பூ -13
ஐந்து மாதங்கள் கடந்திருந்தது. இதற்கிடையில் இருமுறை ஊட்டிக்கு வந்துவிட்டு சென்றிருந்தாள் அபர்னிதா. வந்தவளிடம் சுமூகமாக தான் பேசி அனுப்பினாள் வாசமல்லி.
இதோ மூன்றாம் முறை வரவு. இந்த தடவை சித்ராவும் கிளம்பி வரவிருந்தார் அபி வந்திருப்பதை அறிந்து. திடீரென யாரிடமும் சொல்லாமல் ஆதவை கூட்டிக்கொண்டு அவள் வந்துவிட ஷ்ரவனுக்கே அதிர்ச்சி தான்.
“என்ன அபி ஒரு போன் கூட பண்ணலை…” என கதவை திந்து வைத்திருந்தவன் கேட்க,
“என்னை வராதன்னு இங்க யாராலையும் சொல்ல முடியாது தானே? எனக்கு இங்க வர எல்லா உரிமையும் இருக்குது. அப்பறம் என்ன?…” என்றவள் நேராக வாசமல்லியை தேடி செல்ல பின்னால் நாதனின் மனைவி அழகுவோடு சேர்ந்து செடிகளுக்கு உரம் வைத்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன வாசு? இதை பார்த்துட்டு தான் ஊர்ப்பக்கம் வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்தியா?…” என்று நக்கலாக கேட்க,
“வாங்க மதினி…” என்றாள் அவளும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.
“நான் வந்துட்டேன். நீ தான் இன்னும் அந்த இடத்தை விட்டு வரலை. சரி வந்து எனக்கொரு டீ போட்டு தா…” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.
“ஏங்கண்ணு இந்த பொண்ணு உனக்கு சொந்த அண்ணன் பொண்டாட்டியா? இல்ல தம்பிக்கு கூட பொறந்த பொறப்பா? எப்ப பாத்தாலும் இங்கயே பொட்டிய தூக்கிட்டு வருது?…” என்று அழகு சொல்ல,
“இருக்கட்டும்க்கா. அவங்களும் எங்க போவாங்க? பையனுக்கு லீவா இருக்கும்….” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக,
“நாளைக்கு நீங்க எங்கையோ வெளியூர் போறதா தம்பி என் வீட்டுக்காரர்ட்ட சொல்லிட்டிருந்துச்சே கண்ணு…” என அழகு கேட்க,
“ஹ்ம்ம், ஆமா. சரி நீங்க கையை கழுவிட்டு வாங்க. நான் உங்களுக்கும் டீ தரேன்…” என்று அவள் உள்ளே வந்துவிட அழகு தனது இடுப்பில் சொருகியிருந்த போனை எடுத்து சித்ராவிற்கு அழைத்துவிட்டார்.
சித்ரா அழகுவிடம் ஏற்கனவே பலமுறை பேசிருக்க தெரிந்தவரின் நம்பர் இருப்பது நல்லது என்று வாங்கி வைத்திருந்தார்.
அவ்வப்போது அழகுவிற்கும் அழைத்து பேசிக்கொள்வர் சித்ரா. அதில் அவர்களுக்கிடையே ஒரு நட்பும் உருவாக்கி இருந்தது.
“அக்கா…” என்று சித்ரா போனை எடுத்ததும் அழகு சொல்ல,
“என்ன அழகு இந்நேரம்? குரலு ஒரு மாதிரியா இருக்கே…” என்றார் அவரும்.
“இங்க நம்ம புள்ளைக்கு ஒத்தாசையா வந்தேன்…”
“அப்படியா?…” என்றவர் அழகுவின் குரலில் இருந்த மாறுபாட்டில்,
“அழகு மல்லிக்கு ஒண்ணுமில்லையே…” என தாயாய் பதறி கேட்க,
“இனிமேத்தான் எதாச்சும் ஆவப்போவுது. அந்த புள்ள அபி அது புள்ளையோட வந்திருக்குது. போன மாசம் தான் வந்து நாலு நாள் இருந்துட்டு போச்சு. இப்ப திடுதிப்புன்னு வந்திருச்சு…” என சொல்ல,
“அப்படியா? என்னன்னு தெரியலையே…” என்றவருக்குமே எரிச்சலாய் வந்தது.
“அது என்னமோ வந்ததும் நம்ம பொண்ணுக்கிட்ட அதிகாரம் பண்ணுதும்மா. வந்துச்சு, நக்கலா பேசுச்சு. வந்து டீ போட்டுக்குடுன்னு சொல்லிட்டு போகுது. என்னம்மா இதெல்லாம்?…” என அக்கறையுடன் அவர் பேச ஒன்றும் செய்யமுடியாத இடத்தில் இருப்பதை நினைத்து சித்ராவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
முதல் தடவை அபி வந்த பொழுது தற்செயலாக சித்ரா போன் செய்ய அபி மல்லியின் போனை எடுத்ததும் ஆச்சர்யத்துடன் எப்போது வந்தாய் என சித்ரா கேட்டதற்கு,
“ஏன் அத்தை? நான் வரக்கூடாதா? ஆதவ் வரனும்னு சொன்னான். அதான் லீவ் இருக்கேன்னு கிளம்பி வந்தேன். நீங்க என்னன்னா ஏன் வந்தன்னு கேட்கற மாதிரியே இருக்கே?…” என்று சாதாரணமாய் சொல்வதை போல பேசிவிட பதறி போனார் இவர்.
“இப்பவே சொல்லுங்க நான் வேணும்னா கிளம்பி போய்டறேன். இப்படி வந்ததுக்கு எல்லாம ஏன் வந்தன்னு கேட்கற மாதிரி பேசாதீங்க அத்தை…” என்று சொல்ல,
“என்ன அபி இது? நான் என் பொண்ணுக்கு போன் பண்ணேன். நீ எடுத்த. நீ வந்ததே தெரியாதுன்னு தான எப்ப வந்தன்னு கேட்டேன். நீ ஏன் வாய்க்கு வந்தபடி பேசற? நான் எப்ப நீ அங்க போக கூடாதுன்னு சொன்னேன்?…” என்று வேகமாய் கேட்டதும்,
“ஐயோ அத்தை நான் அப்படி சொல்லலை. நீங்க அப்படி கேட்டீங்கன்னு நான் எப்ப சொன்னேன்? வாசுவுக்கு தொந்தரவா இருக்கும்னு நீங்க நினைப்பீங்களோன்னு எனக்கு சட்டுன்னு தோணுச்சு. அந்த அர்த்தத்துல தான் சொன்னேன். நீங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க…” என்று மாற்றி மாற்றி பேச சித்ராவிற்கு வயிற்றை கலக்கியது.
அபி அந்த முறை அங்கு இருந்தவரை மகளிடம் பேசுவதானால் அவளை தாண்டித்தான் பேசவேண்டி இருந்தது.
“மல்லி, என்னடி இது? எப்ப போன போட்டாலும் அவ தான் எடுக்கறா. நீயும் ரெண்டு வார்த்தையில போன வச்சிடற…” என்று சொல்லி எச்சரிக்கவும் செய்ய வாசுவிற்கு புரியத்தான் செய்தது அபியின் இந்த நடவடிக்கைகள் எதனால் என்று.
நடு இரவில் எழுந்து தன்னுடைய போனை பார்ப்பதும், சங்கருக்கு அந்த நேரத்தில் அழைத்து அவன் எடுத்ததும் தவறுதலாய் அழைத்ததாய் சொல்லி வைத்துவிடவும் என்று அவள் பண்ணிய அட்டகாசம் ஏராளம்.
இப்போது இந்த முறையும் கிளம்பி வந்திருக்க சித்ராவிற்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை.
“இந்த இளிச்சவாய் புள்ளைய பெத்ததுக்கு நாலு உப்பு மூட்டய பெத்துருக்கலாம். இங்க ஒரு நிம்மதியா இருக்க முடியுதா?…” என வாய்விட்டு புலம்பியபடி தானும் ஊருக்கு கிளம்ப பார்க்க,
“இப்ப என்ன ஆச்சுன்னு இந்த ஆட்டமா ஆடிட்டு வளைய வர?…” என்றார் வாசுவின் தந்தை.
அதுவரைக்கும் கூட எதற்கு பிரச்சனை என்று யாருக்கும் சொல்லாமல் இருந்தவர் இப்போதும் அப்படி இருக்க முடியாமல் விஷயத்தை எல்லாம் விளக்கமாக சொன்னார்.
“அதுக்கு நீ கிளம்பி போனா ஆச்சா?…”
“போவாம? அங்க போயி உக்காந்துட்டு இருக்காளே? நாம எல்லாரும் இருக்கறப்பவே அவ என்ன போடு போட்டா. மாப்பிளைக்காக மட்டும் தான் பொறுத்துட்டு இருக்கேன். இல்லன்னா இவ அட்டகாசத்துக்கு எல்லாம்…” என்று பல்லை கடிக்க,
“சரி இப்ப என்னன்ற?…”
“என்னன்றேனா? கல்யாணமாகி பத்து நாள் ஆவாம இருக்கறப்பவே தனி தனியா படுக்க வச்சா? வீட்டு மூத்த மனுசங்க ஒத்த வார்த்த ஏன்னு கேக்க முடிஞ்சதா? போனவாட்டி மல்லி போனுக்கு போட்டா இவ எடுக்கவும் எப்பம்மா வந்தன்னு தான் கேட்டேன். என்ன பேச்சு பேசினா? அப்படியே அத இல்லன்னும் சாதிக்கிறா…”
சித்ரா புலம்பி புலம்பி அந்த வீட்டையே வலம் வர பத்மநாபனுக்கும் புரிந்தது மனைவியின் தவிப்பு.
“கொஞ்சமாச்சும் கூறு வேணாமா? புதுசா கல்யாணமானவங்க தனியா இருக்கற வீட்டுக்கு இப்படியா மாசத்துக்கொருக்கா போயி தொந்தரவு பன்றது. அந்த புள்ளையே சரியில்ல. மல்லி கல்யாணத்துக்கப்பறம் அதோட பேச்சு எல்லாமே மாறி போச்சு…”
“ப்ச், இப்ப என்ன சித்ரா?…” என கேட்க அவர் ஒரு சில நொடிகள் தான் அமைதியாக இருந்தார்.
பின் உடனே அமலாவிற்கு போன் செய்துவிட பத்மநாபன் பதறிவிட்டார். போனை பறித்து அழைப்பை துண்டித்தவர்,
“என்ன காரியம் பன்ற நீ? சம்பந்தி வீட்டுல என்ன நினைப்பாங்க?…” என்று திட்ட,
“இம்புட்டுண்டு புள்ளைக்கே அம்புட்டு இருக்கறப்ப எனக்கு கொஞ்சூண்டு மூளை இல்லாமலா போச்சு. எனக்கு தெரியாதா என்ன பேசன்னு?…” என்று கணவரை திட்டிவிட்டு போனை வாங்கியவர் மீண்டும் அமலாவிற்கு அழைத்தார்.
“சொல்லுங்க அண்ணி, எப்படி இருக்கீங்க?…” என எடுத்ததுமே அமலா விசாரிக்க,
“நல்லா இருக்கேனுங்க மதினி. அண்ணே எப்படி இருக்காங்க?…” என சித்ராவும் நலம் விசாரிக்க,
“எல்லாரும் நல்லா இருக்கோம். போன் கூட பன்றதில்ல நீங்க? ரெண்டு வாரம் முன்ன நான் பேசினது…”
“சோலி கிடக்குல. அதேன் முடியமாட்டிக்கு மதினி…” என்றவர்,
“பொறவு மதினி, நாளைக்கி சனிக்கிழம. இப்பவாச்சும் கிளம்பி ஊருக்கு வரது. மல்லிக்கு சொன்னா மருமகன் லீவ பாத்துதான் வருவேன்னு சொல்லிட்டா. நீங்களாச்சும் இங்கிட்டு வந்து போகலாமில்ல…” என்று லேசாய் பேச்சை திசை திருப்ப,
“ஏன் வராம? நானுமே நினைச்சுட்டு தான் இருந்தேன். உங்கண்ணனுக்கும் கோவிலுக்கு போகனும்னு ஒரு நினைப்பு. சரி ஞாயிற்றுக்கிழமை வருவோமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்…”
“நல்லதுங்க மதினி. அது ஏன் ஒரு நா தள்ளி வரனும்? நாளைக்கே கிளம்பி வாங்க. வாரப்ப நம்ம அபியையும் கூட்டிட்டு வாங்க. ஆதவ பாக்கனும்…” என்றதும் பத்மநாபன் மனைவியை ஆவென்று பார்த்தார்.
“சொல்லிட்டீங்கல்ல. அபி இல்லாமலா? இப்பவே பேசிடறேன் அண்ணி. பேசிட்டு கூப்பிடறேன்…” என்று சொல்லி வைத்துவிட சித்ரா பத்மநாபனை பார்த்தவர்,
“பார்த்தீங்களா? சம்பந்திக்கே தெரியல அந்த புள்ள அங்க போயிருக்கறது. கூப்பிடட்டும்…” என்று அங்கேயே அமர்ந்துகொண்டார் சித்ரா.
இங்கே அமலா அபிக்கு அழைக்க அபி வாசுவுடன் பேசியபடி அமர்ந்திருந்தவள் அமலாவின் எண்ணை பார்த்துவிட்டு யோசனையுடன் வாசுவை பார்த்தாள்.
தெரிந்து அழைக்கிறாரா இல்லையா என்றும் தெரியாமல் இருக்க எதுவாக இருந்தால் என்ன? என்று அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்கம்மா, என்ன பன்றீங்க?…” என இலகுவாக ஆரம்பிக்க,
“என்ன அபி, சாப்பிட்டியா? ஆதவ் என்ன பன்றான்?…” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே,
“மதினி இந்தாங்க வடை….” என்று வாசுவின் குரல் கேட்க அடுத்ததாய்,
“என்ன வாசு சட்னி தாளிக்கலை? எனக்கு தாளிச்சா தான் புடிக்கும். போய் தாளிச்சு கொண்டுவா. அப்பறம் இந்த வடையை எடுத்துட்டு போ. நீ திரும்ப கொண்டு வரதுக்குள்ள சூடு ஆறிடும். வேற போட்டு கொண்டு வா. இதை ஷ்ரவனுக்கு குடு…” என அதிகாரமாய் சொல்ல,
“சரிங்க மதினி…” என்று வாசு சொல்வதும் கேட்க அமலாவிற்கு என்னவோ போல் இருந்தது.
அபர்னிதா அமலா லைனில் இருப்பதை ஒருநொடி மறந்துபோயிருக்க அவளின் குரல் அத்தனை அதிகாரமாய் இருக்க அதை கண்டுகொண்டார் அமலா.
“அபி ஷ்ரவன் வீட்டுக்கு போயிருக்கியா?…” என்றார் வேகமாய்.
அவருக்கு அவள் பதில் சொல்லும் முன்னர் அறைக்குள் அமர்ந்திருந்த ஷ்ரவன் வேகமாய் வந்தவன்,
“உனக்கு சூடா வேணும்னா நீயே போட்டு சாப்பிடு. வந்ததுல இருந்து அவளை போட்டு பாடா படுத்திட்டு இருக்க. இதுக்குத்தான் வந்தியா?…” என்று எரிச்சலாய் அத்தனை கோபத்துடன் பேசினான் ஷ்ரவன்.
“ஏன்டா அவ என் புருஷன் தங்கச்சிடா. அவகிட்ட எனக்கு தேவையானதை நான் கேட்கறேன். அவ செய்யறா. இதுல உனக்கு என்னடா கஷ்டம்?…” என்றவளை என்ன செய்வது என்ற இயலாமையுடன் ஷ்ரவன் பார்க்க,
“நீங்க உள்ள போங்க அத்தான். பாருங்க ஆதவ் பார்க்கறான். அவன் கூட இருங்க. நான் வந்திடறேன்…” என்று அனுப்பிய வாசு,
“அண்ணி நான் தான் செய்யறேன்ல. அப்பறம் எதுக்காக கோபப்படறீங்க?…” என்று உள்ளே சென்றுவிட்டாள்.
இதை எல்லாம் போனில் கேட்டுக்கொண்டு இருந்த அமலாவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி. அபி சொல்லாமல் அங்கே சென்றது ஒரு அதிர்ச்சி என்றால், அவள் இப்படி மருமகளை அதிகாரமாய் வேலை வாங்குவது இன்னும் அதிர்ச்சி. அதைவிட அது மகனுக்கு பிடிக்கவில்லை என்பதும் இன்னும் அதிர்ச்சி.
“அபி…” என அவர் மீண்டும் மீண்டும் அழைக்க அபர்னிதாவிற்கு போனில் அவர் இருந்தது மறந்தே போனது. கட் செய்துவிட்டு மீண்டும் அழைத்தார். அதை பார்த்தவள் அட்டன் செய்து,
“சொல்லுங்க அமலாம்மா…” என்றாள் இனிப்பு தடவிய குரலில்.