நிலா – 8
மோகனா மகளையே பார்த்துக்கொண்டு இருக்க அர்ச்சனா ஹாலில் வந்த போன்கால்களை அட்டன் செய்துகொண்டு இருந்தார்.
கூடவே ஹரிணிக்கு அழைக்க முற்பட அவளின் மொபைல் அடித்து ஓய்ந்தது தான் மிச்சம். அஸ்வினி தான் அவருக்கு ஆறுதலாய் இருந்தாள். உடன் சில சொந்தங்களும்.
திருமணம் சொந்தங்களை வைத்து மட்டும் ஏற்பாடாகி இருக்க பிரபலங்களுக்கு ரிசப்ஷனுக்கு தான் அழைப்பு விடுத்திருந்தார் கோபாலசுவாமி. இப்போது முக்கியமான பிரபலங்கள் வீட்டிற்கே அழைத்து இதை கேட்டு வரவேற்பு நடக்குமா நடக்காதா என்னும் புதிய கேள்விகள் வேறு.
யாருக்கும் தெளிவாய் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி போனார் அவர். ஒருபக்கம் அழுகையாக வேறு வந்தது. தான் உடைந்துவிட்டால் மொத்தமும் பாழ் என்று தன்னை வெகுவாய் கடினப்படுத்திக்கொண்டார்.
வந்திருந்த நெருங்கிய சொந்தங்கள் உமாவின் வீட்டில் இருக்க இங்கே ஓரிருவர் மட்டுமே இங்கும் அங்குமென மாறி மாறி சென்று வந்துகொண்டு இருந்தனர். கோபாலசுவாமி பூஜையறையை தஞ்சமடைந்திருந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் பத்திரிக்கையாளர்கள் வாசலில் குவிய துவங்க வீட்டுக்குள் கேட்டது அவர்கள் போட்ட கூச்சல்களும், சலசலப்பும்.
“என்ன ஜெய் இதெல்லாம்? எனக்கு ரொம்ப பயமா இருக்கே. அவசரப்பட்டுட்டோமோ?…” என அப்போதுதான் வாயை திறந்தார் சந்திரன்.
இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ என நினைக்கும் பொழுதே வியர்க்க துவங்க,
“நீங்க டென்ஷன் ஆகாதீங்க. என்னங்க, கொஞ்சம் அமைதியா இருங்க…” என்றார் மோகனா மகளுக்கு கேட்காத வகையில் கிசுகிசுப்பாக.
பாலா பாத்ரூம் சென்றிருக்க அப்போது தான் சந்திரன் பேசியது. அவர் இந்த வார்த்தையை சொல்லவுமே தூக்கிவாரிபோட்டது.
அந்த நொடி நேரம் எதையும் யோசிக்காமல் சூர்யா, சூர்யா குடும்பம், மகளுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை இப்படி யோசித்து அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் போனோமே என ஏற்கனவே மோகனா அரண்டுதான் போயிருந்தார்.
இப்போது கணவனும் பேசி அதை கொண்டு மகள் வேறுவிதமாக முடிவெடுத்து தளர்ந்துவிட்டால் என்ன செய்வது என பயந்து போனார். எடுத்த முடிவு எடுத்தது தான். எல்லாம் நடந்து இதோ இன்னொரு வீட்டின் மருமகளாகிவிட்டாள்.
இனி யோசித்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இனி வாழும் வாழ்க்கை அவளுக்கு நல்லவிதமாக இருந்தால் போதுமென வேண்டிக்கொண்டிருக்க தங்களின் பேச்சு மகளையும் அந்த வழியில் யோசிக்க வைத்துவிடுமோ என பயந்து போனார்.
முதல் நாளே இத்தனை அதிர்ச்சிகள். தங்களாலேயே தாங்க முடியவில்லை. அவள் எப்படி ஜீரணிப்பாள்? மோகனாவிற்கு தலையை சுற்றிக்கொண்டு வர வெளியே கேட்ட சத்தம் இப்போது இன்னும் அதிகமாக கேட்க,
“உள்ள வந்துட்டாங்களோ?…” என ஜெயஸ்ரீ மோகனாவை பார்த்து கேட்டுவிட்டு வெற்றிக்கு அழைக்க அவன் எடுக்கவே இல்லை.
“என்னாச்சு?…” என கழுவிய முகத்தை துடைத்துக்கொண்டு பாலா வெளியே வர,
“தெரியலைம்மா, நீ இரு. நாங்க பார்த்துட்டு வரோம்…” என சந்திரன் எழுந்து வெளியேற,
“ம்மா, பேக் எங்க? எனக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்…” என கேட்க,
“பேக் எல்லாம் வெற்றி கார்ல இருக்குது பாலா. கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ. நானும் அப்பாவும் போய் ட்ரெஸ் எடுத்துட்டு வந்து தரோம் உனக்கு…” என சொல்ல,
“ஹ்ம்ம்…” என தலையசைத்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டாள்.
அவள் கண்ணை மூடியதும் ஜெயஸ்ரீயை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மோகனாவும் வெளியே செல்ல கேட்டின் வெளியே இருந்த பத்திரிக்கையாளர்கள் இப்போது உள்ளே வந்துவிட்டிருந்தனர்.
அர்ச்சனா தவிப்புடன் பார்த்தபடி அஸ்வினியுடன் நிற்க அவரருகே சென்ற மோகனா,
“எதுக்கு வந்திருக்காங்க அஸ்விம்மா?…” என்றார். அவரின் குரலில் வேகமாய் திரும்பி பார்த்த அர்ச்சனா பதறிப்போய்,
“நீங்க உள்ள போங்க மோகனா. வந்து சொல்றேன்…” என சொல்லும் பொழுதே கேமரா வெளிசம் அந்த திறந்திருந்த அகன்ற கதவின் வழி இவர்களை படம் பிடித்துக்கொள்ள அதை எல்லாம் உணரும் நிலையில் இல்லை மோகனா.
அவரின் பார்வை எதிரே சுவற்றை முழுதாய் தியேட்டர் போல நிறைத்து இருந்த பெரிய டிவியில் தெரியும் தங்களின் முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
லைவ் போய்க்கொண்டு இருந்தது ஒரு வளர்ந்துவரும் செய்தி தொலைகாட்சியில். அது தங்களின் முகத்தை காண்பிக்க,
“அஸ்விம்மா…” என நடுங்கி போனார் மோகனா.
பார்க்கவே பாவமாக போனது அர்ச்சனாவுக்கு. இவை எல்லாம் அவருக்கு புதிதல்லவா?. தங்களுக்கு பழகிய ஒன்று. கோபாலசுவாமியை பேட்டி எடுக்கவென எத்தனை முறை இப்படி போட்டி போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் இது அப்படி அல்லவே. திருமணம், இரு குடும்பம் சம்பந்தமான விஷயம். இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விஷயம்.
“மோகனா…” என அவரின் கையை பிடித்த அர்ச்சனா,
“ஒன்னும் இல்லை. என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க தான் வந்திருக்காங்க. அவர் வந்து பேசவும் கிளம்பிருவாங்க…” என சொல்லும் பொழுதே படபடவென வந்து இவருக்கு வியர்த்துவிட கணவரை தேடினார் மோகனா.
“என் வீட்டுக்காரர், அவர் எங்க?…” என திணறி கேட்க,
“வெற்றி கூட்டிட்டு போருக்கான். அஸ்வி அப்பா கூட தான் பேசிட்டு இருக்காங்க…” என்றதும் கொஞ்சம் நிம்மதியானவர் லேசாய் தடுமாற,
“அஸ்வி தண்ணி எடுடா…” என்ற அர்ச்சனா அவரை அமர வைக்க,
“எனக்கு பயமா இருக்கே அஸ்விம்மா…” என கலங்கி போன கண்ணீருடன் கேட்க,
“எதுக்கு பயம்? ஒரு ரெண்டு மூணு நாள், இல்ல ஒரு வாரம் போல இப்படி இந்த விஷயத்தையே பேசுவாங்க. அப்பறம் எல்லாம் சரியாகிடும். அடுத்த நியூஸ் என்னன்னு பார்க்க போய்டுவாங்க. அவங்களும் சம்பாதிக்கனும்ல. இப்போ நம்மளை வச்சு பிழைப்ப பார்க்கறாங்க. விடுங்க…”
மோகனாவை ஆறுதலாய் வருடியபடி அர்ச்சனா சொல்ல அவரின் உறவு பெண்கள் மூன்றுபேர் துவேஷத்துடன் மோகனாவை பார்த்தபடி தள்ளி நின்றனர். அதை கவனித்தாலும் அந்நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார் அர்ச்சனா.
தான் இங்கிருந்து நகர்ந்தால் நிச்சயம் மனம் நோகும் படி மோகனாவை பேசிவிடுவார்கள் என்று அர்ச்சனா அங்கிருந்து ஒரு அடி எடுத்துவைக்கவில்லை.
அஸ்வினி தண்ணீருடன் வந்ததும் வாங்கி குடிக்க குடுத்தவர் அவர் குடித்து முடிக்கவும்,
“என்னோடவே உட்கார்ந்திருங்க. ஒன்னும் பயப்பட வேண்டாம். இப்போ அவர் வந்து பேசினதும் கிளம்பிருவாங்க…” என சொல்லி ஏதேதோ பேசி அவரை தேற்ற,
“அர்ச்சனா, நாங்க உமா வீட்டுக்கு போறோம்…” என உறவுப்பெண்கள் சடவுடன் முகத்தை தூக்கி வைத்து சொல்ல,
“சரிங்க அக்கா. அங்கயே மதிய சாப்பாடு வரவழைச்சிருக்கோம். எல்லாரும் சாப்பிடுங்க. கமலாக்கா நீங்க தான் முன்ன நின்னு என் சார்பா பார்த்துக்கனும்….” என சொல்லியே அனுப்பினார் அர்ச்சனா.
“நம்ம அர்ச்சு ரொம்ப விவரம். என்ன சொன்னா வேலை நடக்கும்னு தெரிஞ்சு சொல்லறதை பார்த்தியா?…” என மூவரில் ஒருவர் சொல்ல அந்த கமலாக்காவாகப்பட்டவர்,
“அவ என்கிட்ட அவ சார்பா பார்க்க சொன்னா அதுலயே அவ என் மேல வச்சிருக்கற மதிப்பு உனக்கு தெரியலையோ? இதுல விவரத்தை கண்டுட்ட…” என பொடுபொடுவென பொரிய,
“என்னக்கா திடீர்ன்னு கட்சி மாறிட்ட?…” என அப்பெண்கள் இவரும் திகைத்து பார்க்க,
“எப்பவும் அர்ச்சனாவுக்கு எம்மேல தனி பாசம். அது உங்களுக்கு பொறுக்கலைன்னு இன்னைக்கு தான தெரியுது. நான் தான் வீட்டுக்கு மனுஷியா நின்னு அவகள எல்லாம் கவனிக்கனும்…” என சொல்லிவிட்டு அவர்களை தாண்டிக்கொண்டு உமா வீட்டிற்குள் சென்றுவிட்டார் கமலாக்கா.
“இதென்னடி கூத்து?…” என அப்பெண்கள் அவருக்கு பின்னால் புலம்பியபடி சென்றனர்.
“அவங்க எல்லாம் ரொம்ப கோபமா இருந்தாங்களோ?…” என மோகனா கேட்க,
“அதெல்லாம் சரியாகிடும் மோகனா. நீங்க ரிலாக்ஸா இருங்க முதல்ல…” என அர்ச்சனா சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே கோபாலசுவாமி வரும் அரவம் கேட்டு அர்ச்சனா எழுந்து நிற்க உடன் மோகனாவும் எழுந்துவிட்டார் தன்னைப்போல.
அவரை பார்த்ததுமே மோகனா அழுதிருப்பதும், பயந்த முகமும் தெளிவாய் தெரிந்தது கோபாலசுவாமிக்கு.
“எதுக்கும்மா பயந்துட்டு? நான் தான் இருக்கேன்ல. இனி இது என்னோட பொறுப்பு. என்னை நம்பி உங்க பொண்ணையே குடுத்திருக்கீங்க. அதுக்காகவே நான் கடமைப்பட்டிருக்கேன். உட்காருங்கம்மா…” என சொல்லியவர்,
“அர்ச்சு பார்த்து கவனி…” என சொல்லிவிட்டு வாசலை நோக்கி செல்ல அர்ச்சனா கணவரை வித்யாசமாக பார்த்தார்.
இத்தனை பேர் முகத்தில் இருக்கும் கவலையும், யோசனையும் எதுவுமின்றி அவர் எதையோ சாதித்ததை போல முகப்பொலிவுடன் நடந்து செல்வதை பார்க்க உள்ளுக்குள் எதுவோ உறுத்தியது.
‘நிஜமாவே இது சந்தர்ப்பத்தினால் நடந்த திருமணம் தானா?’ என்ற சந்தேகம் கோபாலசுவாமி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விதத்தில் உதிக்க துவங்கியது.
“எல்லோருக்கும் நமஸ்காரம்…” என அனைவரையும் பார்த்து சொல்லியவர்,
“சொல்லுங்க என்ன தெரிஞ்சுக்கனும்? என தன்மையாக கேட்க,
“உங்க பையனோட கல்யாணத்துல நடந்த குழப்பத்துக்கு என்ன ஸார் பதில் சொல்ல போறீங்க? இது லவ் மேரேஜா? தவிர்க்க முடியாம இதை அக்ஸப்ட் பண்ணிக்கிட்டீங்களா? உண்மை என்னன்னு எங்களுக்கு தெளிவா சொல்லுங்க ஸார். நிறைய பேசிக்கறாங்களே. இந்த திருமணத்துல மணப்பெண் மாறினதுக்கு பின்னால என்ன நோக்கம் இருக்குது?…”
வரிசையாக இதையும் மீறிய சில விரும்பத்தகாத கேள்விகளும் அம்புகளென கோபாலசுவாமியை நோக்கி எய்ய அனாயசமாக அதை தாங்கினார்.
ஆனால் வலிகள் என்னவோ வெற்றியின் குடும்பத்தினருக்கு. மோகனாவும், சந்திரனும் கலங்கி போனார்கள் அத்தனை கேள்விகளின் தாக்கத்தில்.
இவர்கள் இப்படி என்றால் தன்னறையில் இறுகிய முகத்துடன் அங்கிருந்த தொலைகாட்சியில் இதை பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவோ எரிமலையை உள்ளடக்கிய சீற்றத்துடன் இருந்தான்.
“முதல்நாள் நிச்சயதார்த்தம் வரை உங்க தங்கச்சி பொண்ணுதான் கல்யாண பொண்ணு. காலையில முகூர்த்தத்துல உங்க பொண்ணு கல்யாணம் முடிஞ்ச நிமிஷம் பொண்ணு மாறுதுன்னா வேற விவகாரமோ? இப்ப உங்க மருமகளா இருக்கற அந்த பொண்ணை உங்க பையன் ஏமாத்தி…”
“கொஞ்சம் நாகரீகமா கேள்வி கேட்கலாம் தம்பி. உங்க வீட்டுகள்லையும் பொண்ணுங்க இருக்காங்க. பார்த்து பேசுங்க…” என்ற கோபாலசுவாமியின் பார்வை அந்த கேள்வி கேட்டவனை அழுத்தமாய் பார்த்துவிட்டு தன்னுடைய உதவியாளரை ஒரு பார்வை பார்த்தார்.
அவர் புரிந்ததை போல தலையசைத்து கேள்வி எழுப்பியவனின் மொத்த தகவலையும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர்.
அந்த ஒருவரை மட்டுமல்ல இது போல வேண்டுமென்றே கேட்கப்பட்ட கேள்விகளை கேட்டவர்கள் பற்றிய விவரங்களை எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு இருந்தார் அந்த உதவியாளர். அதற்கு கோபாலசுவாமியின் அர்த்தம் பொதிந்த ஒரு பார்வையே போதுமானதாக இருந்தது.
“கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ஸார். நீங்க மிகப்பெரிய ஜோதிட சிகாமணி. உங்க குடும்பத்துல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க மக்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்கக்கிட்ட நாங்க இதை கொண்டு போகனுமே….” என ஒரு பெண் சொல்ல,
“நிறைய வந்ததிகள் யூகங்களா வந்துட்டே இருக்குது. அது உண்மையா பொய்யான்னு நீங்க சொன்னா தானே ஸார் தெரியும்…” என இன்னொருவன் கேட்க,
“அதான் சொல்லிட்டீங்களே வதந்தி யூகங்கள்ன்னு. அதற்கு பதில் சொல்ல எனக்கும், என் குடும்பத்தாருக்கும் நேரமில்லை. அவசியமும் இல்லை…” என சொல்ல,
“இப்படி பேசறது ஒரு பொறுப்பற்ற பேச்சா உங்களுக்கே தெரியலையா ஸார்? இப்படித்தான் உங்களை தேடி வரவங்களுக்கு நீங்க செய்யறீங்களா? என்ன ஜாதகம் பார்க்கறீங்க? இல்ல உங்க மகனுக்கு இப்படித்தான் நடக்கும்னு முன்னாடியே கணிச்சிருந்தீங்களா?…” என்றான் ஒருவன்.
கேள்வியின் திசை வேறுவகையில் பயணிப்பதை உணர்ந்துகொண்ட கோபாலசுவாமி சட்டென சுதாரித்து,
“இந்த திருமணம் எங்க ரெண்டு வீட்டாரின் முழு சம்மதத்தின் பேர்ல தான் நடந்திருக்குது. இதை தான் சொல்ல முடியும். இன்னொன்னும் சொல்லனும். நாளை மறுநாள் நடக்க இருந்த வரவேற்ப்பு நிகழ்ச்சி ரத்து செஞ்சிட்டோம். இதையும் உங்க பத்திரிக்கையில் பப்ளிஷ் பண்ணிடுங்க. எல்லோருக்கும் நன்றி…”
முடிந்தது என்பதை போல கோபாலசுவாமி உள்ளே சென்றுவிட அங்கிருந்த செக்யூரிட்டி காட்ஸ் அவர்களை வெளியேற்றினார்கள்..
“நாயகம்…” என ஹாலில் சத்தமாய் அழைத்த கோபாலசுவாமியிடம் வந்து நின்றார் உதவியாளர்.
“நாளைக்கு நியூஸ்ல ரிசப்ஷன் கேன்சல்ன்ற நியூஸ் மட்டும் தான் வரனும். புரியுதா?…” என சொல்ல,
“ஸார் லைவ்…”
“அது ஒரு சின்ன சேனல். அதை மக்கள் பார்க்கறதே அபூர்வம். இப்ப பார்த்திருப்பாங்கன்றதும் தான். போய் ஒரிஜினல் டேட்டாவை கலெக்ட் பண்ணிட்டு வந்திருங்க. என்ன செய்யனுமோ செய்ங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் தான் இருந்த அறைக்குள் செல்ல அங்கே சந்திரன் பரிதாபமாய் அமர்ந்திருந்தார்.
“என்ன ஸார் இப்படியெல்லாம் கேட்கறாங்க?…” என கவலையுடன் கோபாலசுவாமியிடம் கேட்க,
“எதுவும் வெளிய வராது. நான் இருக்கேன்ல. பார்த்துக்கறேன்…” என்றவர்,
“வெற்றி…” என அவனை தனியே அழைத்தவர்,
“இங்க பாரு வெற்றி, யாராச்சும் வந்து போய்ட்டு இருப்பாங்க. தேவையில்லாம அவங்க எதாச்சும் பேசி உன் அக்காவும் மாமாவும் ரொம்ப பயப்பட ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே பார்த்த தானே? அதனால நீ அவங்களை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வா…” என சொல்ல,