்லியதை புறம்தள்ளியவன் அவன் கூட செல்ல வேண்டும் என்றதை மட்டும் பிடித்துக்கொண்டான்.
“நீ என்ன அவளுக்கு பாடிகார்டா? டேய் நீ என்ன வேலைல இருக்க. அவளுக்கு எங்க போனாலும் நீதான் தேவையா? ஒழுங்கா இதை முடி…” என சொல்ல,
“உங்க ரெண்டுபேருக்கும் என்னைக்குத்தான் இந்த பஞ்சாயத்து தீருமோடா. ஆரம்பமே அக்கபோரு…” என்று சொல்லிவிட்டு ஒருமாதிரி முகத்துடன் கான்பரன்ஸ் ஹால் நோக்கி சென்றான் வெற்றி.
“வெற்றி…” என்ற சூர்யாவின் அழைப்பில் திரும்பி பார்த்தவன்,
“இன்னும் என்னடா உனக்கு?…” என்றான் சலிப்புடன்.
அவனுக்கு பாலா வந்து காத்திருப்பாளே என்னும் கவலை ஒருபக்கம், இந்த மீட்டிங்கை சக்சஸ்ஃபுல்லாக முடிக்கவேண்டுமே என்னும் படபடப்பு ஒருபக்கம், செக்கப்பிற்கு சென்ற மனைவியிடம் இருந்து போன் வருமே என்ற தவிப்பு ஒருபக்கம்.
“ப்ச், சொல்லு, நான் எதாச்சு ஹெல்ப் பன்றேன்…” என முன்வந்து நிற்க அவனை நக்கல் பார்வை பார்த்த வெற்றி,
“சத்தியமா நீ செய்ய மாட்ட. போடா…” என்று திரும்பினான்.
“என் நேரம். உனக்காக செய்யறேன். ரொம்ப பிகு பண்ணாம சொல்லு…” என்றான் வலியுறுத்தலாக.
“பாலாவோட அந்த பொட்டிக் போகனும். அங்க போய் ட்ரெஸ் வாங்கிட்டு அவளை அவ ப்ரென்ட் வீட்டுல ட்ராப் பண்ணனும். அவ்வளவு தான். அங்க இருந்து பங்க்ஷன் முடியவும் நானே நைட் பிக்கப் பண்ணிப்பேன். முடியாதுல. அதான் போடான்னேன்…” என சொல்லிய வெற்றி,
“என் மொபைலை குடு. ஒரு டூ ஹவ்ர்ஸ் வெய்ட் பண்ண சொல்றேன் அவளை….”
“சொல்லிட்டு நல்லா வாங்கி கட்டுவ நீ…” என்றான் சூர்யா.
“அதெல்லாம் எனக்கு தெரியும், போடா…” என்று மொபைலை எடுக்க,
“ப்ச், நானே போறேன். கூட போறேன் போதுமா? நீ நிம்மதியா போ…” என்றவனின் பேச்சை கொஞ்சமும் நம்பாமல் பார்த்து நின்றான் வெற்றி.
“டேய் நீ என்னை நம்பமாட்டியா?…” என சூர்யா கேட்க,
“இதை நம்ப முடியலை தான். ஆனா அதுக்குள்ளே இன்னொரு சந்தேகம். அதான் யோசிச்சேன்…”
“என்ன என்ன சந்தேகம் உனக்கு?…” என சூர்யா வேகமாய் அவன் மீது பாய,
“அடேய் இருடா…” என அவனின் தோளை பிடித்தவன்,
“நீ கூட பரவாயில்லை போறேன்னு சொன்ன. ஆனா பாலா உன்னோட வரனுமே? அதான்….” என இழுக்க முகம் இறுகி போனது சூர்யாவுக்கு.
“அதை எல்லாம் நான் சொல்ல முடியாது. நீயே அவளுக்கு மெசேஜ் வச்சிட்டு போ. வந்தா கூட போவேன். இல்லைன்னா…”
“சரி, சரி. சொல்லிட்டே போறேன்…” என தன் மொபைலை எடுத்து பாலாவிற்கு அழைக்க அவள் எடுக்கவே இல்லை. அதற்கு முன் இரண்டு மெசேஜும் ஒருமுறை போனும் செய்திருக்க,
“கால் பண்ணிருந்திருக்காடா…” என்றான் சூர்யாவிடம் டென்ஷனாக.
“நான் மெசேஜ் வந்ததை மட்டும் தான் பார்த்தேன்…” என அலட்சியமாக தோளை குலுக்க,
“ப்ச், தாளிக்க போறா. ரொம்ப கஷ்டப்பட்டு அவளை இங்க படிக்க இருக்க வச்சிருக்கேன். அப்பப்ப உன்னால தான இங்க படிக்கேன். அதனால தான கண்டுக்காம போறன்னு திட்ட வேற செய்யறா…” என்று மீண்டும் அழைக்க அவள் அப்போதும் எடுக்கவில்லை.
“சரி நான் மெசேஜ் போட்டு வைக்கறேன். இங்கதான் வந்துட்டு இருப்பான்னு தோணுது. இல்லைன்னா இந்நேரம் அட்டன் பண்ணிருப்பா…” என கடகடவென அவளுக்கு செய்தியை அனுப்பிவிட்டு,
“ஓகே டா…” என மீட்டிங்கிற்கு செல்ல போனவன் பின் மீண்டும் திரும்பி,
“டேய் அங்க பொட்டிக்ல ஒரு அரைமண்டையன் இருப்பான். ரொம்ப பேசறான்னு நினைக்கேன். பாலாவுக்கு சுத்தமா பிடிக்கலை. ஆனாலும் டார்ச்சர் பன்றான் போல. பார்த்தேனா தட்டிவை…” என கொசுறாய் தகவல் சொல்ல,
“மனுஷனாடா நீ? அவனை நான் தட்டி வைக்கனுமாக்கும்? உனக்கே இது ஓவரா தெரியலை? அவ சமாளிப்பா ஆயிரம் பேரை. வந்துட்டான் பச்சைப்புள்ளைக்கு பாலாத்தி குடுக்க சொல்றமாதிரி. போயிரு. வெறியாயிருவேன் பார்த்துக்க….” என்று சட்டையை மடித்துக்கொண்டு சூர்யா எகிற வெற்றிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“இருந்தாலும் ஒரு மாமனா நான் அவளை பார்த்துக்கனும்ல. வம்படியா கூட்டிட்டு வந்து இங்க படின்னு சொல்லிருக்கேன்…”
“ஆமாமா, படிச்சா பெரிய இந்த படிப்பு? சட்டையும், பாவாடையும் தைக்கிறதுக்கு ஒரு படிப்பு…” என சூர்யா இன்னுமே உஷ்ணமாக பேசினான்.
“ப்ச், அதுக்கு பேரு பேஷன் டிசைனிங்டா தம்பி…” என அவனை அணைத்ததை போல தோளோடு சேர்த்து வெற்றி நிற்க,
“ப்ச், போடா நீயும் உன் அக்கா மக பெருமையும்…” என்று அவனின் கையை தட்டிவிட,
“சரி சரி, இப்படியே உர்ருன்னு போய் நிக்காத. கூட வரமாட்டேன்னு சொல்லிடுவா…” என சொல்லிவிட்டு பைலுடன் ஓடிவிட்டான் வெற்றி. நின்றால் பிடித்து நாலு சாத்து சாத்தினாலும் ஆச்சர்யமில்லை.
சூர்யாவிற்கு அத்தனை கடுப்பு. அவன் வீட்டில் தங்கைகள் இருவரையுமே அவன் சொல்லியபடி அந்த படிப்பை தான் படித்தார்கள்.
திவ்யாவிடம் கூட அவளின் மார்க் என்னவென பார்த்து டாக்டருக்கு படிக்க சொல்ல இதோ அவளும் படிப்பை முடித்து ஒரு மருத்துவமனையில் வேலையில் இருக்கிறாள்.
திவ்யாவிற்கு தனியாக க்ளினிங் வைத்து தருகிறேன் என்ற கோபாலசுவாமி சொல்லியதையும் மறுத்தவள்,
“முதலில் அனுபவம் இருக்கட்டும். பிறகு தனியே நடத்துவதை பார்க்கலாம் மாமா…” என்று தன்மையாக மறுத்துவிட்டாள்.
சூர்யா கூட அதற்கு அப்ரிஷியேட் செய்ய அதற்கு கூட ஆச்சர்யபாவம் தான் அவள் முகத்தில்.
“மெக் கெத்துக்கு இன்னொருத்தரை பாராட்டவெல்லாம் வருதுப்பா…” என அஷ்வினி, ஹரிணியிடம் சொல்லி கிண்டல் செய்துகொண்டாள் தனியாக.
இப்படி அவனின் முடிவிற்கென ஒரு தனி மரியாதை இருக்க மோகனா மகள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் என்ன படிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையை சூர்யாவிடம் தான் துவங்கினார்.
அன்று காலையில் இருந்து அலசி ஆராய்ந்து அவளின் அறிவிற்கு மருத்துவம், இல்லை அதற்சார்ந்த படிப்பு சரியாக இருக்கும் என்பதை சொல்லியவன் எந்த கல்லூரியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது முதற்கொண்டு ஆராய்ந்து எப்படி அணுகவேண்டும் என்பது வரை திட்டமிட்டு சொல்லிவிட்டான்.
அவனின் இத்தனை பேச்சுக்கள் எதுவும் கவனிக்காத பாலா தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்ததும் மோகனா சொல்லியதை கேட்டு மறுத்து தன்னுடைய விருப்பம் பேஷன் வேர்ல்ட் என்றுவிட்டாள்.
அதில் இன்றளவும் சூர்யாவிற்கு அத்தனை கடுப்பு. அதன் பின்னர் சுத்தமாக அவள் விஷயத்தில் தலையிடுவதே இல்லை. அவளை தவிர்த்து அந்த குடும்பம் என்றால் அவனுக்கு அத்தனை அன்பும், மரியாதையும்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போல முதலிலேயே ஏதோ ஒரு பிடித்தமின்மை பார்த்த அன்றிலிருந்து மனதில் பதிந்ததை போல ஒவ்வொரு நிகழ்விற்கும் முட்டிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை கூட வலுக்கும். சூர்யா பத்து வார்த்தை பேசி அவளை சீண்டினால் ஒற்றை வார்த்தையிலோ, அலட்சியமான முறைப்பிலோ அவனை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவாள். அப்படியான சமயங்களில் வெற்றிதான் சமாதானம் செய்வான்.
அதிலும் பாலாவுக்கு தன் மாமன் தன்னை விட சூர்யாவிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறான் என்ற எண்ணம் வேறு ஸ்திரமாக இருந்தது.
வெற்றி இல்லை என்று சொன்னாலும் பாலாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெற்றி பக்கம் பக்கமாய் பேசி சாமதானம் செய்தாலும் கடைசியில்,
“நீ முன்னமாதிரி இல்ல மாமா. போ…” என்றுவிடுவாள்.
வெற்றிக்கு பெண் பார்க்கும் நிகழ்வை பற்றி தனக்கு முன் அவன் சூர்யாவிடம் சொல்லியிருந்தது அவளை மேலும் கடுப்பிற்குள்ளாக்கியது.
ஏழு மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கு திருமணம் நடந்திருந்தது. அதுவும் ‘முதலில் சூர்யாவிற்கு ஆகட்டும்’ என்று அவன் சொல்ல, மோகனா அர்ச்சனாவிடம் விஷயத்தை கொண்டுவர, அவர் தான் ‘சூர்யாவிற்கு சீக்கிரம் செய்துவிடலாம்’ என சொல்லி வெற்றியை சம்மதிக்க வைத்தார்.
இப்படி திருமணம் நடைபெற பெண் பார்த்ததில் இருந்து எந்த விஷயத்திலும் தன்னிடம் ஒபீனியன் கேட்காமல் வெற்றி இருக்க அதில் இன்னுமே கவலையாகி போனாள் பெண்.
வெற்றிக்கு அந்த சூழ்நிலை அப்படி. தொழிற்சாலையிலும் வேலை செய்தவருக்கு சிறிதாய் ஒரு விபத்து நடந்திருக்க அதன் அலைச்சல்கள், வேலைகள் என அவனை அங்கேயே இழுத்துக்கொள்ள திருமணம் பற்றிய எண்ணமே சுத்தமாய் இல்லாமல் போக பாலாவின் நினைப்பு இருக்குமா என்ன?