ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்துகொண்டே, அன்னைக்கு கால் செய்து “வந்துட்டேன்ம்மா… சாயந்திரம் பேசுறேன்..அப்பாகிட்டயும் சொல்லிடுங்க ” என்று முடித்துவிட்டு, வீட்டின் அழைப்பு மணியை இருமுறை அழுத்தி விட்டு, கதவு திறக்க காத்திருந்தாள்.
அழைப்பு மணிச் சத்தத்தை கேட்டு, கண்களை மூடியப் படியே தனது செல் போனை எடுத்த தர்ஷினி, மணியை பார்க்க… “அய்யயோ.. இவ்வளோ நேரம் தூங்கிட்டோமா… அரக்கப்பரக்க எழுந்து வந்து கதவை திறக்க,
“இதுல நீ, எனக்கு பேப்பர் ஒர்க் இருக்குன்னு சொல்லி ஊருக்கு கூட போல… என்ன வேலை இருக்கோ, அதை முடிக்க மட்டும் வராது.. இந்த வசனமெல்லாம் மட்டும் நல்லா வருமே… நகரு தர்ஷி, நேரமாகுதுப் பாரு”
“வீடு இருந்த கோலத்தைப் பார்த்து அப்படியே ஷாக் அடித்தது போல நின்றுவிட்டாள். பின்பு தன்னிலை அடைந்து அவளைத் தீயாய் முறைக்க..”
“என்ன! இப்படி நம்மள ரொம்பப் பாசமா பாக்குறா, எதுக்குன்னு தெரியலையே… ஹீஹீ, என்னடி அப்படி பாக்குற என்னை… இன்னும் ரொம்ப அழகாயிட்டேனா…”
அவந்தி, “இன்னும் அவளை முறைத்துப் பார்த்தப்படியே இருக்க…”
“ஐயோ! இவ வேற வாயத் தொறக்கமாட்டாளே… நான் வேற, என்னத்தப் பண்ணித் தொலைச்சேன்னு தெரியலையே.. ஏதாது ஒன்னுப் பண்ணுனா கண்டுப்புடிக்கலாம்… இப்போ நான்… என்னாங்குறது… ஆண்டவா!… இந்த புள்ளப்பூச்சியை எந்தச் சேதாரமும் ஆகாமல் இந்த முரட்டுப் பீஸ்க் கிட்டறிந்து காப்பாத்திக்குடுத்திடு ப்ளீச்… இல்ல இல்ல… காப்பாத்திக் குடுக்குற, அவ்ளோதான் சொல்லிட்டேன்…” என்று தர்ஷி கடவுளிடம் அவசர வேண்டுதல் மின்னல் வேகத்தில் வைக்க,
இவளையே கணித்துக்கொண்டு இருந்த அவந்திகா, “வேண்டுதல் பலிக்காது…”என்று இடையீட,
தர்ஷி பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு, ” ப்ளீச்… ஐயம் யுவர் ஒன்லி ஒன் பெஸ்ட் ப்ரெண்ட்…” என்று கூறி சரணடைய,
அவளின் கழுத்தை அப்படியேத் திருப்பி, “கூடத்தில் இரவுச் சாப்பிட்டு வைத்த தட்டை எடுக்காமல் விட்டு, இப்போது அதில் எறும்புகள் வரிசையாக ஊர்வலம் போக, அங்கிருந்து சில எறும்புகள் தன் படைகளை திரட்டிக்கொண்டு அதது ஒருத் தனி ட்ராக் போட்டு, அவ்விடத்தை வலம் வந்து கொண்டிருந்தது.”
“சரி..சமாளிப்போம்…இவளைச் சமாளிக்கிறதுக்காகவே நாம இன்னும் நல்லாச் சாப்பிட்டு நம்ம உடம்பப்பார்த்து வச்சுக்கணும்..”
“ஹி..ஹி.. அது ஒன்னும் இல்ல அவந்திமா, இந்த எறும்புலாம் பாவம் இல்ல..அதான், அதோட நலன் கருதி சாப்பாடு வச்சேன்.. இது ஒரு குத்தமா… யுவர் ஹானர்…”
அவந்தி, ” தர்ஷ்…” என்று பல்லைக்கடிக்க
“மீ.. பாவம்.. காலைலயே ரொம்ப லெங்த்- ஆஹ் போது, இதோட நிப்பாட்டிகளாம்..”
“ஊப்..” என்று பெருமூச்சை ஒன்றி வெளியேற்றி, நேரத்தைப்பார்க்க அது 8 . 05 என்று காட்டியது.
“நான் போயிட்டு முதல்ல ரெடி ஆகுறேன். நீ ஒழுங்கா உன்னோட, பாசமலர் எறும்பு கூட்டத்த தொரத்திவிட்டு வர அவ்வளவு தான். அதுக்கு அப்பறம் தான், நீ போயிட்டு கிளம்புற சொல்லிட்டேன்…” என்று திட்டி விட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள்.
“அடியேய் தர்ஷ்.. உன்னிலைமையை பாத்தியா… இந்த ஒரு தட்டால, ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல…” என்று பேசிக்கொண்டே அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்க,
“இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு, எட்றைக்கு ரெடியா இல்லனா… உன்ன விட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்று அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.
“அடியேய் உன்ன…” என்று முணுமுணுத்து விட்டு, “வந்து சேருறேன். நான் எங்க எப்படி இருக்கவேண்டியவ… எல்லாம் உன்னாலதான்டி… என் மண்டையக் கழுவி இங்க கூட்டிட்டு வந்துட்டல்ல… உன்னைய அப்பறம் பாத்துக்குறேன்…” என்று கிளம்பச்சென்றாள்.
——–
அவந்திகா, தர்ஷினி இருவரும் எம். டெக்-இல் ஒரே கல்லூரியில் பயின்றனர். அப்போ ஆரம்பித்த நட்பு, இப்போதுவரை வளர்ந்துக் கொண்டே வருகிறது.
இவர்கள் இருவரும் வேற, வேற படிப்புப் பிரிவுகளை சேர்ந்தவர்கள். தர்ஷினி திருப்பூரைச் சேர்ந்தவள். எதார்த்தமாக விடுதியில் ஒரே அறையில் இடம் கிடைக்க, அங்கு ஆரம்பித்தது இவர்களின் நட்பு.
“இருவரும் எதிர் எதிர் குணங்களை கொண்டவர்கள்.” அவந்தி எதிலும் சுத்தம் மற்றும் பூரணமாக (perfect) இருக்கவேண்டும் என்று நினைப்பவள்.
தர்ஷிக்கு, “சுத்தம் என்றாலே காத தூரம் ஓடிவிடுவாள். எதிலும் ஒரு அலட்சியம் இருக்கும், பாத்துக்கலாம் என்று. அவந்தி இதற்கு நேர்மறை.” விடுதியிலிருந்து இப்போவரை அவந்தியிடம் இதற்காகவே மாட்டிக்கொண்டு முழிப்பாள்.
தர்ஷினி, எம் .டெக்-யின் முடிவில் கேம்ப்பஸ்சில் செலக்ட் ஆக, அவள் வீட்டில் போராடிப் பார்த்தும் ஹைதெராபாத் அனுப்பச் சம்மதிக்க வில்லை. வீட்டிற்கு ஒரே பெண். நீ வேலைக்கு போய்த் தான் சம்பாதிக்கணும்னு அவசியமில்லை என்றுவிட்டனர்.
தர்ஷினியின் வீட்டில் “அவந்தி சொல்றதக் கேட்டு நடந்துக்கோ..” என்று ஒரே வரியில் முடித்துவிடுவார்கள் அவளுடைய பெற்றோர். அந்த அளவிற்கு அவந்திக்காவின் மேல் அவர்களுக்கு பிரியம் உண்டு. அவள் தர்ஷியை நன்கு பார்த்துக்கொள்வாள் என்று அபரிவிதமான நம்பிக்கை. தர்ஷியும், அவந்தி சொன்னால் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
அவந்தி தான் இவளுக்கும் சேர்த்து இந்த கல்லூரியில் வேலைக்கு அப்ளை செய்து, அவளையும் இண்டெர்வியூ அட்டென்ட் பண்ண வைத்தது.
ஒன்றாக தேர்வானதும், இருவரும் சேர்ந்து கல்லூரிக்கு அருகாமையில், சுமார் இருபது நிமிட தொலைவிலுள்ள ஒரு வீட்டைப் பார்த்து அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு முதல் மாடியில் தங்கியுள்ளனர். வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்ல ஒரு ஸ்குட்டி ஒன்று வைத்துள்ளனர்.
இவர்கள் ஊருக்கு வராதப் பட்சத்தில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இருவருடைய வீட்டிலிருந்து வந்து ஒரு வாரம் இல்ல நான்கு நாட்கள் தங்கிவிட்டு செல்வார்கள்.
——
அவந்தி முதலில் கிளம்பி ” வண்டியை கிளப்பி ஒலியை எழுப்ப, வந்துட்டேன்..வந்துட்டேன்.. ” என்று ஓடி வந்து ஏறினாள். “இதுக்காகவே நான் ஒழுங்கா முதல்ல வண்டி ஓட்டக் கத்துக்குறேன்…” என்று சவால் விட,
“என்ன! மறுபடியும் முதல்ல இருந்தா… நீ இதுவரைக்கும் விழுந்து வாருனது பத்தலையா?… நீ எவ்வளோ அழகா வண்டி ஓட்டுவனு இந்த தெருவுக்கே நல்லாத் தெரியும். அதனால நீ வாயைமூடிட்டு இருந்தாப் போதும்…” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அவந்தி, “உன்னால ஊர்ல இருந்து எடுத்துட்டு வந்ததைக் கூட பேக்ல இருந்து எடுத்து வைக்கல..வத்தக்குழம்புலாம் இருக்கு, என்ன ஆகப்போதுனே தெரியல…”
“அடிப்பாவி… ஒரு அப்பாவிய காலைலே வச்சி செஞ்சிட்டு, இதுல திரும்பவும் என்னையவே நீ குத்தம் சொல்லுற… போடி இடியட்… இந்த கலவரத்துல நான் தண்ணிக் கூட ஒழுங்கா குடிக்கலை…”
” நீ அடப்பாவி தான்..”
“போடி… எதாவது சொல்லிடப்போறேன்..”
“சொல்லேன்… சொல்லித்தான் பாரேன்..”
“அவந்திக்கு வர வர வாய்ப் பேச்சு கூடிட்டேப் போது … இது நல்லதுக்கில்லையே..”
“யாருக்கு நல்லது இல்லை?…”
“வேற யாருக்கு இப்போதைக்கு இந்த அப்பாவிக்கு தான்..இன்னும் கொஞ்ச நாள் கழித்து, உன்கிட்ட எவன் மாட்டப் போறானோ.. அவனுக்கு வாழ்க்கை முழுசா..யாரு அந்த பாவப்பட்ட ஜீவன்னு தெரியல…”
“அடிங்க… இப்போ உன்ன, இந்த வண்டியிலருந்து தள்ளப்போறேன் பாரு..”
“ஹா ஹா ஹா…கண்டிப்பா!… என்னோட ஆழ்த்த அனுதாபங்களை சொல்லணும் வர போற அந்த அண்ணாவிற்கு…”
“தர்பூசணி…” என்று பல்லைக்கடித்தாள்.
இப்படி இவர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்தப்படியே சரியாக 8 . 55க்கு கல்லூரியின் உள்ளே நுழைய, தர்ஷி “ஹேய் இன்னும் 5 நிமிஷம் தான் இருக்கு கைரேகை (fingerprint) பதிய, நீ வண்டிய இப்போதைக்கு முன்னாடி நிறுத்திட்டு வா. வச்சிட்டு, சைன் போட்டுட்டு வந்து வண்டிய அதோட இடத்துல நிறுத்திக்கலாம். ஒன்பது மணிக்குள்ள இல்லனா அந்த ஆளு, லாஸ் ஆப் பே (loss of pay ) போற்றுவார்…” என்று பேசிக்கொண்டே சைன் போடும் இடத்திற்கு சென்றனர்.
பின்பு வண்டியை அதனுடைய இடத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே வராண்டாவிற்கு வந்து விட்டு, ” சரி, டாட்டா… ஈவினிங் கிளாஸ் முடிச்சிட்டு வண்டிகிட்ட வந்திடு…” என்று கூறி தர்ஷினியிடம் விடைபெற்று தன்னுடைய துறையை (department ) நோக்கி சென்றாள்…” அவந்தி.
தர்ஷ், “அவந்தி நில்லு… உனக்கு எந்த பீரியட் கிளாஸ் இன்னைக்கு…”
இவர்கள் பேசியப்படியே கேன்டீன் செல்ல, வழியில் ” ஹாய், அவந்திகா மேம்.. இன்னைக்கு லீவோன்னு நினைச்சேன்… ஆனால் வந்துடீங்க” என்று சிரிப்போடு கேட்க,
“எதுக்கு சார்?… லீவு எடுக்கணும் நான்…”
“இல்ல மேம்..லாங் வீக்கெண்ட்-னா எப்படியும் ஊருக்கு போயிருப்பீங்கள்ல, அதனால் ரெஸ்ட் எடுக்க லீவு போடுவீங்க நினைச்சேன்…”
“அப்படி எதும் இல்ல சார்.. சரி சார், பாக்கலாம்” என்று கூறிவிட்டு தர்ஷியுடன் சென்றாள்.
“ஏண்டி! இந்தப் பிரபாகர்க்கு என்னடி உன்மேல வர வர பாசம் பொங்குது.. உன்னையவே நோட் பண்ற மாறி இருக்கு.. ஒருவேளை ப்ரொபோஸ் எதும் பண்ணப் போறாரோ…”
“இப்போ என்ன சொல்லவர நீ…” என்று கடுகடுக்க,
“இல்ல… நானும் பக்கத்துல தான் நின்னேன்… பயப்புள்ள ஒரு மரியாதைக்கு கூட ஹலோ சொல்லல..அதான்…”
“அடப்போடி..பார்த்துக்கலாம்..”
“ஆனாலும் நாம கொஞ்சம் பாத்து தான் இருக்கணும்… உன்னோட பால்லோவெர்ஸ் (followers ) லிஸ்ட் கூடிட்டே போகுது…”
“நீயே எதையாது உளறாத தர்ஷ்… வா பசிக்குது சாப்பிடலாம்..”
“ஹ்ம்ம்.. சரி வா… பாத்துக்கலாம்.”
இருவரும் காலை உணவை முடித்துக்கொண்டு, “மதியத்துக்கு எனக்கு போர்த் ஹவர் இருக்கு, நேரமாகலாம்.. நீ சாப்பிட்டுக்கோ. நான் முடிச்சிட்டு வந்து பாத்துக்குறேன். கால் பண்ணாத…” என்று அவந்தியிடம் மொழிந்து விட்டு அவள் துறையை நோக்கி சென்றாள்.