பூ – 1
கோவை மாநகரின் மத்தியில் அமைந்திருந்தது அந்த திருமண மண்டபம். உறவுகள் சூழ முகூர்த்த நேர பரபரப்பு அப்படியே காணப்பட்டது.
வெளியே மேளச்சத்தம் காதை பிளக்க பாத்ரூமிற்குள் காதை பொத்திக்கொண்டு முகம் சிவக்க கண்ணீருடன் கதறிக்கொண்டு இருந்தான் ஷ்ரவன்.
இன்னும் சற்று நேரத்தில் ஒரு பெண்ணின் கணவனாக போகிறான். அதிலும் சுத்தமாக தனக்கு விருப்பமே இல்லாத ஒருவளுக்கு மாலையிட்டு வாழ்வின் சரிபாதிகாக மாற்றிக்கொள்ளவிருக்கிறான்.
நினைக்க நினைக்க உள்ளமெல்லாம் பற்றி எரிந்தது. இதிலிருந்து தப்புவதற்கும் மார்க்கமில்லை.
“ஷ்ரவன், வெளில வா. இன்னும் உள்ள என்னடா பன்ற? முகூர்த்த நேரம் முடிய போகுது…” என்ற அமலாவின் குரலில் பட்டென கதவை திறந்தவன்,
“முடிஞ்சா மட்டும் போனா போகுதுன்னு என்னை விட்டுடுவீங்களா? புடிச்சு அந்த ஊர்நாட்டானுக்கு கட்டி வைக்க தான போறீங்க?…” என்று கோபத்தில் பொரிய,
“ப்ச், அவளை மாதிரி ஒருத்தி இந்த ஜென்மத்துல கிடைப்பாளாடா? அவ அருமை தெரியாம பேசாத…”
“சத்தியமா பத்து ஜென்மத்துக்கும் அவ வேண்டாம்னு தான் சொல்றேன்…” என்றவனின் கண்ணில் கண்ணீர் பொங்க,
“அழறியா ஷ்ரவன்?…” என அமலா அவனின் கண்ணை துடைக்க முகமெங்கும் தண்ணீரின் துளிகள் வேறு இருக்க அதை துடைக்க போனவரின் கையை தட்டிவிட்டவன்,
“என் வாழ்க்கையே போச்சேன்னு உட்கார்ந்து குமுறிட்டு இருந்தேன்…”
“ஆம்பளை புள்ளை அழலாமா?…”
“யார் சொன்னா? நான் அழுவேன். மூணுநாள் மூச்சு விடாம அழுதா இந்த கல்யாணத்தை நிப்பாட்டறேன்னு சொல்லுங்க. அப்பறம் எப்படி அழறேன்னு மட்டும் பாருங்க. நான் அழுவேன்…”
“என்ன பேச்சுடா இது? நீ போலீஸ்க்காரன்…”
“வீட்டுல மதிப்பில்லை. போலீசாம் போலீஸ். என்ன இருந்து என்ன பிரயோஜனம்? ஒருத்தருக்கும் பயமில்லாம போச்சுல….”
“அத்தை ஷ்ரவன் ரெடியா?…” என்று வந்த சங்கர் அவனின் முகத்தை பார்த்துவிட்டு,
“என்ன ஷ்ரவன் இது?…” என கேட்க,
“ஒண்ணுமில்லை அத்தான். கண்ணெல்லாம் எரிச்சல். வேர்த்துட்டே இருக்குது. அதான் முகத்தை கழுவினேன்…” என்று சமாளிக்க,
“ஓஹ், ஓகே ஓகே. நீ முகத்த துடைச்சுட்டு டச்சப் பண்ணிட்டு வா…”
“நீங்க போங்க அத்தான். இதோ நான் செய்யறேன்…” என்று அங்கே இருந்த ஒரு துவாலையை எடுத்து முகத்தை துடைத்தவன் தலையை சீவிவிட்டு முகத்திற்கு லேசாய் பவுடரை பூச,
“ரெடியா?…” என்று அவனின் பின்னால கையை கட்டியபடி நின்றான் சங்கர்.
‘கன் பாயிண்ட்ல கல்யாணம்ன்றது இதான் போல’ என்று நொந்துகொண்டான் ஷ்ரவன்.
கண்ணாடியில் இருந்து பின்னால் நிற்பவனை பார்க்கவே அத்தனை கம்பீரமாய் இருந்தது. அவனை கொண்டே ஷ்ரவனின் போலீஸ் மீதான ஆசையும், கனவும் இன்னும் அதிகமானது.
சங்கர் நீலகண்டனின் சொந்த ஊர்க்கார பையன் மட்டுமல்லாது உறவினனும் கூட. இப்போது இன்னும் நெருக்கமான சொந்தமும் ஆகவிருக்கிறது.
கோவையில் அசிஸ்டன்ட் கமிஷனராக சங்கர் பணிபுரிய ஊட்டியில் இன்ஸ்பெக்டராக சங்கரை பின்பற்றி வேலையில் சேர்ந்தான்.
அனைத்தும் அவன் விருப்பம். விரும்பியவற்றையே செய்ய செய்ய அவனின் மறுப்புகள் எப்படி இருக்குமென்பது கூட அவனுக்கு மறந்துவிட்டிருந்தது.
‘பிடித்திருக்கிறதா? சரி. செய்துகொள்’ இப்படியான பதில்கள் மட்டுமே அவனின் விருப்பத்திற்கு தோகை விரித்திருக்க அனைத்திற்கும் சிகரம் வைப்பதை போல எல்லாவற்றிலும் விட்டுகொடுத்தவர்கள் அவனின் திருமணத்தில் மொத்தமாய் இறுக்கி பிடித்தார்கள்.
“அம்மா அவ பத்தாங்க்ளாஸ் தாண்டலையாமே…” என்று பெற்றோரிடத்தில் வாதாட,
“அது ஒரு பெரிய விஷயமாடா?…” நீலகண்டன் பெரிதுபடுத்தாமல் பேச,
“பொட்டப்புள்ளைய அதுக்கு மேல என்ன படிக்க வைக்கிறதுன்னு பிற்போக்கா நினைச்சிருப்பாங்களா இருக்கும். ஊரை பார்த்தாலே தெரியுதே…” என ஷ்ரவனாய் அர்த்தம் கற்பிக்க,
“நினைச்சது என்னவோ உண்மை தான். ஆனா அதை சொன்னது நம்ம புள்ளை தான். படிச்ச வரைக்கும் போதும்னு தோணிடுச்சாம்…”
“புள்ளையாம் புள்ளை. விட்டா தொட்டில கட்டினாலும் கட்டிடுவாங்க…” என்றவனின் முணுமுணுப்பு சத்தமாக கேட்டாலும் யாரும் அதை மதிக்கவில்லை. அதுதான் உண்மை.
“இங்க பாரு தம்பி, உன்னை விரும்பற உன் மேல உயிரா இருக்கற ஒரு பொண்ணு கிடைக்க நீ தான் குடுத்து வச்சிருக்கனும்…” என்று வாயை அடைத்துவிட்டார் நீலகண்டன்.
கண்டித்து பேசியிராதவர் அவனிடம் அப்படி பேசவும் அந்த கோபமும் அவளிடம் தான் சென்றது.
அதிலும் திருமணத்தை ஏற்று நடத்துவது சங்கர் என்பதிலேயே பாதி மறுப்பு மழுங்கடிக்கப்பட்டது. வீட்டினராவது சங்கரிடம் பேசி வேண்டாம் என்றோ தள்ளி போட சொல்லலாம் என்றோ நினைத்தால் அதற்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது அவளால்.
“நான் சொன்னேனே, கொஞ்சம் நாள் தள்ளி போடலாம்னு, பேசறதை வேண்டாம்னு. நான் சங்கர் கிட்ட சொல்லி வீட்டுல பேச அதுக்குள்ள பாப்பா மருந்தை குடிக்க போய்ட்டா. உனக்காக உசுர விட துணிஞ்சுட்டா…” என்று அமலா சொல்லி அழ ஷ்ரவன் தலையில் இடி விழுந்ததை போல் ஆனது.
“ஷ்ர்வன், ஷ்ரவன்…” என்று சங்கர் அவனின் தோள் தொட்டு அழைத்ததும் தான் தன்னுணர்வு வந்து திரும்பி பார்த்தான்.
“போகலாமா?…”
“ஹ்ம்ம், போலாம் அத்தான்…” என்றவன் அவனின் கையை பிடித்துக்கொண்டு பலியாடு போல மெதுவாய் சென்றான்.
சங்கர் மட்டும் இல்லை என்றால் எப்பாடுபட்டாவது நிறுத்தியிருப்பான். நீயுமாச்சு உன் சொந்தமுமாச்சு என்று. ஆனால் அப்படி சங்கரிடம் பார்வையால் கூட சொல்லமுடியவில்லை. அந்தளவிற்கு அவன் மீது அப்படி ஒரு மதிப்பும், பக்தியும் வைத்திருந்தான் ஷ்ரவன்.
பார்த்து பழக்கம் சிறிது காலமென்றாலும் சங்கரின் மேல் அளவுகடந்த அன்பு ஷ்ரவனுக்கு. சொந்தம் என்பதையும் தாண்டி அவனை அப்படி ஒரு இடத்தில் வைத்திருந்தான் அவன்.
சங்கர் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று முழுமையாக நம்பினான் ஷ்ரவன்.
முதலில் அவனை தங்கள் இல்லத்தில் வைத்து பார்த்தபோதே அவனின் ஆளுமையான தோற்றத்தில் ஈர்க்கப்பட்டான். அதிலும் சங்கரின் அறிவார்த்தமான பேச்சு திறனும், அவனின் நடைவுடையும் ஒரு ஹீரோவை போல என்ன வைத்தது.
ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியவேண்டும் என்று மனதில் ஓரத்தில் இருந்த சிறு தீ ஷ்ரவனை பெரிதாய் சூழ்ந்துகொண்டது.
அதற்கு தீனி போட்டது சங்கர். மேலும் மேலும் ஷ்ரவனின் அந்த எண்ணத்திற்கு வலு சேர்த்தான்.
எங்கோ ஹரியானாவில் இருந்த குடும்பத்தினர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் சங்கரை தற்செயலாக தமிழ் பையன் என்று சந்திக்க அன்றைய பேச்சுக்களில் அது ஊர் சொந்தத்தில் வந்து நின்றது.
சொந்தம் என்றதும் இன்னுமே நெருக்கமாகி போக சங்கர் அங்கிருந்தவரை அவர்கள் இல்லம் வந்து செல்ல, அவினாசியில் ஒரு கிராமத்தில் இங்கிருக்கும் விட்டுப்போன உறவுகளும் பேச ஆரம்பிக்க சொந்தங்கள் மீண்டும் கிடைத்துவிட்டதில் நீலகண்டன் குதூகலித்து போனார்.
தான் சிறுவயதில் இருக்கும் பொழுது பார்த்து பழகிய உறவுகள், தாய் தந்தை இருக்கும் வரை ஊருக்கு எப்போதாவது வந்து சென்றுகொண்டு இருந்தவர் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் தொடர்பு விட்டு போய் இருந்தது.
நினைத்துக்கொள்வார் அவ்வப்போது. போகவேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு வாய்ப்பில்லாமல் அப்படியே விட்டுப்போனது. ஆனாலும் அவரின் ஊர் மேல் அப்படி ஒரு பாசம்.
ஒரு வருடத்திற்கு முன்பு மாற்றலாகி ஊட்டிக்கு மகன் காவலதிகாரியாக வந்திருக்க நீலகண்டனோ ஹரியானாவிற்கு ஒரு கும்பிடை போட்டுவிட்டு அங்கிருக்கும் நிலபுலன்களை எல்லாம் விற்றுவிட்டு ஹாயாக கோவை வந்து அமர்ந்துவிட்டார்.
அவினாசிக்கே சென்றிருப்பார் தான். இங்கே கோவையில் பால்யநண்பன் ஒருவனின் இல்லம் நல்ல விலைக்கு வரவே வாங்கி அங்கேயே இருந்துகொண்டார். திருப்திக்கும் திருப்தி. நினைத்த நேரமெல்லாம் அவினாசி பயணம் தான்.
சங்கரிடம் இருந்த ஒரு ஒட்டுதல் ஷ்ரவனுக்கு அவனின் ஊருக்கு செல்ல வர என்று இல்லாமல் போனது. நீலகண்டனின் வற்புறுத்தலுக்காக கோவிலுக்கு சென்றவனின் பயணம் இதோ திருமணத்தில் வந்து நிற்கிறது.
ஒரே ஓர்முறை மட்டுமே சென்றதன் விளைவு இங்கு வந்து நிற்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. உட்கார்ந்து புலம்பிக்கொண்டு இருந்தான் இப்போது. தனது திருமணம் இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
‘இவங்களுக்கா தெரியனும் யாருக்கு யாரை கட்டிவைக்கனும்னு. பொருத்தமில்லாத கல்யாணம். வரட்டும் இருக்கு அவளுக்கு.’ என மனதிற்குள் கருவியபடி ஹோமகுண்டத்தின் முன்னால் அமர்ந்து இருந்தான்.
‘ஆளும் மூஞ்சியும். நான் பண்ணின பெரிய தப்பு அவங்க ஊருக்கு போனது தான். தப்பு பண்ணிட்டேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். போயிருக்கவே கூடாது. போனதால தான மயங்கி என்னை தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்து என் தலைமேல ஏறி உட்கார்ந்துட்டா.’
நினைக்க நினைக்க ஆறவில்லை. வாய்விட்டு யாரிடமும் சொல்லமுடியாத வேதனை ஒருபக்கம்.
போதாததிற்கு சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதை போல காட்டிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறதே என்னும் எரிச்சல் ஒரு பக்கம்.
இப்படி கையை காலை கட்டி கல்யாணம் செய்து வைக்கிறார்கள் என்று வெளியில் தெரிந்தால் என் மதிப்பு என்னாவது என்னும் சஞ்சலம் ஒருபக்கம்.
இப்படி பல மனநிலையில் சுழன்றுகொண்டிருந்தவனின் மனதை போலவே எதிரே இருந்த ஹோமத்தில் அக்னி தகித்துக்கொண்டு இருக்க,
“வாசமல்லி வந்தாச்சு…” என்ற சிறு பெண்ணின் சத்தத்தில் தன்னிச்சையாக திரும்பி பார்த்தான் ஷ்ரவன்.
அரக்கு நிற பட்டில் தேரை போல அசைந்து வந்தவளின் தோற்றம் ஏதோ ஒரு வகையில் திருப்தியை தந்தது.
‘எந்த சாமி புண்ணியமோ அருக்காணி மாதிரி அண்ணாந்து பாத்த முடியோட வராம நீள முடியோட கொஞ்சம் பார்க்கிற மாதிரி தான் இருக்கா. ஆனாலும் இவளை புடிக்கலையே. என்ன ஏத்தம்? பொட்டப்புள்ளைக்கு பிடிவாதம். கட்டினா இவனைத்தான் கட்டுவேன்னு. அதுக்கு ஆமாம் சாமி போட ஒரு குடும்பம்’ என காதில் புகைவர அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
தன்னருகே வரும் வரை விழியகற்றாது அவளையே அவன் பார்க்க மெதுவாய் திரும்பி பார்த்தவள்,
“எல்லாரும் பாக்குறாங்க அத்தான். கூச்சமா இருக்கு…” என்று மெல்லிய குரலில் மொழிந்தவளை கண்டு அரண்டவன் திரும்பிக்கொண்டான்.
‘என்னடா ஷ்ரவா அசிங்கப்பட்டுட்ட. உன்னோட பார்வை பயத்தை குடுக்காம கூச்சத்தை குடுக்குதாமே?’ என்று தலையிலடித்துக்கொண்டான்.
திருமாங்கல்யம் சுற்றி சுற்றி வர ‘ மெதுவாவே கொண்டு வாங்க. இன்னும் கொஞ்சம் கொஞ்சம் நேரம் போகட்டும் போகட்டும்’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு கண்ணை திறக்க,
“இந்தாங்கோ…” என ஐயர் தாலியை நீட்டினார்.
“அதுக்குள்ளே ஏன்யா கொண்டு வந்தீங்க?…” என்று சட்டென கேட்டுவிட்டவன் ஐயரின் அதிர்ந்த முகத்தையும் சுற்றியிருந்தவர்களின் பார்வையையும் கண்டவன் உடனே சுதாரித்து,
“இல்லை லேட்டா கொண்டு வந்துட்டீங்களேன்னு கேட்க வந்து டங் ஸ்லிப் ஆகி…” என்று சமாளித்தவன் தாலியை வாங்கிக்கொண்டு பார்க்க கண்கள் மீண்டும் கலங்கும் போல இருந்தது.
‘மம்மீ’ என உள்ளுக்குள் கதறிக்கொண்டே வாசமல்லியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
“பாரேன் எம்புட்டு ஆசைன்னு. மூணு முடிச்சையும் அவனே போட்டுட்டான்…” என பின்னால் இருந்து ஒரு உறவினர் சொல்ல,
“இருக்காதா பின்ன தேடி தேடி வந்து பிடிவாதமா நின்னு கட்டிக்கிட்டவனுக்கு நாத்தனார் முடிச்சுக்கு குடுக்கனும்னு தோணவா செய்யும்…” என்று இன்னொருவர் தாடையில் கை வைத்து சொல்ல,
‘அய்யய்யோ நம்பாதீங்க. வதந்தி. அம்புட்டும் வதந்தி” என கத்தவேண்டும் போல இருந்தது.
“நல்லா சிரிடா. நாளைக்கு உன் புள்ளைக்கு காட்டும் போது அப்பா அழுதுட்டே கல்யாணம் செஞ்சானான்னு கேட்க போறான்…” என நீலகண்டன் சொல்ல அவரை பல்லை கடித்துக்கொண்டு பார்த்தவன்,
“வந்தேன் அவ்வளவு தான்…” என வாயை மட்டும் அசைத்து சொல்ல நீலகண்டன் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.
அவரை முறைத்துவிட்டு திரும்பியவனின் பார்வையில் வெட்கத்தில் சிவந்த முகத்துடன் இருந்தவளின் கோலம் இன்னும் எரியும் தீயில் எண்ணையை ஊற்றியது.
‘இப்ப இவ எதுக்கு இப்படி நாணி கோணுறா?’ என்று கடுப்புடன் மூஞ்சியை திருப்பி போட்டோவுக்கு ஈஈஈ என்று அத்தனை பற்களையும் காட்டினான்.
“ஷ்ரவன்?…” என்ற சங்கரின் கேள்வியான பார்வையில்,
“அத்தான்…” என்று சுதாரித்து மென்மையாக புன்னகைத்தான்.
சடங்குகள் ஆரம்பிக்கப்பட ஒவ்வொன்றாய் மனதே இல்லை என்றாலும் கடைமைக்கேனும் செய்துகொண்டிருக்க அருகில் இருந்தவளோ அத்தனை ஆர்வத்துடனும் லயிப்புடனும் செய்துகொண்டு இருந்தாள்.
அதிலும் முகம் முழுவதும் வெளிப்படையான மகிழ்ச்சியும், பூரிப்பும், சிறு நாணமும் அவளை கொண்டாடிக்கொண்டு இருந்தது.
மண்டபத்தை விட்டு கிளம்பியவர்கள் நேராக வாசமல்லியின் இல்லத்திற்கு செல்வதற்கு பதில் உடன்பிறவா அண்ணனான சங்கரின் இல்லத்தில் சம்பிரதாயத்தை முடித்துக்கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டு ஷ்ரவனின் வீட்டிற்கு சென்றார்கள்.
இதுவும் நீலகண்டன் ஏற்பாடு தான். அவினாசி வரை சென்று வந்துதிரும்புவது ஆகாதென்று இங்கேயே சம்பிரதாயத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்தார் சங்கருடன் பேசி.
வாசமல்லியின் வீடு அவினாசியில் ஒரு சிறிய கிராமம். அங்கு சென்று வருவதானால் நேரமாகிவிடுமே என்று இப்படி மாற்று யோசனை.
இரவு உணவை முடித்துவிட்டு வாசமல்லிக்கு அலங்காரம் செய்ய ஷ்ரவன் தன்னறைக்கு சென்றுவிட்டான். அறையில் இருந்த அலங்காரத்தை பார்த்தவனுக்கு மூச்செல்லாம் முட்டியது.
‘இது ஒண்ணுதான் குறை’ என எரிச்சலுடன் இடுப்பில் கைவைத்து சில நொடிகள் நின்றவன் பின் மனதை மாற்ற டிவியை ஆன் செய்து ஒற்றை இருக்கையில் அமர்ந்தான்.
“வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க. கட்டுக்கத அத்தனையு கடுக்கத…” என்ற பாடல் திரையில் வர ரிமோட்டை தூக்கி போட்டு உடைக்கும் ஆத்திரம் கிளர்ந்தது.
கதவு தட்டப்படும் ஓசையில் திரும்பியவன் அவள் உள்ளே வருகிறாள் என புரிந்து ரிமோட்டை தூக்கி வீச,
“நிலவை கொண்டு வா…” என்ற அடுத்த பாடல் ஒலிக்க பதறி போய் டிவியை அணைத்தான்.
வாசமல்லி உள்ளே வந்ததுமே அந்த பாட்டை பார்த்துவிட்டு, அத்தோடு ஷ்ரவன் பதறி அதை அணைத்ததையும் பார்த்து க்ளுக்கென்று சிரிக்க,
“என்ன என்ன சிரிப்பு?…” என்றான் முறைப்புடன்.
“இல்ல ஒண்ணுமில்ல…” என்றவள் அந்த அறைய சுற்றி பார்க்க ஷ்ரவன் அவளைத்தான் பார்த்தான்.
“பார்த்து முடிச்சிட்டியா? உன்கிட்ட கொஞ்சம் பேசனும்…” என்று அதே விரைப்புடன் சொல்ல, பால் சொம்பை டீப்பாயில் வைத்தவள் தொண்டையை செருமிக்கொண்டு,
“மை நேம் இஸ் வாசமல்லி அத்தான். மை அத்தான் நேம் இஸ் சரவன். டுடே ஐ மேரேஜ் அத்தான். அத்தான் ரொம்ப ஆங்ரி…” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் எதையோ மறந்ததை போல யோசித்துவிட்டு ஞாபகத்திற்கு வராமல் அவனிடம் உதடு பிதுக்க ஷ்ரவன் பேச வந்ததையே மறந்து அவளின் ஆங்கில புலமையில் வாய் பிளந்து நின்றான்.
“ஆஹா அத்தான் மடங்கிட்டார்…” என குதூகலமாக சொல்லியவளை பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியாமல் திகைப்புடன் இருந்தவன்,
“உனக்கு இதை யார் சொல்லி தந்தா?…” என்றான் பேச வந்ததை மறந்து.
“மதினி தான்…” என்றதுமே இன்னும் பல்லை கடித்தான் அவன்.
இதற்கு மொத்த காரணமும் அபர்னிதா. சங்கரின் மனைவி. பல்லை கடித்தவன் மனைவிடம் திரும்பினான்.
“அவ சொன்னா நீ கேட்பியா? இனி என் பேச்சை தான் நீ கேட்கனும். புரியுதா?…” என்று பேச,
“ஹ்ம்ம், யூ டெல்லிங் அத்தான். ஐ டூ…” என்று அதற்கும் அவள் அப்படியே பதிலளிக்க வேகமாய் அவளின் கழுத்தை பிடிப்பதை போல வந்தவன்,
“ப்ச், இங்க பாரு. இப்படிலாம் நீ பேசனும்னு அவசியமில்லை வாசு…” என சிறுபிள்ளைக்கு சொல்வதை போல அவன் சொல்ல,
“இப்படி பேசினா தான் உங்களுக்கு புடிக்குமாமே. இது தெரிஞ்சிருந்தா…” என்றவளின் பேச்சில் இடையிட்டு,
“தெரிஞ்சிருந்தா ஒழுங்கா ஸ்கூலுக்கு போயிருப்பியா?…” என கேட்க,
“ச்சீ ச்சீ. தனியா நாலு வார்த்தை இப்ப கத்துகிட்டதை அப்பவே கத்திருந்திருப்பேன்…” என்று பெருமிதமாய் சொல்ல,
“கத்தி தான் இருந்திருப்ப. அதுசரி. அப்ப கூட படிக்க மாட்ட. அப்படித்தான…” என்றவனுக்கு பதில் சொல்லாமல் முகத்தை சுருக்க அதை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“காலையில இருந்து உம்முன்னு இருந்து இப்ப சிரிக்கையில இங்க குழி தெரியுது அத்தான்…” என்றாள் அவனின் கன்னத்தை பார்த்தபடி.
அதுவரை இலகுவாய் இருந்தவன் மனநிலை சட்டென மாறிட முகமும் இறுக்கம் சூழ்ந்தது.
“குழிதான். குதிக்கிறியா அதுல?…” என கடுப்பாய் கேட்டவன்,
“இங்க பாரு வாசு. உன்கிட்ட பேசனும்னு சொன்னேனே. தெளிவா கேளு. இந்த கல்யாணத்துல…”
“உங்களுக்கு என்னை பிடிக்கல. அதான அத்தான்?…” என்றாள் அவள் பளிச்சென்று.
அவள் என்னவோ சாதாரணமாக கேட்டுவிட்டாள். அவளுக்கு பதில்சொல்ல வேண்டியவன் தான் எச்சிலை கூட்டி விழுங்கியபடி ‘ஆமாம்’ என தலையசைக்க,
“அதான் எனக்கு தெரியுமே…”
“தெரியுமா? நிஜமா தெரியுமா?…” என அதிர்ச்சியுடன் அவளிடம் கேட்டான்.
அவனுக்கு இந்த விஷயம் தெரியாதே. வாசமல்லிக்கு தெளிவாய் புரிந்திருந்தது அவன் தன்னை சரியாக கூட பார்க்கவில்லை முதல்முறையே. அதன் பின்னும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. எல்லாமே தெரிந்தது.
“தெரிஞ்சும் நீ உனக்கு ஒன்னுமில்லையா?…” என அவன் கேட்க,
“உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை. ஆனா எனக்கு உங்களை பிடிச்சுருக்குதே. அது போதும்ல…” என்றவள் பேச்சு ஷ்ரவனை மேலும் பேசவிடாமல் செய்ய அவளை ஆழ்ந்து பார்த்தான்.
இப்படி ஒரு குணாதிசயத்தில் அவன் யாரையும் கண்டதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதை பொருட்படுத்தாமல் எனக்கு பிடிச்சா போதுமென சொல்பவளை என்ன செய்ய என்று ஆயாசத்துடன் நின்றான்.
“உனக்கு அது கஷ்டமா இல்லையா?…”
“என்ன கஷ்டம்? அதெல்லாம் எதுவுமில்லை…” என பளிச்சென சொல்லியவள்,
“நான் போயி தூங்கட்டா?…” என கேட்டு இதற்குமே அவனின் பதிலை எதிர்பாராமல் கட்டிலில் ஏறி படுத்துவிட அசையாமல் நின்றான் ஷ்ரவன்.
திருமணத்திற்கு முன் ஒரு முறை பார்த்திருக்கிறான். அதன் பின் இன்று காலை. அவ்வளவு தான். முதல் சந்திப்பில் கூட அவளின் முகத்தை காணாது அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை. அதுவும் அது அவளிடத்தில் இல்லாது பொதுவாய் மற்றவர்களை பார்த்து பேசியது.
“இந்த மெகந்தி ரொம்ப அழகா இருக்கே…” என அங்கே கழன்று விழுந்த தன்னுடைய மோதிரத்தை எடுத்து தன் முன் நீட்டியவளிடம் அவளின் கையை பார்த்துக்கொண்டே சிரித்தபடி அவன் சொல்லியது.
“இது மருதாணி…” என்றவளின் குரலை கூட அவன் கவனிக்கவில்லை. அவ்வளவே தான். எந்த ஒரு பேச்சுக்களும் அவளிடத்தில் இருந்ததில்லை.
இன்று மேடையில் கூட அவளாகத்தான் அவனின் பார்வையை கண்டு பேசியது. இப்படி அவனின் மனநிலைக்கு மாறாக அவனை நடக்க செய்துகொண்டிருந்தாள் வாசமல்லி.
படுத்த நொடி அவள் உறங்கிவிட தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஷ்ரவன்.
பின் வெகு நேரம் அமர முடியாமல் எழுந்து கட்டிலில் மறுபக்கத்தில் வந்து படுத்தவன் மெல்லிய விளக்கொளியில் உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்தவன் ‘இனி இவளுடன் தான் என் வாழ்க்கையா?’ என்ற யோசனையோடே உறங்கி போனான்.
மறுநாள் கொலுசு சத்தமும் வளையல் சத்தமும் சரசரவென கேட்க அந்த லேசான சத்தத்திலும் உறக்கம் கலைந்து எழுந்தவன் பார்வை அங்கே குளித்து தலையை துவட்டிக்கொண்டு இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தவள் மேல் படிந்தது.
ஷ்ரவன் முழித்துவிட்டதை பார்த்தவள் முகம் மலர அதே மலர்ச்சியுடன் அவனின் முன்னால் வந்து நின்றாள்.
“குட்மார்னிங் அத்தான். டுடே குட் டே. நைஸ் டே. அப்புறம்…” என்று தொடங்க, ‘ஐயோ’ என்னும் அலறலுடன் மீண்டும் படுத்து போர்வைக்குள் தலையை நுழைத்துக்கொண்டான் ஷ்ரவன்.