“திவ்யாண்ணி எங்க?…”
“இந்நேரம் அவ எங்க இங்க இருப்பா? ஹாஸ்பிட்டல்ல தான் இருப்பா. வர வர அவ வீட்டுக்கு வரதே குறைஞ்சிடுச்சு…” என ஹரிணி சொல்ல,
“சரி விடு, வேலையா இருக்கும். அதோட இப்ப அடிக்கடி கல்யாணத்தை பத்தி பேசறதால அவங்களுக்கு வெட்கமா இருக்கும்ல…” என சொல்லி அஸ்வினி இருக்க,
“நீயெல்லாம் என்னனுடி படிச்சு பசங்களுக்கு பாடம் எடுக்க போற?…” என தலையில் அடித்துக்கொண்டாள் ஹரிணி.
ஹரிணி ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் கணினி லெக்சரராகவும் இருக்க அஸ்வினிக்கு படிக்க மட்டுமே பிடித்திருந்தது. மேலே மேலே அடுத்து என்ன என்று படிக்க இருந்தாள்.
“வேலைக்கு எல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் தான் போவான்…” என்றுவேறு சொல்லிக்கொள்வாள்.
ஏதோ ஒருகட்டத்தில் சூர்யாவின் கிண்டல், நக்கலை பொறுக்க முடியாமல் அவனின் மூக்கை உடைக்கவென ஒரு உத்வேகத்தில் படிக்க ஆரம்பித்தவளுக்கு தானே ஒரு ஆர்வம், பிடிப்பு தொற்றிக்கொள்ள ஓவர் படிப்ஸ் ஆகிவிட்டாள்.
ஆனாலும் அந்த சேட்டையும், வாய்த்துடுக்கும் கொஞ்சமும் குறையவில்லை அவளிடம்.
“இந்தா, இந்த கேட்லாக்ல உனக்கு எந்த டிஸைன் பிடிச்சிருக்குன்னு பார்த்து கேப்சர் பண்ணி வை. அம்மா சொல்ல சொன்னாங்க…” என்று நான்கு பெரிய கேட்லாக் புத்தகங்களை எடுத்து போட்டவள் அதன் இடையில் கூடவே ஒரு சிறிய நோட் கிடைக்க,
“இதென்ன?…” என்று திறந்து பார்க்க அது பாலாவினுடைய ஜாதகம்.
“அம்மா…” என்று அஸ்வினி கத்த வெளியே உமாவிடம் பேசிக்கொண்டிருந்த அர்ச்சனா அப்போது தான் உள்ளே வந்தார்.
“பாலாவோட ஜாதகம் தவறுதலா வந்துருச்சு…” என சொல்ல,
“அடடா, இன்னைக்கு தான் மோகனா அதை வெற்றி கூட போய் தரகர்த்ட குடுக்கனும்னு சொன்னாங்க…” என அதை பிரித்து பார்த்தவர்,
“எடுத்து வைக்கும் போது ஒழுங்கா பார்த்து எடுத்துவைக்க மாட்டியா?…” என கடிந்தவர் மோகனாவிற்கு அழைத்து சூர்யாவிடம் கொடுத்தனுப்புவதாக சொன்னார்.
“நீங்க பெரியவங்க பேசிட்டு இருந்தீங்க. நாங்க என்ன செய்ய? அதான் ஜெய்க்காக்கு டிஸைன்ஸ் காமிக்கலாம்னு எடுத்து பார்த்துட்டு இருந்தேன். அதோட வந்துருச்சு. இப்ப என்ன?…” என்றாள் அஸ்வினி.
“முதல்ல உன் அக்காவோட உனக்கும் மாப்பிள்ளை பார்த்து கட்டிக்குடுத்து அனுப்பனும். உன்னைத்தான் உண்மைக்குமே சமாளிக்க முடியலை…” என தலையில் அடித்துக்கொண்டவர்,
“இதை இங்கேயே வை. நீ பாட்டுக்கு தூக்கி போட்டுடாத. தேட முடியாது…” என்று சொல்லிவிட்டு சென்றார்.
“நீ வா ஹரிக்கா நாம உள்ள போவோம்…” என ஜாதகத்தை அங்கேயே வைத்துவிட்டு மற்றவற்றை எடுத்து செல்ல சிறிது நேரத்தில் வந்துவிட்டார் கோபாலசுவாமி.
“அர்ச்சு…” என்று மனைவியை அழைக்க,
“அய்யா அம்மா பூஜைல இருக்காங்க. எதுவும் வேணும்ங்களா?…” என பவ்யமாய் அந்த வீட்டில் வேலை பார்ப்பவர் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் செல்லுமாறு கையை மட்டுமே ஆட்டினார்.
பூஜை முடிந்து வரட்டும் என்றவர் ஏதோ யோசனையில் மூழ்கி இருக்க அப்போதுதான் அவரின் கருத்தை கவர்ந்தது டீப்பாயில் ராதாகிருஷ்ணன் படம் போடப்பட்டிருந்த அந்த நோட்டின் அட்டைப்படம்.
எடுத்து பிரித்து பார்த்தவர் அது ஜாதகபுத்தகமென பார்த்ததுமே தெரிந்து போனது. பெயரை பார்த்தவர் இது எப்படி இங்கே என்று யோசனையுடன் மூடி மீண்டும் அதே இடத்தில் வைத்தார்.
“வந்துட்டீங்களா? லேட் ஆகும்னு சொல்லிருந்தீங்க?…” என வரும் போதே கணவருக்கான காபியுடனே வந்துவிட்டார் அர்ச்சனா.
“ஹ்ம்ம், போன அப்பாய்மென்ட் கேன்சல். அதான் கிளம்பிட்டேன்…”
“ஓஹ், ரொம்ப சோர்வா இருக்கீங்களே?…” என அவரின் முகம் பார்த்து கேட்க,
“ப்ச் அது இருக்கட்டும். இங்க பாரு அர்ச்சு, இதென்ன புது பழக்கம் ஜாதகநோட் வாங்கிட்டு வந்து பார்க்க சொல்றது?…” என சற்று கடுமை எட்டிப்பார்க்க அவர் கேட்க,
“எதை சொல்றீங்க?…” என்றார் அர்ச்சனா புரியாமல்.
“வெற்றி நல்ல பையன் தான். அவனோட குடும்பம் நல்ல குடும்பம் தான். இங்க அவன் திறமையை மதிச்சு தான் சூர்யாவோட பாட்னரா சேரும் போது சரின்னு சம்மதிச்சேன். அவங்க வீட்டாளுங்களும் மதிப்பானவங்க தான்…”
“சரிங்க இப்போ அதுக்கென்ன?…”
“அதுக்கென்னவா? என்னோட ஒரு அப்பாயின்மென்ட் வேல்யூ என்னன்னு உனக்கு தெரியாதா அர்ச்சு? அவனவன் க்யூல இருக்கான். நீ என்னன்னா சின்னப்புள்ள தனமா அந்த பொண்ணோட ஜாதகத்தை வாங்கிட்டு வந்திருக்க?. இதை எல்லாம் நான் அனுமதிக்க முடியாது…” என்றார் படபடவென்று.
“இதுதான் விஷயமா?…” என்ற அர்ச்சனா அப்போதுதான் நிம்மதி பெருமூச்செறிந்தார்.
“இது நீங்க பார்க்கனும்னு நான் வாங்கிட்டு வந்ததில்லைங்க. ஜெய்யை பார்க்க போயிருந்தோம். அப்படியே அங்க அஸ்வி ஜுவல் கேட்லாக்கை ஜெய்ட்ட காமிச்சுட்டு இருக்கும் போது கேட்லாக்கோட தவறுதலா வந்திருச்சு ஜாதகம். குடுத்தனுப்பனும். அவங்களும் பாலாவுக்கு வரன் பார்க்கனும்னு சொல்லிட்டு இருக்காங்க…”
கணவரிடம் சொல்லிக்கொண்டே அந்த ஜாதகத்தை எடுத்து பக்கம் பக்கமாய் திருப்பிக்கொண்டே இருந்தவர் பின் உடை விஷயத்தையும் சொல்ல,
“இதை எல்லாம் ஏன் என்கிட்டே பேசற? நீயும் பொண்ணுங்களும் முடிவு பண்ணினா போதும்…” என்றார் விடேற்றியாக.
“சரி அதை விடுங்க, உமாவுக்கு முகமே சரியில்லை ஹரிணிக்கு பேசிமுடிச்சதுல இருந்தே திவ்யா பத்தின கவலை அதிகமாகிடுச்சு…”
“நான் காரணமில்லாமலா சொல்லுவேன்…” என்றார் கோபாலசுவாமி சற்று கோபமாக.
“இல்லை, அப்படி இல்லை. நீங்க சொல்ல வரதும் புரியுது. நல்ல நேரம் கூடி வரனும். ரெண்டுபேரோட ஜாதகத்துக்கும் எது சரியோ அப்போ தான பண்ண முடியும்னு. ஆனாலும் ஒரு அம்மாவா உமா நினைப்பு தப்பில்லையே. ஹரிணியும் திவ்யா வயசு தானே?…”
“இங்க பாரு அர்ச்சு. பெரியபெரிய ஆளுங்களுக்கெல்லாம் நேரம் குறிச்சு குடுக்கற நான் நம்ம பையனுக்கு பார்க்கமாட்டேனா? நான் தள்ளி போடறதுல ஒரு அர்த்தம் இருக்கும். ரெண்டுபேரோட எதிர்காலமும் நல்லா இருக்கனும்னு தானே சொல்றேன்…” என்றார் அவர்.
அன்று ஏனோ அத்தனை பொறுமையாக அவர் பேசியதே பெரிய விஷயமாக இருந்தது அர்ச்சனாவிற்கு.
“எல்லாம் சரி, பாலாவுக்கு எப்போ கல்யாணம் பண்ணினா நல்லா இருக்கும்னு பார்த்து சொன்னா என்ன? எத்தனை பேருக்கு பார்க்கறீங்க, இது எனக்காக பார்க்க கூடாதா?…” என்ற அர்ச்சனாவை தீ பார்வை பார்க்க,
‘போச்சு, கோவம் வந்திருச்சு’ என அவரின் பார்வையில் சற்று தள்ளி அமர்ந்தவர் காபி கப்பை வாங்கிக்கொண்டு ஜாதகத்தை டேபிளில் வைக்க,
“அர்ச்சு, இதை எடுத்துட்டு போ…” என்றார் கோபமாக. அர்ச்சனாவும் அதை கையில் எடுக்க,
“இங்க பாரு, வெற்றிக்கான மரியாதை எப்பவும் உண்டு. அது மாறாது. அதையே சாக்கா வச்சுட்டு என்னோட விஷயத்துல நீ தலையிட கூடாது. இதுதான் உனக்கு லாஸ்ட்…” என்று எச்சரிக்க விட்டால் போதும் என்னும் பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டார்.
அதன் பின் தங்கையை பற்றிய எண்ணங்கள், அடுத்து மறுநாளைக்கான அப்பாயின்மென்ட் என்று அதை பற்றிய யோசனைகளில் மூழ்கிவிட்டார் கோபாலசுவாமி.
வெற்றிக்கு முன்பே மோகனா போன் செய்து சொல்லிவிட்டதால் அவனே ஜாதகத்தை வாங்க வந்துவிட்டான்.
“சூர்யா எங்க வெற்றி? நீ மட்டும் வந்திருக்க?…” என அவனை பார்த்து கேட்க,
“அவன் ஒரு சின்ன வேலை இருக்குது, முடிச்சுட்டு வரேன்னு சொன்னான். நான் வீட்டுக்கு போற வழில ஜாதகத்தை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன் அர்ச்சும்மா…” என சொல்ல அவனை முறைத்த அர்ச்சனா,
“ஏன் வெற்றி நான் தான் சொல்லிருந்தேன்ல சூர்யா வரவும் குடுத்தனுப்பறேன்னு. அதுக்குள்ளே என்ன அவசரம்?…” என அந்த இரவு நேரத்தில் அவன் வந்து நிற்கவுமே அர்ச்சனா சொல்ல,
“இருக்கட்டும் அர்ச்சும்மா. நாளைக்கு காலையில தரகர் வீட்டுக்கு போகனும். ஆக்சுவலா இன்னைக்கு தான் போக வேண்டியது. எனக்கு கொஞ்சம் வேலை ஆகிடுச்சென்னு தான் நாளைக்கு…” என்று வெற்றி சொல்ல,
“வா வெற்றி…” என்றபடி உள்ளறையில் இருந்து வந்தார் கோபாலசுவாமி.
“வணக்கம் ஸார்…” என்றவனை ஒரு சிரிப்புடன் ஆமோதித்தவர்,
“ஏன் அர்ச்சு, உனக்கு சாஸ்திரம் தெரியுமா இல்லையா? எல்லாம் மறந்து போச்சா? இருட்டி விளக்கு வச்ச நேரத்துல ஜாதகத்தை கை மாத்தற?…” என்றார் சற்று சூடான குரலில்.
“இல்லைங்க அது நாளைக்கு…”
“எதுவாவும் இருக்கட்டும். அவங்க வீட்டு ஜாதகமாகவே இருந்தாலும் விளக்கு வச்ச பின்னால வெளிய குடுக்க கூடாதுன்னு தெரியும் தானே?…” என்று சொல்லவும் பதிலின்றி நின்றனர் இருவரும்.
“உள்ள கொண்டு போய் வை. நாளைக்கு காலையில குடுத்தனுப்பு…” என்றவர்,
“இன்னைக்கு மீட்டிங் எப்படி போச்சு வெற்றி?…” என அவனிடம் தொழிற்சாலை பற்றிய விவரங்களை கேட்டபடி நடந்தார்.
அவர் அப்படி சத்தம் போட்டதில் அர்ச்சனா டிஸைனிங் விஷயத்தை மறந்தே போனார் அவனிடம் சொல்வதற்கு. அவனும் வீட்டில் அஸ்வினி, ஹரிணியை பற்றி கேட்க முடியவில்லை.
கோபாலசுவாமி அவனுடன் பேசியபடி வெளியே வரவும் வெற்றியும் மறுப்பேதும் சொல்லாமல் அவர் கேட்கும் விஷயங்களை அவரிடம் ஒப்புவித்துக்கொண்டு இருந்தான். அவனிடம் பேசி முடித்தவர்,
“நாளைக்கு ஜாதகம் வீட்டுக்கு வரும். நீ கிளம்பு. ஜெயஸ்ரீ வெய்ட் பண்ணும் தானே?…” என சொல்லி அவனை அனுப்பிவைத்தார்.
வெற்றி சென்றதும் உடனே வீட்டிற்குள் வந்தவர் நேராக மனைவியிடம் வந்து நின்றார்.
“உனக்கு என்னாச்சு அர்ச்சு? ஜாதகம் ,அதுவும் கன்னி பொண்ணோட ஜாதகம் ஒரு நிறைஞ்ச வீட்டுல இருந்து தேவதைகள் வலம் வரும் இந்த நேரத்துல வாசலை தாண்டி அனுப்பறேன்னு சொல்ற. தப்பு அர்ச்சு…” என சொல்ல,
“இல்லைங்க, அது நம்ம வீட்டு பொண்ணு ஜாதகம் இல்லையேன்னு தான்…”
“தப்பு ரொம்ப தப்பு. ஒவ்வொரு பொண்ணுங்களுமே தேவதைகள் தான். கன்னிதெய்வத்துக்கு ஒப்பானவங்க. அவங்களோட நேரங்களோட பலன் இந்த மகாலட்சுமி குடியிருக்கும் வீட்டோட பலனோட சஞ்சரிக்கும். இந்த நேரத்துல இப்படி குடுத்தனுப்பினா நமக்கு நல்லதில்லை…”
இப்படி அர்ச்சனாவிற்கு ஆயிரம் பாடங்களை எடுத்து இப்படி செய்யாதே என எச்சரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“ஹ்ம்ம், இவரும் பார்க்க மாட்டாரு. வேற யாரையும் பார்க்க விடமாட்டாரு…” என புலம்பியபடி அடுக்களைக்குள் நுழைந்தார் அர்ச்சனா.
மறுநாள் காலை அர்ச்சனாவிடம் இருந்து ஜாதகத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான் சூர்யவர்த்தன்.
கேட் கதவு திறந்திருக்க யாருமில்லாமல் உள்ளே சென்றவன் செருப்பை கழற்றி வாசலில் விட்டுவிட்டு உள்ளே எட்டி பார்க்க பக்கவாட்டில் இருந்த திவானில் படுத்தபடி கால் மேல் கால் போட்டு எதையோ பாடிக்கொண்டே போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தாள் பாலா.
“விடிஞ்சும் விடியாம உனக்கு கேமா ட்ரம்மு…” என முனுமுனுதவன்,
“வெற்றி…” என பட்டென கதவை ஓங்கி தட்டிவிட்டு கூலாக அப்படியே நிற்க பதறி எழுந்தாள் பாலா.
எழுந்த வேகத்தில் காதில் போட்டிருந்த இயர்போன் பக்கத்திற்கொன்றாய் பிய்ந்து விழுந்தது. அதை பார்த்தவள் சூர்யாவை கோபமாக முறைத்துவிட்டு,
“ம்மா, யாரோ வந்திருக்காங்க…” என வேண்டுமென்றே சொல்லிவிட்டு தானிருக்கும் அறைக்குள் மறைந்துகொண்டாள்.
“யாரோவா? ட்ரம்மு உன்னை…” என பல்லை கடித்தான் அவன்.