“அடப்பாவி, இப்ப கூட உனக்கு உன் பேக்டரி, கம்பெனி தான் முக்கியம். சரியான பிஸ்னஸ் மைண்ட் டா உனக்கு…” என அவனின் வயிற்றில் லேசாய் வெற்றி குத்த,
“முதல்ல போய் குளி மேன். சுத்தமா முடியலை…” என சிரிப்புடன் மூக்கை பிடிக்க,
“என்னை டேமேஜ் பண்ணனே வந்த போல?…” என்ற வெற்றி,
“அக்கா அவனுக்கு தோசை போடு. இப்ப நான் வந்திடறேன்…” என்று அவன் குளிக்க செல்ல,
“ஆமாக்கா, பசிக்குது. உங்களோட மொறுமொறு பொடி தோசை. கூடவே மிளகாய் துவையல்…” என இருகையாலும் சொடுக்கிட்டு மோகனாவின் புறம் குறும்புடன் காண்பிக்க,
“பத்தே நிமிஷம் இப்படி உட்கார்ந்து பேப்பர் பாரு. நான் வந்திடறேன்…” என முகத்தை துடைத்துக்கொண்டு வேகமாய் உள்ளே சென்றார்.
“நீயும் போ. இங்க என்ன வேடிக்கை?…” என ஜெய்யை விரட்டியவன் மோகனாவின் பத்துநிமிஷ அவகாசத்திற்கான விடை தெரிந்தவன் பேப்பரில் மூழ்கி போனான்.
“என்ன அண்ணி ஹெல்ப் பண்ணனுமா?…” என ஜெய் வந்து நிற்க,
“நீ வெளில இரு ஜெய், நான் சூர்யாவுக்கு அவன் கல்லுல தோசை போடனும். திடீர்ன்னு வருவான்னு தெரியாதே? நல்லவேளை காலையில எந்திச்சதும் குளிச்சுட்டேன். நீ வேணா போய் பாலா ரூம்ல குளியேன். அதுக்குள்ளே ரெடி பண்ணிடறேன்…” என பரபரவென வேலையை பார்த்தார்.
சூர்யா சுத்த சைவம். அவர்கள் வீடு அத்தனை ஆச்சாரங்கள் நிறைந்தது. முதன் முதலில் தங்கள் வீட்டில் சாப்பிட சொன்னதற்கு அவன் மறுக்க அவனுக்கென்றே சில பாத்திர பண்டங்களை வரித்துக்கொண்டது மோகனாவின் வீடு. இப்போது வெற்றியின் வீடும்.
வேகமாய் அவனுக்கு பிடித்ததை செய்து சாப்பிட அழைக்க அடுக்களைக்கே வந்து அவரிடம் வாங்கிக்கொண்டான்.
எத்தனை வேலை இருப்பினும் மோகனாவின் கண்ணீரும், கலங்கிய முகமும் சூர்யாவை அங்கிருந்து நகரவிடவில்லை. தானும் இப்போது சென்றுவிட்டால் நிச்சயம் வெற்றியையும், ஜெயஸ்ரீயையும் பேசி புலம்பி ஒருவழி ஆக்கியிருப்பார் என்பதால் அங்கிருந்தான்.
சூடாக தோசை ஊற்ற ஊற்ற கிட்சன் மேடையில் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டே அவரிடம் பேசியபடி சாப்பிட்டு முடிக்க வெற்றியும் வந்துவிட்டான்.
அங்கேயே ஜெய்க்கு ஒரு சேரை எடுத்து போட்டு அவனும் சூர்யாவின் அருகே அமர்ந்துகொள்ள உணவு நேரம் கலகலப்பாய் சென்றது.
ஜெயஸ்ரீ உண்டுமுடித்து மோகனாவிற்கு வார்த்து கொடுக்க அவர் சாப்பிட்டு முடித்த பின்பே அங்கிருந்து கிளம்பினான் சூர்யா. வீட்டிற்கு வந்தவனை அர்ச்சனா சாப்பிட அழைக்க,
“நான் வெற்றி வீட்டுலையே சாப்பிட்டேன்ம்மா. சூப்பர் தோசை…” என சொல்லிவிட்டு மாடிக்கு செல்ல,
“அர்ச்சு…” என கோபத்துடன் கோபாலசுவாமி அழைக்க,
“வரேங்க…” என சாப்பிட்டுகொண்டிருந்தவர் அருகே வந்து நின்றார்.
“என்ன இது? இவனோட இந்த பழக்கத்தை மாத்திக்க சொல்லுன்னு உன்கிட்ட எத்தனைவாட்டி சொல்ல? கேட்கமாட்டானா?…” என மனைவியிடம் பாய,
“இல்லைங்க வெற்றி…”
“வெற்றி வெற்றின்னே சொல்லாத. இதை வளரவிட்டதே தப்பு…”
‘ஆரம்பிச்சுட்டார் தப்பு தப்புன்னு’ என மனதிற்குள் தான் சொல்லிக்கொள்ள முடிந்தது அவரால்.
“வெற்றி வீட்டுல இவனுக்குன்னு தனியா தான்…”
“அர்ச்சு, குறுக்க பேசாத…”
“சரிங்க சொல்லி வைக்கறேன்…” அவ்வளவுதான் என்பதை போல முடித்துக்கொள்ள சாப்பிட்டு முடித்து எழுந்துகொண்டார் கோபலசுவாமி.
‘இவரும் மகனை ஒன்னும் சொல்லமாட்டாரு. அவனும் என் பேச்சை கேட்கமாட்டான்’. என புலம்பத்தான் முடிந்தது அவரால்.
அந்த வார இறுதியில் அர்ச்சனா எழுந்து வரும் பொழுதே பூஜையறையில் குளித்து முடித்து தியானத்தில் இருந்தார் கோபாலசுவாமி.
எப்போதாவது இப்படி அமர்ந்துகொள்வது தான். ஆனால் ஏதாவது முக்கிய முடிவெடுக்கும் சமயங்களில் மட்டுமே. இன்று என்ன? என்று தோன்றியது. ஆனாலும் கேட்க முடியாதே.
அவரை தொந்தரவு செய்யாமல் சாமியை கும்பிட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்த்தார். சற்று நேரத்திற்கெல்லாம் மகள்களும் வந்துவிட அவர்களுக்கு தேவையானதை கவனித்து காலை உணவிற்கு என்ன வேண்டுமென கேட்டுக்கொண்டு இருந்தார்.
சூர்யாவும் வந்துவிட்டான். அன்று ஞாயிறு என்பதால் கூட ஒரு அரைமணிநேரம் உறங்கியிருப்பான். அவ்வளவே.
அவர்கள் வீட்டில் எப்போதுமே அதிகாலை எழுந்துகொள்ளும் பழக்கம். கோபாலசுவாமிக்கு ஐந்தரை தாண்டி உறங்கிவிட கூடாது. மகனுக்கு மட்டுமே போனால் போகிறதென்பதை போல ஆறுமணி வரை இந்த சலுகை.
சூர்யா வந்து ஹாலில் அமரவுமே தங்கைகள் இருவரும் குட்மார்னிங் சொல்லிவிட்டு தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்க அர்ச்சனாவும் மகனிடம் மெதுவாய் பேசினார்.
“காபி இப்பவே கொண்டு வந்துடவா சூர்யா?…” என கேட்க அவர் கேட்டதுமே அவனின் பார்வை வேகமாய் பூஜையறை பக்கம் திரும்பியது.
“என்னவாம்?…” என்றான் தாயிடம்.
“தெரியலை…” என மகனை போலவே சொல்ல,
“ஓகே, கொண்டுவாங்க…” என்று பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அன்றைய காலை உணவு முடிந்து பத்தரை மணி போல வெற்றி ஜெய் மற்றும் பாலாவுடன் வரும் வரை கூட கோபாலசுவாமி அப்படியே தான் இருந்தார்.
இது வீட்டினருக்கு பழக்கமான ஒன்றென்பதால் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. அர்ச்சனாவின் பார்வை தான் நொடிக்கொருமுறை கோபாலசுவாமி எழுந்து வருகிறாரா என்பதை போல பார்த்தபடி இருந்தார்.
“வெற்றிண்ணா…” என வேகமாய் சத்தமில்லாமல் ஓடிச்சென்று அவனின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே வந்தாள் அஸ்வினி.
“வாங்க ஜெய்க்கா, வா பாலா…” என அனைவரையும் வரவேற்ற ஹரிணி,
“அன்னைக்கு நைட் வந்துட்டு ஏன் எங்களை பார்க்காம கிளம்பிட்டீங்க வெற்றிண்ணா?…” என்றாள் அவனிடம் சண்டையிடுவதை போல.
பாலாவிற்கு இது முதன்முறை. சூர்யாவின் வீட்டிற்கு வருவது. வெற்றி, மோகனா, சந்திரன் யார் அழைத்தும் அவனின் வீட்டிற்கு வரவே முடியாதென மறுத்துவிட்டாள்.
இதோ இன்றுதான் வந்திருக்கிறாள். அவள் வந்ததும் வீட்டினராக சூர்யா வெற்றியையும், ஜெய்யையும் வரவேற்றவன் பாலாவிடம்,
“வா…” என்று மட்டுமே பேசினான். அதற்கு பதில் தலையசைப்பை கூட கொடுக்காமல் கண்டுகொள்ளாததை போல அஸ்வினியிடம் எதுவோ பேசுவதை போல முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“அப்பா, தியானமா?…” என வெற்றி கேட்க,
“ஆமா, காலையில இருந்தே. நீங்க வாங்க. உட்காருங்க…” என்றவள் திவ்யாவிற்கும் அழைக்க அவளும் வந்துவிட்டாள் வெற்றி, ஜெய்யை பார்க்க.
“வாங்க வெற்றிண்ணா…” என வேகமாய் வந்தவளின் வாயை ஓடிச்சென்று பொத்தினாள் அஸ்வினி.
“திவ்யாண்ணி அப்பா பூஜை ரூம்ல…” என சொல்லவுமே திவ்யா அங்கே பார்க்க அமர்ந்திருக்க சிறு பயம் பரவியது.
முதல்நாள் மாலை அவரை சந்தித்ததும் கோபாலசுவாமி பேசியதும் அதன் பின் இன்று இப்படி அமர்ந்திருப்பதும் உள்ளுக்குள் நடுக்கத்தை வரவழைத்தது.
“என்னன்னு எதுவும் சொல்லலையா?…” என்றாள் அவளிடம் திவ்யா.
“இல்லையே. அவர் என்னைக்கு சொல்லிருக்காரு. சரி நீங்க வாங்க…” என அவளின் கையை பிடித்து கூட்டி வந்து தங்களுடன் பேச அமர்த்த வந்தவர்களுக்கு குடிக்க எடுத்து வந்தார் அர்ச்சனா.
பத்து நிமிடங்கள் தான் சென்றிருக்கும் கோபாலசுவாமி எழுந்து வெளியே வர அங்கே அமர்ந்திருப்பவர்களை பார்த்ததும் தலையை மட்டும் அசைத்துவிட்டு திவ்யாவை அழுத்தமாய் பார்த்துவிட்டு இன்னொரு அறைக்குள் சென்றார். அதுவும் அவருக்கு ஒரு பூஜை அறை போல தான்.
“அர்ச்சு…” என மனைவியை அழைக்க அவரின் பின்னே வந்து நின்ற அர்ச்சனா,
“வந்துட்டேங்க, சொல்லுங்க…” என கேட்க,
“என்னவாம் வெற்றி வந்திருக்கான் காலையிலையே. கூட அந்த பொண்ணும் புதுசா வந்திருக்குது?…” என கேட்க,
“அதான் அன்னைக்கு சொன்னேனே ஹரிணி கல்யாணத்துக்கு ட்ரஸ்க்கு டிஸைன் பண்ணன்னு…”
“அதுக்கு ஹால்ல வச்சு தான் பேசனுமா? கெஸ்ட் ரூம் இருக்குது தானே? அங்கே பேச சொல்லு. அப்படியே உமாவை வர சொல்லு. சூர்யா, திவ்யா கல்யாணம் பத்தி பேசனும்…” என சொல்ல அர்ச்சனாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
“இதோ இப்பவே சொல்றேன்…” என்ற அர்ச்சனா வேகமாய் வெளியே செல்ல போக,
“அர்ச்சு…” என்றார் மீண்டும் கோபாலசுவாமி.
“சொல்லுங்க…” என கேட்க,
“இல்லை, அவங்க அங்கயே இருக்கட்டும். நீ உமாவை, உத்தமனை கூடவே நம்ம சூர்யாவை இந்த ரூம்க்கு வர சொல்லு…” என்று சொல்லி அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டார்.
உதடுகள் நிறைய மந்திரங்களை முணுமுணுக்க மூடிய கண்களுக்குள் கருவிழிகள் அசைந்துகொண்டே இருந்தது. புருவமத்தியில் அத்தனை முடிச்சு. உடல் அப்படி ஒரு வியர்வை மழையில் நனைந்திருந்தது.
‘இந்த முடிவு சரிவருமா?’ தான் எடுத்திருக்கும் முடிவை ஆயிரத்திற்கும் மேல் அலசி ஆராய்ந்துபார்த்துவிட்டார். அனைத்திற்கும் விடை தன் குடும்பத்தின் நலனில் தான் வந்து நின்றது.
‘எதுவும் நடக்கட்டும். இதிலிருந்து பின்வாங்க போவதில்லை. அதன் பின்னான பரிகாரம் என்னவோ செய்துகொள்ளலாம்.’ என்ற ஸ்திரமான முடிவிற்கு வந்துவிட்டார்.
“ப்பா…” என்ற சத்தத்தில் கண் திறந்தவர் மகனை பார்த்ததும் உள்ளூர உண்டான அன்பில் மனது பாகாய் உருகியது அவன்பால்.
“பேசனும்னு வர சொன்னீங்களாமே? அம்மா சொல்லிட்டு போனாங்க…” என சொல்ல,
“ஹ்ம்ம். உட்காருப்பா. உன் அத்தையும் மாமாவும் வந்திரட்டும்…” என தனக்கெதிரே இருந்த இருக்கையை காண்பித்தார்.
உமாவும், உத்தமனும் வேகமாய் வந்து சேர்ந்தனர் அந்த அறைக்கு. வரும் பொழுதே தன் தங்கையின் முகம் மலர்ந்திருப்பதை கண்டவருக்கு அர்ச்சனா சொல்லியே அழைத்து வந்திருப்பது புரிந்துபோனது.
“உட்காரும்மா உமா…” என சொல்ல,
“அண்ணா அண்ணி சொன்னது நிஜமா?…” என ஆர்வம் மிகுதியால் கேட்க,
“ஹ்ம்ம் ஆமாம்மா. ஒரு சொப்பனம் கண்டேன். இப்ப இருக்கற கிரங்கங்களோட பலன் எல்லாம் சாத்தியமா இருக்குது. அதான் ஹரிணி கல்யாணத்தோட சூர்யா, திவ்யா கல்யாணத்தையும் முடிச்சுட்டா என்னன்னு தோணுது…” என சொல்ல கேட்டவர்களுக்கு நம்பத்தான் முடியவில்லை.
இதோ, அதோவென்று ஆவலுடன் காத்திருக்க அவர்களின் காத்திருப்பின் பலனாக திருமணப்பேச்சு ஆரம்பமாகிவிட்டது.
“அதுக்கென்ன அண்ணா. நீங்க எப்ப சொல்றீங்களோ அப்போ பண்ணிடலாம். அதுவே போதும்…” என உமா பேச உத்தமனுக்கும் அத்தனை மகிழ்ச்சி.
“நீ என்னப்பா சொல்ற சூர்யா?…” என மகனிடம் கேட்க,
“இது டிஸைட் பண்ணின ஒன்னுதானேப்பா? உங்க விருப்பம் தான் என்னோடதும். நீங்களே முடிவு பண்ணுங்க…” என்றான் சாதாரணமாக.
அர்ச்சனாவிற்கு தான் கவலையாக இருந்தது சூர்யாவின் இந்த சாதாரண பேச்சு. கொஞ்சமும் திருமணம் என்றதும் ஒரு பூரிப்போ, சின்ன எதிர்பார்ப்போ எதுவுமே இல்லாமல் இதையும் ஒரு கடமையாக செய்ய நினைப்பவனை என்ன சொல்லி மாற்றுவது என தெரியாமல் இருந்தார்.
“அப்போ சரி, இன்னும் ஒருமாசத்துல கல்யாணம். ஹரிணிக்கு பேசின மாப்பிள்ளை வீட்டுலையும் தகவல் சொல்லனும்…”
“நான் பேசிடறேன்ப்பா…” என்றான் சூர்யா.
“இல்லப்பா, நேர்ல போகனும். இது கல்யாண விஷயம்…” என கோபாலசுவாமி சொல்ல அடுத்து திருமண வேலைகள் பற்றிய பேச்சுக்கள் உடனடி திட்டமாக மாற ஆரம்பித்தது.
ஹரிணி மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி, மண்டபம் பேசி, மற்றவைக்கு எல்லாம் சொல்லி என அந்த அறையிலேயே அனைத்தும் முடிவு செய்த பின்னர் தான் அனைவரும் அந்த அறையை விட்டே வெளியே வந்தனர்.
கோபாலசுவாமி மட்டும் அங்கேயே இருந்துகொண்டார். சூர்யா, திவ்யாவை நினைத்து அத்தனை கவலையாக இருந்தது அவருக்கு.
வெளியே வந்து வெற்றியிடம் அர்ச்சனா சொல்லவும் அனைவருமே சூர்யா திவ்யாவிற்கு வாழ்த்து சொல்ல பாலா திவ்யாவை அணைத்து தன் வாழ்த்தை தெரிவித்தாள். சூர்யாவிடம்,
“கங்க்ராட்ஸ்…” என்று சொல்ல வேண்டுமென்றே அவன் கண்டுகொள்ளாமல் நிற்க,
“திவ்யாக்கா உங்களுக்குத்தான் இன்னொருவாட்டி கங்க்ராட்ஸ் சொன்னேன்…” என்று சொல்ல,
“பாலா…” என்றான் வெற்றி.
“ஓகே ஓகே. கிளம்புவோம்…” என்ற பாலாவை விடவே இல்லை பெண்கள் அனைவருமே.
உமாவும் சேர்ந்துகொள்ள திருமண நாள் வேறு குறித்துவிட்டபடியால் அவளை நகரவிடவில்லை.
பாலா கொண்டு வந்திருந்த, தான் டிஸைன்ஸ் செய்திருந்த உடைகள் பற்றிய விளக்கப்படங்கள் அடங்கிய அந்த ஐந்து பெரிய நோட்டுகளை மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர்.
பாலாவிற்கு தான் மலைப்பாக இருந்தது. இதை தன்னால் செய்யது தர முடியுமா என்று.