சரண்யா ஹேமா வின் இருள் தூவும் நிசப்தம் – சிறு முன்னோட்டம்
Post Views:4,314
“இன்னும் எவ்வளோ நேரம் அந்த ரவை டப்பா இருக்கற பொட்டிய தேடுவ நாச்சி?…” என்ற பேச்சியம்மாள்,
“நீ போய் அங்கிட்டு ஒக்காரு. முடியாததோட என்னத்ததேன் செய்யிவியோ? இழுத்து போட்டு மறுக்கா ஒனக்கு ஆவாம போச்சுன்னா புள்ள கிடந்து அல்லாடுவா…” என நாச்சியாரை தனியே கூட்டிவந்து அமர வைத்தார்.
“ராகவி அந்த டேபிள் ஃபேன தூக்கிட்டு வா…” என பேத்தியிடமும் சத்தம் கொடுத்தவர் அவள் கையில் இன்னும் இருந்த பால் தம்ளரை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
“பால காய்ச்சி எம்புட்டு நேரமாச்சு? வந்த வேகத்துல கரண்டடுப்ப வச்சு காய்ச்சினது? ஆறி அலந்து போச்சு. கையில இருக்கற போன புடுங்கி ஒடைக்கறேன் பாரு….” என கத்தினார்.
ராகவி அவரின் அதட்டலுக்கு பயந்து கையிலிருந்த போனை வைத்துவிட்டு பாலை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.
“நீ என்ன நின்னுட்டே இருக்க?…” என்றவர் பாயை எடுத்து விரித்துவிட்டு,
“இங்கினவே ஒக்காரு. இல்லையா கட்டய சாயி. எல்லாத்தையும் நா அடுத்து வெச்சிக்கிடுவேன்…” என ஒற்றை மனுஷியாய் அவ்வளவையும் எடுத்து அடுக்க ஆரம்பித்தார்.
அன்று தான் அந்த ஊருக்கு குடிபெயர்ந்திருந்தனர். மீராவுக்கு அந்த ஊர் அரசு மருத்துவமனையில் பணி மாற்றலாகி இருக்க வந்து சேர்ந்திருந்தனர்.
வாடகைக்கு பிடித்திருந்த வீட்டில் அவர்களின் மொத்த உடமைகளும், சாமான்களும் வந்திறங்கி வீட்டையே நிறைத்திருந்தது.
இன்னும் எந்த பொருள் எங்கே இருக்கிறது என தெரியாமல் தேடிக்கொண்டிருந்தார்கள்.
“பாட்டி சித்தி வந்துட்டாங்க…” என்றாள் ராகினி பேச்சியின் மகள் வயிற்று பேத்தி.
“இப்பத்தான வந்து இறங்கிருக்கோம். மொத எல்லாத்தையும் எடுத்து அடுக்கிட்டு அடுத்து அத பாப்போம்…” என்றார் கண்டிப்புடன்.
“சரி…” என்றவள் உடைகள் மட்டுமிருந்த பெட்டிகளை எல்லாம் எடுத்து தனியே வைத்துக்கொண்டிருந்தாள்.
கொண்டுவந்திருந்த நாளிதழ்களை எல்லாம் அலமாரியில் விரித்து எடுத்து வைக்க தயார் செய்ய வெளியே சின்ன கம்பி கேட் திறக்கும் சத்தம்.
“ராகவி இந்த அடுப்ப ஒரு கை புடி…” என பேச்சி அதனை தூக்கிக்கொண்டு அடுக்களையில் வைக்க உதவினாள் ராகவி.
“நான் வர வரைக்கும் வெய்ட் பண்ணலாமே பெரிம்மா. என்ன இது?…” என்றாள் மீரா.
அவள் கையிலிருந்த பொருட்களை பார்த்தவர் பேச்சி அதனை வாங்கி அடுப்பு மேடையில் பிரித்தார்.
“ரவை தான் இருக்குல. அதை முதல்ல காலி பண்ணிட்து வாங்கிருக்கலாம்…” என்று முறைப்பாய் பார்க்க,
“இந்த கூட்டத்துல எதுல வச்சோம்ன்னு தேடுவீங்க? பாதி பேக்கேஜ் பிரிஞ்சிருக்குன்னு மாத்தி மாத்தி அள்ளி போட்டிருக்கானுங்க…” என சலித்தபடி குப்பையாய் கொண்டுவந்து குமித்திருந்தவற்றை பார்த்தாள்.
“கூட ஆயிரம் போவுதுன்னு நல்ல வண்டியாவே பாத்து புடிச்சிருக்கலாம். தெரிஞ்சவருன்னு அவர் சொன்ன வண்டிய புடிச்சு சாமானுங்களை ஏத்திவிட்டதுக்கு தேவை தான்…” என்றவர்,
“சரி நீ போய் மத்ததை பிரி. நான் சட்டுன்னு ரவையை கிண்டி வைக்கறேன். சாப்பிடுவோம்…” என்றார்.
———————————————————-
மெடிக்கல் ஷாப்பில் கூட்டமின்றி இருக்க இருக்கும் மருந்துகளின் தேதிகளை எல்லாம் சரிபார்த்துக்கொண்டிருந்தான் தரணிதரன்.
“ரெண்டு டோலோவும், ரெண்டு சிட்ரிசினும் குடுங்க…” என்றவளின் குரலில் திரும்பி பார்த்தவன் சட்டென அடையாளம் கண்டுகொண்டான் அவளை.
அன்று காலை தான் எதிர்வீட்டில் புதிதாய் குடியேறி வந்திருந்த வீட்டின் பெண் என்று.
ஒரு நொடிதான் அவனின் பார்வையும் ஆராய்ச்சியும். மீராவின் கையை பார்க்க அதில் பணம் மட்டுமே இருந்தது.
“மருந்து சீட்டு இல்லாம மாத்திரை தரதில்லைங்க…” என கறாராக அவன் சொல்ல,
“இது காய்ச்சலுக்கு தானே?…” என்ற மீராவிடம்,
“எதுக்கானா என்ன? இப்ப மாத்திரைகளை எதுக்கெல்லாம் யூஸ் பன்றாங்கன்னு யார் கண்டா?…” என கேட்டுவைக்க மீராவின் முகத்தில் திகைப்பு.
“இல்லைங்க, என்னோட அம்மாவுக்கு காய்ச்சல். நாங்க இந்த தெருவுல தான் குடிவந்திருக்கோம். மெடிஸின் பாக்ஸ் மிஸ்ஸாகிடுச்சு. அதான் அவசரமா வேணும்…” என்றவள்,
“நான் ஒரு டாக்டர். இங்க கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல தான் வொர்க் பண்ண போறேன்…” என்றவளை இன்னும் யோசனையுடன் அவன் பார்த்தான்.
“என்னோட ஐடி காமிக்கனுமா?…” என அப்போதும் கோபமில்லாமல் அயர்ச்சியாய் அவள் கேட்டுவைத்து,
“நம்பலைன்னா நான் இப்பவே வீட்டுக்கு போய் என்னோட ஐடெண்டி கார்ட் எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லி திரும்ப,
“அட நில்லுங்க…” என்றான் தரணிதரன்.
“அதெல்லாம் வேண்டாம். மாத்திரை தரேன்…” என சொல்லி எடுத்து தந்து பணத்தையும் வாங்கிக்கொண்டான்.
“இப்ப மட்டும் எப்படி தரீங்க? நான் ஐடி கார்ட் எடுத்துட்டு வரேன்னு சொன்னதாலவா?…” என்றாள் மீரா.
“உங்க ஐடி கார்டை வேணும்னா நான் வீட்டுக்கே வந்து பார்த்துக்கறேன். காலையிலையே பார்த்தேன் உங்களை. எங்க எதிர்வீட்டுக்கு தான் நீங்க குடி வந்திருக்கீங்க….” என தரணிதரன் சொல்ல அதுவரை இல்லாத கோபம் மீராவின் முகத்தில்.
“எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான். இந்த காலத்துல யாரையும் நம்பக்கூடாதுல…” என சொல்லியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு இறங்கி வீடு சென்றுவிட்டாள் மீரா.
——————————————–
வீட்டினுள் இருக்கையில் கேட்ட சப்தம் இப்போது வெளியில் வந்து நின்றதும் கேட்கவில்லை.
அந்த வீதியே வெறிச்சோடி இருந்தது. நள்ளிரவில் ஆட்கள் நடமாற்றம் மட்டுமின்றி எந்தவித பிராணிகளின், பட்சிகளின் அரவம் கூட இல்லை.
சற்றுமுன் கேட்டது தனது மனபிரம்மையோ என நினைத்தவள் மீண்டும் வீட்டிற்குள் செல்ல முற்பட துணுக்குற்றது மனது.
கதவை திறந்துகொண்டு உள்ளே திரும்பியவளின் முதுகின் பின் யாரின் பார்வையையோ உணர்ந்தாள் மீரா.
திரும்பி பார்க்க பயந்து முன்னெச்சரிக்கையாய் கதவின் கம்பியை உளேள் தள்ளி வந்து நின்ற பின்னர் எட்டி பார்க்க எதுவுமில்லை.
ஆனால் அவளின் தொண்டைக்குழி அச்சத்தில் சுழன்றுகொண்டிருந்தது. அவளறியாமல் எதிரில் இருந்த திண்ணையில் பார்வை பதிய வெறுமை தான்.
ஆழ மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு கதவை சாற்றிய நொடி அந்த திண்ணையில் அந்த வரிவடிவம் மீண்டும் பனிகள் கூடிய உருவமாய் உருவகம் பெற்றது.
சட்டென்ற குளிர் அப்பகுதியை சூழ்ந்து பனியாய் உறைய வைப்பதை போலிருக்க அந்த உருவம் மீராவின் வாசலை தான் வேதனையுடன் பார்த்தது.