“நீ எப்போ அங்க போன அபி?…” என்றார் அமலாவும் எதுவும் கேட்டதாக காட்டிக்கொள்ளாமல் பேச,
“இன்னைக்குத்தான்ம்மா. ஆதவ்க்கு ஆஃப் டே தான். அதான் கூட்டிட்டு வந்துட்டேன்…”
“சங்கர் வரலையா?…”
“அவருக்கு நான் வந்ததே தெரியாது. போன் பண்ணி சொல்லனும். அவர் என்ன சொல்ல போறார்ம்மா?…”
“இது தப்பு அபி. சங்கருக்கு சொல்லாம வரது என்ன பழக்கம்?…” என கண்டிப்புடன் கேட்க,
“ம்மா…” என்றாள் இறங்கிவிட்ட குரலில்.
அவர் அப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. திடீரென்று இப்படி பேசி கண்டிக்க அபிக்கு வார்த்தையே வரவில்லை. சித்ராவிடம் அத்தனை அதிகாரமாக பேசியவளால் அமலாவிடம் பேச முடியவில்லை.
“ஷ்ரவன் நாளைக்கு மல்லியோட ஊருக்கு போகனும்னு சொல்லிட்டு இருந்தானே? நீயும் இருக்கும் போது தான நான் அவன்கிட்ட பேசினேன். இப்ப நீ அங்க கிளம்பி போயிருக்க?…”
“அச்சோ, நான் ஷ்ரவன் மட்டும் தான் போறான்னு நினைச்சேன். வாசு போறது தெரியாதே. அதான் வாசுவுக்கு துணையா இருக்கலாம்னு கிளம்பி வந்தேன்ம்மா…” என சமாளிக்க அமலாவிற்கு அடுத்த அதிர்ச்சி.
முதல்நாள் தான் எங்கே எதற்கு, யார் யார் செல்கிறார்கள் என்பதில் இருந்து வாசுவிற்கு என்ன புடவையை கட்ட சொல்லலாம் என்பது வரை தன்னிடம் கலந்து ஆலோசித்தவள் இப்போது தெரியவே தெரியாதென சாதிக்க,
“அபி, பொய் சொல்லாத. நேத்து நாம தான் பேசிட்டு இருந்தோம். நான் கூட மல்லிக்கு என்ன நகையை குடுத்தனுப்பலாம்னு உன்கிட்ட காமிச்சுட்டு இருந்தேன். நீயும் பேசின. என்ன இது?…” என்று கேட்க,
“அச்சோ மறந்துட்டேன்ம்மா…” என்றாள் ஒற்றை வார்த்தையில் அசட்டு சிரிப்புடன்.
“சரி போகட்டும். நாளைக்கு அவன் கிளம்பும் போது அவனோட நீயும் கிளம்பி வா. நாம கோவிலுக்கு போகனும்…”
“என்னம்மா திடீர்ன்னு?…” என்றவள்,
“ஆதவ் வேற வாசு, ஷ்ரவனோட மூணு நாள் ஜாலியா ங்க இருக்கலாம்னு கிளம்பி வந்தான். இப்ப நாளைக்கே கிளம்பனும்னா…”
“ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆதவ் சங்கர் மாதிரி. அறிவாளி பிள்ளை. அடம்பிடிக்கமாட்டான். ஊர் அங்க தான இருக்குது. எங்கயும் ஓடி போகாது…” என்று கண்டிப்புடன் சற்று கடுமையாகவும் சொல்லிவிட்டார் அமலா.
முதல் இரண்டு முறை சொல்லி சென்றதற்கே அவளிடம் கூப்பிட்டு நாசூக்காக சொல்லியிருந்தார் அமலா.
இந்த திருமணம் வேண்டாம் என்று இருந்தவன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கிறான். அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று சொல்லியிருக்க தலையை ஆட்டி உடனே சரி என்றவள் சொல்லாமல் சென்றிருந்தது அவள் மேல் அதிருப்தியை உண்டாக்கியது அமலாவிற்கு.
அதிலும் வாசு, ஷ்ரவன் மேல் கொண்ட அதீத அன்பினால் தான் இப்படி உரிமையாக நெருங்கி நடந்துகொள்கிறாள் என்று நினைத்திருக்க இன்றோ தன் மருமகளிடமும், மகனிடமும் இத்தனை அதிகாரமாக பேசியது சுத்தமாக பிடிக்கவில்லை.
“அப்பறம் அபி, எல்லாத்துக்கும் நீ மல்லியை எதிர்பார்க்கனும்னு இல்லை. உனக்கு தேவைன்னா நீயே செஞ்சுக்கோ. அவளை ஏன் தொந்தரவு பன்ற? சும்மா சும்மா எடுத்ததுக்கெல்லாம் அவளை ஏவாத. புரியுதா?…” என்று சொல்லவும் சுருக்கென்றானது அபிக்கு.
“ம்மா, நான் உரிமையா…”
“உரிமை தான். ஆனா எல்லாம் ஒரு எல்லையோட. நீ பேசினது நான் கேட்டுட்டு தான் இருந்தேன். எனக்கே அங்க ஒரு எல்லை தான் அபி. அது ஷ்ரவன் வீடு. அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் அப்பறம் தான் மத்தவங்க எல்லாம். புரிஞ்சுக்கோ. நீ என்ன சின்ன பொண்ணா? உனக்கே புரியும்னு பார்த்தேன்…”
“இல்லைம்மா…”
“இப்ப ஒன்னும் பேச வேண்டாம். நீ இங்க வா. பேசிக்கறேன். அப்பறம் உன் அம்மா வரதா சொல்லிருந்தாங்க. அவங்க பேசறப்போ நீ சரியா பேசலைன்னு சொல்லிட்டு இருந்தாங்க…” என்றும் சொல்ல,
“ஹ்ம்ம், சரிங்கம்மா…” என்றாள் உள்ளடங்கிய குரலில்.
“என்ன அபி வருத்தமா இருக்கா நான் பேசினது?…” என அமலா கேட்க பல்லை கடித்து கோபத்தை அடக்கியபடி பாசாங்கு சிரிப்போடு,
“இல்லையேம்மா. எங்கம்மாவை விட உங்களை தான் பெருசா நினைக்கறேன். நீங்க என் நல்லதுக்கு தான சொல்லுவீங்க…” என்று அமலாவிய குளிரவைக்க பார்க்க,
“ரோம சந்தோஷம் அபி. நானும் என்னை உன் பொண்ணு மாதிரி நினைச்சு தான் கண்டிக்கறேன். ஆனா அதுக்காக மகன் மருமகன்னு வரப்போ இந்த ஒப்பு பேச்செல்லாம் சரி வராதுல…” என்றவர்,
“என்னதான் அம்மா மாதிரி, பொண்ணு மாதிரின்னு சொன்னலும் சொந்த மகன், சொந்த அம்மான்னு வரப்போ நமக்கே இடைவெளி புரிஞ்சிரும். அது மாதிரி தான். என் மகனும் மருமகளும் தான் முதல்ல எனக்கு. அதுக்கு அப்பறம் தான் யாரா இருந்தாலும்…”
“என்னம்மா நீங்க? எனக்கு இது கஷ்டமா இருக்குது…” என்று வருந்தும் குரலில் அபி சொல்ல,
“கஷ்டமா இருந்தாலும் இதுதான் அபி நிதர்சனம். உனக்கு இப்போ புரியாட்டிலும் ஆதவ்க்கு ஒரு கல்யாணம்னு வரப்போ புரியும். சரி நான் வைக்கறேன். நாளைக்கு அவங்களோட நீயும் கிளம்பி வந்துரு…” என்று சொல்லி வைத்துவிட போனை தூக்கி போட்டு உடைக்கும் ஆத்திரம் வந்தது.
முன்பானால் ஷ்ரவன் வாசுவிற்காக வந்தவள் இப்போது தேவகிக்காக வந்திருந்தாள். வந்ததில் இருந்து எத்தனையோ, எப்படியோ வாசுவிடம் தேவகியிடம் என்ன பேசுகிறாய் என்று கேட்டு பார்க்க அவளிடம் ஒரு வார்த்தையை கூட பெறமுடியவில்லை.
போதாததிற்கு ஷ்ரவன் வேறு வாசுவின் போனிற்கு பாதுகாப்பு செய்துவிட அவளிடம் போனை தா என்று கேட்டாலும் ஏன் என்று கேள்வி வர ஒன்றும் சொல்லமுடியவில்லை.
வாசுவிற்கும் புரிந்தது, தன்னை கஷ்டப்படுத்துவதோடு தேவகி பற்றியும் அறிந்துகொள்ளவே இவ்வாறு மெனக்கெடுகிறாள் என்று.
ஆனாலும் எவ்வளவு தூரம் போக முடியுமோ போய்க்கொள் என்று விட்டுப்பிடித்தாள் வாசு. அதுவே அபியை இன்னும் ஆத்திரம் கொள்ள செய்தது.
“ஏன் வாசு? அவ கேட்டா முடியலைன்னு சொல்லித்தொலையேன். கேட்ட எல்லாம் செஞ்சிட்டு கூடவே இருக்க?…” என்று ஷ்ரவன் கூட எரிந்து விழுந்தான் மனைவியினிடத்தில்.
“அவங்களால முடிஞ்சது இது மட்டும் தான. ஆனா அத்தான் ராத்திரி எல்லாம் சுத்தமா தூங்கவே இல்ல அவங்க. அண்ணே போனுக்கு சும்மா சும்மா போட்டு பார்க்கறாங்க. எந்திச்சு நடக்கறாங்க. என் போனை எடுத்து என்னவோ பன்றாங்க. அது திறக்கலன்னு கோவமா தலைய புடிச்சுக்கறாங்க…”
இப்படி போன முறை வந்த பொழுது இருந்தவிதம் பற்றி அவனிடம் எடுத்துரைக்க அவனும் சங்கரிடம் பேசியிருந்தான்.
“என்னன்னு பாருங்க அத்தான். அபி தூங்க கூட மாட்டேன்றா. வாசு கூட இருந்தப்போ நைட்ல இப்படி எல்லாம் செய்யறா…”
“உனக்கு எப்படிடா சொல்லி புரியவைப்பேன்…” என்றவனும் எதையும் பகிர்ந்துகொள்ள முடியாமல் இறுகி போக,
“சரிங்கத்தான். சொல்லனும்னு தோனுச்சு. சொல்லிட்டேன்…” என்று வைத்துவிட இப்டி இந்த முறை கிளம்பி வந்ததில் இருந்து தேவகி தேவகி என்று சுற்றிக்கொண்டு இருக்க,
“லீவ் போட்டு நிம்மதியா இருக்கலாம்ன்னா கூட முடியலை…” என்று பொத்தாம் பொதுவாய் ஷ்ரவன் சொல்ல அதையும் கேட்டவள்,
“அவ்வளோ கஷ்டமா இருந்தா கிளம்பி வேலைக்கு போ. யார் லீவ் போட சொன்னா?…” என்று நக்கலடிக்க எங்கே சண்டையாகி விடுமோ என்று பயந்து போனது வாசமல்லி தான்.
தேவகி பற்றி அபியிடம் சொல்ல வாசுவிற்கு சுத்தமாக விருப்பமில்லை. பேசவே முடியாது என்பதை போல வாசுவை தவிர்த்த தேவகியை கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டொரு வார்த்தை பேசும் அளவிற்கு வாசமல்லி உறவை வளர்த்திருந்தாள்.
அவளுக்கொரு நல்ல எதிர்காலம் அமையவேண்டுமென்று வேண்டாத கடவுள் இல்லை. அப்படி நினைத்துக்கொண்டு இருக்க இங்கே அபியோ தேவகி தேவகி என்று தன்னை சுற்றி வந்துகொண்டு இருந்தாள்.
போன் ஏதும் வந்துவிட்டால் தேவகியோ என்று தனக்கருகே வந்து நிற்பதும் யார் என்ன பேசுகிறார்கள் என்று பார்ப்பதுமாக இருக்க வாசுவிற்கு பாவமாகவும் இருந்தது.
“ஏன் மதினி தேவகி மதினியவே நினைச்சுட்டு இருக்கீங்க? அவங்க அவங்க சோலி உண்டுன்னு இருக்காங்க…” என்று கூட சொல்லி பார்த்துவிட,
“உனக்கு அவளை பத்தி தெரியாது வாசு. எப்போ வேணாலும் உன் அண்ணன் அவளை தேடி போயிருவாரு…” என்று அழ,
“தப்பா பேசாதீங்க மதினி. என் அண்ணனையும் தெரியும். தேவகி மதினியையும் தெரியும். இல்லன்னா போறதுன்னா உங்கள கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடியே போயிருப்பாங்க…” என கடுமையாய் அவள் சொல்ல அவளையும் பகைத்துக்கொள்ள முடியாதே,
“ஆமாமா, அட போ வாசு. நீ இன்னும் சின்ன புள்ளை தான். உனக்கு ஒன்னும் தெரியலை…” என்றவள் பேச்சை மாற்றினாள்.
ஆனால் எங்கே சுற்றினாலும் கடைசியில் தேவகியிடம் தான் வந்து நிற்கும் அவளின் பேச்சுக்கள்.
இங்கே அபியிடம் பேசிவிட்டு வைத்த அமலா சித்ராவிற்கு அழைக்கவேண்டுமே என அவருக்கு போனை போட்டார்.
“சொல்லுங்க மதினி, நாளைக்கு காலம்பற கிளம்பி வரீங்களா?…” என ஒன்றும் அறியாதவர் போல பேச,
“இல்ல அண்ணி. ஷ்ரவனும், மருமகளும் நாளை மறுநாள் ஒரு கல்யாணத்துக்காக போறாங்க. அதுக்கு இங்க வந்துட்டு தான் போவாங்க. அவங்கள அனுப்பிட்டு மதியத்துக்கு மேல கிளம்பி வரோம்…” என சொல்லியவர்,
“அப்பறம் அண்ணி, அபி ஊட்டி போயிருக்கா போல…” என தயக்கமாக சொல்ல,
“ஓஹ், அப்படிங்களா? சரிங்க மதினி…” என்றார் சித்ராவும் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல்.
“தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணி. நான் பேசிட்டேன். சும்மா அங்க போகாதன்னு. ஆதவ் போகனும்னு சொல்லவும் கிளம்பி போயிருக்கா போல. எனக்கே இப்ப தான் தெரியும்…” என சொல்ல,
“அதனால என்னங்க மதினி? அதுக்கு இல்லாத உரிமையா? போய்ட்டு வரட்டும்…” என்று பிடிகொடுக்காமல் பேச என்ன முயன்றும் அதில் தொனித்த அதிருப்தியை சித்ராவால் மறைக்க முடியவில்லை.
“என்னதான் நீங்க சொன்னாலும் இது சரியில்லன்னு புரியுது தான். சரி நாளைக்கு நாங்க வரப்போ கூட்டிட்டு வரோம்…” என்று சொல்லி வைத்துவிட்டவர் நீலகண்டனிடம் ஒன்றும் சொல்லவில்லை.
இங்கே சித்ரா இன்னும் தாளித்துக்கொண்டே இருக்க சற்று நேரத்தில் சங்கர் அழைத்தான் அவருக்கு.
“உனக்குத்தான் போன போடனும்னு இருந்தேன் சங்கரு. அபி ஊட்டிக்கு போயிருக்காலாம்…” என்று சித்ரா சொன்ன விதமே அவனுக்கு அத்தனை அவமானமாக போனது.
“நான் பார்த்துக்கறேன் சித்தி…” என்று சொல்ல,
“சங்கரு, சித்திய தப்பா எடுத்துக்காதப்பா…” என்றவள் அபி தன்னிடம் பேசியவிதம் பற்றி சொல்லி அத்தனை வருத்தப்பட்டார்.
“என்னன்னு மனசு விட்டு அதுகிட்ட பேசு. எதுவும் கோவமா என்னன்னு கேளு. இப்படி இருந்தா எப்படிப்பா? எங்களுக்கு மகனுக்கு மகனா நிக்கிறது நீ தான். நாளைக்கு மகன் முறைக்கு கொள்ளின்னு நீ தான் வைக்கனும்…” என்று சொல்லி சித்ரா அழுதேவிட சங்கரின் மனம் கனத்து போனது.
“நான் பார்த்துக்கறேன் சித்தி. நீங்க வருத்தப்படாதீங்க…” என அவரை தேற்றியவன்,
“நாளைக்கு கோவிலுக்கு வரதை பத்தி அமலாத்தை பேசினாங்க. நானும் கிளம்பி வரேன். நம்ம முறை பூஜை எதுவும் செய்யனுமான்னு அப்பா கேட்க சொன்னாங்க. அப்படின்னா ஏற்பாடு செய்ய சொல்லி…”
“இத நீ சொல்லன்னுமாய்யா. கிளம்பி வா. நாங்க பார்த்துக்கறோம்…” என்றவர் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட ஸ்டேஷனில் இருந்தே ஊட்டிக்கு கிளம்பி சென்றான் சங்கர்.
மனது உலைக்கலனாய் கொதித்துக்கொண்டு இருந்தது. அபி அங்கு சென்றதுமே ஷ்ரவன் அழைத்துவிட்டான் அவனுக்கு. இங்கே தான் திடீரென அபி வந்திருகிறதாய்.
இப்படி மொத்த குடும்பத்தையும் ஆட்டிப்படைக்கிறாளே என நினைத்தவன் கிளம்பும் பொழுதே அபர்னிதாவின் தாய் அனுசுயாவிற்கும் அழைத்து உடனே ஊருக்கு வரும் படி சொல்லியும்விட்டான்.
ஊட்டிக்கு வந்தவன் மறுநாள் காலை ஷ்ரவன் கிளம்புவதற்கு முன்பே அபியையும் மகனையும் கூட்டிக்கொண்டு சித்ராவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
கட்டுக்கடங்காத கோபத்தோடு அவன் இருக்கிறான் என்று உணர்ந்த அபியும் அவனிடத்தில் வாய் பேசாமல் இருந்தவள் அத்தனை பேரின் முன்பும் அமைதியாக இருந்துகொண்டாள்.
பூஜை எல்லாம் முடிந்து இதை அமலாவின் வீட்டில் வைத்தே பேசலாம் என்று சங்கர் நினைத்திருக்க அனுசுயா கேட்டதற்கும்,
“கோவில்ல வச்சு எதுவும் பேச வேண்டாம் அத்தை. வீட்டுக்கு போய் பேசுவோம்…” என்று பேசிக்கொண்டிருக்க சப்பென்று அப்படி ஒரு அறை. யாரோ அடி வாங்கும் சத்தம் கேட்டு குடும்பம் மொத்தமும் ஓடி வந்தனர்.
வந்தவர்கள் கண்ணெதிரே மீண்டும் இடியென ஒரு அறையை அபர்னிதா கன்னத்தில் இறக்கினாள் தேவகி.
“இன்னொரு வார்த்தை பேசின வாயை கிழிச்சு தச்சிருவேன்…” என்று விரல் நீட்டி எச்சரித்தபடி நிற்க பார்த்திருந்தவர்கள் அத்தனை பெரும் ஸ்தம்பித்து நின்றனர்.
“தேவகி…” என்று சங்கரின் கோப குரலில் சட்டென திரும்பி பார்த்தவளின் கண்கள் அவனோடு ஒரு நொடி பிணைந்து மீண்டும் அபர்னிதாவை பார்த்தது.
அவனின் முதல் அழைப்பு. பொதுவில் மட்டுமல்ல தனியாகவும் எங்கும் பேசிக்கொண்டதில்லை. இதோ அவன் அழைக்கும் அந்த நொடியை அறவே வெறுத்தவளாக தனக்குள் இறுகி நின்றாள்.