ஆனால் பாலாவிற்கு அப்படி தோன்றவில்லை. மனதிற்குள் வெற்றியோடு சேர்ந்து சூர்யாவையும் ஆயிரம் திட்டி, குமுறி மனதை சாந்தப்படுத்தினாலும் அந்த கோபத்தை கூட காட்டவில்லை அவள்.
திருமணமெல்லாம் முடிந்த பின்பே பாலாவின் விலகலை கவனித்தான் வெற்றி.
“ஏன்டா பாலா மாமாட்ட சரியா பேசறதே இல்லை…” என்ற ஒற்றை வார்த்தை தான். அந்த ஒற்றை வார்த்தையில் உடைந்து போய் அவனை கட்டிக்கொண்டு அழுதவள் அவனை அத்தனை அடி அடிக்க ஆரம்பித்தாள்.
“உனக்கு நான் வேணாம்ல மாமா…” என சொல்லி அழுத்தத்தில் ஜெயஸ்ரீ ஒருநொடி ஆடிப்போய்விட அவளின் அதிர்ச்சியை பார்த்த மோகனாவும் சந்திரனும் தலையில் அடித்துக்கொள்ளாத குறை தான்.
“பாலா, என்ன பன்ற?…” என சங்கடமாகவும் சற்று அதட்டலாகவும் சந்திரன் கத்த,
“பின்ன என்னப்பா, அத்தையை பத்தி ஒரு வார்த்தை என்கிட்டே கேட்கலை. எனக்கு புடிச்சிருக்கான்னு கேட்கலை. கல்யாணத்துக்கு, என்ன ட்ரெஸ் வேணும்னு கேட்கலை. எதுவுமே கேட்கலை. கண்டுக்கவே இல்லை…” என கண்ணை கசக்கிக்கொண்டு அழ அப்போதுதான் ஜெயஸ்ரீக்கு மூச்சே வந்தது.
“நீ எதுவும் நினைச்சுக்காத ஜெய். அவ சின்ன பொண்ணுடா…” என்று பாலாவின் தலை கோதியபடி வெற்றி சொல்ல அவன் கெஞ்சலாய் சொல்லி கண்களால் அவளிடம் யாசித்தவிதம் அத்தனை பிடித்தது அவளுக்கு.
முன்பே அந்த குடும்பத்தை பற்றி தெரிந்தது தான். அதிலும் திருமணம் முடிந்ததில் இருந்து மறுவீடு சென்று வந்தது வரை அவர்கள் பற்றிய பேச்சுக்கள் தான் வெற்றியினிடத்தில்.
பாலாவிடம் பேசத்தான் அத்தனை நேரம் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதை விட பாலா அதை கொடுக்கவில்லை. கோபத்தில் தள்ளியே இருந்துகொண்டாள்.
“இப்போ என்ன அவ கேட்கிறதுல என்ன தப்பு இருக்குது? நீங்க கேட்டு தான செஞ்சிருக்கனும்…” என்ற ஜெயஸ்ரீ,
“இனி எல்லா அக்கேஷன்லையும் நாம தான் சேர்ந்து கலக்கறோம். உன் மாமாவை டீல்ல விட்ருவோம். இதுதான் அவருக்கு பனிஷ்மென்ட். டீலா நோ டீலா?…” என அவள் பாலாவிடம் கூட்டு சேர அப்படியே கெட்டியாய் பற்றிக்கொண்டாள் பாலா.
“வெவ்வேவேவ்வே…” என மாமனுக்கும் பழிப்பு காட்ட இருவரையும் இடுப்பில் கை வைத்தபடி முறைக்கத்தான் முடிந்தது அவனால்.
ஏற்கனவே கல்லூரிக்கு சென்னை அழைத்து வந்திருந்தவன் ஹாஸ்டலில் இருந்தவளை அங்கே தங்களுடன் வந்து தங்கும்படி சொல்ல அப்போதும் கேட்காமல் இதோ இரண்டு மாதம் முன் ஜெயஸ்ரீ உண்டாகியிருக்கும் நேரத்தில் உதவியாக இருக்குமே என வந்திருக்கிறாள் அங்கு தங்க.
அதற்கு முன்பே வர சொல்லியதற்கு முடியவே முடியாதென்றுவிட்டாள் பாலதிரிபுரசுந்தரி.
“ஆனாலும் உனக்கு இவ்வளவு அடமென்ட் ஆகாதுடி…” என்று ஜெயஸ்ரீ அத்தனை திட்டினாலும் சுணங்காமல் கேட்டுக்கொள்வாள்.
ஆனால் எங்கே செல்வதென்றாலும் அவளுக்கு ஜெயஸ்ரீ, இல்லை வெற்றி இருவரின் துணை தேவைப்பட்டது. யாரையாவது கூட்டிக்கொண்டு வளவளத்தபடி தான் செல்வாள்.
இப்படி அவளை பற்றி தனக்கு தெரிந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி பாலா வருவதற்காக காத்திருந்தான் சூர்யா.
தூரத்தில் கண்ணாடி வழியே அவள் உள்ளே நோளிவதை அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே பார்த்தபடி இருந்தான்.
டெனிம் ஜீன்ஸில் முழங்காலில் இருந்து சற்று கீழே வரை நீண்டிருந்த ஸ்கர்ட்டும், க்ரீம்வர்ண ஷர்ட்டில் அங்காங்கே கண்ணுக்கு தெரிந்தும் தெரியாத அளவில் குட்டி குட்டி பட்டாம்பூச்சி இளம் ரோஜாவர்ணத்தில் பறந்துகொண்டு இருக்க இடுப்பை தொடாமல் கர்லிங் செய்யப்பட்ட கூந்தல் சுருண்டு அலையாய் அவளின் நடைக்கேற்ப அசைந்தாட நடந்து வந்தாள் பாலதிரிபுரசுந்தரி.
“இவ நடந்தா நடக்கற மாதிரியே இல்லையே. உருண்டுட்டு வரா. இன்னும் அரையடி ட்ரம் குறையவே இல்லை…” என நக்கலாக நினைத்துக்கொண்டவன் கண்களில் குளிர்கண்ணாடியை போட்டுக்கொண்டு எழுந்து பைக்கின் கீயை எடுத்துக்கொண்டான்.
அவனிற்கும் அறையின் கதவை நாசூக்காய் தட்டியவள் திறந்துகொண்டு உள்ளே வந்து வெற்றியின் இருக்கையை பார்த்துவிட்டு சுற்றிலும் பார்வையை ஓட்டியவள் மீண்டும் மொபைலை வலது கையில் இருந்த பேக்கில் இருந்து எடுத்தாள்.
‘கொஞ்சமாச்சும் மதிச்சு அவ மாமனை எங்கன்னு கேட்கறாளா? அம்புட்டும் திமிர்’ என எண்ணியபடி பல்லை கடித்தான்.
அவன் அனுப்பியிருந்த மெசேஜை பார்த்துவிட்டு வெற்றியின் எண்ணிற்கு கால் செய்தவள் வெற்றியின் மொபைல் அங்கிருந்த மேஜையில் சப்தம் எழுப்பியது. அதை கவனித்தவள் ஒரு பெருமூச்சுடன் சூர்யாவை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனை பார்க்கும் பொழுது அவளின் இதழ்கள் ‘மெக்’ என தன்னிச்சையாக முணுமுணுத்தது.
“நான் மாமாவை தான் வர சொன்னேன்…” என்று எங்கோ பார்த்துக்கொண்டு அவள் சொல்ல,
“அவன் தான் என்னை போக சொன்னான். வேணும்னா வெய்ட் பண்ணு. அவன் வரவும் அவனோடவே போ. இருக்கற வேலையில…” என்று சூர்யா சொல்ல கடைசி வார்த்தை பாலாவின் காதை எட்டவே இல்லை.
அவளுக்கு கேட்டிருந்தால் ‘உன் வேலையை மட்டும் பாரு’ என சொல்லிவிட்டு சென்றிருப்பாள்.
ஆனால் இப்பொழுது வெற்றி வந்தாகவேண்டுமே அவளுக்கு. படிப்பு நிறைவுறும் தருவாய். கடைசி வருடம். அதனோடு தனது கல்லூரியின் சீனியர் பெண் நடத்தும் பொட்டிக்கில் அவ்வப்போது டிசைன் செய்துகொடுப்பதை பார்ட் டைம் ஜாப்பாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இன்றுமே அவளின் நெருங்கிய தோழி ஒருவளுக்கு நிச்சயதார்த்தம். கூடவே பிறந்தநாள். பிறந்தநாள் பரிசாக தனது கைப்பட ஒரு உடையை வடிவமைத்து அந்த பொட்டிக்கில் செய்ய சொல்லியிருக்க அதை வனாக செல்ல வேண்டும்.
அந்த சீனியர் பெண்ணின் சகோதரன் சில நாட்களாக தொந்தரவு செய்ய சொல்லி சொல்லி பார்த்தவள் இன்று வெற்றியை அழைத்துக்கொண்டு செல்வதாக முடிவு செய்திருக்க சூர்யா வருவான் என்று சுத்தமாய் நினைக்கவில்லை. யோசித்துக்கொண்டே பாலா நிற்க சூர்யாவோ,
“வா…” என்று சொல்லிவிட்டு அவளுக்கு முன்னால் நடந்தவன் வெளியே நின்றிருந்த தனது பைக்கில் ஏறி அமர அப்போது தான் மெதுவாய் நடந்து வந்தாள் அவள்.
“உன்னோட கார்ல எல்லாம் என்னால வர முடியாது. நான் பைக்ல போறேன். பின்னாடி ஃபலோ பண்ணு…” என்று சொல்ல,
“உங்ககிட்ட நான் கேட்டேனா?…” என்றுமட்டும் சொல்லியவள் தனது ஸ்கூட்டியில் ஏறி அவனுக்கு முன்னால் பறக்க,
“எல்லாம் என் நேரம். நட்புக்காக இதையெல்லாம் செய்யவேண்டியதா இருக்குது…” என்று பின்னால் தனது வண்டியை செலுத்தினான்.
அவனுக்கு முதலில் பேக்டரியை விட்டு வெளியே சென்றிருந்தாலும் அவனின் பார்வையில் படுமாறுதான் சென்றுகொண்டு இருந்தாள்.
அந்த மாலுக்கு சென்றவள் உள்ளே சென்று வண்டியை நிறுத்திவிட்டு பார்க்க சூர்யா என்ட்ரன்ஸில் நுழைந்தான் இவளை பார்த்தபடி.
‘இவனோட’ என கடுப்புடன் கால்களை உதைத்தபடி அவள் செல்ல பொடிக் ஆப்போசிட்டில் ஒரு காபி ஷாப் இருக்க,
“நான் அங்க வெய்ட் பன்றேன். முடிஞ்சதும் கூப்பிடு…” என அவளின் பதிலை எதிர்பாராமல் அங்கே நுழைந்துகொண்டான்.
அவன் சென்றதை பார்த்துக்கொண்டே இருந்தவள் பொட்டிக்கினுள் நுழைந்து ஒரு ஓரமாக சென்று வாட்ஸ்ஆப்பில் வெற்றி எண்ணிற்கு சூர்யாவை திட்டி பேசி மெசேஜ் அனுப்பியவள்,
“இதுக்கு அவன் வராமலே இருந்திருக்கலாம். இதுக்குத்தான் அனுப்பினியா மாமா நீ. உன்னால முடியலைன்னா சொல்லிருக்க வேண்டியது தானே?…” என்று அத்தனை சூட்டுடன் அவள் அனுப்ப அது உடனே பார்த்துவிட்ட சிக்னலை தந்தது.
“மாமா மீட்டிங் முடிஞ்சு வந்துட்டயா? அப்ப உடனே என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோ. இவனை திரும்பி போக சொல்லு…” என்றும் அனுப்ப,
“திரும்பி எல்லாம் போக முடியாது. என்ன நீ வச்ச சட்டமா? ஒழுங்கா வாங்க வந்ததை வாங்கிட்டு கிளம்பி வர வழியை பாரு…” என்று அவளை போலவே பேசி அனுப்பியிருந்தான் சூர்யவர்த்தன்.
ஒருநிமிடம் திடுக்கிட்டு போனவள் அவனின் எண்ணிற்கு தவறுதலாய் அனுப்பிவிட்டோமோ? என பயந்து எண்ணை சரிபார்க்க அது வெற்றியோடது தான்.
அப்போது தான் அவனின் எண்ணை சூர்யா உபயோகிப்பது புரிந்து கோபம் சுறுசுறுவென ஏற போன் செய்துவிட்டாள்.
அவன் எடுக்கவே இல்லை என்றதும் வேகமாய் அவனை தேடி செல்ல அங்கே அமர்ந்து கோல்ட்காபியை உறிஞ்சிக்கொண்டு இருந்தவன் இவளை பார்த்ததும் என்னவென புருவம் உயர்த்தினான்.
“எதுக்கு மாமா போனை நீங்க யூஸ் பன்றீங்க?…” என கேட்க,
“ஓஹ் அதை கேட்கத்தான் இங்க வரைக்கும் வந்தியா? இது தெரியாம நானும் இவ்வளோ தூரம் வந்துட்டேன். இதை நீ ஆபீஸ்லையே கேட்டிருக்கலாமே?…” என்றான்.
“ப்ச், இன்னொருத்தவங்களோட போன்ல…” என அவள் மேலும் சொல்லும் முன்,
“ஹேய் ஸ்டாப். இங்க பாரு ஜெய் கால் பண்ணினா பேசனும்னு சொல்லி அவன் தான் குடுத்தான். இதை உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை. இப்ப இதுதான் உன் பிரச்சனையா? வேற வேலை இல்லையோ?…” என்று நக்கலாய் கேட்க, அவனை பார்த்தவள் அவன் குடித்துக்கொண்டிருந்த க்ளாஸில் இருந்த ஸ்ட்ராவை தூக்கி கீழே போட்டுவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்.
“பெரிய இவ. வேற ஸ்ட்ரா கிடைக்காதாக்கும்…” என அவளை பதில் சொல்லமுடியாமல் செய்துவிட்ட சந்தோஷத்தில் இன்னொரு ஸ்ட்ராவை வரவழைத்து குடித்து முடித்து எழுந்து பொட்டிக் சென்றான்.
அங்கே அவள் ஒரு உடையை விரித்து பார்த்துக்கொண்டு இருக்க எதிரே இருந்தவன் குனிந்து அவளிடம் எதையோ பேசிக்கொண்டு இருந்தான். அவனுக்கு பதில் சொல்லாமல் பல்லை கடித்துக்கொண்டு அவள் நிற்பதை போல தெரிய,
“வாய் என்கிட்டயும், வெற்றிட்டையும் மட்டும் தான். பளார்ன்னு அறைஞ்சுட்டு வரதை விட்டுட்டு…” என முணுமுணுத்துக்கொண்டே அவளிடம் சென்றவன்,
“முடிஞ்சதா?…” என்றான் அவளிடம்.
“ஹாங், ஹ்ம்ம் முடிஞ்சது…” என்றவள்,
“கவின் இதை பேக் பண்ணுங்க…” என்று அவனிடம் சொல்ல,
“அண்ணா வயசு இருக்கும் இவருக்கு. கவின்னு பேர் சொல்லி கூப்பிடற இப்படித்தான் உன்னை மரியாதை இல்லாம வளர்த்திருக்கோமா நாங்க?…” என வேண்டுமென்றே பேசியவன், இடைச்சொருகலாக பாலாவையும் குத்திக்காட்டி பேச அங்கே எதிர்த்து பேசமுடியாமல் பல்லை கடித்தாள்.
“அண்ணான்னு சொல்லு…” என அதட்டலாய் சூர்யா சொல்ல,
“இருக்கட்டும் ஸார், ஒரு பிரண்ட்லி டாக் தானே? இப்ப எல்லாம் பேர் சொல்லி பேசறது தான் பேஷன்…” என்று கவின் பல்லை காட்ட,
“பேஷனிங் படிச்சா எல்லாமே பேஷனாகிடுமா கவின்? பாருங்க, நீங்க உங்க சிஸ்டர் படிச்ச காலேஜ்ல இவங்க படிக்கறதால தங்கச்சியா நினைச்சு பேசுவீங்க. அந்த மரியாதையை திருப்பி குடுக்கனும் தானே?…” என சொல்லி பாலாவை பார்த்தவன்,
“தப்பு செஞ்சா கண்டிக்கனும். அதிலையும் எனக்கு செம்ம கோவம் வேற வரும்…” என கை முஷ்டியை மடக்கியபடி அவன் பேச கவினின் முகம் வெளிறியது.
“சொல்றேன்ல அண்ணான்னு கூப்பிடு…” என பாலாவை சொல்ல,
“ஓகே கவின் அண்ணா. இதை பேக் பண்ணிடுங்க. டைம் ஆகுது…” என்றவளை பார்த்து அவன் திருதிருவென விழிக்க,
“நீங்களும் சொல்லுங்க…” என கவினை பார்த்து சீரியஸான முகபாவனையுடன் சூர்யா பேச,
“தங்கச்சி தான். சரிங்க தங்கச்சி. சொல்லிட்டேன். சொல்லிட்டேன்…” என்றான் சூர்யாவின் மறைமுகமான மிரட்டலான பார்வையில்.
கவினுக்கு தெரிந்தது தன்னை எச்சரிக்கவென்றே அவன் பேசுகிறான் என்று. எதற்கு வம்பென்று அவனும் சொல்லிவிட வேகமாய் அதனை பேக் செய்து அவளிடம் நீட்டினான்.
“நான் கல்யாணி அக்காட்ட பேசிடறேன் போன்ல….” என சொல்லிவிட்டு அந்த உடையை வாங்கிக்கொண்டு நடக்க,
“மவனே லாடம் கட்டிடுவேன் பார்த்துக்க. கடைக்கு வந்தா வழியுவியோ? ஜொள்ளுவிட வாயும் இருக்காது. பாக்க கண்ணும் இருக்காது. புரியுதா?…”
“நீங்க போலீஸா? இல்லை ஸார் சும்மா இன்ட்ரெஸ்டா தான் பார்த்தேன். இனி அப்படி பண்ணமாட்டேன். ஸாரி…” என்று உடனே பணிந்து பேச,
“அந்த பயம் இருக்கனும். இன்ட்ரெஸ்ட்டா பார்த்தது தப்புன்னு சொல்லலை. புடிக்கலைன்னு சொல்லிட்டாங்க தானே? ஒழுங்கா ஒதுங்கி போய்டனும். அதை விட்டுட்டு அசிங்கமா பின்னால தொரத்தறது, பேசி பேசி டார்ச்சர் பன்றதுன்னு வச்சிக்கிட்ட…” உதட்டை மடித்து ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவன்,
“பார்த்து இரு…” என்று சொல்லி சென்றான். அவன் செல்வதற்குள் கவினுக்கு வேர்த்துவிட்டது.
கீழே பார்க்கிங்கில் ஸ்கூட்டியில் அமர்ந்தபடி அவன் வருகைக்காக அவள் காத்திருக்க,
“இன்னும் எங்க?…” என கேட்க,
“நான் வீட்டுக்கு தான் போறேன். அங்க இருந்து பிரண்ட் வீடு பக்கம்…” என்றாள் பாலா.
“வெற்றி நேரா ப்ரென்ட் வீட்டுக்கு தான் போவன்னு சொன்னான்…”
“ப்ச், தலை வலிக்குது. வீட்டுக்கு போய்ட்டு அங்க இருந்து போய்க்கறேன்…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல ஒரு தோள் குலுக்களில் பதிலின்றி தனது பைக்கை நோக்கி வந்தவன் வண்டியை கிளப்பிக்கொண்டு திரும்பி பார்க்க அங்கே பாலா இருந்ததன் சுவடே இல்லை. சென்றிருந்தாள்.
‘இவக்கிட்ட எல்லாம் மரியாதையை எதிர்பார்க்க முடியுமா?’ என மனதினுள் அவளை திட்டிக்கொண்டு மீண்டும் பேக்டரி நோக்கி சென்றான்.