அர்ச்சனாவின் குரலில் நகரமறுத்த கால்களை கட்டாயமாய் பிடுங்கிக்கொண்டு பாலா உள்ளே செல்லவும் அங்கே இவளில் வருகையை எதிர்பார்த்ததை போல சூர்யா நின்றுகொண்டு இருந்தான் காலையில் உடுத்திய அதே பட்டுவேஷ்டியில்.
உள்ளே நுழைந்ததும் தானியங்கி கதவு சாற்றிக்கொள்ள மெல்லிய வெளிச்சம் மட்டுமே அந்த அறையை நிறைத்திருந்தது.
ஒருமாதிரி லேசாய் உடல் உதற முன்னே நடக்காமல் கதவருகிலே நின்றுகொண்டவளை பார்க்க பார்க்க அடக்கி வைத்திருந்த சீற்றம் எல்லாம் சூர்யாவை வெடிக்க வைக்க காத்திருந்தது.
“வாங்க மேடம். என்ன அங்கயே நின்னுட்டீங்க?…” என்றவனின் அழுத்தமான குரலில் உள்ளடக்கிய நக்கலும் பாலாவை அடைய சுடிதாரின் ஷாலை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள் கைகளுக்குள்.
“வா வா…” என அவளை அங்கிருந்து கைபிடித்து அழைத்து வந்தவன்,
“என்ன இது? இப்போ நீ மிஸஸ் சூரியவர்த்தன் இல்லையா? இப்படி தயங்கி நிக்கற?…” என கேட்டவனின் அந்த சிரிப்பு உள்ளுக்குள் கலவரமூட்டியது.
‘ஆமா, இப்போ நான் பாலா சந்திரன் இல்லையே. பாலா சூர்யா’ இதுவரை மற்றவர்கள் சொல்லியும், கழுத்தில் கிடந்த மாங்கல்யம் காண்பித்து கொடுத்தும் இதோ இப்போது இந்த அறையில் தான் முழுமையாய் உணர்கிறாளே.
தன்னைப்போல கால்கள் இரண்டடி பின்னால் நகர்ந்தது. அவளின் அந்த பின்னடைவு கூட சூர்யாவிற்கு இன்னும் கோபமூட்டியது. ஆனாலும்,
“என்ன ட்ரெஸ் இது பாலா? இன்னைக்கு நமக்கு கல்யாணம் ஆகியிருக்குது. நான் பாரு நைட்க்கு பட்டு வேஷ்டி ஷர்ட்ல இருக்கேன். புடவையும் தலை நிறைய பூவுமா வருவன்னு பார்த்தா இப்படி வந்து நிக்கற. ரொம்ப ஏமாற்றமா போச்சு…” என்று அவளை நோக்கி முன்னேறினான்.
“பதில் சொல்லு பாலா. இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் தானே?…” என்றதும் எச்சிலை கூட்டி விழுங்கியவள்,
“ப்ளீஸ். இந்த பேச்சு வேண்டாம்…”
“எதுடி வேண்டாம். நான் சொன்னேனே? நீ கேட்டியா? கேட்டியா? கல்யாணாம் ஆனா இது தானே அடுத்து நடக்கும். சொன்னேனே? முடியாதுன்னு. கேட்டியா? மறுக்க மறுக்க தாலி கட்டிக்கிட்ட தானே? அப்போ வாழ்ந்துடலாம். இதை நான் சொன்னா உனக்கு தப்பா?…” என்று அவளின் இரு கைகளை பிடிக்க உதறிக்கொண்டு பின்னால் சென்றாள்.
“நோ, நோ. இப்போ எதுவும் பேசற நிலமையில நான் இல்லை. நீங்களுமே…” என்றதும் அவனின் பார்வையில் இன்னும் நக்கல் கூட,
“பார்ரா பாலாவுக்கு மரியாதை பேச்செல்லாம் வருதே…” என்றவன்,
“சொல்ல சொல்ல கேட்காம நீ இருந்ததுக்கு அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாம்? அனுபவிப்பனு சொன்னேன்ல. அவ்வளோ தைரியமா உட்கார்ந்திருந்த தானே?…” என்று இன்னும் அவளை தன்னருகே இழுத்து பிடிக்க அவளோ அவனை விட்டு விலக பார்க்க,
“இன்னைக்கு உன்னையும் சேர்த்து தானே அத்தனை பேச்சு பேசினானுங்க. திவ்யா ஓடிப்போய்ட்டா கல்யாணம் நின்னுடுச்சுன்றது கூட பரவாயில்லை. இன்னைக்கு உன்னை கல்யாணம் பண்ணினதால என்னவெல்லாம் சந்தேகப்பட்டு பேசினானுங்க தெரியுமா? கேட்டியா நீ?…” என்று அவளின் கன்னத்தை பற்ற,
“விடுங்க…” என்று பலம் கொண்டமட்டும் அவனை விலக்க பார்க்க அவளின் விலகல் இன்னுமே அவனை கோபமூட்டியது.
“இப்பவும் நான் என்ன பேசறேன்னு கேட்க முடியாதுல உன்னால. திமிர். திமிர். இவன் என்ன சொல்லி நாம என்ன கேட்கறதுன்னு. இப்போ நான் உன்னோட ஹஸ்பண்ட். எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்குதுல….” என்றவன் அவள் அதிர்ந்து பார்க்கும் போதே அவளின் முகத்தில் தனது முத்தங்களை பரவலாக படரவிட்டான் ஆவேசமாய்.
திடீர் தாக்குதலில் நிலைகுலைந்தவள் அவனின் முத்தத்தையும் தடுக்கமுடியாமல் தன் மேனியில் அவனின் கைகள் செலுத்திய ஆதிக்கத்தையும் தடுக்கமுடியாமல் மூச்சடைத்து நிற்க சத்தமிடமுடியாமல் அவளின் இதழ்கள் பூட்டப்பட்டிருக்க வெறும் முனங்கல்கள் மட்டுமே அவளிடத்தில்.
கைகள் தளர்ந்து உடலின் மொத்த சக்தியும் வடிந்த விழிகள் உணர்விழந்து மூடிக்கொள்ள சூர்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
முத்தமிட ஆரம்பித்தவன் தான். தன் இயலாமைக்கு, கோபத்திற்கு வடிகாலென தொடங்கியவன் அவளிடத்தில் மீளமுடியாமல் சிக்கிக்கொண்டான்.
அவள் அவனை விட்டு விலக நினைத்து நகர நகர இன்னும் அவளை தனக்குள் தான் இழுத்தான். நெருக்கினான். பாலாவை கொஞ்சமும் விலக அனுமதிக்கவே இல்லை.
ஆக்ரோஷத்தில் ஆரம்பித்தது, உக்கிரம் தணிந்து எதற்குள்ளோ மூழ்குபவன் போல வேறொரு உணர்வு ஆட்கொள்ள இந்த புது உணர்வை கிரகிப்பதற்குள் அவனின் கையிலிருந்து நழுவி துவண்டு மயங்கி விழுந்தாள் பாலா.
தனது கைகளில் இருந்து விழுந்தவளை பார்த்தவனுக்கு ஷாக் அடித்ததை போல அதிர்வு. ஒரு நொடி தான் அவனின் அதிர்ச்சி எல்லாம்.
‘என்ன காரியம்டா செஞ்சுட்ட?’ என தன் தலையை ஓங்கி அறைந்துகொண்டவன் பதறி அவளை கையில் அள்ளி கட்டிலில் படுக்கவைத்தான்.
“பாலா, பாலா இங்க பாரு. பாலா…” என அவளின் கன்னம் தட்டி அழைத்தவன் தண்ணீரை தெளிக்க அப்போதும் அரைமயக்கநிலை தான் அவளுக்கு.
“இந்த தண்ணியை குடி…” என மெதுவாய் அவளுக்கு புகட்டியவன்,
“டின்னர் சாப்பிட்டியா?…” என கேட்க இல்லை என தலையசைத்தாள்.
“லஞ்ச்?…” அதற்கும் அதே போல இல்லை என்பது தான்.
“உன்னை சாப்பிட வைக்காம என்ன பண்ணிட்டு இருந்தாங்க இந்த வீட்டுல? இதுக்குத்தான் கட்டி வச்சாங்களா?…” என கோபமாய் கத்தியவன் இன்டர்க்காமில் அழைத்து சாப்பிட குடுத்துவிட சொல்லி அர்ச்சனாவிடம் கோபத்துடன் சொல்லி அவர் என்ன என கேட்கும் முன்பு போனை வைத்தான்.
“அறிவிருக்கா உனக்கு? என்கிட்டே பேச சொல்லு. ஊருப்பட்ட வாய். சாப்பிடறதுக்கு என்ன? காலையிலையும் சாப்பிடலை தானே?…” என அதட்ட இப்போது நன்றாக தெளிந்து இருந்தவள் முகம் இறுகி போனது.
“கேட்டதுக்கு பதில் சொல்லு பாலா….” என்றான் ஆத்திரமாய்.
இப்போது நன்றாய் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். கொஞ்சம் தெளிவாய் இருக்க பேசுவதற்கு வாயசைக்க அதரங்கள் எரிந்தது. குடித்து மீதி இருந்த தண்ணீரை எடுத்து குடித்து இதழ்களை நனைத்துக்கொண்டவள்,
“பதில் சொல்லலைன்னா திரும்ப கிஸ் பண்ணுவீங்களா?…” என்றாள் அவனை போலவே கோபமாய்.
அவள் கேட்டதும் தான் மீண்டும் அந்த செயல் ஞாபகம் வர தலையை பிடித்துக்கொண்டு குனிந்துகொண்டான்.
“கரெக்ட் தான் நீங்க சொல்றது கரெக்ட். கல்யாணம் ஆகிட்டா இதெல்லாமே நடக்கும் தான். நானும் சின்ன பாப்பா இல்லை. ஆனா நீங்க இப்படி இன்னைக்கு செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கலை…” என்றாள்.
அவளின் குரலில் அத்தனை தீர்க்கம். இது முற்றிலும் எதிர்பாராத பாலதிரிபுரசுந்தரி. இப்படி ஒரு பாவனையை அவளின் முகத்தில் என்றுமே கண்டதில்லை.
“பாலா ப்ளீஸ்…” என்றான் சூர்யா.
“நானும் ப்ளீஸ் சொன்னேன் தான்…”
“இதுக்குத்தான் சொன்னேன், கேட்டியா?…” என கோபமாய் சொல்ல,
“ஓஹ், இது தான் நடக்கும்னு டெமோ காமிச்சீங்களா எனக்கு?…” என்றாள் அசராமல்.
“ப்ச்…” என அவளை விட்டு எழுந்து அவன் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தான்.
அவன் செய்த செயலை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை. பாலாவை நிமிர்ந்து பார்க்கவே அத்தனை சங்கடமாய் இருந்தது. ‘என்ன காரியம் செய்துவிட்டேன்?’ என நினைத்தவன் கூசி நின்றான்.
“ஓகே, இப்போ என்ன நான் வொய்பா நடந்துக்கனும், அவ்வளோ தானே?…” என பாலா சொல்லியதும் வேகமாய் திரும்பி அவளை பார்த்தவனின் நரம்புகள் புடைக்க ஆரம்பித்தது.
“ஓகே நான் மிஸஸ் சூரியவர்த்தன் தான். உங்களுக்கு எல்லா ரைட்ஸும் இருக்குது தான். நான் அக்ஸப்ட் பண்ணிக்கறேன்…” என சொல்ல,
“அறைஞ்சேனா பார்த்துக்க. அப்படியே அத்தனை பல்லும் கொட்டிடும்…” என கையை ஓங்கிக்கொண்டு வந்தவன் அவளின் பார்வையில் அப்படியே நின்றான். பின் தொய்ந்து போய் கட்டிலில் ஓரத்தில் அமர்ந்தவன்,
“முடியலை பாலா. நான் பண்ணினதுக்கு ஸாரி. அதை மட்டும் தான் இப்போ என்னால கேட்க முடியும்…”
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்?…”
“பாலா…”
“லுக், நீங்க இப்போ என்ன நினைக்கறீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன்….” என அவள் அவனை பார்க்கவும்,
“புதுசா என்ன சொல்ல போற? சொல்ல வேண்டிய நேரத்துல எதுவும் சொல்லாம. அப்பவே என்னை அடிச்சு தள்ளிருக்க வேண்டியது தானே?…” என்றான் ஆற்றாமையுடன்.
“முடியலை. எனக்குமே இப்போ நடந்ததை முழுசா ஏத்துக்க முடியலை தான்…” என்றாள் சின்ன குரலில்.
“ஹ்ம்ம் இதை தான் சொல்றேன்…” என அவன் மீண்டும் சொல்ல,
“ப்ச், இங்க பாருங்க. உங்களை நான் கல்யாணம் பண்ணிட்டதால எதையும் இழக்கலை. எதுவும் மாறலை. சந்திரன் பொண்ணா இருந்தவ இப்போ இந்த வீட்டுக்கு மருமகளா இருக்கறேன். இது மட்டும் தான் வித்தியாசம். எங்கயுமே பாலா பாலாவா தான் இருப்பா…” என சொல்ல பல்லை கடித்தான் சூர்யா.
அதற்குள் கதவு தட்டப்பட எழுந்து சென்று தங்களுக்கான உணவை வாங்கிக்கொண்டு வந்தவன்,
“இதையும் சாப்ட்டுட்டு அப்பறமா உன்னோட பாடத்தை ஆரம்பி…” என்று வார்த்தையை கடித்து துப்பிவிட்டு பாத்ரூமினுள் சென்று மறைந்தான் சூர்யா.
அவன் சென்றதும் தான் மூச்சே வந்தது பாலாவுக்கு. தைரியத்தை இழுத்து பிடித்தவளாய் அவனிடம் எதையோ சொல்லி அவனின் தற்போதைய கோபத்தை தள்ளி போட்டவளுக்கு கண்களை கரித்துக்கொண்டு வந்தது.
இப்படி ஒரு செயலை அவனிடமிருந்து சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. இன்னும் அவனின் தொடுகை அவளுடலை தழுவியபடி இருப்பதை போலவே பிரம்மையை தர வர இருந்த கண்ணீரை உள்ளிழுத்தவள் தன்னையே நிந்தித்துக்கொண்டாள்.
ஒழுங்காய் கொஞ்சமேனும் ஏதாவது சாப்பிட்டிருந்தால் நிச்சயம் இன்று அவனை ஒரு கை பார்த்திருந்திருப்பாள். காலையில் இருந்து உணவு உண்ணாமல் அடுத்தடுத்த சோர்வில் மனதும் ஆட்கொண்டுவிட எல்லாவற்றிற்கும் உட்சமாய் சூர்யாவின் தீண்டலும், முத்தமும் மொத்தமாய் புரட்டி போட்டிருந்தது.
ஒரு பெருமூச்சுடன் எடுத்துவைத்து சாப்பிட்டு முடித்தவள் உறக்கம் வராமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
சூர்யா ஷவரின் அடியில் நின்றுகொண்டிருந்தான் நனைந்தபடி. ஒரு பெண்ணின் முதல் ஸ்பரிசம். அவளின் மேல் அத்துமீறிய தனது செய்கை. தனக்குள் இப்படி ஒருவன் இருப்பதே அப்போது தான் உணர்ந்தான்.
சுத்தமாய் பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ செய்தது. இம்சித்தது. ஊசி என குத்தியது. வெப்பமாய் தகித்தது. மொத்தமாய் எரித்தது. இத்தனைக்கும் இடையில் எங்கோ ஓர் ஓரத்தில் தித்தித்தது. கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை அவனால்.
இரு கைகளையும் விரித்து பார்த்தவன் அப்படியே முகத்தை மூடிக்கொள்ள சரிந்து தரையில் அமர்ந்தான் சூர்யவர்த்தன். இது என்ன புது உணர்வோ? அது அவனை உயிராழத்தினுள் வரை இழுத்து சென்றது.
உன் நகங்களை பார்த்தேன் என் இருபது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன் என் இதழின் ரேகைகள்
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே