நிலா – 4
பாலா வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து வாசலில் நிறுத்தியவள் தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டே அந்த சிறு கம்பி கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.
வெற்றி, ஜெயஸ்ரீ வசிக்கும் வீடு அது. அளவான சிறு வீடு என்றாலும் நன்கு விசாலமாகவே இருக்கும்.
வாசலில் செருப்பை விட்டவள் காம்பவுண்ட் சுவரை ஒட்டிய எலுமிச்சை மரத்தில் இருந்து ஐந்தாறு இலைகளை பறித்துக்கொண்டு உள்ளே வந்தாள்.
ஹாலில் ஜெயஸ்ரீயுடன் அர்ச்சனாவும் அஸ்வினியும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அவர்களுக்கு எதிரே மோகனா இருந்தார்.
“வாம்மா பாலா…” என அவளை பார்த்ததுமே அர்ச்சனா புன்னகைக்க அவரை எதிர்பாராதவள்,
“ஹாய் ஆன்ட்டி. எப்போ வந்தீங்க?…” என்றாள் இன்முகமாக.
“இப்போ தான். காலேஜ் முடிஞ்சதாம்மா….” என்று அவர் விடாமல் கேட்க ஏற்கனவே பாலாவின் முகம் தலைவலியில் அத்தனை சிவந்துபோய் இருந்தது.
“ஹ்ம்ம், ஆச்சு ஆன்ட்டி. இப்போ தான்….” என்றவள்,
“நீங்க எப்படி இருக்கீங்க? ஹாய் அஸ்வினி…” என அவளிடமும் பேச,
“சும்மா இந்த பக்கம் ஜுவல் கேட்லாக் பார்க்க வந்தோம். நிறைய டிஸைன்ஸ் இருந்தது. அதான் கேட்லாக் எல்லாம் வாங்கிட்டு அப்படியே ஜெய் எப்படி இருக்கன்னு பார்த்துட்டு போகலாமேன்னு அஸ்வினி சொன்னா…”
“ஓகே ஆன்ட்டி இப்ப வந்திடறேன்…” என சொல்லிவிட்டு கையில் இருந்த பேக்கை அங்கேயே வைக்க,
“ரூம்க்கு எடுத்துட்டு போ பாலா…” என்றார் மோகனா.
“இல்லம்மா, இப்ப கிளம்பனும் என் ப்ரென்ட் ப்ரீத்தி என்கேஜ்மேன்ட்க்கு போகனும். தலை வலிக்குதேன்னு அப்படியே இங்க வந்துட்டேன்…” என நேராக அங்கே இருந்த வாஷ்பேஷனில் முகத்தை அலம்பினாள்.
“இரு டீ போட்டு தரேன்…” என்றவரிடம்,
“வேண்டாம்மா, நானே போட்டுக்கறேன். அதான் இதை எடுத்துட்டு வந்தேன்…” என்றவள் கிட்சனுக்கு சென்றாள்.
ஒரு சின்ன பாத்திரத்தில் ஒரு தம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து கால் டீஸ்பூன் தேயிலை தூளை போட்டவள் அதனோடு எலுமிச்சை இலைகளையும் சேர்த்தாள். நன்றாக கொதி வந்ததும் வடித்து தேன் கலந்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“ஆன்ட்டி டீ சாப்பிடறீங்களா?….” என அர்ச்சனாவிடம் கேட்டவள்,
“அஸ்வினி உனக்கு?…” என அவளையும் கேட்க,
“நோ பாலா. நாங்க வந்ததுமே குடிச்சுட்டோம்…” என்று அஸ்வினி சொல்லவும் அங்கே ஓரிடத்தில் அமர்ந்துகொண்டாள் பாலா.
அஸ்வினியையும் முதலில் ஹரிணி, திவ்யாவை அழைப்பதை போல அக்கா என்றழைக்க அஸ்வினி அதிக வயது வித்யாசம் இல்லை என்பதால் பெயர் சொல்லியே அழை என்றுவிட்டாள்.
“என்ன இவ்வளவு டென்ஷனா வந்திருக்க?…” என்ற ஜெயஸ்ரீ கேள்வியில் தோளை குலுக்கிக்கொண்டவள் பதில் பேசாமல் டீயை மெதுவாய் சூட்டுடன் குடிக்க ஆரம்பித்தாள்.
“இதென்ன கவர்?…” என மோகனா அவள் கொண்டுவந்து வைத்ததை பார்த்து கேட்டார்.
“ம்மா, அதை பிரிச்சு பாரேன். நான் டிஸைன் பண்ணினது ப்ரீத்திக்கு கிப்ட் பண்ண…” என சொல்லவும் மோகனாவும் அந்த உடையை வெளியில் எடுக்க நீளமான தங்கநிற உடையில் அத்தனை வேலைபாடுகள். அதிலும் அதற்கென தயாரித்திருந்த பேபி பிங் நிற துப்பட்டாவிலும் அதை போலவே ஓரங்களில் வேலைபாடுகள்.
“வாவ்…” என அஸ்வினியின் கண்கள் விரிந்துகொள்ள,
“நல்லா இருக்கா?…” என்ற பாலாவிடம் ஆசை மின்ன,
“ரொம்ப ரொம்ப. எனக்கும் இதே மாதிரி பண்ணித்தர முடியுமா? சச் எ வொண்டர்ஃபுல் டிஸைன், கலர் காம்பினேஷன், எல்லாமே எல்லாமே அவ்வளோ பக்கா…” என அஸ்வினி சில்லாகிக்க,
“நானா? உங்கப்பாக்கிட்ட சொன்னா டாப் டிசைனர்சே இதைவிட அழகான டிஸைன்ஸ்ல உனக்கு செஞ்சு குடுக்க ரெடியா இருப்பாங்க…” என பாலா சொல்ல,
“ஆனா இது மாதிரி வராதே. எனக்கு கண்டிப்பா இது மாதிரி தான் வேணும். ஆனா வேற டிஸைன்ஸ், வேற கலர்…”
“அப்ப இது நல்லா இல்லைன்ற…” என குறும்புடன் பாலா கேட்க,
“அப்படி இல்லை. இப்ப இதை ஏற்கனவே ஒருத்தவங்களுக்கு நீ ரெடி பண்ணி குடுத்துட்ட. அதே மாதிரி நானும் போட்ட எப்படி? எனக்கு வேற டிஸைன். யூனிக்கா வேணும். ஹரிக்கா கல்யாணத்துல நான் தனியா தெரியனும்…” என படபடவென பேசிய அஸ்வினி,
“அம்மா, அம்மா ஹரிணிக்கும், திவ்யாண்ணிக்கும் சேர்த்தே ரெடி பண்ணலாம் தானே?…” என தாயிடம் கேட்டவள்,
“ஆமா நீ ப்ளவுஸ் எல்லாம் டிஸைன் செய்வியா?…” என கேட்க அதற்கும் பாலா ஆமோதிப்பாய் தலையசைத்து,
“ஏன்? நான் அதுக்குத்தானே படிச்சிருக்கேன். என்னால முடிஞ்சதை செய்ஞ்சு குடுத்துட்டு இருக்கேன். இத்தனை வருஷம் ஆச்சு. தெரியாதா என்ன?…” என கேட்க,
“அப்படி இல்லை. படிக்கறது தெரியும். ஆனாலும் பெருசா தெரிஞ்சுக்கலை…” என அசடு வழிந்த அஸ்வினி,
“கன்பார்ம். இந்த கல்யாணத்துக்கு நீ தான் எங்க டிஸைனர்…” என அஸ்வினி சொல்ல,
“அஸ்வி, என்ன இது ஆடர் போடற மாதிரி? அவ நம்ம வெற்றி வீட்டு பொண்ணு. நமக்கு சொந்தம் மாதிரி தான். பார்த்து பேசு…” என்றார் அர்ச்சனா.
மனிதர்களை அவர்களின் குணங்களை கொண்டு மதிக்கும் நல்லவர். யாருக்கும் யாரும் குறைவில்லை என்னும் எண்ணம் கொண்டவர். மகள் வேலை தருவதை போல பாலாவை பேசியதை அவரால் ஏற்கமுடியவில்லை.
“அவ ஒன்னும் தப்பா பேசலையே ஆன்ட்டி. கரெக்ட் தான். இது எனக்கு ஒரு ஹ்யூஜ் ஆடர். கண்டிப்பா செஞ்சு தரேன். எனக்கு பிடிச்ச விஷயமும் கூட. இதுல இன்னொரு பெனிபிட் எனக்கு. டிஸைன் பிடிச்சா கண்டிப்பா புது கஸ்டமர்ஸ் கிடைப்பாங்க தானே?…” என கண்சிமிட்டி சொல்ல அர்ச்சனா புன்னகைத்தார்.
பாலா தனது முன்னேற்றத்தை அஸ்வினியின் ஆசையை அடித்தளமாக கொண்டு ஆரம்பிக்க நினைத்தாள்.
மிகப்பெரிய டிஸைனர் ஆகவேண்டும் என்பதை எல்லாம் விட சொல்லிக்கொள்ளும் படி பேர் உள்ள டிசைனராக வேண்டும் என்பதில் தான் அவளின் முனைப்பு.
அதனால் மட்டுமே படிக்கும் போதிருந்தே தனது திறமையை ஊக்குவிக்கும் கல்யாணி அக்காவிடம் பகுதிநேர வடிவமைப்பாளராக வேலையில் இருந்தாள். அங்கிருந்து தனது முன்னேற்ற பாதையை கொண்டு செல்ல நினைத்தாள்.
தானாக எதையும் தேடிப்போகாதவள் வரும் வாய்ப்பையும் விடாமல் கெட்டியாக பற்றிக்கொள்வாள்.
“இல்ல பாலா…” என்று அர்ச்சனா தயங்க,
“அம்மா நீங்க சும்மா இருங்க. கண்டிப்பா நீங்க இந்த வீக்கென்ட் வீட்டுக்கு வரனும். நாம அங்க வச்சு டிஸ்கஸ் பண்ணுவோம். வெற்றியண்ணாட்ட நான் பேசிப்பேன்…” என்று சொல்ல,
“ஓகே உன்னோட விஷ்…” என்று எழுந்தவள்,
“நான் கிளம்பனும். பைவ் மினிட்ஸ்…” என்று உள்ளே சென்றவள் உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.
அதே ப்ரீ ஹேர்,மாந்தளிர் பச்சையில் லாங் ப்ளைன் குர்தி. க்ளோஸ்ட் நெக் வைத்திருக்க அந்த நெக் முழுவதும் மட்டுமே டிஸைன். கையும் மணிக்கட்டு வரை முழுதாய் மறைத்து இருக்க அதனை சுற்றியும் அதே போல டிஸைன். பெரிதாய் காதில் தோடு.
பார்க்க பார்க்க அஸ்வினிக்கு தோன்றியது இது ஒன்றுதான் எந்த உடையும் இவளுக்கு பொருத்தம் தான் என்பது.
“ஓகே, பை. இன்னொரு நாள் மீட் பண்ணலாம்…” என அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட அஸ்வினி ஆவென்று பார்த்த பார்வையில் அர்ச்சனா தான் அவளின் தலையில் தட்டினார்.
“அவ தான் போய்ட்டாள. அப்பறம் என்ன?…” என்று சிரிக்க,
“ம்மா, இப்ப பாலா போட்டு போன ட்ரெஸ் எனக்கு சூட் ஆகுமாம்மா? சூப்பர்ல…” என்று கண்ணை விரித்து சொல்ல,
“சுத்தம். உன்னை கூட்டிட்டு வந்தேன் பாரு…” என சிரித்தார் அர்ச்சனா.
“இப்ப என்ன ஆன்ட்டி, பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கனும். ஆசைப்பட தானே மனசு. சும்மா அடக்கிவச்சு என்ன கண்டோம்?…” என சிரித்துக்கொண்டே ஜெயஸ்ரீ சொல்ல,
“அதுசரி, இவ சும்மாவே ஆடுவா. நீயுமா?…” என்ற அர்ச்சனா,
“மோகனா இன்னும் ரெண்டு நாள் இருக்கலாமே? ஏன் நாளைக்கே போகனும்னு சொல்றீங்க?…” என பேச ஜெயஸ்ரீ அஸ்வினியுடன் சேர்ந்து தனியே கதை பேச ஆரம்பித்தாள்.
“இல்லை அஸ்விம்மா, அங்க அப்படியே விட்டுட்டு கிளம்பி வந்துட்டேன். சாப்பாடுக்கு ரொம்ப கஷ்டப்படுவார். ஜெயஸ்ரீ அம்மாவுக்கு உடம்பு சரியா இருந்தா அவங்களே வந்திருப்பாங்க. தனியா எப்படி செக்கப் போவா? அதான் வெற்றி வந்தாலே வான்னுட்டான்….”
“சரிதான் மோகனா. டாக்டர்ஸ் பெரியங்கட்ட தான் கரெக்ட்டா உள்ளதை சொல்லுவாங்க. ஜெய்க்கு என்ன தெரியும்? அவளும் அஸ்வி மாதிரி தான்…” என சொல்லி சிரிக்க,
“ஹ்ம்ம் ஆமா, அப்படியே பாலாவுக்கும் வரன் பார்த்திடலாமேன்னு தான் ஜாதகம் கொண்டு வந்தேன். இன்னும் மூணு மாசம் படிப்பு முடிஞ்சிரும். அப்படியே சட்டுபுட்டுன்னு ஒரு வரனை பார்த்து முடிச்சுவிட்டுடலாம்…”
“ஏன் இவ்வளவு சீக்கிரம்? இருபத்திரெண்டு வயசுதானே? கொஞ்சம் பொருத்து பண்ணலாமே? ஏனா பாலாவும் ரொம்ப ஆவலா இருக்கா முன்னேறனும்னு. கண்டிப்பா பெரிய ஆளா வருவா…” என்று சொல்ல,
“எல்லாம் சரிதான் அஸ்விமா. ஆனா அவருக்கு வயசாகுதே. பர்ஸ்ட் அட்டாக் வரவுமே பயந்துட்டாரு. வெற்றிதான் படிப்பை முடிக்கட்டும்னு சொல்லி வச்சிருக்கான். சூர்யாவும் நீங்க சொன்னதை தான் சொன்னான்…”
“பாலா என்ன சொல்றா?…”
“அவ என்ன சொல்லுவா? கல்யாணம் பேசறதை பத்தி அவளுக்கு தெரிஞ்சாலும் பெருசா காட்டிக்கலை. அவ அப்பாவை தான் உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பான்னு சொல்லி சமாதானம் செய்யறா…” என கண்கலங்க சொல்ல அவரின் அருகே சென்று அமர்ந்துகொண்டார் அர்ச்சனா.
“ப்ச், என்ன இது? இதுக்கு போய் அழுதுட்டு. எந்த பிரச்சனையும் இல்லை. நாங்க எல்லாம் இல்லையா? கவலைப்படாம இருங்க…” என தேற்ற,
“கவலை எல்லாம் இந்த பொண்ணை நினைச்சு தான். எல்லா நேரமும் நல்லவிதமா இருந்தாலும் முணுக்குன்னதும் கோபம் வந்திருது. சமாளிக்கவே கஷ்டமா இருக்குது…”
“பாலாவையா?…” என அர்ச்சனா சிரிக்க,
“நீங்க கேட்கறது புரியுது அஸ்விம்மா. அவ எப்போ சாந்தமா பேசுவான்னும் தெரியாது. எப்போ எடுத்தெறிஞ்சு பேசுவான்னும் தெரியாது. கணிக்க முடியலை. ஆனா தப்பா எதுவும் பண்ணமாட்டா. அதான் பயமா இருக்குது. போற வீட்டுல எல்லாத்தையும் அனுசரிச்சு இருக்கனுமேன்னு…” என சொல்ல,
“இது நல்லா இருக்குது. அவ தப்பா பண்ணமாட்டான்னு நீங்களே சொல்றீங்க. அப்போ தப்பா பண்ணினா தானே கோபம் வரும். சும்மா எல்லாத்துக்கும் பொண்ணுங்களே அனுசரிச்சு போகனும்னு சொல்லி அவங்க பொண்ணுங்களோட வாழ்க்கையை முடக்கி போடறதே அந்த இடம் தான்…”
“இல்ல அஸ்விம்மா…”
“நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க மோகனா. உங்க பயம் அனாவசியம். முதல்ல எந்த பொண்ணையும் அப்படியே அவ குணத்தோட ஏத்துக்கற குடும்பம் வாய்க்கிறது வரம். கண்டிப்பா பாலாவுக்கு அப்படி அமையும். நீங்களா அவளை அதை செய்யாதே, பண்ணாதேன்னு போட்டு கேட் போடாதீங்க…” என்றவர்,
“ஹரிணிக்கும் வரன் பார்த்தாச்சு. சீக்கிரமே நாள் குறிச்சிடுவோம். எனக்கு அந்த பயமே இல்லை தெரியுமா?. முதல்ல நாம நம்ம பொண்ணு மேல நம்பிக்கை வைக்கனும். அதுதான் அவங்களோட தைரியம். இது எல்லாருக்கும் பொருந்துமா என்னன்னு தெரியலை. ஆனா நமக்கு பொருந்தும்…”
“பொருந்தறதும் பொருந்தாம போறதும் வளர்ப்புல இருக்குது. சரியா வளர்த்தா அங்க சரியா இருப்பாங்க. நம்பிக்கைக்கு அங்க பெரிய மதிப்பு இருக்கும். இப்ப உங்களுக்கு புரியுதா?…” என அர்ச்சனா சொல்ல மோகனாவிற்கும் மனது லேசானது.
“ஓகே, நாங்க கிளம்பனும்…” என எழுந்துகொண்டவர் ஜெயஸ்ரீயிடம்,
“வெற்றி வரவும் என்னைக்கு ப்ரீன்னு கேட்டு நீயும் சேர்ந்து வா. புரியுதா?…” என சொல்ல,
“ஓகே ஆன்ட்டி…” என ஜெயஸ்ரீ எழுந்துகொள்ள,
“என்ன அஸ்வி இது? கேட்லாக் எல்லாம் எடுத்து போட்டு வச்சிருக்க? ஒன்னை எடுத்ததா பார்த்துட்டு அதை உள்ள வைச்சுட்டு அடுத்து எடுக்கமாட்டியா?…” என்று அர்ச்சனா சொல்லவும் எடுத்து பேக்கினுள் வைத்தாள் அஸ்வினி.
“இவங்கப்பா வீட்டுக்கு கொண்டு வர சொல்லுவார். நான் தான் சும்மா அப்படியே வெளில வந்த மாதிரியும் இருக்கும். ஜெய் எப்டி இருக்கான்னு பார்த்த மாதிரியும் இருக்குமேன்னு வந்துட்டேன்…” என்றவர் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினார் தன் மகளுடன்.
வீட்டிற்கு வந்ததுமே ஹாலில் அமர்ந்து புக் படித்துக்கொண்டு இருந்த ஹரிணியிடம்,
“ஹர்ர்ரிக்கா…” என ஓடிவந்தவள்,
“ஒரு சப்ரைஸ் வச்சிருக்கேன்…” என்றவள் அந்த பேக்கை அப்படியே போட்டுவிட்டு தனது மொபைலில் தான் எடுத்திருந்த சில புகைப்படங்களை காண்பித்தாள்.
“இந்த டிஸைன் எப்படி இருக்குது சொல்லு?…” என கேட்க ஹரிணியும்,
“ஆசம்டி அஸ்வி. எங்க கிடைக்குது?…” என கேட்கவும் அஸ்வினி நடந்ததை விவரிக்க,
“உருப்படியா ஒண்ணு பண்ணிட்டு வந்திருக்கன்னு சொல்லு…” என்றதும் இருவரும் ஹைபை அடித்துக்கொண்டனர்.