“ஷ்ரவன், வெளில வா. இன்னும் உள்ள என்னடா பன்ற? முகூர்த்த நேரம் முடிய போகுது…” என்ற அமலாவின் குரலில் பட்டென கதவை திறந்தவன்,
“முடிஞ்சா மட்டும் போனா போகுதுன்னு என்னை விட்டுடுவீங்களா? புடிச்சு அந்த ஊர்நாட்டானுக்கு கட்டிவைக்க தான போறீங்க?…” என்று கோபத்தில் பொரிய,
“ப்ச், அவளை மாதிரி ஒருத்தி இந்த ஜென்மத்துல கிடைப்பாளாடா? அவ அருமை தெரியாம பேசாத…”
“சத்தியமா பத்து ஜென்மத்துக்கும் அவ வேண்டாம்னு தான் சொல்றேன்…” என்றவனின் கண்ணில் கண்ணீர் பொங்க,
“அழறியா ஷ்ரவன்?…” என அமலா அவனின் கண்ணை துடைக்க முகமெங்கும் தண்ணீரின் துளிகள் இருக்க அதை துடைக்க போனவரின் கையை தட்டிவிட்டவன்,
“என் வாழ்க்கையே போச்சேன்னு உட்கார்ந்து குமுறிட்டு இருந்தேன்…”
“ஆம்பளை புள்ளை அழலாமா?…”
“யார் சொன்னா? நான் அழுவேன். மூணுநாள் மூச்சு விடாம அழுதா இந்த கல்யாணத்தை நிப்பாட்டறேன்னு சொல்லுங்க. அப்பறம் எப்படி அழறேன்னு மட்டும் பாருங்க. நான் அழுவேன்…”
“என்ன பேச்சுடா இது? நீ போலீஸ்க்காரன்…”
“வீட்டுல மதிப்பில்லை. போலீசாம் போலீஸ். என்ன இருந்து என்ன பிரயோஜனம்? ஒருத்தருக்கும் பயமில்லாம போச்சுல….”
“அத்தை ஷ்ரவன் ரெடியா?…” என்று வந்த சங்கர் அவனின் முகத்தை பார்த்துவிட்டு,
“என்ன ஷ்ரவன் இது?…” என கேட்க,
“ஒண்ணுமில்லை அத்தான். கண்ணெல்லாம் எரிச்சல். வேர்த்துட்டே இருக்குது. அதான் முகத்தை கழுவினேன்…” என்று சமாளிக்க,
“ஓஹ், ஓகே ஓகே. நீ முகத்த துடைச்சுட்டு டச்சப் பண்ணிட்டு வா…”
“நீங்க போங்க அத்தான். இதோ நான் செய்யறேன்…” என்று அங்கே இருந்த ஒரு துவாலையை எடுத்து முகத்தை துடைத்தவன் தலையை சீவிவிட்டு முகத்திற்கு லேசாய் பவுடரை பூச,
“ரெடியா?…” என்று அவனின் பின்னால கையை கட்டியபடி நின்றான் சங்கர்.
‘கன் பாயிண்ட்ல கல்யாணம்ன்றது இதான் போல’ என்று நொந்துகொண்டான் ஷ்ரவன்.
—————————————————-
“வாசமல்லி வந்தாச்சு…” என்ற சிறு பெண்ணின் சத்தத்தில் தன்னிச்சையாக திரும்பி பார்த்தான் ஷ்ரவன்.
அரக்கு நிற பட்டில் தேரை போல அசைந்து வந்தவளின் தோற்றம் ஏதோ ஒரு வகையில் திருப்தியை தந்தது.
‘எந்த சாமி புண்ணியமோ அருக்காணி மாதிரி அண்ணாந்து பாத்த முடியோட வராம நீள முடியோட கொஞ்சம் பார்க்கிற மாதிரி தான் இருக்கா. ஆனாலும் இவளை புடிக்கலையே. என்ன ஏத்தம்? பொட்டப்புள்ளைக்கு பிடிவாதம். கட்டினா இவனைத்தான் கட்டுவேன்னு. அதுக்கு ஆமாம் சாமி போட ஒரு குடும்பம்’ என காதில் புகைவர அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
தன்னருகே வரும் வரை விழியகற்றாது அவளையே அவன் பார்க்க மெதுவாய் திரும்பி பார்த்தவள்,
“எல்லாரும் பாக்குறாங்க அத்தான். கூச்சமா இருக்கு…” என்று மெல்லிய குரலில் மொழிந்தவளை கண்டு அரண்டவன் திரும்பிக்கொண்டான்.
‘என்னடா ஷ்ரவா அசிங்கப்பட்டுட்ட? உன்னோட பார்வை பயத்தை குடுக்காம கூச்சத்தை குடுக்குதாமே?’ என்று மானசீகமாய் தலையிலடித்துக்கொண்டான்.
திருமாங்கல்யம் சுற்றி சுற்றி வர ‘ மெதுவாவே கொண்டு வாங்க. இன்னும் கொஞ்சம் கொஞ்சம் நேரம் போகட்டும் போகட்டும்’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு கண்ணை திறக்க,
“இந்தாங்கோ…” என ஐயர் தாலியை நீட்டினார்.
“அதுக்குள்ளே ஏன்யா கொண்டு வந்தீங்க?…” என்று சட்டென கேட்டுவிட்டவன் ஐயரின் அதிர்ந்த முகத்தையும் சுற்றியிருந்தவர்களின் பார்வையையும் கண்டவன் உடனே சுதாரித்து,
“இல்லை லேட்டா கொண்டு வந்துட்டீங்களேன்னு கேட்க வந்து டங் ஸ்லிப் ஆகி…” என்று சமாளித்தவன் தலையை வாங்கிக்கொண்டு பார்க்க கண்கள் மீண்டும் கலங்கும் போல இருந்தது.
———————————————
‘மம்மீ’ என உள்ளுக்குள் கதறிக்கொண்டே வாசமல்லியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
“பாரேன் எம்புட்டு ஆசைன்னு. மூணு முடிச்சையும் அவனே போட்டுட்டான்…” என பின்னால் இருந்து ஒரு உறவினர் சொல்ல,
“இருக்காதா பின்ன தேடி தேடி வந்து பிடிவாதமா நின்னு கட்டிக்கிட்டவனுக்கு நாத்தனார் முடிச்சுக்கு குடுக்கனும்னு தோணவா செய்யும்…” என்று இன்னொருவர் தாடையில் கைவைத்து சொல்ல,
‘அய்யய்யோ நம்பாதீங்க. வதந்தி. அம்புட்டும் வதந்தி” என கத்தவேண்டும் போல இருந்தது.
“நல்லா சிரிடா. நாளைக்கு உன் புள்ளைக்கு காட்டும் போது அப்பா அழுதுட்டே கல்யாணம் செஞ்சானான்னு கேட்க போறான்…” என நீலகண்டன் சொல்ல அவரை பல்லை கடித்துக்கொண்டு பார்த்தவன்,
“வந்தேன் அவ்வளவு தான்…” என வாயை மட்டும் அசைத்து சொல்ல நீலகண்டன் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.