நிலா – 5
பாலா உள்ளே சென்றதும் கிட்சனிலிருந்து எட்டி பார்த்த மோகனா கையை துடைத்தபடி வந்தார்.
“உள்ள வா சூர்யா. ஏன் அங்கயே நிக்கற?…” என அழைக்க,
“யாருமே இல்லாம வீடு திறந்து இருந்துச்சா அதான்…” என்றபடி நுழைந்தான்.
“நான் மிக்ஸி போட்டுட்டு இருந்தேன். வெற்றி வாக்கிங் போய்ட்டு இன்னும் வரலை. ஜெய் தூங்கறா. நீ வந்து உட்கார்…” என அவனை அமர வைத்தவர்,
“டீ குடிக்கிறியா சூர்யா?…” என கேட்க,
“இல்லை வேண்டாம்க்கா. ஜாதகம் குடுக்க சொல்லி அம்மா குடுத்தாங்க. இன்னைக்கு வெளில போறீங்களாமே இது விஷயமா. அதான் இப்பவே குடுத்திட்டு வான்னு சொல்லி அனுப்பினாங்க…”
“அதுசரி, அதுக்குன்னு விடிஞ்சும் விடியாமலுமா? வெற்றி சொல்லிட்டு இருந்தான் போற வழில வாங்கிட்டே போகலாமேன்னு. அதான் நானும் சரின்னுட்டேன்…”
“அப்போ வீட்டுக்கு வரதா இருந்த உங்களை நான் தான் ஸ்டாப் பண்ணிட்டேன் போல…” என சிரிக்க,
“அட இதுக்குன்னா வர போறேன்? வரனும்னு தோணினாலே போதாதா சூர்யா?…”
“ஆமா, ஆமா நீங்களும் வந்து போறது தவறாது. போங்கக்கா. இப்ப வெற்றிக்கு கல்யாணம் ஆனதும் வரீங்க, போறீங்க. அதுக்கு முன்னாடி எங்க நீங்க வந்தீங்க? நாலஞ்சு தடவை இருக்குமா நீங்க வந்தது?…” என கேலியாய் அவன் சொல்ல,
“ம்மா, டிபன் ரெடியா? நான் காலேஜ் கிளம்பனும்…” உள்ளிருந்தே பாலா குரல் கொடுக்க,
“ஒரு நிமிஷம் இரு சூர்யா. இப்ப வந்திடறேன்…” என எழுந்து சென்றவர் போகும் அப்போதுதான் பொழுது காய்ச்சி சூடாக இருந்த பாலில் உடனடியாக இன்ஸ்டன்ட் காபி பவுடரை கலந்து அவசர காபியை போட்டு அவனிடம் நீட்ட,
“அவ குதிக்க போறா. இப்ப நான் கேட்டேனா?…” என கடிந்துகொண்டே அவரிடம் வாங்கிக்கொண்டவன்,
“இன்ஸ்டன்ட் காபினாலும் நீங்க போட்டா அது ஒரு தனி டேஸ்ட் அக்கா. எங்க அம்மாவுக்கும் கொஞ்சம் கத்து தரது…” என பேச்சை வளர்க்க,
“இதுல என்ன இருக்குது? பாலை காயவச்சு சுகர், காபி பவுடர் அளவா கலந்து நுரைக்க ஆத்தினா காபி ரெடி…” என மோகனாவும் பக்குவம் சொல்ல பாலாவை மறந்தார் அவர்.
“அம்மாவுக்கு எப்பவும் பில்டர் காபி தான். அவசரமோ என்னவோ ஆனாலும் டிகாஷன் இறக்கி தான் செய்வாங்க. இன்ஸ்டன்ட் அறவே ஆகாது…” என பேசிக்கொண்டே அவன் குடிக்க அதற்குள் ஜெய் எழுந்து வந்தாள்.
“வாங்க சூர்யாண்ணா…” என அழைக்க,
“திருப்பள்ளி எழுச்சி பாட உன் புருஷன் இல்லையா? ரொம்ப சீக்கிரம் தான் போ…” என பேசிக்கொண்டே காபியை மொத்தமாய் குடித்து முடிக்க,
“உனக்கு என்ன வேணும் ஜெய்?…” என்றார் மோகனா.
“இப்ப எதுவும் வேணாம் அண்ணி. ஒரு மாதிரி உமட்டலா இருக்குது. பிரட்டிட்டே இருக்குது…” என சொல்ல,
“நேத்து ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க? இதை சொன்னியா நீ?…” என்றான் சூர்யா.
“அப்படித்தான் இருக்குமாம். நாள் ஆக ஆக சரியாகிடும்னு சொன்னாங்க. சிலருக்கு இருக்கறது தானாம்…”
“ஓஹ், டேப்லெட் எல்லாம்…”
“ஹ்ம்ம் குடுத்திருக்காங்க அண்ணா. விட்டமின் டேப்லட்ஸ் இருக்குது…” ஜெயஸ்ரீ சொல்லும் பொழுதே அத்தனை சோர்வாய் இருந்தாள்.
“ஹெல்த் ட்ரிங் ஏதாவது குடிக்கிறாளா அக்கா? போன மாசத்தை விட இப்ப மெலிவு தானே?…” மோகனாவிடம் சந்தேகம் கேட்டான்.
ஜெயஸ்ரீயும், மோகனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் சிரித்துக்கொள்ள,
“கேட்டா பதில் சொல்லனும். அதை விட்டுட்டு சிரிக்கறீங்க?…” என சாய்ந்து அமர்ந்துகொண்டு அன்றைய நாளிதழை பிரிக்க,
“கல்யாணம் பண்ணிக்க வேண்டிய எல்லா அம்சமும் அண்ணனுக்கு வந்திருச்சுன்னு அண்ணியும் நானும் மனசுக்குள்ள நினைச்சு சிரிச்சுட்டோம்…” என ஜெய் சொல்ல,
“அதுசரி, இப்பதான் வந்திருக்குதாமா? அதெப்படி கண்டுபிடிச்சியாம்?…” என்றான் கிண்டலாக.
“இதோ இவ்வளவு அக்கறையா என்ன என்னன்னு அழகா கேட்கறீங்களே. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா யாரும் உங்க வொய்ப்க்கு ஹெல்ப்க்கு வேண்டாம். நீங்க ஒரு ஆளே போதும்…”
“ஆமா, சூர்யா. அப்பா என்ன சொல்றாரு? கல்யாணத்தை பத்தி பேசினாங்களா?…” என கேட்க,
“ஏன்க்கா இப்ப நல்லா தானே இருக்கேன்? இப்படியே இன்னும் கொஞ்சம் நாள் ஜாலியா இருந்துக்கறேனே?…” என்றான்.
“என்ன இது?அப்படி என்ன கல்யாணம் இப்போ வேண்டாம்னு ஒரு எண்ணம்? அந்தந்த வயசுல எல்லாம் நடக்கனும். வெற்றியை பாரு. சரி அதை விடு. உனக்கு பொண்ணு ரெடியா இருக்குது. அப்பறம் என்ன?…” என மோகனா கேட்க,
“அப்பாக்கிட்ட இதை பத்தி நான் பேசலை. அவருக்கு தெரியாதா எப்போ எதை செய்யனும்னு. பொறுமையா அவருக்கு தோன்ற போது செய்யட்டும்…”
“ஹ்ம்ம், உனக்கு அது பத்தி கவலையே இல்லை போல. விட்டா போதும்ன்ற மாதிரி இருக்க…” என மோகனா கேட்க,
“என்ன அண்ணா யாருக்கும் தெரியாம எதாச்சும்…” என ஜெய் கிண்டல் பேச,
“ஆமா வந்திர போகுது லவ்வு. நீ வேற ஏன் ஜெய்?. அது என்னவோ அந்த கமிட்மென்ட்க்கு மைன்ட் போகவே மாட்டிக்கு. ஏனோ அந்த பீல் வரலை. எனக்கே தோணும், நான் மனுஷனா மிஷினான்னு…” என்றான் சிரித்துக்கொண்டே,
“டவுட்டே வேண்டாம்டா. மெக்கு, மெக்குன்னு மண்டை மட்டுமில்ல உடம்பெல்லாம் நட்டு, போல்டுன்னு தான் உனக்குள்ள ஓடிட்டு இருக்குது. ரசனையே இல்லாத மனுஷன் நீ…” என்றபடி வந்தமர்ந்தான் வெற்றி.
“தள்ளி போய் உட்காருடா. அவ்வளவு ஸ்வெர்ட்டிங்…” என அவனை புறங்கையால் தள்ளிவிட,
“பரவாயில்லை, உனக்கும் சேர்த்து தானே போனேன். ஒட்டிக்கோ…” என மேலும் அவனின் மேல் அப்பிக்கொள்ள,
“ஏய் ச்சீ. நான் குளிச்சுட்டேன்டா…” என அவனை விட்டு விலகி அமர்ந்தவன்,
“எப்போ தரகர் வீட்டுக்கு போற? எப்போ ஆபீஸ் வருவ? அதை பத்தி ஒன்னும் சொல்லலை. அம்மா தான் சொன்னாங்க காலையில…” என சூர்யா வெற்றியை முறைக்க,
“போன் பண்ணலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே நீயே வந்துட்ட…” என்றவன் குளிக்க எழுந்துகொள்ள,
“ம்மா, நான் கிளம்பறேன்…” என வேகமாக வாசலுக்கு சென்றாள் பாலா.
“ஹேய் பாலா, இருடி. தோசை ஊத்தறேன்…” என அவளின் பின்னால் மோகனா செல்ல வாசலில் செருப்பை மாட்டிக்கொண்டே சூர்யாவை முறைத்துவிட்டு தனது வண்டியை எடுத்தாள் பாலா கோபமாக.
அவளுக்கு தெரியும் வேண்டுமென்றே பேச்சை வளர்த்து கும்மியடித்திருக்கிறான் என்று. அவனின் பேச்சோடு வீட்டினரும் அமர்ந்துகொள்ள அவர்கள் மீதும் அத்தனை கோபம்.
“பாலா, மறந்துட்டேன்டி. ஒரு நிமிஷம் இரு. சாப்பிட்டு போ…” என மோகனா கெஞ்ச அதை பொறுக்கமுடியாமல்,
“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா. நீ போய் வேலையை பாரு. நான் கேண்டீன்ல சாப்பிட்டுக்கறேன்…”
“உனக்கு சூடா தானே புடிக்கும். அதான் குளிச்சுட்டு வரட்டும்னு தோசை கல்லை சிம்ல போட்டே வச்சிருந்தேன். சட்னி எல்லாம் ரெடி…”
“ம்மா, சொன்னா புரியாதா உனக்கு? ப்ரிட்ஜ்ல இருந்து ஆப்பிள் எடுத்துக்கிட்டேன். பிஸ்கட் பாக்கெட் இருக்குது. போதும். நீ வேலையை பாரு. பை…” என்றாள் தன்மையாக.
தாயின் கெஞ்சலை பொறுக்கமுடியாமல் சமாதானம் செய்வதை போல அவள் சொல்ல வெற்றியும் ஜெயஸ்ரீயும், அவளை ஒன்றும் சொல்லமுடியாமல் நின்றனர்.
சமாதானம் செய்கிறேன் பேர்வழி என போனால் இன்னுமே அவளின் கோபம் அதிகமாகும் என்பதால் செய்வதறியாமல் இருந்தனர்.
பாலா இதையே நினைத்து இன்னும் நான்கு நாட்களுக்கு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாலும் ஆச்சர்யமில்லை. இல்லை இப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதை போல சுற்றிவந்தாலும் ஆச்சர்யமில்லை.
“நீ ஒழுங்கா சாப்பிடு…” என தாயை சொல்லியவள் வெற்றியை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல மோகனா புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
“போச்சு, இன்னைக்கு முழுக்க ஒன்னும் சாப்பிட மாட்டா. எதுவுமே அவளுக்கு சூடா இருக்கனும். இவ எப்படி கேண்டீன்ல போய் சாப்பிடுவா?…” என புலம்பல் தொடர சூர்யாவிற்கு கஷ்டமாகி போனது.
‘தன்னால் தானோ?’ என்ற எண்ணம் வந்தாலும் அதை துரத்தியவன் ‘அப்படி என்ன வீம்பு. ஐந்துநிமிடம் இருந்து சாப்பிட்டு போனால் என்ன இவளுக்கு?’ என பாலாவை திட்டியவன்,
“அக்கா இங்க பாருங்க. அவ சின்ன பிள்ளை இல்லை. சும்மா எல்லாத்துக்கும் இத்தனை ப்ரடக்ட் பண்ணனுமா? முதல்ல அவளை வெளிய விடுங்க. ஆவுனா இவன் போய் நிக்கறான். நீங்க சின்ன விஷயத்துக்கு இத்தனை புலம்பறீங்க? அவளை பார்த்துக்க அவளுக்கு தெரியும். தெரியனும். அப்ப தான் இந்த உலகத்துல சர்வைவ் பண்ண முடியும்…”
“இல்லப்பா, அவ சின்ன பொண்ணு. பசி தாங்க…”
“என்ன பசி? சின்ன பொண்ணு? அப்ப ஏன் அவளுக்கு மேரேஜ் பண்ணனும்னு நினைக்கறீங்க? மடில தூக்கிவச்சு சீராட்ட வேண்டியது தானே? எதுக்கு கல்யாணம்?…” என கோபமாய் அவன் பேச மோகனாவும், வெற்றியும் அமைதியாய் இருக்க,
“எனக்கு சூர்யாண்ணா சொல்றது தான் சரின்னு படுது. படிப்பை முடிச்சுட்டு வேலைன்னு போகாம சொந்தமா பிஸ்னஸ் பண்ணனும்ன்ற மைண்ட்செட்ல இருக்கற பொண்ணு. இதை எல்லாமே அவ ஃபேஸ் பண்ணி தான் வரனும். இதுக்கே நீங்க இத்தனை கவலைப்படறீங்க?…” என ஜெயஸ்ரீ சொல்ல,
“நல்லா சொல்லும்மா. சும்மா அவ அப்படி. இப்படி. எங்கயும் போனாலும் கூட போகனும். இதெல்லாம் சுத்த ரப்பிஷ்…” என்றான் சூர்யா.
“சரிடா, நீ டென்ஷன் ஆகாத. அக்கா ஊர்ல இருந்து வந்திருக்காங்க. வந்த இடத்துல மகளுக்கு சமைச்சுட்டு இப்ப அவ சாப்பிடாம போகவும் பீல் ஆகிட்டாங்க. அவ கேட்டும் செய்யலைன்ற ஆதங்கம். விடு சரியாகிடும்…” என வெற்றி சொல்ல,
“ஹ்ம்ம், நான் அவ நல்லதுக்குதான்டா சொல்றேன். புரிஞ்சுக்கோங்க…” என்ற சூர்யா,
“அக்கா பேசாம இங்க வந்திருங்களேன். இங்க வேணும்னா ஏஜென்சியை மாத்திக்கலாம்…” என சொல்ல,
“இல்ல சூர்யா மாமா பிறந்து வளர்ந்த ஊர் அது. அவங்கம்மாப்பா வாழ்ந்த வீடு. கண்டிப்பா விட்டுட்டு வரமாட்டார். அதோட அங்க நல்லா போய்ட்டிருக்கற பிஸ்னஸ். இங்க மாத்தி திரும்ப இங்க பிக்கப் ஆக ரொம்ப நாளாகிடும். இருக்கட்டும். கொஞ்சம் நாள்…”
“இங்க அதெல்லாம் சிறப்பாவே செஞ்சிடலாம் அக்கா…” என்ற சூர்யா,
“வெற்றி சொல்லுடா…” என நண்பனை தூண்ட,
“ப்ச், பலதடவை சொல்லிட்டேன்டா. கேட்கனுமே…” என்றான் சலிப்பாக.
“டேய் என்னங்கடா நீங்க? பாலாவுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு உன்கிட்ட தானே வர போறேன் வெற்றி. நீ தான் பார்த்துக்க போற. வேற எங்க போக போறோம் நாங்க?…” என மோகனா சொல்லும் பொழுதே வெற்றிக்கும் கண்கள் கலங்கி போக ஜெயஸ்ரீ மோகனாவை தாங்கிக்கொண்டாள்.
“அண்ணி என்ன இது உடைஞ்சு போய் பேசறீங்க? இங்க தான் வந்தாகனும். எங்களோட தான் இருக்கனும். அதுக்கு தான வெற்றி வீடு பார்க்கும் போதே மூணு பெட்ரூம் உள்ள வீடா பாருங்கன்னு சொன்னேன்…” என அதட்டலாக ஜெய் சொல்ல,
“இப்படிலாம் பேசாதக்கா. உனக்கு என்ன ஆச்சு? ரெண்டுமூணு நாளாவே நீ சரியில்ல. இப்படி செஞ்சா உன்னை ஊருக்கு அனுப்பவே மாட்டேன். மாமாவையும் இங்க கூட்டிட்டு வந்திருவேன்…” என வெற்றியும் சிறுபிள்ளை போல தேம்ப அவர்களை புன்னகையுடன் பார்த்தபடி நின்றான் சூர்யா.
தன் குடும்பத்தில் இத்தனை அந்நியோனியம் இருக்கிறதா என்றால் அவனே தேடி பார்த்து தோற்றான்.
வீட்டினர், பெற்றோர் மீது அளவுகடந்த பாசமும், மரியாதையும் மிதமிஞ்சியே உள்ளது. தங்கைகள் என அன்பு இருந்தாலும் அதிலும் அதிக ஒட்டுதல் இல்லை. அவர்களுக்கென்றால் முன்னிற்பான். ஆனால் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை.
எங்கிருந்து தள்ளி நின்றான் என அவனுக்கே தெரியவில்லை. ஆனால் விலகி தான் இருக்கிறான். ஜெய்யிடம் இத்தனை வாயாடுபவன், பாலாவிடம் வேண்டுமென்றே வம்பிளுப்பவன் வீட்டில் இதையெல்லாம் செய்வதை அறவே நிறுத்தியிருந்தான்.
வீட்டில் தந்தைக்கு அடுத்தபடியாக அவரை போலவே இறுக்கமானவனாக வலம்வர ஆரம்பித்திருந்தான் தொழில் தொடங்கிய பின்பு. அறிவுரைகள் கூட அதிகாரமாகத்தான் சொல்ல வந்தது.
அவனின் பிறப்பிலேயே அப்படி வந்துவிட்டது. இன்னொன்று கோபாலசுவாமியின் அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருந்தான்.
அதுவும் அந்த வீட்டில் அதிக கலகலப்பு இருந்ததில்லை. வரையறுக்கபடாத ஒரு அமைதி நிலவ அது அவனின் இயல்புக்கு பொருந்தி போனது.
இயல்புக்கு மாறாய் அவன் அவனாக இருப்பது வெற்றி அவனின் குடும்பத்தினருடன் மட்டுமே. அப்டியே இருந்து அப்படியே வாழ்ந்து இதுதான் உண்மை என நம்பிக்கொண்டு இருக்கிறான்.
தங்கைகள் வெற்றியிடம் காட்டும் ஒரு ஒட்டுதல் தன்னிடம் இல்லையே என பலமுறை நினைத்தாலும் பெரிதாய் அதற்கு முக்கியத்துவம் குடுப்பதில்லை அவன்.
அர்ச்சனா. அவர் ஒருவரே அவன் எப்படி இருந்தாலும் முழுமையாய் அவனை வாத்சல்யத்துடன் வாரிக்கொள்பவர்.
“எங்களை சொல்லிட்டு உனக்கு என்னடா யோசனை?…” என வெற்றி அவனை தொட,
“ஹ்ம்ம், ஆபீஸ் இன்னைக்கு நடந்தமாதிரி தான் போலன்னு நினைச்சேன்…”
“ஏன்? என்னாச்சு?…”
“நீ இங்க உட்கார்ந்து கதறி கதறி அழுதா அங்க வேலை ஓடுமா?…”