தன் கை வண்ணத்தில் அழகிய பூங்காவனமாகிப் போயிருந்த வீட்டுத் தோட்டத்தை வலம் வந்தபடி, கடைத் தெருவிலிருந்து புதிதாக வாங்கி வந்த வெள்ளை ரோஜாச் செடியை வைப்பதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா!
அவளைக் கண்ணுக்கெட்டிய தொலைவிலிருந்து பார்த்திருந்த ஆதவ், “கமோன், பிக்கப் த ஃபோன் டாடி..” என்ற முணுமுணுப்புடன் தந்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துப் பார்த்தான்.
பல தடவைகள் அழைத்தாயிற்று! ஆனால் இடைவிடாமல் அழைப்பு விடுத்தும் என்றுமில்லாதவாறு இன்று அழைப்பு ஏற்கப்படாமல் தாமதப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு பாலகன் நெஞ்சினுள் ஒரு கலவரம் மூண்டது.
“ப்பாஆ..” என்ற முனகலுடன் இதழ் பிதுக்கி அவன் அழுகைக்குத் தயாராகிய நேரம்,
“ஏண்டா ஆது, அப்பாக்கிட்ட பேசணும்னு சொன்னியே! இன்னுமேவா பேசல?” என தோட்டத்திலிருந்த கல்லில் அமர்ந்து மூச்சு வாங்கியபடி சத்தம் வைத்தவளுக்கு வெயிலின் அகோரத்தில் வியர்த்து ஊற்றியது. அவ்வப்போது பெருவிரலால் நெற்றியை நீவி வியர்வையை சுண்டி விட்டுக் கொண்டாள்.
“எடுக்கல சித்தி..” என இங்கிருந்தே கரைந்தவன் கிட்டத்தட்ட பயந்து போயிருந்தான்.
அதைப் புரிந்து கொண்டாளோ அல்லது உளமார உணர்ந்தாளோ என்னவோ, “ஃபோன எடுத்துட்டு வாடா செல்லோ.. திரும்ப கால் போட்டு பார்க்கலாம், இந்த தடவை ஒரே ரிங்கில் எடுப்பாரு பாரேன்.” என இல்லாத காலரைத் தூக்கிவிட்டு வீண் டாம்பீகம் பேசி சிறியவனை இயல்புக்கு மீட்டு வர முயல,
“நீயே பாரு, சித்தி!” என ஏழுகால் பாய்ச்சலில் ஓடி வந்து அலைபேசியை நீட்டினான், ஆதவ். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆறு வயதிருக்கும் பெரிய மனுஷனுக்கு.
“அப்பனே, முருகா!” என்ற புலம்பலோடு சோர்வாகக் காலாட்டியபடி அவள் அழைப்பு விடுத்ததும், என்ன அதிஷ்டமோ.. இரண்டே ரிங்கில் அழைப்பேற்கப்பட்டு, “ஆதவா!” என்ற குரல் மறுபுறத்தில் உருகியது.
“யேய்ய்! நான் சொல்லல?” என தன்னை மறந்து உற்சாகத்தில் கூக்கூரலிட்டவளைத் கல்லில் காலூன்றி எக்கித் தாவி அணைத்தபடி,
“கிரேட், சித்தி..” என்ற பாராட்டலோடு அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்,
“அப்பா..” எனக் கூவியவாறு அலைபேசியை பறித்துக் கொண்டு பச்சைப் பசேலென்ற தோட்டத்துப் புற்றரையில் குதித்தான்.
“ம்ம்கூம், இப்படி கிஸ் பண்ணி என்னை ஈஸியா ஏமாத்தலாம்னு பார்க்காதடா!” என கண்களை உருட்டி மிரட்டியபடி எழுந்து ஓரமாக இருந்த குழாயில் சேறு படிந்திருந்த கைகளை அலம்பிக் கொண்டவள்,
“நான் உள்ள போறேன், ஆது!” எனக் கூறி சிறியவனின் தலை கலைத்து விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைய,
அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே!’ என்ற ஸ்கந்தகுரு கவஷம் இன்னிசையாய் செவி மோதியது.
கைகூப்பி வணங்கியபடி பக்திப் பரவசத்தோடு கடவுளை துதித்துக் கொண்டிருந்த ஆனந்தியின் கண்களில் என்றும் போல் கீற்றான கண்ணீர்!
அது அவளது மூத்தமகளின் இழப்பினால் விழைந்த ஈரமென பார்ப்பவர்கள் நினைத்தாலும், உண்மை அதுவன்று!
நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கும் நெடு நாளைய பாரமொன்று இறைவனைப் போற்றிப் பாடும் நேரங்களில் கூட நிம்மதிக்கு பதிலாக ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, அவளுக்கு.
ஒருவனது வாழ்வைக் கேள்விக் குறியாக்கிய நமக்கெல்லாம் இந்த இடத்தில் நின்று கைகூப்பத் தகுதியே இல்லையென்ற குற்றக் குறுகுறுப்பு வருடங்களாகியும் நெஞ்சை விட்டு அகன்றபாடில்லை.
மன ஆறுதலை வேண்டி துதிப்பும், வேண்டுதலுமாக வேல் மயில் சகிதம் சகல அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்த முருகனுக்கு முன் அனுதினம் கண்மூடி நின்ற போதிலும் மாற்றம் எதுவுமில்லை.
குறுகிய நேரத்துக்குள் பூஜையை முடித்துக் கொண்டவள் தட்டிலிருந்த மலரிதழ்களை சிலை மீது அள்ளித் தூவிவிட்டுப் பெருமூச்சுடன் மெல்ல எழுந்து நிற்கையில்,
“மருமகளே, இந்த பொசக்கெட்டவள் வேர்த்துப் போன மூஞ்சோட வந்து நின்னுட்டுருக்காள் பாரு, என்னனு கேளு!” என கொக்கரித்தாள், வடிவாம்பாள். அவர் தான் அந்தக் குடும்பத்திற்கு மூத்த மனுஷி!
பற்களை நறநறத்த சங்கமித்ரா, “எப்பவும் என் குறை தேடறதையே பொழப்பா வெச்சுருக்கியா கிழவி?” என கடுகடுத்து விட்டு ஆனந்தி கூடத்துக்கு வருமுன் அறைக்கு ஓட்டமெடுத்த பத்தாவது நிமிடத்தில்,
“சித்தி.. சித்தி..” என ஏலம் விட்டபடி வீட்டினுள் புகுந்தான், ஆதவ்.
“உன் சித்தி அவ ரூமுக்கு போய்ட்டா!” என்ற வடிவாம்பாள், ஆவி பறந்த தேநீர் கோப்பையை ஆனந்தி சூடாற்றி நீட்டியதற்கு,
“சித்திக்கு வர சொல்லுங்க, பாட்டி” என செல்லமாக சிணுங்கி அடம் பிடித்தவனை,
“அடடா, இதென்ன கோலம்? இப்படி எந்நாளும் சித்தியே வந்து உனக்கு தேநீ ஆத்தி கொடுக்க மாட்டா.. அதான் பாட்டி கொடுக்குறாங்கள்ல? வாங்கிக் குடி!” என அதட்டினார்.
“நோ, எனக்கு சித்தி தான் வேணும். ப்ளீஸ் பாட்டி, கால் ஹேர்!” – மீண்டும் சிணுங்கல்.
“தோ பார்டா! இனிமே நீ நினைச்ச நேரமெல்லாம் உன் சித்தியைப் பார்க்க முடியாதாக்கும். என்னோட சித்தி, என்னோட சித்தினு எப்ப பாரு கட்டிப் பிடிச்சி சொந்தம் கொண்டாடுவியே, அதுவும் முடியாது. அப்போ நீ என்னடா செய்வ?” என மீண்டும் அவனிடம் வம்பு வளர்த்தார், வடிவு.
சர்ரென்று கோபம் வரப் பெற்றவனாக, “ஏன்?” என வினாத் தொடுத்தவனைக் கடைக்கண்ணால் ஏறிட்டவர்,
“ஏன்னா உன் சித்திக்கு கலியாணம்!” என முகத்தை நொடித்துக் கொண்டதில் ஆனந்திக்கு ஒருமாதிரியாகப் போயிற்று!
சித்தி, சித்தியென முப்பொழுதும் பின்னோடு அலைபவன் மனதில் இதுபற்றி ஆழப் பதிந்து விட வேண்டுமென்ற வேகம், வடிவாம்பாளுக்கு! இன்றேல் பிறகொரு நாள் அவனுக்கோ அல்லது பேத்தியின் வாழ்வுக்கோ ஏதேனும் பாதகங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற தூரநோக்கு சிந்தனை என்று கூட சொல்லலாம்.
“கலியாணம் பண்ணா மட்டும் என்ன.. சித்தியோட ஹஸ்பண்டு கிட்ட போய், என் சித்திய எனக்கு ரொம்ப புடிக்கும். ப்ளீஸ் நானே அவங்களை வைச்சிக்கிறேன்னு சொல்லுவேன் கிராணி!”
“அப்படியெல்லாம் சொல்ல முடியாதுடா, செல்லம். கலியாணம் முடிஞ்சதும் அவரு உன் சித்திய கூட்டிட்டு போய்டுவாரே..”
“ஹ்ஹா!!” என பெரிதாக கண்கள் விரித்தவன் முகத்தில் லேசான அதிர்ச்சி!
“அப்போ அதுக்கு அப்பறம் சித்தி என்கூட இருக்க மாட்டாங்களா?” என மாதுளம் முத்துக்கள் வெளித் தெரியும்படி வாய் பிளந்து கேட்டவனைப் பார்த்து கைகளை விரித்து மறுப்பாகத் தலை அசைத்தார், வடிவு.
“இல்ல, பொய்!” என அழும் தோரணையில் ஆதவ் நிலத்தில் காலூன்றிக் கத்தவும்,
“ஏய் கிழவி, குழந்தை கிட்ட போய் என்ன பேச்சு பேசிட்டு இருக்க? வர வர உனக்கு புத்தி மழுங்கிட்டு வருதுனு நினைக்கிறேன்..” என்ற கோப அதட்டலுடன் குளித்து வேற்றுடைக்கு மாறி சங்கமித்ரா பன்னீர் மலராக அவ்விடம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
ஆனந்திக்கும் அத்தைக்காரி பேசிய பேச்சில் அவ்வளவு உவப்பில்லை என்றபடியால் மகளைக் கண்டிக்காமல், கண்டும் காணாத பாவனையில் சமையல்கட்டுக்குள் நுழைந்து கொள்ள,
“ச்.. சித்தி!” என்ற அவசர அழைப்புடன் அவளின் இடுப்பைக் கட்டிக் கொண்டு வடிவுக்கு பழிப்புக் காட்டினான், ஆதவ்.
“அதுசரி, நான் சொன்னதுல நீ எப்போ தான் சரி கண்டிருக்க!” என மித்ராவின் காதில் விழுமாறு சற்று சத்தமாகப் புலம்பியதோடு அமைதியாகிக் கொண்டவருக்கு ஆதவ் மீது அன்பில்லை என்றெல்லாம் கிடையாது.
தன் மூத்த பேத்தியின் மகனல்லவா? பாசம் சற்றே அதிகப்படியாக இருந்த போதிலும், நிதர்ஷனத்தை அவனுக்கு ஊட்டியாக வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் அவ்வப்போது இப்படி மனசாட்சி கெட்டதனமாகப் பேசி கொள்ளுப்பேரனின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்கிறார்.
அவர் கூறுவதில் ஒன்றும் பிழையில்லை. அதைப் புரிந்து கொண்டாலும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு வீட்டிலுள்ளோருக்கு மனப் பக்குவமில்லை என்பது தான் உண்மை!
“பாட்டி ஏன் அப்படிலாம் சொல்லுறாங்க, சித்தி?” என ஆடும் ஊஞ்சலில் அமர்ந்து சங்கமித்ராவின் தோளில் சாய்ந்தபடி வினவினான், ஆதவ்.
வடிவாம்பாள் கூறியவற்றை மிக ஆழமாக சிந்திக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவளாக, “உங்க டாடி என்ன சொன்னாரு செல்லோ?” என பேச்சைத் திசை திருப்ப முயன்றாள்.
நினைத்தபடி அது சரியாகவே அவனிடம் வேலை செய்தது.
சடுதியில் முகம் மலரப் பெற்றவனாக, “நாளைக்கு நிச்சியமா வந்துடுவேன்னு சொல்லிட்டாரு, சித்தி! கொஞ்சம், நேரம் போகுற வரைக்கும் தூங்கிட்டதால கால் வந்ததைப் பார்க்கலயாம்னு ஃபீல் பண்ணாரு..” என்றவன் திடீரென்று,
“பட் டாடி பாவம் சித்தி!” என முகம் கசங்கினான்.
“வொய்? டாடிக்கு என்ன..”
“ஹீ மிஸஸ் மீ ஸோ மச், சித்தி! அவருக்கு எப்போவும் என்கூடவே இருக்கணும்னு ஆச.. நான் இருந்தா தான் ஹாப்பி! இல்லனா ஆல் டைம் ஸேட்’ஆவே இருப்பாரு.”
சங்கமித்ரா முறுவலித்தாள்.
ஆன போதிலும் அல்பாயுசில் போய் சேர்ந்த அக்காளின் நினைவு நெஞ்சை ஆக்கிரமித்து அந்தப் புன்னகையிலிருந்த உயிர்ப்பை இரக்கமின்றி விழுங்கியிருந்தது.
பூத்துக் குலுங்கிய தோட்டத்தின் அழகில் லயிக்க முடியாமல் தனித்தனி யோசனைகளில் உலன்று கொண்டிருந்தவர்களை,
“மித்துக்குட்டி!” என்ற உரத்த குரல் தான் நிகழுக்கு மீட்டழைத்து வந்தது.
சட்டென்று தெளிந்து கைப்பைகளுடன் வாசலில் நின்றிருந்த அருணாச்சலத்தை என்னவென்பது போல் கேள்வியாகப் பார்த்தாள்.
“இதுல எந்த ஸாரி உனக்கு புடிச்சிருக்குனு பாரும்மா. மிச்சத்தை அந்தி படறதுக்குள்ள ரிட்டர்ன் பண்ணிடறதா சொல்லி கையோடு எடுத்துட்டு வந்தேன். ஓடிவா!” என்றவர்,
“இதோ வர்றேம்பா..” என்றவளுக்கு சிறு தலை அசைப்பைக் கொடுத்துவிட்டு சென்றுவிட,
“அவரு யாரு, சித்தி?” என்றான் ஆதவ், யோசனை முகமாக!
“சரியாப் போச்சு, அதையும் மறந்துட்டியா? அவர் உன் தாத்தன்டா. பேரு அருணாச்சலம்!”
தலை தூக்கி கர்ண கொடூரமாக சித்தியை முறைத்தவன்,”நான் ஒன்னும் இவரைக் கேட்கல சித்த்த்தீஈஈ..” என றப்பர் நாடா போலும் இழுவையாக நிறுத்த,
“யாரைப் பத்தி கேட்கறே பட்டு?” என புருவம் நெறித்தாள், சங்கமித்ரா.
“உங்க ஹஸ்பண்ட்!”
“அடேய், நான் இன்னும் கலியாணமே பண்ணிக்கலடா! எனக்கு எங்கிருந்து ஒரு ஹஸ்பண்டு?” என அவள் அங்கலாய்த்ததற்கு,
“பாட்டி சொன்னாங்களே!” என சிடுசிடுத்தான், சில்வண்டு.
“தெரியலயே! நானே இன்னும் அவரைப் பார்க்கல. நேர்ல பார்க்கறதா சொல்லிட்டேன். ஈவினிங் வருவாரு, உனக்கு சித்தப்பா ஆகப் போறவரை நிச்சியமா உனக்கும் காட்டறேன், ஓகேவா?” என பேரம் பேசியவள், கூறியது போலவே அன்று மாலையில் அங்கு வந்திருந்தவனை அறைக்குள்ளிருந்து கைகாட்டி,
“அவர் ஓகேவாடா செல்லோ?” என்று கேட்டுவிட்டு பெரியவரின் விருப்பிற்காக காத்திருந்தாள்.
நொடி நேர யோசனைக்குப் பிறகு அவன் தாடை தேய்த்தபடி, “நோ, ஹீ ஈஸ் ரிஜெக்டட்!” என எந்த நேரத்தில் கூறினானோ.. ததாஸ்து தேவதை நேரம் பார்த்து அருள் புரிந்ததில் வந்த வரனை உண்மையிலே அருணாச்சலம் – ஆனந்திக்கு பிடிக்காமல் போனது.
“பையனுக்கு என்ன குறை? அழகில்லயா.. படிப்பில்லயா.. வசதியான இடம் வேற!” என இரவின் பாதி கடந்த பிறகும் வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்த வடிவாம்பாளை,
“இந்த காலத்துக்கு அவங்க போடற கண்டிஷன்ஸ்லாம் சரிப்பட்டு வராதும்மா! வேலைக்கு போக கூடாது, வீட்டோட இருக்கணும். இதெல்லாம் ஓவர்! என் புள்ளைக்கு இவனை விட்டா வேற வரனா இல்ல?” என்ற கராறாகப் பேசி, வாயடக்கி, ஆனந்தியை ‘சபாஷ்’ போட வைத்த பெருமை அருணாச்சலத்துக்குரியது.
“உனக்கு ஏண்டா படவா அவரைப் பிடிக்கல?” என பொய்யாகக் கோபித்து முகம் திருப்பியவள் இத்துடன் ஐந்தாவது தடவையாக இதைக் கேட்டு விட்டாள். ஏனோ பதிலறிய ஆவல்!
இருந்தபோதும் சித்தியின் முகத்தை விழி அகலாமல் பார்த்திருந்தானே தவிர, கண்ணுறங்கிப் போகும் வரை கிஞ்சித்தும் வாய் திறந்தானில்லை.
வடிவாம்பாள் அவ்வப்போது திணித்த விடயங்கள் சித்தி தன்னை விட்டு விலகிச் சென்றுவிடுவாள் என்ற பயத்தை படிப்படியாக அவனுக்குள் விதைத்து, அதன் செடியை அவன் நெஞ்சில் முளைவிடச் செய்திருந்தது.
விவரம் அறியும் நாள் தொட்டு சங்கமித்ராவின் அணைப்புச் சூட்டில் சுருண்டு வளர்ந்தவன் ஆகையால் பின்விளைவுகள் எப்படி இருக்குமென்பதை நிச்சியமாக ஊகித்தறிய முடியாது தான்!!!