“புரியுது அங்கிள். நானே இதை உங்கக்கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க…” என சொல்ல அவனின் தோளில் தட்டியவர்,
“சரி, போய்ட்டு வா…” என அனுப்பினார்.
அதன் பின் சந்திரன், மோகனாவிடமும் சொல்லி ஜெயஸ்ரீயையும் கூட்டிக்கொண்டு அவர்கள் கிளம்ப,
“இன்னும் சாப்பிட வேற இல்லையே. அதுக்குள்ளே கிளம்பறீங்க?…” என அர்ச்சனா பதறி போனார்.
“இல்லை அர்ச்சும்மா, இங்க இருந்தா பாலாவும் இவங்க முகத்தையே பார்த்துட்டு இருப்பா. இங்க நார்மல் ஆகவே ஆகாது. அதுவும் நீங்க எங்களை பார்ப்பீங்களா உமா ஆன்ட்டியை பார்ப்பீங்களா? அதான்…”
“அதுக்குன்னு?…” என அர்ச்சனா கவலையாக பார்க்க,
“நாங்க போய் பாலாவோட ட்ரெஸ் குடுத்தனுப்பறோம் அஸ்விம்மா. அவளை பார்த்துக்கோங்க…” என சொல்லும் பொழுதே மோகனா அழுதுவிட அவரை தாங்கிக்கொண்டார் அர்ச்சனா.
இதை எல்லாம் தானிருந்த அறைவாசலில் நின்று பார்த்தபடியே இருந்தாள் பாலா. தாயின் கண்ணீர் என்னவோ செய்தாலும் அவர்கள் செல்வதை தவிர்க்க முடியாதே?
‘வீட்டுக்கு போனதும், நல்லா தூங்கு. உன்னை யாரும் எழுப்ப மாட்டாங்க’ என மண்டபத்தில் வைத்து தாய் சொல்லியதை நினைத்து பார்த்தவள் உள்ளம் ஊமையாய் அழுதது.
‘உன் மடியில படுத்து தூங்கனும் போல இருக்கும்மா’ என தனக்குள் சொல்லிக்கொண்டவள் அப்படியே கல்லென இருந்தாள்.
தான் அழுதால் இன்னுமே பெற்றோர் உடைந்துவிடுவார்களே என தன்னை அடக்கிக்கொண்டு இருந்தாள்.
“வரோம்டா பாலா…” என்று மட்டுமே சொல்லி அவளிடம் விடைபெற்றிருந்தனர்.
“நான் இங்க தான் இருப்பேன்க்கா. நான் பார்த்துக்க மாட்டேனா?…” என்ற வெற்றியின் ஆறுதலில் சற்று தெளிந்தனர்.
இப்போது அர்ச்சனாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட மீண்டும் தானிருந்த அறைக்குள் வந்து அமர்ந்துகொண்டாள் கட்டிலில்.
சற்றுமுன் தனிமை வேண்டும் என வேண்டிய மனது இப்போது வீட்டினர் வேண்டும் என்று நினைத்தது. யாருமற்ற அந்த அறையில் இருப்பது மனதிற்குள் கசப்பாய் இறங்கியது.
“பாலா…” என்ற அர்ச்சனாவின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் லேசாய் புன்னகைக்க முயல,
“சாப்பிட வாயேன். மணி மூணாகிடுச்சு. இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க. கொஞ்சமா சாப்பிடேன்…” என சொல்ல அப்போது தான் காலையில் இருந்தே தான் உண்ணவில்லை என்பதே அவளுக்கு உரைத்தது.
“இல்லை வேண்டாம் ஆன்ட்டி. பசிக்கலை…” என சொல்ல,
“பாலா, இங்க பாரு…” என அவளருகே அமர்ந்தவர்,
“என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்காகும்? கொஞ்சமா தயிர்சாதம் கொண்டு வரேன். இங்கையே கூட வச்சு சாப்பிடேன்…” என சொல்ல நினைவுகள் தாயிடம் தான் சென்றது.
“நல்லா இருக்குடி உன் நியாயம். தயிர் சாதம் கூட சூடா தான் உன் தொண்டையில இறங்கும். உன்னை சொல்ல கூடாது, உன் நாக்கை வளர்த்துவிட்ட என்னை சொல்லனும்…” என புலம்புவார் மோகனா.
எப்போதும் மகளுக்கு சுட சுட சாதத்தில் தாளித்த கெட்டி தயிரை கொண்டு அதே சூட்டுடன் கிளறி பரிமாறுவார் அவர். அப்படி தான் அவளின் ரசனை.
“பாலா…” என அர்ச்சனா அழைத்ததுமே திடுக்கிட்டு திரும்பி பார்த்தவளின் விழிகள் சட்டென கண்ணீரை இறக்கிவிட,
“என்னடா இது?…” என அவளின் கன்னத்தை துடைத்துவிட,
“நான் கொஞ்சம் நேரம் தூங்கறேனே…” என்றாள் அவள்.
“சரி தூங்கு. அதுக்கு முன்ன நான் ஜுஸ் கொண்டு வரேன். அதையாவது குடிச்சுட்டு தூங்கு…” என்று சென்றவர் மாதுளை ஜுஸை எடுத்துக்கொண்டு வந்து அவளை குடிக்க வைத்து அதன் பின்னர் தான் அங்கிருந்தே நகர்ந்தார்.
அர்ச்சனா சென்றதும் பாலா சுருண்டு படுத்துக்கொள்ள சோர்வில் அப்படியே உறங்கி போனாள். மூன்று நான்கு முறை அர்ச்சனாவும், அஸ்வினியும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
வெற்றி பாலாவிற்கான உடைகளை இரு பெட்டியில் கொண்டு வந்திருந்தான். அவள் இருந்த அறையில் வைத்துவிட்டு செல்லும் பொழுது அவளருகே வந்தமர்ந்து,
“பாலா, பாலாம்மா…” என நெற்றியில் வருடவுமே விழித்துக்கொண்டாள் அவள்.
“மாமா…” என லேசாய் விசும்பியபடி அவனின் மடியில் தலைவைத்து இடுப்பை கட்டிக்கொள்ள,
“என்னடா இது? குழந்தை மாதிரி? பாலா பிரேவ் கேர்ள். இப்படி கண்ணீரோட இருக்கலாமா?…” என லேசாய் சீண்டி பேச,
“எனக்கு அம்மாட்ட போகனும்…” என்றாள் விசும்பல் கேவலாக மாறிய குரலில்.
“நோ நோ. இதென்ன இப்ப நிஜமாவே பேபியே தான். எழுந்து உட்கார்….” என அவளை நிமிர்த்தி அமர வைத்தவன்,
“பேன் ஓடியும் இப்படி வேர்த்திருக்குதே…” என்று அவளின் நெற்றி வியர்வையை துடைத்துவிட,
“எனக்கு இங்க இருக்க முடியும்னு தோணலை மாமா…”
“ஏன்டா?…” என்றான் ஆதரவாய் அவளின் கலைந்திருந்த முடியை காதோரம் ஒதுக்கியபடி.
“தெரியலை. அம்மாவும், அப்பாவும் இங்க இருக்கற வரைக்கும் ஒன்னும் தெரியலை. இப்போ அவங்க இல்லையா, அதான் ஒரு மாதிரியா இருக்குது…” என சொல்லவும் தான் அவனுக்கு சற்று இதயத்துடிப்பு மட்டுப்பட்டது.
பெரிதாய் பிடிக்கவில்லை, விருப்பமில்லை என சொல்லி அழைத்து செல்ல சொல்வாளோ என நினைத்திருக்க தாயை தேடுகிறேன் என்றது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“அம்மா எங்க போனாங்க? இங்க நம்ம வீட்டுல தானே இருக்காங்க. இப்போ வேண்டாம். நாளைக்கு நானே கூட்டிட்டு வரேன்…” என சொல்ல அவள் அமைதியாய் இருப்பதை பார்த்தான்.
“பாலா…” என்றதும் நிமிர்ந்து பார்த்தவள் சொல் என்பதை போல இருக்க,
“சூர்யா ரொம்ப ரொம்ப நல்லவன்டா…” என,
“எனக்கு தெரியுமே…” என்றாள் பட்டென்று.
“என்ன என்ன தெரியும்?…”
“அது தெரியலை. அவன் கேட்டா சொல்லிக்கறேன்…”
“ப்ச், பாலா…” என கண்டனப்பார்வை பார்க்க,
“ஓகே, அவங்க அவங்க போதுமா?…” எனவும் அவளின் தலையை பிடித்து ஆட்டியவன்,
“இப்போ சூர்யா உன்னோட ஹஸ்பண்ட். உன்னோட நல்லது கெட்டது, அவனோடது எல்லாமே இனி நீங்க ஒன்னா தான் பார்க்க போறீங்க. அவன் உன்னை இன்னும் முதல் தடவை பார்த்த மாதிரியே நினைச்சுட்டு இருக்கான். அதான் மேரேஜ் உன்னோடன்னதும்…”
“ஹ்ம்ம்…”
“பாலா, டேய் நான் சொல்றதை கேட்கறியா?…” என அவளை கேட்க,
“எனக்கு புரியுது மாமா. ஓகே. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்னு தான் நினைக்கறேன். பார்க்கலாம். நீ விடேன்…” என்றாள் அலுப்பாய்.
“ஓகே, நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. நான் வெளில இருக்கேன்…” என்று சொல்லி எழுந்து செல்லவும் தான் தனக்கு கொண்டு வந்து வைத்திருந்த பெட்டியை பார்த்தாள்.
ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று குளித்துவிட்டு சுடிதாரை போட்டுக்கொண்டவள் நகைகளை எல்லாம் கழற்றி பெட்டிக்குள் பத்திரப்படுத்தி பூட்டிவிட்டு தனது போனை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.
ஜெயஸ்ரீ ஏகப்பட்ட அழைப்பு அழைத்திருந்தாள். சந்திரன் மோகனா என அனைவருமே அழைத்திருக்க பார்த்துவிட்டு உடனே மோகனாவிற்கு அழைத்து பேசிக்கொண்டு இருந்தாள்.
அங்கே யாருமே அவளை வந்து தொந்தரவு செய்யவில்லை. வீடே அத்தனை அமைதியாய் இருந்தது. இடையில் ஏழு மணி போல அஸ்வினி அவளுக்கு காபி கொண்டுவந்து தந்துவிட்டு சென்றுவிட்டாள் பாலாவின் முகத்தை கூட பார்க்காமல்.
அவளின் அந்த ஒதுக்கத்தை புரிந்துகொண்ட பாலாவும் அதை தொடவில்லை. தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு இருந்துகொண்டாள்.
பெற்றோர் சாப்பிட்டதை பற்றி விசாரிக்க ஆகிற்று என்று பதிலை தந்தவள் அவர்களிடம் சற்று இலகுவாகவே பேச அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
எட்டு மணி போல அர்ச்சனா பாலாவிற்கு உணவை எடுத்து வந்து தர மறுக்காமல் பிறகு சாப்பிடுகிறேன் என சொல்லிவிட்டாள். ஆனாலும் கையை பிசைந்துகொண்டே இருந்தார் அவர்.
பாலாவை உடை மாற்ற சொல்லி சூர்யாவின் அறைக்கு அனுப்பும் படி கோபாலசுவாமி சொல்லியிருந்தார். இனி சூர்யாவின் அறையில் தான் பாலா இருக்கவேண்டும் என்று.
அவளிடம் எப்படி சொல்வதென யோசித்தவர் பின் எண்ணத்தை கை விட்டவராக இப்படியே இருக்கட்டுமே? அதனால் என்ன என்று நினைத்துக்கொண்டார்.
“பாலா…”
“சொல்லுங்க ஆன்ட்டி, சொல்ல வரீங்க. ஆனா ஒன்னும் பேசலை…” என கேட்க,
“இல்லை இனிமே நீ சூர்யா ரூம்ல தான் இருக்கனும்…” என அவர் சொல்லிவிட,
“ஓஹ். ஓகே ஆன்ட்டி…” என்றாள். சட்டென அவள் சரி என்றதும் பெரும் நிம்மதியாக இருக்க,
“நீ சாப்பிட்டு இரு. நானே வந்து அழைச்சிட்டு போறேன்…” என சொல்லிவிட்டு அந்த அறையின் கதவை பூட்டிவிட்டு நடக்க மாடியில் இருந்து சூர்யாவின் குரல் வீட்டையே கிடுகிடுக்கவைத்தது.
“இத்தனை செஞ்சதுக்கே மனதுக்கு என்னவோ போல கில்ட்டியா இருக்குது. இதுவுமா? போதும். எங்க வாழ்க்கையை நாங்க எப்போ ஆரம்பிக்கனுமோ ஆரம்பிச்சுக்கறோம். எதையாச்சும் தூக்கிட்டு என் ரூம் பக்கம் வந்தீங்க நான் மனுஷனா இருக்கமாட்டேன்…” என்று கதவை அறைந்து சாற்றினான்.
சூர்யாவின் பேச்சு வீடு மொத்தமும் சத்தமாக எதிரொலிக்க அவன் எகிறியத்தில் அத்தனை பேருமே வாயடைத்து போயினர்.
இதை எதிர்பாராதா அர்ச்சனா கீழே இருந்தபடி மகனின் ஆக்ரோஷத்தில் மிரண்டு போய் நின்றார்.
“என்ன அர்ச்சு?…” என கேட்டு வந்த கோபாலசுவாமி பூக்கள் சிதறி கிடப்பதை பார்த்ததும்,
“பார்த்துட்டே இருப்பியா? கிளீன் பண்ண சொல்லு. ஹ்ம்ம்ம்…” என்றவர்,
“இன்னும் பத்து நிமிஷத்துல பாலாவை மாடிக்கு அனுப்பு…” என சொல்லவும் எச்சிலை கூட்டி விழுங்கினார் அர்ச்சனா.
“என்ன பார்க்கற? எல்லாம் சரியாகிடும். கோபப்படறான்னு இப்படியே விட முடியாது. தள்ளியே வச்சிருந்தா கோபம் குறையாது. இப்படி கொட்டி தீர்க்கட்டும். சரியாகிடுவான்…” என அவர் பாட்டுக்கு சாதாரணமாக சொல்லி சென்றார்.
அர்ச்சனாவிற்கு தான் நடுக்கம். வேலைக்காரர் ஒருவரிடம் பாலாவின் பெட்டிகளை கொண்டுசென்று சூர்யாவின் அறையில் வைக்க சொல்லியவர் பாலாவை பூஜையறைக்கு அழைக்க கோபாலசுவாமி பார்த்துக்கொண்டே தான் இருந்தார்.
லாவண்டர் நிற சுடிதாரில் தூக்கி போடப்பட்ட போனியில் அமைதியாக அவள் வந்து நிற்க ஒரு நொடி மருமகளின் மேல் நிலைத்த பார்வையை அடுத்து மனைவியிடம் அழுத்தமாய் பதிக்க அர்ச்சனா இறைஞ்சுதலாய் பார்த்தார்.
“ஹ்ம்ம்…” என ஒரு பெருமூச்சுடன் அவர் திரும்பிக்கொள்ள பாலாவை சாமி கும்பிடவைத்த அர்ச்சனா அவளை எதுவும் செய்ய சொல்லவில்லை.
பொம்மை போல அவருடனே அந்த அறையின் முன்னால் சென்று நின்றவளுக்கு அதுவரை இருந்த தைரியமெல்லாம் வற்றிவிடும் போல் ஆனது.
“உள்ள போம்மா…”