“அப்படி இந்த பொண்ணை முடிக்கனும்னு என்ன அவசியம்? அப்படியே பொண்ணு கிடைக்கலைன்னா நம்ம சொந்தத்துல பொண்ணா இல்லை?…” என்று ஒருத்தர் சொல்ல,
“யாருக்கு தெரியும்? லவ்வோ என்ன கருமமோ? இந்த பையன் அந்த குடும்பத்தோட தான ஒட்டிண்டு உரசிட்டு சுத்துவான். அப்பவே நானும் நினைச்சேன்…” என ஒருத்தரும்,
“உமாவையும், அவ குடும்பத்தையும் இங்க காணும். அப்பவே சந்தேகப்பட்டேன். ஏன் சுவாமி, இது பொண்ணு இல்லைன்றதுக்கான கல்யாணமா இல்ல வேறெதுவுமா? பையன் அங்க சிக்கிட்டானா?…” என ஒருத்தரும் பேச சூர்யாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
அவர்கள் பேசியதன் உள்ளர்த்தம் புரிய பாலாவின் கண்கள் கலங்கி அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
“தேவையா இதெல்லாம்? நீ வேண்டாம்னு சொல்லியிருந்தா நடந்திருக்குமா? அழு. இன்னும் நல்லா அழு. இதுக்கும் மேல கேட்பானுங்க. அழு. இதெல்லாம் வேண்டாம்னு தானே உன்கிட்ட தலைப்படா அடிச்சுக்கிட்டேன்…” என அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் குனிந்து அவன் சொல்ல,
“பார்த்தீங்களா இவ்வளவு பேச்சுக்கும் அந்த பையன் அந்த பொண்ணோட சபையில திண்ணக்கமா பேசிட்டு இருக்கறதை? இதுலையே புரியலையா நமக்கு இங்க மதிப்பில்லைன்னு…” என இன்னொரு உறவினர் எகிற,
“இவர் இஷ்டத்துக்கு முடிவு பண்ணுனா நாம எல்லாம் பாத்துக்கிட்டா இருக்க முடியும்? எல்லாம் பணத்திமிர். அவருக்கும் பொண்ணு இருக்குதுல. அதுவும் ஒரே மேடையில கல்யாணத்தை பண்ணிட்டு அடுத்து இப்படி ஒரு கருமத்தை பண்ண பார்க்கறாரே. அவர் வீட்டு பொண்ணு நமக்கு எதுக்கு?…” என மீண்டும் ஹரிணியின் மாமியார் பேச,
“அம்மா, அவர் செஞ்சதுக்கு ஹரிணி என்ன தப்பு பண்ணுச்சு? நாம ஹரிணியோட போவோம்…” என்ற வருண்,
“இங்க பாரு ஹரிணி இனி உன்னோட குடும்பத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வா…” என அவளின் கைபிடித்து அழைக்க தந்தையை ஒருநொடி பார்த்தவள் கலங்கிய கண்களுடன் அங்கிருந்து கணவருடன் சென்றாள்.
‘ஸாரி மாமா’ என வருண் கோபாலசுவமியிடம் பார்வையால் மன்னிப்பை யாசித்தவனாக ஹரிணியை ஆதுரமாய் பிடித்தபடி நடந்தான்.
“அழாதே ஹரிணி. எல்லாம் சீக்கிரமே சரியாகிடும். மாமா எல்லாம் சொல்லி தானே இந்த விஷயத்துல இறங்கினார்…” என ஆறுதல் சொல்ல என்ன இருந்தாலும் ஹரிணிக்கு தாளமுடியவில்லை.
தன் அண்ணனையும் அவனருகே அமர்ந்திருக்கும் பாலாவையும் திரும்பி திரும்பி பார்த்தபடி ஹரிணி சென்றேவிட்டாள். சில சொந்தங்களும்.
“ஹ்ம்ம், அடுத்து பாருங்க…” என்ற கோபாலசுவாமியின் அதிகார குரலில் எஞ்சியிருந்தவர்கள் கூட,
“இவருக்கு என்ன அப்படி பிடிவாதம்?…” என பேசிக்கொண்டனர். ஆனாலும் எதிர்த்து பேசமுடியவில்லை.
நடந்தவற்றை கசப்புடன் பார்த்தபடி சூர்யா இறுக்கமான முகத்துடன் பாலாவை நோக்கி கையை நீட்டினான் மந்திரங்களை சொல்வதற்காக.
நீட்டிய அவனின் கையை சில நொடிகளே வெறித்தவள் முகத்தை பார்த்தவன் அப்போதும் மனது கேளாமல்,
“பாலா இப்போவாச்சும் நான் சொல்றதை கேளு. ப்ளீஸ்…” என்றான் கலக்கம் சுமந்த முகத்துடன்.
அவனின் பேச்சில் பாலாவுக்கும் கண்கள் லேசாய் கலங்க அவன் பார்த்துவிடாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள்.
“சரி, எழுந்திரு. இப்பவும் ஒன்னும் கெட்டுடலை. இப்பவே நீ எழுந்து கிளம்பு. உன்னை இங்க யாரும் எதுவும் சொல்லமுடியாது. நான் உன்னை வீட்டுல கொண்டுவந்து விடறேன்…” என்றவன் தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்ற போக சட்டென அவன் கரம் பற்றியவள்,
“வேணாம் வேணாம். இருங்க…” என சொல்லி கண்களை மூடியவள் சில நொடிகளில் கண்ணீரை துடைத்தாள்.
“நான் வந்தது வந்தது தான். என்னோட வாழ்க்கைக்கு ஒரு தடவை இந்த மணவறை ஏறிட்டேன். இதுக்கு மேல உனக்கு போகனும்னா நீ போய்க்கோ…” என்றாள் உணர்வற்ற குரலில்.
“அனுபவிக்க போற பாலா. கண்டிப்பா. என் பேச்சை எப்பவும் கேட்கறதில்லை நீ. இப்பவும் கேட்கறதில்லை. இப்ப உனக்காக சொல்லியும் கேட்கலை. இதுக்கு கண்டிப்பா உனக்கு இருக்குடி…” என பல்லை கடிக்கத்தான் முடிந்தது சூர்யாவால்.
“நீங்க மந்திரத்தை சொல்லுங்க…” என கோபாலசுவாமி சொல்லவும் வேற எந்த பேச்சும் இன்றி திருமணம் நடக்க ஆரம்பித்தது.
திருமாங்கல்யம் அனைவரிடமும் ஆசிர்வாதத்திற்கு சென்று வர அனைவருமே ஒரு இறுக்கத்துடன் அதனை தொட்டு வணங்கி சுற்றி வர கடைசியாய் கோபலசுவாமியிடம் வந்தது.
அதை எடுத்தவர் மனதிற்குள் மந்திரங்களை சொல்லியபடி கடவுள்களை வேண்டிக்கொண்டு மகனிடம் நீட்ட அதனை வெறித்து பார்த்தான்.
“வாங்கு சூர்யா…” என்று தந்தை சொல்லியதும் அதனை வாங்கியவன் கைகள் நடுங்கியது.
கையில் வைத்துக்கொண்டே திரும்பி பாலாவை பார்க்க எந்தவித சிறப்பு அலங்காரங்களும் இன்றி மணமகளின் அடையாளமின்றி சாதாரணமாக இருந்தவள் தோற்றம் உள்ளுக்குள் தீயை வளர்த்தது.
“நல்ல நேரம் முடியும் முன்னே கட்டிட்டு சூர்யா…” என பின்னால் இருந்து அர்ச்சனா சொல்ல தாயை திரும்பி பார்த்தான். அவரின் கண்களில் தெரிந்த ஆறுதலில் ஒரு பெருமூச்சுடன் பாலாவிடம் திரும்பியவன்,
“என்னை பாரு பாலா. என் கையில என்ன இருக்குன்னு பாரு. இப்போவும் உனக்கு விருப்பம் தானா?…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு. அசைந்தாள் இல்லை பெண்.
“திமிர்டி. வச்சிக்கறேன்…” என அவளிடம் முணுமுணுத்து விட்டே மங்கலநாணை அவளின் கழுத்தில் பூட்டினான்.
பூலோக தேவர்கள் வாழ்த்திடவே தேவாரம் பாடல்கள் முழங்கிடவே
அம்மியும் அருந்ததியும் காத்திருக்க புதுவாழ்க்கை தொடங்கியதே.
தோரணம் ஆயிரம் சூடிடும் திருமணமே
ஒரு மணிநேரத்திற்கு முன்பு வரை இப்படி ஒரு மாற்றம் தன் வாழ்வில் நடந்திருக்கும் என்று யாரும் ஆருடம் சொல்லியிருந்தால் பைத்தியமே என்றிருப்பாள் பாலா.
ஆனால் இப்படி எதிர்பாராமல் தன் வாழ்வின் திசையே மாறிப்போனதை எண்ணி மூளை மரத்துப்போய் இயந்திரத்தனமாய் குடும்பத்தினர் இழுப்பிற்கும், தாயின் சொல்லிற்கும் கட்டுப்பட்ட கீ கொடுத்த பொம்மையாய் அடுத்த சடங்குகளை செய்துகொண்டிருந்தாள்.
அனைத்தும் திருப்தியாய் நிறைவுற்று இன்னும் சில சடங்குகள் கோபாலசுவாமி சொல்லியதன் பெயரில் கடனே என்று இருவரும் செய்துகொண்டிருந்தனர். ஒரு சம்பிரதாயத்தையும் அவர் விடவில்லை. இருவரையும் வார்த்தைகளில் ஆட்டிவைத்தார்.
எல்லாம் முடித்து வீட்டிற்கு கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. மோகனாவிடம் அர்ச்சனா ஒன்றும் பேசவில்லை. அவர் மட்டுமல்ல யாரும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
கோபாலசுவாமியும் வெற்றியும் பார்த்துக்கொண்டனர். அவரின் முகத்தில் ஒரு நன்றியும், நிம்மதியும் தெரிய வெற்றி ஆமோதிப்பாய் புன்னகைத்தான்.
கோபாலசுவாமிக்கு போன் வர மனைவியிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தவர் அதை அட்டன் செய்து பேசினார்.
“சொல்லும்மா…” என சொன்னதும்,
“நான் டெல்லி வந்துட்டேன் மாமா. இங்க இருந்து இன்னும் ஒருமணிநேரத்துல கெனடா ப்ளைட். நானும் ராகுலும் கிளம்பறோம். ரொம்ப தேங்க்ஸ் மாமா…” என சொல்ல,
“ராகுல்கிட்ட குடும்மா…” என்றதும் அவனிடம் போன் கை மாற,
“சொல்லுங்க அங்கிள்…” என்றான் ராகுல்.
“பார்த்துக்கனும் ராகுல். அவ எங்க வீட்டு பொண்ணு. எந்த கஷ்டமும் வரகூடாது அவளுக்கு. உன் மேல, உன்னோட அப்பா மேல உள்ள நம்பிக்கை தான் நான் உனக்கு உதவி செஞ்சது. சந்தோஷமா இருக்கனும் ரெண்டு பேரும்…” என வாழ்த்திவிட்டு போனை வைக்க,
“அங்கிள் வீட்டுக்கு கிளம்பனும்னு உங்களை வர சொன்னாங்க…” என வெற்றி வந்து அழைக்க,
“இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு வெற்றி. இந்த கல்யாணம் முடிஞ்சதே எனக்கு பெரிய ஆறுதல். என்னோட ஆன்மா இப்பதான் அமைதியாகிருக்குன்னு நினைக்கறேன். இதுக்கு உன்னோட உதவி இல்லைன்னா இதுக்கான சாத்தியம் கம்மி தான்…” என சொல்லியவர் பேச்சில் எப்படியாகினும் நடத்தியிருப்பேன் என்னும் உறுதி தெரிந்தது.
அவர் இந்த முடிவெடுக்க காரணமாய் இருந்த பாலாவின் ஜாதகத்தை, தான் தேடிக்கொண்டிருக்கும் அந்த ஜாதகத்தை அன்றுமட்டும் அவர் பார்க்காமல் இருந்திருந்தால்? அர்ச்சனா பேசிக்கொண்டே அந்த ஜாதகத்தின் பக்கங்களை புரட்டாமல் இருந்திருந்தால்?
இப்படி பல இருந்திருந்தால் அவரின் மனதிற்குள் அணிவகுத்திருந்தது. அதிலும் வீட்டினருக்கு தெரியாமல் யாரின் சந்தேகமும் இல்லாமல் இதை நடத்தி முடிப்பதற்குள் பலமுறை சுய ஆலோசனை செய்துகொண்டார்.
மகனா, மற்றவையா என்று வரும் பொழுது மகன் மட்டுமே அவரின் மொத்தமாய் நின்றான். அவனின் உயிர், அதன் பின்னான குடும்பம். இப்படி அவரை வேறெதையும் யோசிக்கவிடாமல பல திட்டங்களை போட வைத்தது.
இவை எல்லாம் இன்னும் சிறிது நாட்களில் கடந்து வந்துவிடுவார். ஆனால் மகனுக்கு இதை விட்டால் ஒரு நல்லதை செய்யமுடியுமா என தன்னையே மெச்சிக்கொண்டார் உலகம் அறிந்த சோதிட ஜாம்பாவான்.
இந்த திட்டம் நிறைவேற அவர் போட்ட கௌரவ வேடமும் கச்சித பொருத்தம் அவருக்கு. யாரும் எந்த கேள்வியும் கேட்டுவிடாதபடிக்கு கடைசி நேரத்தில் யாரையுமே யோசிக்கவிடாமல் தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிவிட்டார்.
இதோ பாலாவுடன் சூர்யா தம்பதி சகிதமாய் வலதுகாலை எடுத்துவைத்து வீட்டிற்குள் வந்துவிட்டான்.
அவருக்கு தெரியவில்லை, அவரின் இந்த முடிவு சூழ்நிலை காரணமாக எடுக்கப்பட்டது என்று மற்றவர்கள் அதிகம் யோசிக்காமல் நினைத்திருக்க இதை மகன் அறிந்தால் சட்டையை பிடித்து கூட கேள்வி கேட்பான் என்று அவர் அன்று அறியவில்லை.
உலகறிந்த சோதிட சிகாமணி ஒரு பெண்ணின் வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் முடிவுகளை அவர் நிர்ணயித்தது எத்தகைய குற்றம் என்பதை அவர் அறியாமல் போனார்.
பெத்த கடமைக்கு மகனை வளைக்கலாம், இன்னொரு குடும்பத்தின் முடிவை எடுக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது கேட்கும் பொழுது அவர் வகுத்த திட்டங்கள ன்று அவருக்கு கை கொடுக்குமா?
“விளக்கேற்றும்மா பாலா…” என அர்ச்சனா சொல்லவும் அதனை செய்தவள் அங்கேயே நின்று கதவுகளின் படங்களை வெறித்தபடி இருந்தாள்.
“அஸ்வி பாலாவை உன் ரூம்ல கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்க வை…” என அனுப்ப மகள் தலையாட்டிவிட்டு பாலாவை அழைத்து சென்றாள்.
செல்லும் முன் பாலா தாய், தந்தையரை பார்த்துவிட்டு அங்கேயே தேங்கி நிற்க வெற்றி அவளை அழைத்தான்.
“அஸ்வி கீழே இருக்கற பெரிய ரூம் கீ எடுத்துட்டு வா. பாலாவோட மோகனா பேசிட்டு இருக்கட்டும்…” என சொல்ல யாரின் முகத்திலும் சிரிப்பில்லை.
கீழே இருக்கும் அந்த அறையை திறந்துவிட்டு அங்கே அவர்களை இருக்க சொல்லிய அர்ச்சனா மோகனாவை அழைத்தார்.
“இங்க பாருங்க மோகனா, இப்படி நடக்கும்னு நாங்களும் நினைக்கலை. எந்த முடிவும் எங்க கையில இல்லை. நீங்க எதை நினைச்சு பயப்படறீங்கன்னு நல்லாவே புரியுது. என்னால முடிஞ்சளவுக்கு பாலாவை பார்த்துப்பேன். ஆனா நாங்களும் இதை ஏத்துக்க எங்களுக்கும் அவகாசம் வேணும். உங்களுக்கு புரியுதா?…” என கேட்க அவரின் கையை பற்றிக்கொண்டார் மோகனா.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அஸ்விம்மா. நாங்களுமே அந்த நிமிஷம் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல சரின்னு சொல்லிட்டோம். இப்போ எங்களோட சொந்தங்களுக்கும் சொல்லனும். அவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை…” என கலங்கி போய் சொல்ல,
“இப்பவே இதை நினைச்சு டென்ஷன் ஆக வேண்டாம். பொறுமையா யோசிப்போம். இப்ப நீங்க பாலாவோட பேசிட்டு இருங்க…” என சொல்லிவிட்டு அர்ச்சனா சென்றுவிட வந்து பாலாவின் அருகே அமர்ந்தார்.
ஜெயஸ்ரீ ஒருபக்கம் அமர்ந்திருக்க பாலா அங்கிருந்த கட்டிலில் கண்களை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.
யாரிடமும் பேசும் மனநிலையில் அவள் இல்லை. உள்ளுக்குள் என்னவோ போராட்டம். இப்போது இந்த வீட்டிற்குள் நுழைந்ததும் சூர்யாவின் பேச்சுக்கள் எல்லாம் பூதாகாரமாக பயம் காட்ட அச்சத்தில் வியர்த்து போனாள்.
நிறைய யோசிக்க, நிறைய சுய ஆலோசனை செய்ய, நிறைய தைரியத்தை வரவழைக்க, நிறைய எதிர்கொள்ள வேண்டிய தன்னம்பிக்கையை தேட என்று நிறைய நிறைய என ஒவ்வொன்றுக்கும் நிறையவே அவள் மெனக்கெட வேண்டியதாக இருந்தது அந்த நொடியிலிருந்து.
படுத்திருக்கும் மகளை பார்த்தபடி அமர்ந்திருந்தது வெற்றியின் குடும்பம் அவனை தவிர்த்து. வெற்றி சூர்யாவுடன் இருந்தான். ஆனால் சூர்யா மனதளவில் தனிமையில் இருந்தான்.
உள்ளம் முழுவதும் பாலாவின் கழுத்தில் தான் தாலிகட்டிய அந்த நொடி தான் படமாய் விரிந்து அவனை இம்சித்துக்கொண்டு இருந்தது.