“பீ ஸ்ட்ராங் பாலா…” என அவளுக்கு அவளே முணுமுணுத்துகொள்ள பொத்தென படுக்கையில் எதுவோ விழுந்த அரவத்தில் பதறி எழுந்தாள்.
“என்னாச்சு?…” என அவள் போர்வையை உதறி எழுந்து நிற்க அவளின் வேகத்தில் சூர்யாவும் எழுந்தான்.
“ஹேய், நான் தான் விழுந்தேன். என்ன என்ன?…” என கேட்க நெஞ்சில் ஒரு கையை வைத்து பிடித்துக்கொண்டவள் மறுகையால் தலையை பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து விட்டாள்.
அவளின் இந்த கோலத்திலும், சட்டென வெளிப்பட்ட ஆசுவாசத்திலும் சூர்யாவின் இதழ்களோரம் லேசாய் அரும்பிய புன்னகை அந்த அறையின் மிதமான வெளிச்சத்தில் மீசைக்கடியில் அடங்கிக்கொண்டது.
“நீ படுத்த ஞாபகமே இல்லை. எப்பவும் பெட்ல இப்படி தான் விழுவேன்…” என சொல்ல,
“உன் மூஞ்சி, உன் முன்னால தான படுத்தேன். தெரியலையாம். பயந்தே போய்ட்டேன். படபடன்னு அடிச்சுக்குது…” என்று அவள் சொல்லியவிதமும் தன் இதயப்பகுதியை லேசாய் நீவிக்கொண்டு பேசியதும் சூர்யாவின் பார்வையை மாற்றியது.
அவள் தன்னை ஒருமையில் விளித்து திட்டியதெல்லாம் பின்னால் செல்ல மனமோ குரங்காய் கெட்டவிதத்தில் தாவியது. கால்களை தரையில் ஊன்றி திரும்பி அமர்ந்துகொண்டான் சூர்யா.
“தப்புடா…” என அவளுக்கு கேட்காதவிதத்தில் முகத்தை திருப்பி தன் கன்னத்தில் தானே அடித்துக்கொண்டவன்,
“ஓகே, ஓகே, படுத்து தூங்கு…” என்றான் அவளை பார்க்காமல்.
“ப்ச், தூக்கமே போச்சு…” என முனங்கியபடி படுத்தவள் அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பிக்கொண்டாள்.
சற்று நேரம் அவளிடம் அசைவில்லாமல் போனதும் தான் மெதுவாய் திரும்பி பார்த்தான்.
நன்றாக உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள் பாலா. தூக்கம் தொலைத்தவன் நிலைதான் பெரும்பாடு. மெல்ல அவளின் உறக்கம் கலையாமல் மெதுவாய் நகர்ந்து படுத்தவன் மனமோ பெரும் குழப்பத்தில்.
அவனால் பாலாவை மனைவியாய் ஏற்கவும் முடியவில்லை. அதே நேரம் தன் மனம் போகும் பாதையை ஓரளவு அனுமாநித்தவனுக்கு இது எப்படி சாத்தியம் என்பது விளங்கவும் இல்லை.
அவள் வேண்டும், வேண்டாம் என்ற நிலை. அந்த மஞ்சள் கயிறு என்னும் மேஜிக் அவனிடத்தில் அட்சுபிசகாமல் தன் மந்திரத்தை காண்பித்தது.
உறங்க முயன்று தோற்றவன் தலையை இரு கையாலும் இறுக்கமாய் பிடித்துக்கொண்டான்.
‘என்ன பண்ணிட்டிருக்கேன் நான்?’ என நினைத்து நினைத்து மனது ஓய்ந்ததை விட கண்கள் வலித்தது.
கருவிழியை சுழற்றி இமை மூடியவன் புரண்டு படுக்க இப்போது பாலா அவன் பக்கமாய் திரும்பியிருந்தாள்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளின் முகமும் அவள் புரண்டு படுத்ததில் முன்னால் வந்து விழுந்த திருமாங்கல்யத்திலும் பார்வையை மாற்ற மாற்றி நிலைக்கவிட்டான்.
நேரம் நள்ளிரவை தாண்டி விடியலை நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தது. பார்வை மட்டும் அவளை விட்டு அகலவில்லை.
இத்தனை வருடத்தில் இவ்வளவு கவனித்து பார்த்ததில்லை அவன். இதோ இப்போது அங்குலம் அங்குலமாய் பார்த்தவன் மனதினுள் பெரும் பேரலை.
அந்த அசாத்திய நிசப்த்தத்தில் லேசாய் விசும்பும் குரல் கேட்க பாலா தான் உறக்கத்தில் எதை நினைத்தோ விசும்பியபடி இருந்தாள்.
“தூக்கத்துல உளறுவாங்க. இவ அழறாளே…” என பார்த்தவன்,
“பாலா…” என்றான் மெதுவாய்.
“ம்மா…” என்ற முனங்களுடன் விசும்பல் குறைந்தபாடில்லை.
அவளின் அந்த விசும்பலும், தாயை தேடிய ஏக்கமும், சுருண்டு படுத்திருந்த விதமும் சூர்யாவை என்னவோ செய்ய மெதுவாய் அவளின் தலையை தன்னையறியாமல் கோதினான்.
“பாலா…” என மீண்டும் அழைக்க விசும்பல் லேசாய் குறைந்தது. தலையை தட்டிக்கொடுத்தவன் தனது கரத்தை அப்படியே வைத்திருந்தான்.
“இதெல்லாம் உனக்கு தேவையா? இன்னைக்கு எனக்கே எதையும் ஜீரணிக்க முடியலை. உன்னால முடியுமா? ஏன் பாலா இப்படி பண்ணின?…” என அவளிடமே கேட்பதை போல கேட்க பதில் தான் இல்லை பாலாவிடம்.
பாலா தூக்கத்தில் இரு விரலால் உதட்டிற்கு மேல் லேசாய் சொரிந்துகொண்டவள் முகத்தில் விழுந்த முடியை விலக்கிவிட அவளின் முயற்சியில் லேசாய் சிரிப்பு வர தானே எடுத்துவிட்டு காதோரம் சொருகிவிட்டவன்,
“ஒஹ் நோ…” என தான் செய்துகொண்டிருக்கும் செயலில் கண்களை அழுத்தமாய் மூடி முகத்தை இரு கைகளுக்குள்ளும் பொத்திக்கொண்டு தலையணையில் முகம் புதைத்தான்.
‘இவ பக்கமே திரும்ப கூடாது. என் பேச்சை கேட்காத இவளுக்கு எந்த ஹெல்ப்பும் செய்ய கூடாது. சூர்யா சூர்யா ஸ்டெடி.’ என மந்திரம் போல சொல்லியவன் லேசாய் அப்படியே உறங்கி போனான்.
அதிகாலை போல காலில் எதுவோ விழ லேசாய் உறக்கம் கலைந்தவன் மெல்ல பார்க்க பாலா தான் உறக்கத்தில் கட்டிலில் நடுமத்திக்கு வந்திருந்தாள். அவனின் அருகே ஒருக்களித்து படுத்திருந்தவள் கால் சூர்யாவின் மேல்.
“இதென்ன இந்த கணம் கனக்குது கால்?…” என புலம்பியவன் அவளின் அருகாமையில் கடுப்பானான்.
“இவ வேற மனுஷன் நிலைமை புரியாம…” என லேசாய் நகர்ந்துகொண்டு படுத்தவன் காலை தட்டிவிட பார்க்க பின்,
“நான் என்ன நீ வச்ச ஆளா? போடி. காலை போட்ட நீயே எடுத்துக்கோ. என்னால எல்லாம் உன் காலை எடுக்க முடியாது. என்ன நினைச்ச நீ?…” என முணுமுணுத்தபடி அசையாமல் படுத்திருந்தான்.
முதல்நாள் இந்த நேரமெல்லாம் கோபாலசுவாமி ஆரம்பித்திருந்தார் பாலா தான் சூர்யாவிர்கென்று. கனவென்றும் நினைத்துவிடமுடியாதபடிக்கு இதோ அருகில் மிக அருகில் மூச்சுக்காற்று முட்டும் தூரத்தில் பாலா அவனின் மனைவியாய். மீண்டும் பார்வை அவளிடமே சென்றது.
‘இவளை மாதிரியே என் கண்ணும் என் பேச்சை கேட்கறதில்லை. சும்மா சும்மா அவளை பார்க்குது. சத்திய சோதனைடா சூர்யா’ என மனதிற்குள் புலம்ப பாலா புரண்டு உருண்டு மீண்டும் இருந்த இடத்திற்கே நகர்ந்து சென்றுவிட திரும்பி பார்த்தான்.
எங்கே உருண்டு கீழே விழுந்துவிடுவாளோ என்ற பதட்டத்துடன் பார்த்தவன் பின் அவள் அசையாமல் இருக்கவும் ஒரு பெருமூச்சுடன் உறங்கினான்.
‘உன்னால தூக்கமும் போச்சு’ என்றபடி உறங்கியவன் வழக்கமான நேரத்தில் கண்விழிக்க பாலா இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள்.
மணி ஆறேகால் என காட்ட இரவு சரியாய் உறங்காததில் தலைவேறு வலித்தது சூர்யாவிற்கு. இதில் இவள் இன்னும் எழாமல் இருக்க தலையை உலுக்கிக்கொண்டு எழுந்து குளிக்க சென்றான்.
அவன் திரும்பி வந்த பின்னரும் பாலா எழாமல் தூக்கத்தில் இருக்க ஒரு ஆயாசத்துடன் சென்று அவளை எழுப்பினான்.
“பாலா, டைம் ஆச்சு. எழுந்துக்கோ…” என சொல்ல,
“ம்மா…” என்று சொல்லி புரண்டவள் தூக்கத்தோடே எழுந்து கைகளை மேலே தூக்கி நெட்டிமுறித்தாள்.
கண்களை திறந்தால் அவளையே பார்த்தபடி கைகளை கட்டிக்கொண்டு கிளம்பி நின்றிருந்தான் சூர்யவர்த்தன்.
“குட்மார்னிங்…” என சொல்லியவள் அங்கே வாட்ச் எங்கிருக்கிறது என பார்வையை சுழற்ற,
“ஏழாக போகுது பாலா…” என்றான் அவள் கேட்காமலே.
“ஓஹ்…” என்றவள் இன்னும் படுக்கையை விட்டு எழாமல் அமர்ந்திருக்க,
“பாலா, இங்க பார்…” என்றவன் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள்.
“இங்க எல்லாருமே பைவ் தர்ட்டிக்கு எழுந்திடுவாங்க. அப்போவே குளிச்சு கீழே போய்டனும். நானுமே கூட. எப்போவாச்சும் சிக்ஸ் ஆகலாம்…” என்று தகவலாய் சொல்ல,
“ஓஹ்…” என்றவள் படுக்கையை விட்டு இறங்கி கதவு நோக்கி செல்ல போக,
“எங்க போற?…” என நிறுத்தினான்.
“என்னோட ட்ரெஸ் எல்லாம் கீழே தான் இருக்குது…”
“நேத்தே எல்லாமே வந்திருச்சு. மறந்துட்டியா?…”
“ஓஹ்…” என்றவள் வேறெதுவும் பேசாமல் உடையை தேடியவள் முகம் என்னவோ போல இருந்தது.
வெகுவாய் தயங்கி தயங்கி அவள் நிற்க அவனுக்கு அவளிடம் கேட்கவும் யோசனையாக இருந்தது.
“எதாச்சும் வேணுமா பாலா?…” என்றான் அவள் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்து.
“ஹ்ம்ம், இல்ல, என் போன். கீழேயே வச்சுட்டு வந்துட்டேன் போல…” என சொல்ல,
“வீட்டுக்கு பேசனுமா?…” என கேட்டு தன் மொபைலை நீட்டினான்.
வாங்கிக்கொண்டவள் தாயின் எண்ணிற்கு போட்டுவிட்டு சூர்யாவை பார்க்க அவளின் குறிப்பை அவனால் உணரமுடியவில்லை.
“நான் அம்மாட்ட பேசனும்…” என்றாள் மீண்டும்.
“பேசு, நான் எதுவும் சொல்ல போறதில்லையே…” என்று கட்டிலில் அமர்ந்தான்.
“தனியா பேசனும்…” என்றாள் சற்று உஷ்ணம் ஏறிய குரலில்.
“தனியா நான் கீழே போக முடியாது. நீ குளிச்சுட்டு வா. போகலாம்…” என்று சொல்லிவிட்டு டிவியை ஆன் செய்தவன் அதில் பார்வையை பதித்தான்.
எரிச்சலுடன் அவனை பார்த்தவள் மோகனாவிடம் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள். அவள் பேச்சு எதுவும் அவனை எட்டாத போதிலும் அவளின் கலங்கிய முகம் அவனின் பார்வையில் இருந்து தப்பவில்லை.
“ஏன் அழறா? கண்ணுல தண்ணி கட்டிருக்கு?…” என பார்த்தபடி இருக்க அவனின் பார்வையை உணர்ந்தவள் மோகனாவிடம் பேசிவிட்டு உடைகளை எடுத்துக்கொண்டு குளித்துமுடித்து வெளியே வந்து கிளம்பி அவனை எதிர்பார்க்காமல் கீழே சென்றுவிட்டாள்.
அவள் போனதும் தான் சூர்யாவும் எழுந்துகொண்டான். தனது வாட்ச், மொபைல் சகிதம் எடுத்து பாக்கெட்டில் வைத்தவன் வாட்சை கட்டிக்கொண்டே கீழே இறங்கி வர வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
ஹாலில் நடுநாயகமாக தனித்து பாலா நிற்க அவள் சுற்றிலும் மருண்டு விழித்தபடி பார்வையை ஒட்டியவிதமே சூர்யாவின் மனதை அசைத்தது.
தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்