“டென் மினிட்ஸ் ண்ணா, வீட்ல இருப்பேன்” பட்டென்று சொன்னவள், அதே வேகத்துடன் வீட்டிற்கு கிளம்பினாள். அவளுக்கும் உதயிடம் பேச விஷயமும், கேட்க கேள்வியும் இருந்ததே.
அடுத்த இருபதாம் நிமிடம் தன் முன் நின்ற மதுமிதாவிடம், “நம்ம.. அதாவது, எங்க புது வீடு பத்தி எதுக்கு கேட்டீங்க மா, வீடு யாருக்கு தேவைப்படுது?” நிதானமாக அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான் உதய்.
அவனது கேள்வியில், அப்படியே ஒரு நொடி அயர்ந்து நின்று விட்டாள் மதுமிதா.
அவள் எதற்காக வீட்டை பற்றி விசாரித்திருக்கிறாள் என்பதை ஊகிக்க முடிந்த பின்புமா, வீட்டை விட்டு செல்ல முடிவெடுத்தான் இவன்? என்ற கேள்வி அவள் மனதில் ஓட,
அதைப் படித்தவனாக, “நாங்க இப்பல்லம்மா. தாரா, நந்தாக்கு ஒரு வயசு இருக்கும் போது எடுத்த முடிவு இது. ஆனா, பெரியவங்க அப்போ, வாடகை வீடு, குவாட்டர்ஸ் எல்லாம் வேண்டாம். சின்ன குழந்தைங்க, ராகவி தனியா எப்படி எல்லாத்தையும் பார்ப்பான்னு காரணம் சொல்லி, எங்களைப் போக விடல. சரின்னு சொந்த வீடு கட்டினோம். அந்நேரம் பார்த்து மித்ரன் கன்பார்ம் ஆகவும், நாங்களும் பிளானை தள்ளிப் போட்டோம்.
இப்பவும் நாங்க உடனே வீட்டை விட்டுப் போகல மதுமிதா. மித்ரனுக்கு ஆறு மாசம் ஆனதும் போறதா தான் பிளான். அது இப்படி முடியும்னு.. சாரி.. ராகவன் ஒரு பாசக் கார முட்டாள்..”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் கண்களில் வந்து விட்டு போன மின்னலை கவனித்து சத்தமாக சிரித்தான் உதய்.
‘கணவனை சொன்னதும் கோபத்தை பாரேன்’ என்று சிரிப்பாக தான் வந்தது அவனுக்கு.
“இங்க, வீட்டுக்கு கூப்பிடுங்க ண்ணா. நானே பேசுறேன். நம்ம வீட்டு ஆளுங்களுக்கு நான் இஷ்டப்பட்டு… அது வந்து ஃப்ரீயா இருக்கும் போது செய்யறேன். மத்தபடி, என்னால வேற யாருக்கும் செய்ய முடியாது ண்ணா. இதை நீங்க சொன்னா, தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு. சோ, இந்த முறை அவங்க ஆசையா கேட்டதுக்காக செய்து கொடுக்கறேன். ஆனா, இதையே…”
“தொடர முடியாது..” அவள் சொல்ல வந்ததை முடித்து வைத்தான் உதய். மெலிதான முறுவல் அவள் முகத்தை நிறைத்தது.
“சாரி மதுமிதா. இப்ப நடந்தது சின்ன, மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான். ஆனா.. நடந்திருக்க கூடாது. ம்ப்ச். நானும் எதிர்ப்பார்க்கல, இப்படி ஆகும்னு.. அவனுக்கு தங்கச்சின்னு வந்துட்டா.. உலகமே மறந்து போய்டும்.. “
உதய் பேசிக் கொண்டிருக்கும் போதே, இடையிட்டாள் மதுமிதா.
“அவரோட கோபத்துக்கு என்னவேனா காரணம் இருக்கலாம். ஆனா, நீங்க வீட்டை விட்டு போக எடுத்த முடிவு, உங்களோடது. அதுக்கு நான் காரணம் ஆக மாட்டேன். அப்படியே நீங்க என்னை காரணம் சொன்னாலும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ண்ணா. நான் பேசின வார்த்தைக்கு தான் நான் பொறுப்பு. அதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டதுக்கு நான் பொறுப்பாக முடியாது. அதனால, மன்னிப்பை என்கிட்ட…
“எதிர்பார்க்கல மா.” மீண்டும் அவள் சொல்ல வந்ததை, சொல்லி முடித்தான் உதய்.
“சாரி மட்டுமில்ல… நீங்க வேற எதுவும் சொல்ல வேணாம். இப்படியே இருங்க. ஐ லைக் யுவர் அட்டிடியூட்.” அவன் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராகவி அறைக்குள் வந்தாள். அவள் கையில் இருந்த ட்ரேயில் மூன்று காஃபி கோப்பைகள் இருந்தன.
மனைவியை பார்த்த உதய், “அப்படி இருந்தா தான் இவங்க கிட்ட நாம பிழைக்க முடியும். இல்லனா, நம்மளை முழுங்கி ஏப்பம் விட்டுடுவாங்க இவங்க.” என்று வம்பு பேச,
“வரேன் ண்ணா. பை, அண்ணி” இருவரையும் பார்த்து சொன்னவள், வாயிலை நோக்கி நடக்க,
“மது காஃபி எடுத்துக்கோ” என்றாள் ராகவி.
“வேண்டா அண்ணி” திரும்பி பார்க்காமல் நடந்தாள் மதுமிதா.
“நீ ஒரு முட்டாள். உன் தம்பி, உனக்கும் மேல.. என்ன பண்ணி வச்சீங்க, ரெண்டு பேரும். ஊர்ல நீங்க ரெண்டு பேரும் தான் பெரிய பாசக் காரங்க. நாங்க எல்லாம் கல்லு மனசு. உங்க அலும்பு தாங்கல ராகவி. என்ன பண்ணி வச்சிருக்க தெரியுதா?
மதுமிதா பேசினதை பத்தி, என்கிட்ட தனியா இருக்கும் போது பேசாம… ஹால்ல வச்சா அதைப் பத்தி பேசுவாங்க?
நீ வீட்டை விட்டு போகலாம்னு அப்போ சொன்னதை உங்க ஆயா கேட்டு, அவங்க பேச ஆரம்பிச்சு. அந்நேரம் உன் அறிவாளி தம்பி வந்து, பாதியை கேட்டு.. மீதியை கேட்காம… அவனா ஏதோ முடிவு பண்ணி.. இப்போ மதுமிதா தான் அழுதிட்டு நிக்கறா.
ராகவனுக்கும் அது வலிக்கும். புரியுதா? இது எல்லாம் உன்னால…” உதய் பேச பேச, ராகவி தலையை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள்.
அவன் பேச்சை கேட்டபடியே தங்களின் அறையை நோக்கி நடந்தாள் மதுமிதா.
எல்லாம் நேரம் வேறு என்ன சொல்ல? “ராங் டைமிங்” என்று தான் சொல்ல வேண்டும்.
மதுமிதா கேள்வி கேட்ட நேரமும் தவறு.
அதை ராகவி கேட்க நேர்ந்த நேரமும் தவறு. அதைப் பற்றி அவள் கணவனிடம் விவாதிக்க எடுத்துக் கொண்ட நேரமும் தவறாகி தான் போனது.
அவளுக்கு மதுமிதாவிடம் நேராக சென்று பேசவே சங்கடமாக இருந்தது. மேலும், அவளுக்கு கடையில் வேறு வேலைகள் கழுத்தை நெரித்தது. அதனால் தான் சுஹாசினியை அனுப்பி வைத்தாள்.
சுஹாசினி சற்று முன்பு தான், “கொளுத்தி போட்டு இருக்கேன் ரா. மத்த எல்லாத்தையும் மறந்து.. சுஹாசினியும், நீங்களும் கல்யாணம் பண்ணிக்க இருந்தீங்களான்னு ராகவன் கூட சண்டைப் போட, மது கண்டிப்பா ஓடி வருவா. நாம வெயிட் பண்ணுவோம்” என்று ராகவியிடம் சொல்லி இருந்தாள்.
ஆக, அவள் மதுவின் வரவை எதிர்பார்த்தாள் தான். ஆனால், இத்தனை விரைவாக இல்லை.
“இது வரை அவனுக்காக நீ செஞ்ச எல்லாமே இதுல அடிபட்டு போச்சு ராகவி. ஒரு யூசும் இல்ல. நாளைக்கே, நாம இந்த வீட்டை விட்டுப் போனா, அது ராகவனை பொறுத்தவரை அவன் பொண்டாட்டியால தான் போறோம். அவனுக்கு அது அழுத்தமா மனசுல பதிஞ்சு இருக்கும். என்ன பண்ணி இருக்க தெரியுதா, ராகவி?” கணவன் அவளிடம் இப்படி கடினமாக பேசுவது, கடுங்கோபம் வந்தால், அவள் பக்கம் தவறு இருந்தால் மட்டுமே என்பதால், தான் செய்த மடத்தனத்தை உணர்ந்து கண்கள் கலங்க நின்றாள் ராகவி.
“நாம இங்கேயே இருந்திடுவோம் உதய். அப்போ பிரச்சனை…”
“ராகவி…” அப்படி ஒரு கோபம் அவன் குரலில், அப்படியே தொய்ந்து பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ராகவி.
“சாரி உதய்” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.
“அவங்களே பேசி சரியாகட்டும். நீ எதுவும் பண்ணாத.” உதய் சொல்ல, சம்மதமாக தலையசைத்தாள் ராகவி.
அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் மதுமிதா.
சட்டென ஒரு முடிவிற்கு வந்தவளாக தன் வீட்டிற்கு மீண்டும் கிளம்பினாள் அவள்.
அவள் படியிறங்கி கீழ் தளத்தை அடையும் போது எதிரில் வந்தான் ராகவன்.
“எங்க கிளம்பிட்ட. வா, சண்டைப் போடலாம்” என்று அழைத்தவனை எரித்து விடுவது போல பார்த்தாள் அவள்.
மென்மையாக அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்து, வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனான் ராகவன்.
அவனைப் பார்த்ததும் உருகிய மனதை கடினமாக்கி கொண்டு சண்டையிட தயாராகினாள் அவள்.
மாடிப் படியில் கால் வைத்ததும் பட்டென்று அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் அவன்.
“ஒழுங்கா இறக்கி விடுங்க. இப்ப தான் நான் உங்க கண்ணுக்கு தெரியறேனா? இறக்கி விடுங்க, சொல்றேன் இல்ல?” உட்சபட்ச கோபத்துடன் கத்தினாள்.
அவளின் ஒரு கரம் பிடிமானத்திற்காக அவன் கழுத்தை சுற்றி இருக்க, மறு கரத்தால் அவன் மார்பில் அடித்தாள் அவள்.
அவனோ சிரிக்கவே செய்தான். அச்சிரிப்பு அவளது கோபத்தை சீண்டி தான் விட்டது.
“ரெண்டு நாளா என்கிட்ட பேசாம தானே இருந்தீங்க? எப்படி இருந்தது தெரியுமா? இனி நான் உங்க கிட்ட பேசுறதாவே இல்ல. அப்போ தான் என் நிலைமை உங்களுக்கும் புரியும்” பல்லைக் கடித்தபடி அவள் சொல்ல,
“இப்ப என்ன பண்ணிட்டு இருக்கியாம் போதை?” அவள் கண்களைப் பார்த்து, சிரிப்புடன் அவன் கேட்க, அவளையும் அறியாமல் இதழ்கள் பிரிய, சட்டென அதை உணர்ந்து, உதடு கடித்து, முகத்தை கடினமாக்கினாள் அவள்.
அவளை கீழிறக்கி, நகர விடாமல், தன்னோடு சேர்த்து அணைத்த படி, அறையின் கதவை திறந்தான் அவன்.
அவள் எத்தனை முரண்டியும் அவனிடம் இருந்து விலக முடியாமல், அப்படியே அவனது அணைப்பில் நின்றாள்.
நெஞ்சை அழுத்தி கொண்டிருந்த கோபத்தை இழுத்துப் பிடிப்பது கடினமாக தான் அவளுக்கிருந்தது.
இது தான் அவளது பலவீனம். அவன் தான் அவளது பலவீனம். அவனுக்கும் அது தெரிந்திருப்பது தான் அவளுக்கு எதிராக எப்போதும் வேலை செய்கிறது.
“சாரி மது” என்றான் மெல்ல, அவள் இப்போது அவன் விட்ட, மௌனத்தை கையில் எடுத்தாள்.
“நான் வேணும்னு பண்ணல மது. என்னால.. ராகவி, அவளுக்கு ஒன்னுன்னா.. என்னையும் மீறி ரியாக்ட் பண்ணிடுறேன். இதுவரை அப்படியே இருந்து பழகி….”
அவளது முறைப்பில் பேச்சை நிறுத்தி, கண்களை சுருக்கி பாவமாக பார்த்தான்.
“அப்போ நாங்க எல்லாம் யாராம்?” என்றது அவள் பார்வை. அதைப் படித்தவனாக,
“இனி இப்படி பண்ண மாட்டேன் மது. பிளீஸ் மா. இந்த ஒரு முறை மன்னிச்சிடு….”
கையை நீட்டி அவனது காற்சட்டை பையில் இருந்த அவனது அலைபேசியை வெளியில் எடுத்தாள் மதுமிதா.
சுஹாசினி, ராகவி இருவரும் அவளைப் பற்றி நினைத்தது ஒரு விதத்தில் சரி தான். அவளுக்கு கணவனின் மேல் அதீத காதலுண்டு தான். ஆனால், சந்தேகப்பட்டு சண்டையிடும் அளவிற்கு எல்லாம் அவள் செல்வது கிடையாது.
அவனது முகநூல் பக்கத்தை திறந்து அதில் கணவனும், சுஹாசினியும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை தேடி எடுத்துப் பார்த்தாள்.
“ம்ஹூம். நல்லாவே இல்ல” என்று உதடு பிதுக்கியவள்,
தாங்கள் இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை எடுத்து பெரிதாக்கி பார்த்து,
“லவ்லி” எனச் சொல்ல, ராகவன் சத்தமாக சிரித்து அவளை வெறுப்பேற்ற, அவனை நிமிர்ந்து ஒரு முறை முறைத்து விட்டு, அவனது முகநூல் கணக்கையே இல்லாமல் ஆக்கினாள் அவள்.
அதற்கும் அவனின் எதிர்வினை சிரிப்பாக தான் இருந்தது.
“சரி, இப்ப கேளுங்க” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு,
“என்ன கேட்க?” அவன் குழம்ப,
“அதான். மன்னிப்பு..” என்றாள் தீர்க்கமாக,
அவன் சிரிப்பை அடக்கி,
“சாரி மது. சண்டையை, ஆர்கியூமெண்டை தவிர்க்க தான் பேசாம இருந்தேன்” என்று சொல்ல,
“அப்போ எந்த பிரச்னையா இருந்தாலும் உடனே பேசி தீர்க்கணும், இந்த அட்வைஸ் எல்லாம் உங்க தங்கை ராகவிக்கு மட்டும் தானா?” அவள் அழுத்தமாக கேட்க, விழித்தான் அவன்.
“ஒரு நாள் நீங்க அவங்க கிட்ட சொல்றதை கேட்டேன்” விளக்கினாள்.
“எஸ், அப்படி சொல்லி இருக்கேன் தான் மது. ஆனா, உன்னை என்னோட வார்த்தையால நான் காயப்படுத்த விரும்பல. ஏதாவது ஹர்ட்டிங்கா சொல்லிடுவேனோனு பயமா இருந்தது. அதான் கோபம் தணியற வரை பேசாம… “
“அப்போ, என் கோபம் தணியற வரை நானும் உங்க கூட பேசாம இருக்கட்டுமா ராகவ்? நான் பேசினாலே உங்களுக்கு புரியல. இதுல பேசாம இருந்தா.. சுத்தம், விளங்கிடும்” கோபத்தை விட, ஒரு வித சலிப்பு தான் அவள் குரலில்.
“அப்படியில்ல மது.. இன்னைக்கு கூட பேசணும்னு நினைச்சேன். ஆனா, வேலை…” அவன் தொடங்க, அவனை பேச விடாமல் தடுத்தாள் அவள்.
“வேலை, வேலை, வேலை. யாருக்கு இல்லை ராகவ்? அவங்கவங்க பார்க்கிற வேலை அவங்களுக்கு கஷ்டமானது தான். நீங்க மட்டும் பொது சேவை பண்ணல இங்க.
பத்து மணி நேரத்துல என்கிட்ட பேச உங்களுக்கு பத்து நிமிஷம் எப்படி கிடைக்காம போகும்? வீட்டுக்கு வந்தும் பேசல. நான் பேசியும் சரியா பேசல. நான் முக்கியம் இல்ல உங்களுக்கு. அவ்ளோ தான்” அவள் சொல்ல, கணமும் தாமதிக்காமல் மனைவியை இழுத்து அணைத்து கொண்டான் அவன்.
“அப்படி இல்ல மது. ம்ப்ச், தப்பு தான். உன்கிட்ட எப்பவும் சறுக்கறேன் நான். ஏன்னு எனக்கும் தெரியல மா.” உண்மையான வருத்தத்துடன் அவன் சொல்ல, அவளுக்கும் வருத்தமாக தானிருந்தது.
“என்னாச்சு?” மெல்ல கேட்டாள்.
“வேணாம் விடு மது. எங்களுக்கு தினம் ஒரு டென்ஷன் தான். ம்ம்” பெருமூச்சு விட்டபடி சொன்னான் ராகவன்.
“சாரி மது. இனி என்ன கோபம்னாலும் சண்டை கூட போடுறேன். ஆனா, பேசாம இருக்க மாட்டேன். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிட்டியா?” அணைப்பை இறுக்கியபடி, அவளின் காதோரம் கேட்க, அவளுக்கு தனிமையை உணர்ந்த கணங்களை நினைத்து அழுகை முட்டி கொண்டு வந்தது.
“இனி மேல், இப்படி பண்ணீங்க. போடானு விட்டுட்டு எங்கயாவது போய்டுவேன்” அழுகையை அடக்கியதில் குரல் உடைய சொன்னாள் அவள்.
“சாரி சாரி மது. பிளீஸ். அழாத மது” முகத்தை கையில் ஏந்தி, கண்ணில் அவளுக்கான வருத்தத்துடன் அவன் கேட்க, முகத்தை திருப்பினாள் மதுமிதா.
“உன் கையை காலா பிடிச்சி…”
“ஏன்? என் காலுக்கு என்ன? அது நல்லா தான் இருக்கு. காலையே பிடிச்சி கேளுங்க” உதடு கடித்து சிரிப்பை அடக்கிய படி தீவிரமாக சொன்னாள் அவள்.
பட்டென்று குனிந்து அவளின் காலை பிடித்திருந்தான்.
“அச்சோ வேணாம் ராகவ்…” அவள் அதிர்ந்து மறுக்க, அவனோ ஒரு முடிவுடன், அவள் காலில் இருந்து தான் தொடங்கினான்.